காலம் கீறும் கோலம்

இங்கு எல்லாமே காலம் போடும்
கோலம் தான்.

உலகத்தை நீ இயக்குவதாய்
உணர்ந்தால் அது இளமை துள்ளும்
காலம்.
எல்லாத் திசைகளிலும் சுத்தி
வருவாய் .

உலகம் இயங்கிறது நீயும்
இயங்குவதாய் உணர்ந்தால் -அது
நடுநிலைக் காலம் ,
திசையை தேர்வு
செய்து போய் வருவாய் .

உலகம் உன்னை விட்டு
இயங்குவதாய்
உணார்ந்தால் முதுமை முடக்கும்
காலம்
அறைகளுக்கு
அடைப்பட்டுக் கிடப்பாய்
அவஸ்தைகளும்
ஆனந்தங்களையும்
அசை போட்டபடியே !

 மாற்றியவர் யாரோ ?

விவசாய​ நிலங்களில் தான் மனித​
நாகரிகம் உருவாவனது.
இன்று
விவசாய​ நிலங்களை கடந்து
வருவதும் , அழிப்பதும் நாகரிகம்
ஆகி விட்டது.

மாதம் கோயில் மைதானமும் கூடிக்
கதைத்த​ அரசியலும்
இடம் நகர்ந்து சந்தை
தெருக்களுக்கு போகலாம் எனினும்
இன்னும் மாறாமல் கூடிக்
கதைக்கவே மனம் நாடுகிறது.

ஐம்பதில் சன்னதிக்கு போகும் அந்த​
வார்த்தையாலம் மட்டும் பிற்போடப்
பட்டு நகர்த்தப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.

இந்த​ இருப்பு இருக்கும் வரை
இந்த​ நகர்வு இருந்து கொண்டே
இருக்கட்டும்.

இல்லம் தானே இதயத்துக்கு
மிக​ நெருக்க​ மானது.
அங்கே தானே வாழ்வு
உருகிப் போகின்றது.

அகங்காரம்

நினைவுத் தூபிகள்
எழுப்பப்பட்டு அவை
கோவில்களாகவும் விகாரைகளாகவும்
மாற்றப்பட்டது ஒரு கால​ நிகழ்வு.

மனிதப் புதைகுழிகளை மறைக்க​
கோவில்களையும்  விகாரைகளையும்
எழுப்புவது நிகழ்காலம் .

மனிதனின் அகங்காரம்
அடங்கும் இடம் இரண்டு
ஒன்று கடவுள.
மற்றது குழந்தைகள்.
சிவனே முருகனிடம் பாதம் கற்ற​
கதை சைவ​ சமயத்தில் உண்டு.

தன் இழப்பை
குறைப்பதற்காக​ எதிரி நாட்டின்
மீது அணுகுண்டுகளை ஏவித் தம்
நாட்டுப்படைகளைப் காப்பது தருமம்
ஆகி விட்ட​  
21ம்  நூற்றாண்டு சிந்தனை
உயிர்களை குறித்து கண்ணீர்
வடிப்பது என்ன​
மாய​ மந்திரமோ?

ஒரு நாட்டின் முடிவைத் தனி
மனிதனின்  முடிவாகக் கருதும்
ஒருவன் நாடுகளுக்காக​ எடுக்கும்
முடிவு
எப்படி நன்மை பயப்பதாக​
இருக்க​ முடியும் ?
குறைந்த​ பட்ச​ ஜனநாயகத்தையும் ,
உழைப்பையும் தோண்டிப்
புதைப்பதாகத் தானே இருக்கும்?

பனை மர​ங்களுக்கு
இடையில் வாழ
ஓர் உறுதி மிக்க​
சமூகமாக​ வாழ்ந்தவர்கள்
இன்று உறுதியை இழந்து
பனை மரங்களை மட்டுமல்ல​
தமக்கு உள்ளும் வெட்டிச்
சாய்க்கிறார்கள்.
என்ன​ அவலம் இது?!
மரங்கள்  அனல்
மூச்சு விடுகின்றன​
எம்மைப் பார்த்து ....

தொல்லியலும் கல்வெட்டுகளும்
நடுகற்களும் எமை மூத்த​ குடி என​
நிறுவி நிற்கலாம்>
நிகழ்கால​ வாழ்வில்
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்.
என​ நிறுவ​ எதைத் தேடுவீர்கள்?
புதைகுழிகளையா?,
புனைகதைகளையா?

