லதா ராமகிருஷ்ணன்இயற்கையை தனது அடிமையாக பாவித்து மனிதன் அதை பலவிதங்களிலும் சேதப்படுத்திவருவதன் பலனை உலகமும், அதிலுள்ள உயிரினங்களும் அனுபவித்துவருகின்றன. புவி வெப்பமயமாதல் என்ற சொற்பிரயோகத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கநேர்கிறது. மரம் நடுவதன் அவசியத்தைப் பேசியபடியே மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காடுவளர்ப்புப் பற்றி பேசியவாறே காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. புலி, யானை போன்ற எத்தனையோ விலங்கினங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே போகிறது. தட்பவெப்பநிலையில் விரும்பத்தகாத பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தொடர்ந்தரீதியான அக்கறையும், விவாதங்கள், வழிகாட்டல்களும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளன.

நவீன தமிழ்க்கவிதைவெளியில் தொடர்ந்து நாற்பதாண்டுகளாக இயங்கிவரும் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியும் நண்பர்களுமாகச் சேர்ந்து சிற்றிலை என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். கவிஞர்களுக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு அருமையான அந்நியோன்யம் நிலவுவதை அவர்களுடைய கவிதைகளிலிருந்து அறிய முடியும். பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளிலும் இந்த அம்சம் அழுத்தமாக இடம்பெற்றிருக்கிறது. இயற்கையை வெறுமே எழுத்தால் ஆராதிப்பதைவிட அதைப் பாதுகாக்கவேண்டிய விழிப்புணர்வை மக்களிடையே பரவலாக்க தங்களால் இயன்றதைப் படைப்பாளிகள் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகியுள்ள இந்த அமைப்பு மாதம் ஒரு கூட்டம் தேவநேயப்பாவாணர் சிற்றரங்கத்தில் நடத்திவருகிறது. சுற்றுச்சூழல் பற்றி எழுதப்பட் டிருக்கும் நூல் ஒன்று இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு அதன் முக்கிய அம்சங்கள் சிறப்புப் பேச்சாளர் ஒருவரால் எடுத்துக்காட்டப்படுகின்றன. பின், நம்முடைய வாழ்நிலத்தின் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துவரும் சுற்றுச்சூழல் பிரச்னையொன்றைப் பற்றி சுற்றுச்சூழல் ஆய்வாளரொருவர் விரிவுரையாற்றுகிறார். முடிந்தால், அது தொடர்பான ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது.

நவீன தமிழ்க்கவிதைவெளியில் தொடர்ந்து நாற்பதாண்டுகளாக இயங்கிவரும் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்திமே மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் சிற்றிலை சார்பில் நடத்தப்பட்ட மூன்றாவது கூட்டம். இதற்கு முந்தைய இரு கூட்டங்களில் தாமிரவருணி ஆறுக்கு பன்னாட்டு நிறுவனங்களால் நேர்ந்துவரும் ஆபத்துகள் குறித்து திரு சி,மகேந்திரன் எழுதியுள்ள நூல் ஒன்று, திரு.தியோடர் பாஸ்கரன் எழுதியுள்ள நூல் ஒன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. முதல் கூட்டத்தில் திரு.சி.மகேந்திரன் சுற்றுச்சூழல் மாசுகளினால் தாமிரவருணி ஆறுக்கு நேர்ந்துவரும் சீர்கேடுகள் குறித்து மனவேத னையோடு எடுத்துரைத்தார். இரண்டாம் கூட்டத்தில் வேளாண்சேரி என்று தனது பெயரிலேயே தன்னை விளைநிலமாக அடையாளம் காட்டும் பகுதி –இன்றைய வேளச்சேரி பகுதி எத்தனை சீர்கேடடைந்திருக்கிறது, பெரிய பெரிய நிறுவனங்கள் ஏரிப்படுகையில் முளைத்திருப்பதன் பேராபத்துகள் யாவை, எத்தனையோ அரிய பறவையினங்களின் சரணாலயமாக உள்ள இந்தப் பகுதியை சூழல்மாசிலிருந்து காக்க வேண்டியது எத்தனை முக்கியம் என்பது குறித்த விரிவுரையும், ஆவணப்படமும் இடம்பெற்றிருந்தன.

