சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


- * மகாஜனக்கல்லூரி வெளியிட்ட ‘குழந்தைக் கவிதைகள்’ நூலில் இடம் பெற்ற குரு அரவிந்தனின் சில பாடல்கள். -

(1) தமிழ்மொழி

தாய்மொழியாம் தமிழ்மொழி
தாய்மொழியாம் தமிழ்மொழி

அம்மா, அம்மா சொன்ன மொழி
அப்பா, அன்பாய் அழைத்த மொழி
அண்ணா அக்கா பேசும் மொழி
அதுவே எங்கள் சொந்த மொழி.

பொதிகையிலே பிறந்த மொழி
சங்கத்திலே வளர்ந்த மொழி
தொன்று தொட்டு வாழ்ந்த மொழி
அதுவே எங்கள் சொந்த மொழி.

பாட்டா பாட்டி தந்த மொழி
பண்பாய்ப் பழக ஏற்ற மொழி
முன்னோர் போற்றி வளர்த்த மொழி
உலகம் எல்லாம் போற்றும் மொழி.

(2) அகரவரிசைப் பாடல்

அண்ணா அக்கா வாருங்கள்
ஆசான் சொன்னதைக் கேட்போமே
இங்கே இப்போ வாருங்கள்
ஈசன் பாதம் பணிவோமே!

உண்மை என்றும் பேசிடுவோம்
ஊக்கத்தோடு உழைத்திடுவோம்;
எண்ணும் எழுத்தும் படித்திடுவோம்
ஏட்டில் உள்ளதைக் கற்றிடுவோம்!

ஒன்று பட்டே வாழ்ந்திடுவோம்
ஓடி ஆடிப் பாடிடுவோம்
ஐயம் இன்றிப் பேசிடுவோம்
ஒளவை சொற்படி வாழ்ந்திடுவோம்!

(3) தைப்பொங்கல்

தை பிறந்தால் வழி பிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்

கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்;

உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்.


(4) அம்மா

காலை நேரம் மெல்ல அணைத்து
என்னை எழுப்பும் அம்மா
சாலை ஓரம் ஒதுங்கி நின்று
பள்ளி அனுப்பும் அம்மா!

படிக்கும் போது பக்குவமாய்ச்
சொல்லிக் கொடுக்கும் அம்மா
உண்ணும் உணவை ஆசையோடு
ஊட்டிவிடும் அம்மா!

தவறு செய்தால் கனிவுடனே
திருத்திவிடும் அம்மா
இரவு வேளை கதைகள் சொல்லி
உறங்க வைக்கும் அம்மா!


(5) வாத்து

குவாக்  குவா வாத்து - நீ
எங்கு போனாய் நேற்று
பார்த்துப் பார்த்துப் பார்த்துக்
கண்ணும் பூத்துப் போச்சு!

மெல்ல மெல்ல நடக்கிறாய்
மேலும் கீழும் பார்க்கிறாய்
பாடிப் பாடித் திரிகிறாய்
பள்ளி எங்கே கொள்கிறாய்?

தண்ணீரில் நீந்திறாய்
தலையை மூழ்கி எழுகிறாய்
வாயில் மீனைக் கவ்விறாய்
வாவ் என்றே தின்கிறாய்!

கூட்டமாகத் திரிகிறாய்
கூடிக் கூடி மகிழ்கிறாய்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்று சொல்லித் தருகிறாய்!


(6) சிரிக்கும் மலர்கள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
சின்னச் சின்னச் செடிகளில்
காலை நேரம் மலர்ந்திடும்
வண்ண வண்ணப் பூக்களாம்.

வண்டு வந்து பாட்டுப் பாட
வண்ண மலர்கள் ஆடுமாம்
தென்றல் வந்து தழுவிச் செல்ல
மகிழ்ந்து இன்பம் காணுமாம்

தேன் குடிக்கும் வண்டுகள்
பசியிழந்து பறந்திட
களிப்படைந்த மலர்களும்
மெல்லச் சிரித்து மகிழுமாம்.


(7) கிழமையும் மாதமும்


ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி சனி
ஏழு நாட்களும் ஒன்றாய் சேர்ந்தால்
வருமே ஒரு வாரம்.

சித்திரை வைகாசி ஆனி
ஆடி ஆவணி புரட்டாதி
ஐப்பசி கார்த்திகை மார்கழி
தையோடு மாசி பங்குனி.

பன்னிரு மாதங்கள் ஒன்றாய்
சேர்ந்தால் வருமே ஒரு வருடம்
சித்திரை மாதத்து முதல் தினம்
அதுவே புதுவருடம்.

ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி சனி
ஏழு நாட்களும் ஒன்றாய் சேர்ந்தால்
வருமே ஒரு வாரம்.

(பாடல்களைப் பிரதி எடுப்பவர்கள் பாடலாசிரியரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.)

பாடலாசிரியர்: குரு அரவிந்தன் (ஓன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கக் காப்பாளர்)