கல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -
பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று கருத வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் கல்வியியற் துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர். இவருடன் கூட சபா ஜெயராசா அவர்களும் நினைவுக்கு வருகின்றார். இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கித் அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த, எழுதிய ஒருவராக இனங்காண்பேன். இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார்.
இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கி, அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த, எழுதிய ஒருவராக இனங்காண்பேன். இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார். இவரைப்பற்றிய பேராசிரியர் சி.மெளனகுருவின் கட்டுரையைப் படிக்கையில் இவர் மார்க்சியக்கோட்பாடான பொதுவுடமைத்தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரென்பதை அறிய முடிகின்றது. அதேசமயம் இவரது கட்டுரைகளைப் படிக்கையில் இவர் முற்று முழுதாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையில் மூழ்கிய மார்க்சியவாதியாகவும் தெரியவில்லை. ஆன்மாவே அனைத்துக்கும் அடிப்படை என்னும் கருத்துமுதல்வாதச் சிந்தனை மிக்க ஒருவராகவே இவரை அறிய முடிகின்றது. இவ்விடயத்தில் இவரை நான் 'காண்பது சக்தியாம். இக்காட்சி நித்தியமாம்' என்று பொருளையும் ,சக்தியையும் ஒன்றாகக் காணும் மகாகவி பாரதியாருடன் வைத்து இனங்காண்பேன். உண்மையில் நவீன அறிவியலும் அதைத்தானே (பொருளும் சக்தியும் ஒன்று) எடுத்துக்காட்டுகின்றது. சக்தியையும் பொருளையும் ஒன்றாகக் காணும் ஆதிசங்கரரின் கோட்பாடுகளையொட்டிய அத்துவைதவாதியாகவும் இனங்காண்பேன். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு தத்துவப்போக்குகளையும் உள்வாங்கிய , இரண்டுக்குமிடையில் ஒருவித சமரசத்தைக்கண்ட கல்வியியற் சிந்தனையாளராக இவரை நான் காண்பேன்.