'செயற்கைப் புலமை'யும் (AI) சர்வதேச நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் மீதான அதன் தாக்கமும்! - ஜோதிகுமார் -
“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.
ஆனால் இக்கட்டுரை விவாதிக்க முற்படுவது, துவாரகாவின் உரையானது செயற்கைப் புலமை கொண்டு தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. மாறாக இன்று புது வரவாக கருதப்படும் செயற்கைப் புலமை எனும் தொழிநுட்பம், இனி எவ்விதம் உலகில் கோலோச்சப்போகின்றது என்ற கேள்வியேயாகும்.
கிட்டத்தட்ட, பத்து தினங்களின் முன்னர் மோடி அவர்கள் தனது காசி உரையில், பாஷ்னி எனும், AIயின் உதவி கொண்டு உடனுக்குடன் தமிழுக்கு பரிவர்த்தனை செய்தார் எனக் கூறப்பட்டது. இதனை அவர் AIயின் உதவி கொண்டுதான் ஆற்றக்கூடியதாக இருந்தது என்பதும் உலகளவில் இச்செய்தியானது பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக்கப்பட்ட ஒரு விடயமாயிற்று (19.12.2023).
இதனாலோ என்னவோ ஏட்டிக்குப் போட்டியாக நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டும் வகையில் மோடி பேசி முடிந்த சில தினங்களிலேயே பாகிஸ்தானின் இம்ரான்கான் சிறையில் இருந்தவாறே AIயை பாவித்துத் தன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததாக செய்தி வந்தது.