ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனிதனுக்குப் பொருளாதார நோக்கினைக் கற்பித்து மேம்படுத்தி அவனை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடைபயிலச் செய்தவை உழவாகும். தமிழக வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அவை ஒன்றினை ஒன்று மிஞ்சியும்,ஒன்றோடு ஒன்று இணைந்தும் வளர்ந்துள்ளன. உழவு என்பது நிலம் சார்ந்த உற்பத்தித் திறனாகும். உழைப்பு என்ற கருத்தின் அடிப்படையில் உழவு என்னும் சொல் பிறந்திருக்க வேண்டும். உழவர், சதுர்த்தர், வளமையர், களமர், மேழியர், வேளாளர், ஏரின் வாழ்நர், காரகளர், புனைஞர், பின்னவர், கடையர், தொழுவர், மள்ளர் என்று பல பெயர்களைச் சங்க இலக்கியங்களும், நிகண்டுகளும் உழவர்களுக்குத் தருகின்றனர்.தொடக்கத்தில் வேளாளர் என்ற சொல் பெருந்தகையாளர் என்ற பொருளில் பயன்பட்டுப் பிறகு உழவர்களைக் குறிக்கத் தொடங்கியது. இன்று விவசாயிகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயிலப்படவில்லை. எனவே இச்சொல்லைப் பின்னாளில் வழக்கிற்கு வந்ததாகவே கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவினை காலந்தோறும் எவ்வாறு வளர்ந்தனர் என்பதைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

உழவின் தொன்மை
உழவுத் தொழிலின் தொன்மைப் பற்றிப் புறநானூறு பாடல் பின்வருமாறு விளக்குகின்றது. அவை,
“உணவு எனப்படுவது
நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு”
(புறம் பா.எண் 18)

என்ற இப்பாடலில் இவ்வுடல் நீரின்றி அமையாது உணவால் அமைவது உணவையே முதன்மையாகவும் உடையது, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர். எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் என்று கூறுகின்றது. மனிதனுக்கு இன்றியமையாத தேவையான உணவு தொடக்க நிலையில் தேடப்பட்டுச் சேகரிக்கப்பட்டது. அடுத்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொடக்கநிலையில் இயற்கையாக விளைந்த பழங்கள் ,கிழங்குகள், வரகு, மூங்கில் அரிசி முதலியவை உட்கொள்ளப்பட்டனர். உணவைச் சேமித்து வைத்திருந்து உண்ண வேண்டி வந்த போது உணவு தேடல் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு மாறியது இந்நிலையில் கடினமான நிலம் கிளரப்பட்டு வித்திடப்பட்டது. மழைநீர் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி அதிக அளவில் தேவைப்பட்ட போது ஆற்றோரப் பகுதிகளுக்குக் குடியேறி உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த முறையில் தான் உற்பத்தி வளர்ந்தது என்பதை அறிய முடிகின்றது. சங்ககால உழவு
சங்ககால நிலவகைகளாகப் புலம், பின்புலம், கரம்பை, வயல், கழனி, செறு, துடவை, பழனம், பனை போன்றவை தெரிய வருகின்றது. பின்புலம், கரம்பை முதலியவை கடுமையான நிலங்களாகும். இவை உழுகோல், மண்வெட்டி ஆகியவற்றால் கிளரப்பட்டுப் பண்படுத்தப்பட்டன. கலப்பையைச் சொல்கின்ற பெரும்பாணாற்றுப்படை கொழுமுகம் உடும்பின் முகம் போலவும், மேல் பகுதியான கலப்பை யானையின் துதிக்கை போலவும் இருந்தது என்பதை,

“பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழுமூழக ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை”
(பெரும்பாணாற்றுப்படைஅடி எண் 199-201)

என்ற இப்பாடலில் உழவுத் தொழில் நன்கு நடைபயின்ற பெரிய எருதுகளை வீட்டின் வாயிலிலேயே நுகத்திற்ப10ட்டிக் கொண்டு சென்று பிடி யானையினை; வாயை ஒத்த வளைந்த வாயையுடைய கலப்பையை, உடும்பு முகம் போன்ற முழுக்கொழு மறையும்படி அமுக்கி வளைய உழுது சிதைத்து பின்னர்க் களைக் கொட்டால் களைகளைக் களைந்து பயிர் விளைவிப்பார்கள் என்பதை அறிய முடிகின்றது.