மே 2அன்று நடைபெற்ற சிற்றிலை மூன்றாம் கூட்டத்தில் யானைகள் அழிந்துவருவது குறித்த கவலையைப் புள்ளிவிவரங்களோடு பதிவுசெய்யும் நூல். பேரழிவில் பேருயிர் - யானைகள் என்ற தலைப்பிலான இந்த நூலை எழுதியவர்கள் திரு.முகமது அலி, திரு.யோகானந்த். இந்த நூலின் சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டி பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மேற்குத்தொடர்ச்சி மலைகளும் தமிழகம் எதிர்நோக்கும் சிக்கல்களும் என்ற தலைப்பில் விரிவுரையாற்றிய திரு.காளிதாசன் பல வருடங்களாக ஓசை என்ற அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான களப்பணியையும், கள ஆய்வையும் மேற்கொண்டுவருபவர். அவர் மலைக்காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். தந்து சொற்பொழிவை தமிழகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கும், செயல்பாடுகளுக்கும் பெரும்பங்காற்றிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினருக்குக் காணிக்கையாக்கிய திரு.காளிதாசன் ஈக்கோ-டூரிஸம் என்ற பெயரில் பழங்குடியின மக்களை பாதிக்கும் பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வேதனையோடு தெரிவித்தார். மலைக்காடுகள் அழிக்கப்பட்டுவதாலேயே பல நதிகள் வற்றிப்போய்விடுகின்றன என்பதை பல்வேறு ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினார் அவர்.

இந்தக் கூட்டத்தில் கிடைத்த பல சுற்றுச்சூழல் சார் முக்கியத் தகவல்களில் சில பின்வருமாறு:

_ மலைகளிலுள்ள புல்வெளிகள் மழைநீரைத் தேக்கிவைக்கும். சோலைக்கடுகளில் மரங்கள் குறைந்த உயரமுடையவை. அவை மழைநீரைத் தேக்கிக்கொள்ள, அந்த நிர் மெதுமெதுவாக இறங்கிப்படரும் இடம் தான் மலைச்சிகரம். எவ்வளவு அடைமழை பெய்தாலும் அதைச் சோலைக்காடுகள் உள்வாங்கும். இவ்வாறு சேகரமாகும் நீர் சிறிதுசிறிதாகக் கீழிறங்கி ஒடைகளாக, ஆறுகளாக உருவாகும்.

_ ஆறுகள் உருவாக, தட்பவெப்பநிலை பராமரிக்கப்பட சோலைக்காடுகள் இன்றியமையாதவை. சுற்றுலாத் தலங்கள், தங்குமிடங்கள் கட்டப்படுவதற்காக இந்தக் காடுகள் அழிக்கப்படுவதால் தான் ஆறுகள் வற்றுகின்றன; மழைக்காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. _மணிநீர், மண், மலை, அணிநிலக்காடு அரண்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் கூறியிருக்கிறான். நாம் வள்ளுவனுக்கு விழா எடுப்போம், ஆனால், அவன் சொன்னதைக் கடைப்பிடிப்பதில்லை.

_ஈக்கோ-சிஸ்டம், அதாவது வாழ்க்கைச்சூழல் கட்டமைப்பு என்பது அழகியல் பார்வையிலிருந்து சூழலியல் பார்வையாக நம்மிடையே உருவாக் வேண்டியது அவசியம்.

சொற்பொழிவுகளுக்குப் பின் ஸேவ் தி ஷோளாஸ் , சோலைக் காடுகளைப் பாதுகாப்போம் ,  என்ற ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டது.

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். மரம் என்பதும், காடு என்பதும் பலப்பல சிற்றிலைகளாலானது. அப்படி, இந்த சிற்றிலை அமைப்பும் மக்களிடையே, குறிப்பாக, வளரும் சமுதாயத்தினரிடையே சூழலியல் சார் விழிப்புணர்வை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு நடத்தும் மாதாந்திரக் கூட்டங்களுக்கு நிறைய பேர் வந்து பயனடைய வேண்டும். இந்தக் கூட்டங்களில் இடம்பெறும் சொற்பொழிவுகள், சிறப்புரைகள் சிறு கையேடுகளாகவோ, அல்லது கட்டுரைகளாகவோ பலரைச் சென்றடைய வேண்டியது அவசியம்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவசியமென்று கருதுகின்றோம். இப்பகுதியில்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.