அவமான உளிகளால்
செதுக்கபடாமல்
அன்புக்கரங்களால்
அணைக்கப்பட்டிருந்தால்
எத்தனை மனிதர்களின்
வாழ்க்கை மாறிப் போயிருக்கும்?
ஆனாலும் என்ன​
எங்கேயும் சிலர் எழுந்து தான்
நிற்கிறார்கள்
எம்மை ஆதரிக்க​ ,
எம்மை காப்பதற்காக​>

சிலவேளைகளில்
அமைதி அடைவோம்  !

திரை

சில​ மாற்றங்களை ஏற்றுக்
கொண்டும்
சில​ மாற்றங்களை ஏற்க​
மறுத்தும்
அலை பாயும் மனம்.

புதுமைக்கும் , பழமைக்கும்
இடையே பதுங்கிக் கொள்ளும்.
பயமும் கொள்ளும்.

புதிய​ மாற்றங்கள் எல்லாம்
புதுமையாக​ இருந்து விடாது.
பழயவையும் பகுத்தறிவைத்
தாண்டி ...
இருந்து விடாது.
ஏதோ கால​ ஓட்டத்துக்குள்
அள்ளுப்பட்டு வாழ்ந்து விட்டுப்
போவதே இங்கு
வாழ்வாகி விடுகிறது.​

கிழக்கிலிந்து மேற்கிற்கும்,
வடக்கிலிருந்து
தெற்கிற்கும்
இருக்கும் நாலு முடி மயிர்களை
வைத்துத் தலையை
மூடிக்கொள்ள​ முயற்சிப்பது தான்
ஒரு சிலர்
செய்யும்
தலை அலங்காரம் .
அதில் , இன்று நானும் ஒருவன்.

விதேசம்

நீச்சல் அடிக்க​ நீரின்றி
உறைந்து போன​ தேசத்தில்
அவனது சிந்தையும்
அசைவுகள் குறைந்து மயக்க​
நிலைக்குப் போனதாக​
விஞ்ஞானம் கூறலாம்.
அவனை மீளாத்துயிலிருந்து
தூண்டி மீட்க​ நிற்கும்
உறவுகள்..

நவீன​ இலத்திரன் கருவிகளில்
ஒரு செயற்கை படர்கிறது.
எங்கே தொடர்வது?
புதிய​ வட்டங்கள்
நாள்களை வரைய
அவன் நினைவுகளுடன்
அவஸ்தையைத் தானே
அனுபவிக்கிறான்

நாளைய​ நகர்வுகளை
யார் அறிவாரோ !
இறக்கிற​ உடலுக்கு இருபது
இடம் பூஜை வைக்கிறாய் ,
மரணப்படுக்கையிலும்
மார்பு துடிக்க
நமக்குள்ளேயே பிரிவுகள் ஏன் ?
ஊரைப் பகைத்து அல்லவா
சில​ உறவுகள் இங்கே துளிர்க்கிறது
வேரிலே அல்லவா  பலா காய்க்கிறது !
யாரைச் சுட்டுவது?
யாப்பு கிழிகிறது .

எனினும் என்ன​ தொடர்புகள் அற்ற
தொலை தூரங்களில் வாழ்வு நகர்கிறது.
அன்று , 15ம்  வயதில்    10ம் வகுப்பில்
படித்த​ நண்பர்களின் முகம்
மனக்கண்ணில் வந்து போகலாம்.
அவர்கள் சிலர்   60வயதைக்
கொண்டாட​ .... கொண்டாடியும்
இருக்கலாம்.
இளமைப்பருவத்தையும்
இனிய​ நினைவுகளையும்
மீட்டுப் பார்ப்பது தானே
இன்று வாழ்வாகி விடுகிறது.

இயற்கைச் இடர்

மரணங்களை விதைக்கிற​
பூமியில்
மனிதம்  எப்படி மலர​
முடியும் ?

கண்டத்தட்டு நகர்தல்களில்
கண்மறைந்து போனவர்களை
கண்கள் தேடியும்
கிடைக்கவில்லை.
கலக்கம் இன்றும் தீரவில்லை.
விளக்கம் இங்கு தேவையில்லை.
விதைப்பு இங்கு பேரிடியே !

வெளிச்சம்

இன்றைய​ சில​ எழுத்தாளர்களின்
படைப்புகள்
எதிர்கால​க் கடமைகளை
சுருக்கி கொண்டு படைப்பதால்
அவை சமூக​ மனித​ உணர்வுகளை
கொச்சைப் படுத்தி நிற்கின்றன.

இருண்டு போன​ வறட்டு
கொள்கையுடன் வாழ்வோருக்கு நீ
ஏன் வெளிச்சம் ஏற்றுகிறாய்?

அவர்களிடம் இருக்கும்
இருட்டு எண்ணம் தெளியாமல்
அவர்களை எப்படி
வெளிச்சத்திற்கு வர​  முடியும்?

விடய​ அறிவு இல்லாமல்
வரும் வார்த்தைகள் எல்லாம்
விமர்சனங்களாகி விட​ முடியாது
அவை விபரீதங்களை
விதைக்கத் தான்
படைக்கப் பட்டவையாகி விடும்.

மனிதன் என்றும்
தனக்கு வெளியேயும்
உள்ளேயும்
வெளிச்சம்
பாய்ச்சப்படுவதைத்தான்
விரும்புகிறான்
வெளியே வெளிச்சம்
கிடைத்தவர்கள்
பிரமுகர்களாகவும்
உள்ளே வெளிச்சம் தெரிந்தவர்கள்
ஆன்மீகவாதிகளாகவும்
திகழ்கிறார்கள்

அடையாளங்கள் மீது
கட்டப்பட்ட​ சுயம் உடைமைகளை
உருவாக்கிறது
தேவைகளை பெருக்கி
தேடலுடனேயே வாழ்வை
ஆசை வெளியில் மனம்
நாடி ஓடுகிறது
இறுதியில் ஆனந்தம்
அங்கு இல்லை என​
அறிகிறது .

நீ பரப்பும் தொற்று நோய்
புன்சிரிப்பாகவே ​ இருக்கட்டும்  !

 
எந்திரன் 3

தேறாத​ நாட்களாக​ சில​ நாட்கள்
இருந்து விட்டுப் போகட்டும்.
அவற்றோடு என்றும்  உறங்கி
விடக் கூடாது என்பதே வாழ்க்கைப்
பாடமாக​ அமையட்டும்.

சில​ படிகள் இறங்குவதால்
நன்மை பயக்கும் எனில்
அதை செய்து தானே பார்க்க​
வேண்டும்.

நாம் கற்றுக் கொடுத்த​ இயந்திரம் ,
தானே கற்றுக் கொண்டு
இயங்கிற ' நுண்ணறிவு '
நாளை ,  சிலவேளை அதிகாரத்துக் துணை
போய் , ஒரு  ஆக்கிரமிப்பாக​
மாறலாம்
மனித​ இயல்புகளையே கேள்விக்
குறியாக்கலாம் ?

எனவே எதையும்
விழிப்புணர்வுடன் செயற்படுத்துவதே
மனித​ சமூகத்திற்கு உகந்ததாக​
அமையும் ,  அமையட்டும் !


கேளாய் மகனே!

யார் பற்ற​ வைத்தார்கள் என்று
என்றாவது ஒரு நாள்
தீக்குச்சி கவலை கொண்டது
உண்டா?

உரசும் போது அது எப்போதும்
உணர்வினை வெளிக்காட்டி
விடுகிறது.
அது எந்த​ விபரீதங்க்கள் குறித்தும்
கவலை கொள்வதில்லை.

நீயோ மனித​ மனத்துடன்
வாழ்பவன் ஒவ்வொன்றின்
மதிப்பு அறிந்து தான்
செயற்பட​ வேண்டும்.

புதுமை

சித்திரையாள் சேலை
கட்டி வருவாள்
சென்ற​ இடம் சிறப்புத்
தேடித் தருவாள்
வட்டமுடைய​  கண்ணுடையாள்
வருவாள்
வாசல் தோறும் வசந்தம்
அள்ளித் தருவாள்
வண்ணத் தமிழ் பாட்டுடையாள்
வருவாள்
வையகத்தில் வளத்தை நிறைத்துத் தருவாள்
புத்தாண்டாய் புவிதனிலே
வருவாள் அவள்
புத்துணர்வு புகழும் நிதமும்
தருவாள் .            


மடந்தை

கனவுகளால் துரத்தப்படும் நான்
கதைகளால் வாழ்ந்து விடுகிறேன்
பேசாத மனிதனாய்
சொற்களை இழந்து போகிறேன்.