மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11) - வ.ந.கிரிதரன் -
- மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம் டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். -
1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)
என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள். குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.
2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.
3. மானுட இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.
4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.
5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.
6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்
7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.
8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்
9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்
இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.