முதலில் நில உற்பத்தி அவரவர் தேவைக்கு மட்டுமே செய்யப்பட்டது. மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாகவும், பொருள் ஈட்டல் நோக்கத்தாலும் தேவைக்கும் மேலாக வணிக நோக்கில் அதிக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. வேளிர்களும், வேந்தர்களும் நில உற்பத்திப் பெருக்கத்தில் கருத்தூன்றினர். மேலும் நிலங்கள் சாகுபடிக்கு உட்படுத்தப்பட்ட போது நெடுஞ்செழியன் போன்ற மன்னர்கள் நீர்நிலைகளை உண்டு பண்ணினர் என்பதை,

“நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”
(புறம் பா.எண்.18)

என்ற இப்பாடலில் நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கட்டியோர் இவ்வுலகில் நிலைக்குமாறு தன் பெயரை உலகுள்ளவரை நிறுத்திய புகழை அடைவர். நீர் வளம் இல்லை என்றால் நெல் விளையாது அதனால் வறட்சியுற்றுப் பஞ்சம் நேரும். அதனால் நீர் வளத்தை பெருக்கினால் செல்வம் பெருகும் என்று கூறுவதை அறிய முடிகின்றது.

சங்ககாலத் தமிழகத்தில் காவிரி, வைகை, ஆன்பொருநை, பேராறு, சேயாறு போன்ற ஆறுகள் நீர்ப்பாசன வசதிகளைத் தந்தன. சுழி சுற்றிய விளைகழனி என்னுமளவுக்கு நீர் மிகுதியாகக் கிடைத்தது.
கயம், குளம், குட்டம் போன்ற நீர்நிலைகள் ஆறில்லாத பகுதிகளில் பயன்பட்டன. ஏற்றம், அகலாம்பி என்னும் கருவிகள் இறவைப் பாசனத்திற்குப் பயன்பட்டன. நீரில்லாத கிணற்றில் நீரிறைக்கும் போது முகவைகள் நீரை முகக்காது தொங்கிய நீண்ட கயிரையே முகந்தன என்பதையும் அறிய முடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் உழுதொழில் பெருஞ்சிறப்படைந்தது என்பதை,
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (குறள் 1031)

என்னும் குறளில் உலகில் வௌ;வேறு தொழில்களில் மாறிமாறி ஈடுபட்டாலும் இறுதியில் ஏரால் உழுது பயன்விளைவிக்கும் வேளாண்மை வழிப்பட்டதே உலகம். எனவே எங்ஙனம் உழன்றாலும் வேளாண்மையே தலையாயதாகும். மேலும்,

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்தது” (குறள் 1032)         

ஏன்னும் குறளில் உழவை மெய்வருந்திச் செய்யமாட்டாது  பிற தொழில்கள் மேற்செல்வாரை எல்லாம் அவ்வுழவே தாங்குகிறது. ஆதனால் உழவர்கள் உலகமாகிய தேருக்கு அச்சாணியாவர். மேலும்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”    (குறள் 1033)   

என்ற குறளில் உழவுத் தொழிலைச் செய்து பிறர்க்கும் உதவித் தாமும் உண்டு வாழ்கின்றவர்களே உரிமையுடன் வாழ்கின்றவர்கள் மற்ற தொழில் செய்வார் எல்லாம் பிறரை வணங்கி உண்டு அவர் ஏவியவற்றைச் செய்து வாழ்பவர்கள் என்று உழவுத் தொழிலின் சிறப்பை வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து அறிய முடிகின்றது.

பல்லவர் காலத்தில் உழவு
சிம்மவர்ம பல்லவன் காலத்திலேயே பல்லவர் அரசு காவிரிக் கரை வரை பரவியிருந்தது என்பது பள்ளன் கோயில் செப்பேட்டால் அறியப்படுகின்றது. இச்செப்பேட்டில் காவிரி ஆறு ஒரு பெண்ணாக வருணிக்கப்படுகிறது. பசும் நெல் வயல்களை ஆடையாகவும். கரும்பு, வாழை, கமுகத்தோட்டங்களை அரையிலணியும் ஒட்டியாணமாகவும் அணிந்துள்ளதாகக் காவிரி ஆற்றுப்பாசனப் பெருமை பேசப்பட்டுள்ளது. முதலாம் மகேந்திரவர்மனும் நீர் மூலமாக ஒடுகின்ற காவிரியைப் பல்லவனுடைய ஆறு எனச் சொல்லி பெருமைப்படுகிறான். முதலாம் பரமேஸ்வரனின் கூரம் செப்பேடு பாலாற்றையும் அதனிலிருந்து பரமேஸ்வர தாடகத்திற்கு நீர் கொண்டு சென்ற பெரும் மிடுகு வாய்க்காலையும் குறிப்பிடுகின்றது. நாட்டுக்கால், ஊற்றுக்கால் என்று கால்கள் வகைப்படுத்திப் பேசப்படுகின்றன. கால்களில் குரங்கறுத்தலும், கூடைஇறைத்தலும் சொல்லப்பட்டுள்ளன. இதே பரமேஸ்வரவர்மனின் திருவதிகைக் கல்வெட்டு ஊருணி ஒன்றைக் குறிப்பிடுகின்றது. தூம்பு, குமிழி, தலைவாய், தலைப்பேழை, ஜலயந்திரம், ஜதுவாரம், குற்றேத்தம், பேரேத்தம் என்பன போன்ற நீர்ப்பாசன நுட்பப் பெயர்கள் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகின்றது.

