இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008 இதழ் 99  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியக் குறிப்புகள்!
சிறு குறிப்பு: பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக '20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்'!
சிறு குறிப்பு: பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக '20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்'!
அண்மையில் இலங்கை பூபாலசிங்கம் புத்தகசாலையினரின் வைரவிழா வெளியீடாக வெளிவந்த '20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நன்கு செலவழித்து அழகான அட்டைப்படத்துடன் வெளிவந்த கவிதை நூல் தொகுப்பாசிரியரின் அலட்சியத்தால் அடைந்திருக்க வேண்டிய பெருமையினை அடையமுடியாமல் போனது துரதிருஷ்ட்டமானது. '20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' என்னும் பெயருக்கு மாறாகத் தொகுப்பாசிரியர் 'எனக்குப் பிடித்த ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' என்று பெயரிட்டிருந்தால் மிகவும் பொருத்தமாகவிருந்திருக்கும். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகளை அல்லது ஆய்வு நூல்களை விரைந்தெழுத வேண்டுமென்ற அவசரத்தால், தேடல் அதிகமற்று, கையில் கிடைக்கும் படைப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தமது எழுத்துத் திறமையினை மூலதனமாக்கி ஆக்கங்களைக் குறைப்பிரசவத்தில் பிரசவிக்கும் அரைகுறை 'க(ல்)லாநிதிகளை'ப் போல் இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரும் அவசரப்பட்டிருக்கின்றார். விளைவு: நல்லதொரு தொகுப்பாக இருக்க வேண்டிய நூல் அதன் சிறப்பிழந்து, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள பற்றியதொரு பிழையான பிம்பமாக வெளியாகியுள்ளது.

இத்தொகுப்பிலுள்ள முக்கிய குறைபாடுகளுக்கு இத்தொகுப்புக்காக ஆக்கங்கள் பெறப்பட்ட முறையுமொரு முக்கியமான காரணம். நூலின் முன்னுரையில் தொகுப்பாளர் பின்வருமாறு கூறுகின்றார்:

'இத்தொகுப்பு பற்றிய அறிவித்தல் எல்லா ஊடகங்களினூடும் வெளியிடப்பட்டு கவிஞர்களுடைய படைப்புகள் கோரப்பட்டன. நிறைய ஆர்வலர்கள் படைப்புகளை அனுப்பியுதவினர். அப்படைப்புகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கவிதைகளோடு ஏனைய மூத்த கவிஞர்களுடைய தரமான சில கவிதைகளை (வகைமாதிரிகளானவை) , இணைத்து , தமிழ் அகரவரிசை ஒழுங்கில் இத்தொகுப்பு உருவாக்கப்பெற்றுள்ளது. இக்கவிதைகள் 1901ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் எழுதப்பெற்றவை'

இக்கவிதை நூலினை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் உடனேயே இத்தொகுப்பிலுள்ள மிகப்பெரும்பான்மையான கவிஞர்கள் அறுபதுகள், எழுபதுகளில் அறிமுகமான கவிஞர்களேயென்பதை உடனடியாகவே புரிந்து கொள்வார்கள். பெயருக்கு ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, விபுலானந்தர், சோமசுந்தரப் புலவரென இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலக் கவிஞர்களின் சில கவிதைகள் முக்கியத்துவமற்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகக் கல்லடி வேலுப்பிள்ளையின் 'பிரிவுத்துயர்' என்னும் கவிதையின் சில பகுதிகளே பிரசுரிக்கப்பட்டுள்ளன. அது போல் ஈழத்துக் கவிதையுலகில் சாதனை படைத்த 'கவீந்திரன்' அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூண்டி மயானம்' கவிதையும் குற்றுயிரும், குலையுயிருமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நட்சத்திரன செவ்விந்தியன், கல்வயல் வே . குமாரசாமி, இளவாலை விஜயேந்திரன், ச.வே.பஞ்சாட்சரம், நிலாவாணன், மு.பொன்னம்பலம்.. எனப் பலரின் ஒன்றிற்கு மேற்பட்ட பல கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவ்விதம் ஒரு சிலரின் கவிதைகள் தேவைக்கதிகமாக ஒரு தொகுப்பில் இடம்பெறுவதற்குத் தொகுப்பாசிரியர் என்ன காரணத்தைக் கூறப்போகின்றார்? இத்தகைய தொகுப்பு முறை நூலின் சமநிலையினைக் குலைத்து விடாதா? மேலும் நூல் அகரவரிசைப்படி அமைந்திருக்கத் தேவையில்லை. தொகுப்பு பல்வேறு காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பிரிவினுள் அகரவரிசைப்படி அமைந்திருக்கலாம். இவையெல்லாம் தொகுப்பாசிரியரின் அசிரத்தையையே காட்டுகிறது.

இவ்விதமாகத் தொகுப்பானது முறையாக 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையோ அல்லது கவிஞர்களையோ உரிய முறையில் பிரதிபலிக்கவில்லை. உண்மையில் தொகுப்பாசிரியர் குறைந்தது இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திற்காவது விஜயம் செய்து, குறிப்ப்பிட்ட காலகலட்டங்களில் வெளிவந்த பத்திரிகை, சஞ்சிகைகளை முதலில் ஆராய்ந்திருந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் ஆராய்ந்திருப்பாராயின் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் பல்வேறு காலகட்டங்களையும், அக்காலகட்டங்களுக்குரிய கவிஞர்களையும் முறையாக, சரியாக இனங்கண்டு கொண்டிருப்பார். அத்துடன் அக்காலகட்டக் கவிஞர்களின் நல்ல கவிதைகளையும் அவர் அவ்வாய்வின் மூலம் அறிந்திருக்க முடியும். அதன் பின்னர் அக்காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அக்காலகட்டத்திற்குரிய கவிஞர்களின் கவிதைகள் தேந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விளம்பரங்கள் 'போட்டி'களுக்குக் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டுக் கிடைப்பதிலிருந்து தொகுப்பதுக்கென்ன ஆற்றல் வேண்டியிருக்கிறது.