பாண்டியர் கால உழவு
பாண்டிய நாட்டில் வைகை, தாமிரபரணி, குண்டாறு, மீகுண்டாறு, சுருளி ஆறு, வெள்ளாறு போன்ற ஆறுகளால் நீர்ப்பாசன வசதிகள் கிடைக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் வைகையாற்றில் மதகு வைத்து அரிகேசரியான் என்னும் கால்வாய் பிரிக்கப்பட்டதை வைகைக்கரைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. புhண்டிய அரசர்கள் ஆறு பலதலைக் கண்டவர்கள் என் செப்பேடுகளில் புகழப்படுகின்றன. பேராறுகளிலிருந்து கால்கள் பிரிக்கப்பட்டு புதிதாகத் தோண்டப்பட்ட பல ஏரிகளை நிரப்பினர். புதிதாகப் பல ஏரிகளின் கரைகள் உயர்த்தப்பட்டதைக் கடல் போலக்குளம் காட்சியளித்ததன் கரையில் எண்ணிறந்த தடாகங்கள் கட்டியதை தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகின்றது. ஆறுகளிலிருந்தும், குளங்களுக்குக் கால்வாய்கள் எடுக்கப்பட்டது இதைத் தவிர மழைநீர் மூலமும் குளங்கள் நிரம்பியிருந்ததை அறிய முடிகின்றது.

சோழர் கால உழவு
சோழர்களும் தமிழக உழுதொழிலாளர்க்குப் பொற்காலம் என்று சொல்லலாம். பெருநதியான காவிரி சோழநாட்டை வளப்படுத்தியது. குடகு முதல் பூம்புகார் வரை பாயும் காவிரி நதியைச் சோழர்கள் பெற்றிருந்தனர். குரிகால் சோழன் பொன்னிக்கரை கண்ட ப10பதி என்று அழைக்கப்படுகின்றான். மூவருலா போரிட்டுக் காவிரியைச் சோழ நாட்டிற்குள் தடையில்லாது பாயச் செய்த சோழனைக் குறிக்கின்றது. கல்வெட்டுகளில் காவிரி, பழங்காவிரி, மேற்காவிரி, கொள்ளிடம், பாலாறு, கெடிலம், நோகா ஆறு, வெண்ணாறு, பெண்ணை, தன்பொருநை, வைகை என்ற பல ஆறுகள் பற்றிய குறிப்புகள் கிடைத்திருப்பதை அறிய முடிகின்றது.

விஜயநகரர் கால உழவு
சோழர் கால உழவு முறைகள் விஜயநகரர்  அரசர்கள் காலத்திலும் பின்பற்றப்பட்டன. எனினும் சோழர் காலத்தில்  உழவு, மற்ற வணிகம், தொழில் முதலிய சமுதாயக் கூறுகளை மிஞ்சியிருந்தது. ஆனால் விஜயநகரர் காலத்;தில் தொழில், வணிகம் முதலியவை உழவினை மிஞ்சியிருந்தன என்று கூறலாம்.

விஜயநகரர் அரசர் காலத்திலும் பெரிய பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. ஆவை சமுத்திரம் என்றும் அழைக்கப்பட்டன. காஞ்சிபுரம் அருகில் தென்கேரியில் தாதாசாரியார் ஒரு பெரிய ஏரியை தாதா சமுத்திரம் என்ற பெயரில் உதமடைகள் உடையதாக கூறியுள்ளார். இவர் இங்கு ஆஞ்சநேயர் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். ஏரிகளைப் பராமரிப்பதற்காக ஏரிக்கடமை, ஏரிகுழி, ஏரி மீன்பாட்டம், ஏரிப்பாசி, வேலிக்குழிப்பணம், வாசல் குழிப்பணம் முதலிய வருவாய்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகின்றது.

முடிவுரை
மனிதனுக்குப் பொருளாதார நோக்கினைக் கற்பித்து மேம்படுத்தி அவனை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடைபயிலச் செய்தவை உழவேயாகும். அத்தகைய உழவுத் தொழிலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதாவது சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், பாண்டியர்காலம், சோழர்காலம்,  விஜயநகரர் காலம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் உழவுத் தொழிலை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளனர். உழவுத் தொழில் செய்வதற்கான நீர்பாசனங்களை அமைத்து உழவுத் தொழிலை வளர்த்ததை இக்கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.

பார்வை நூல்கள்
1. கு.வெ. பாலசுப்பிரமணியன் - புறநானூறு மூலமும் உரையும்
2. கு.வெ. பாலசுப்பிரமணியன் - பத்துப்பாட்டு மூலமும் உரையும்
3. தமிழண்ணல் - திருக்குறள்
4. க.நா. சுப்பிரமணியம் - பள்ளன் கோயில் செப்பேடு

* கட்டுரையாளர்: - முனைவர் வ.சந்திரசேகர்,  கௌரவ விரிவுரையாளர்,  அரசு கலைக் கல்லூரி,  பரமக்குடி.-