மேலும் உலகின் பல்வேறு கண்டங்களுக்கும் (அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவென..) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலிருந்து மிகப்பெரியதொரு தொகுப்பே போடுமளவுக்குக் கவிதைகள் வெளிவந்துள்ளன; வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அப்புலம்பெயர்ந்த இலக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இதுவரையில் இங்கு முறையாகத் தொகுக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து 'நிழல்' பதிப்பகம் அரைகுறைப் பதிப்பொன்றினை வெளியிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.

சுருக்கமாகக் கூறப்போனால் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழக் கவிதைகளின் வெவ்வேறு காலகட்டங்களும் முறையாக அடையாளங்காணப்பட்டு, அக்காலகட்டங்களில் வெளிவந்த பல்வேறு வகையான கவிதைகள் சொல்லப்பட்ட பொருளின் அடிப்படையில் இனங்காணப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு (ஆன்மிகக் கவிதைகள், முற்போக்குக் கவிதைகள், சிறுவர் கவிதைகள், காதற் கவிதைகள், தத்துவக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள்.. இவ்விதமாக வகைப்படுத்தப்பட்டு), அவற்றைப் பிரதிபலிக்கும் கவிஞர்களின் முக்கியத்துவத்துக்கேற்ப, பங்களிப்பிற்கேற்பத் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைத் தொகுப்பாளர் தவறவிட்டுள்ளார். அதன் மூலம் நல்லதொரு முயற்சி உரிய பலனின்றி வீணடிக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியிருக்கிறது.

இனியாவது இலக்கிய ஆய்வுகள் , தொகுப்புகளைச் செய்ய விரும்பும் ஆய்வாளர்கள் அல்லது தொகுப்பாளர்கள் முதலில் தாங்களாகவே களத்திலிறங்கி முறையான ஆய்வுகளைச் செய்யும் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். பலவேறு இலக்கியக் காலகட்டங்களை முறையாகப் பிரதிபலிக்கும் ஆய்வுகளும், தொகுப்புகளும் வெளிவருவதற்கு இத்தகைய களப்பணி மிகவும் முக்கியமானது. கிடைப்பதை வைத்து ஆய்வென்ற பெயரில் எழுதுவதற்கும், தொகுப்பதற்கும் பட்டப்படிப்பேதும் தேவையில்லை. தேடலும், அர்ப்பணிப்பும் ஆய்வொன்றின் வெற்றிக்கு முக்கியமானவை. - வ.ந.கி

ngiri2704@rogers.com

எழுத்தாளர் நீல பத்மநாபனுக்கு சாகித்திய அகாடமி விருது!
எழுத்தாளர் நீல பத்மநாபனுக்கு சாகித்திய அகாடமி விருது! தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் நீல பத்மநாபனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது 'இலையுதிர் காலம்' என்னும் நாவலுக்காக இந்திய மத்திய அரசின் 2007ற்கான 'சாகித்திய அகாடமி' விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் விருதுகளும் கெளரவம் பெறுவதுண்டு. இது அத்தகைய சந்தர்ப்பங்களிலொன்று. ரூபா 50,000வும், பாராட்டுப் பட்டயமும் மேற்படி விருது வழங்கும் விழாவின்போது வழங்கப்படும். இம்முறை நீல பத்மநாபன் தவிர்ந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 23 எழுத்தாளர்களுக்குச் பெப்ருவரி 20 அன்று டெல்லியில் நடைபெற்ற மேற்படி விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் தமிழில் 34 நாவல்களையும், மலையாளத்தில் நான்கு மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நீல பத்மநாபன் அவர்களின் படைப்புகள் பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த இவரது படைப்புகளில் 'பள்ளிகொண்டபுரம்', 'தலைமுறைகள்', 'தேரோடும் வீதி' ஆகியன குறிப்பிடத்தக்கவை., இவரது கவிதைகளும் நூலுருப்பெற்றுள்ளன.

நீல பத்மநாபனின் படைப்புகள்!

1.நாவல்கள்
தலைமுறைகள் - 1968
பள்ளிகொண்டபுரம் - 1970
பைல்கள் - 1973
உறவுகள் - 1975
மின் உலகம் - 1976
நேற்று வந்தவன் - 1978
உதய தாரகை - 1980
பகவதி கோயில் தெரு - 1981
போதையில் கரைந்தவர்கள் - 1985
இலையுதிர் காலம் - 2007


2.சிறுகதைகள்

மோகம் முப்பது ஆண்டு - 1969
சண்டையும் சமாதானமும் - 1972
மூன்றாவது நாள் - 1974
இரண்டாவது முகம் - 1978
நாகம்மா - 1978
சத்தியத்தின் சந்நிதியில் - 1985
வான வீதியில் - 1988

கவிதைகள்

3.நீலபத்மநாபன் கவிதைகள் - 1975
நா காக்க - 1984


கட்டுரைகள்

4.சிதறிய சிந்தனைகள் - 1978
இலக்கிய பார்வைகள்


5.திரட்டு நூல் - குரு சேத்திரம் - 1976
தற்கால மலையாள இலக்கியம் தமிழ் - 1985


1. மலையாளம்

பந்தங்கள் - 1979
மின் உலகம் - 1980
தலைமுறைகள் - 1981
பள்ளிக்கொண்டபுரம் - 1982
கதைகள் இருபது - 1980
எறும்புகள் - 1987


- குருவி -


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner