- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முன்னுரை:
சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும்.
அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது.


சான்றாக,


“பூ வாரடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே”
- மாணிக்கவாசகர்

“யாதும் சுவடு பாடாமல் ஐயாநடைகின்ற போது”
-திருநாவுக்கரசர்

இதில் சுவடு என்னும் சொல் பதித்தலை உணர முடிகிறது.

சுவடி கணக்கெடுப்பு :-
இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் சுவடிகள் 1995 ஆம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது. மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

சுவடிகளின் வகைகள்:-
சுவடிகள் எழுதப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொண்டு சுவடிகளை,
•    ஓலைச்சுவடி
•    தாள் சுவடி
•    காகிதச்சுவடி
எனவும்,

எழுது முறையைக் கொண்டு
•    ஓவியச்சுவடி
•    ஒளிரும் சுவடி
எனவும்,

மொழியின் அடிப்படையில்
•    தமிழ்ச்சுவடி
•    வடமொழிச்சுவடி
•    தெலுங்கு சுவடி
எனவும்,

சுவடிகள் கூறும் பொருளைக் கொண்டு
•    இலக்கியச்சுவடி
•    இலக்கணச்சுவடி
•    சோதிடச்சுவடி
•    வைத்தியச்சுவடி
•    கணக்குச்சுவடி
•    சித்திரச்சுவடி
•    ஆவணச்சுவடி
என வகைப்படுத்தி குறிப்பிடுகின்றன.

பனையோலைகளின் வகைகள்:-
பனைமரங்களில் பல வகைகள் இருப்பினும் அவற்றுள் ஒரு சில பனைமரங்களின் ஓலைகள் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். இன்று உலகெங்கும் உள்ள ஓலைச்சுவடிகளை மூன்று வகையான ஓலைகள் அதிகம் பயன்படுத்தி உள்ளன என்பதை அறிய முடிகிறது.

அவை:-
1.சீதாளப் பனை என்னும் கூந்தல் பனை
2.நாட்டுப்பனை
3. லோந்தர் பனை சீதாளப் பனை:-

சீதாளப் பனையைக் கூந்தல் பனை, தாளிப்பனை, தாளபத்ர குடைப்பனை எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தொடக்க காலத்தில் இவையே அதிகம் எழுதப் பயன்பட்டது. இவை அதிக நீர்வளமுள்ள இடங்களில் வளரும். 3-4 அடி நீளமும் 8-10 செ.மீ அகலமும் கொண்ட இவை 50-60 அடி உயரம் வளரும். இதன் ஓலை நன்கு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. தமிழ்நாட்டில் ஆற்றங்கரை, வயல்களிலும், மலேசியா, கேரளா, இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் வளர்கிறது. (பெரிய காப்பியங்கள் வடமொழி இலக்கிய இலக்கண நூல்களும் இவ்வகை ஓலைகளில் எழுதப்பட்டவை ஆகும்) சீதாளப் பனைமரங்கள் சுமார் 70 வருடம் வரை வாழக் கூடியவை எனத் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டுப்பனை :-
நாட்டுப்பனை தென்னிந்தியாவில் அதிகமாக வளர்கின்றன. இவை வளமான பகுதிகள் வறட்சியான பகுதிகள், மேட்டுப்பாங்கான பகுதிகள், மணற்பாங்கன பகுதிகள் என அனைத்து நிலங்களிலும் வளரக்கூடியவை. இவை சுமார் 4 செ.மீ முதல் 6 செ.மீ அகலமும் 2 அடி முதல் 3 அடி  நீளமும் கொண்டவை. இந்த ஓலைகள் தடிமனாக இருக்கும். நன்கு வளைந்து  கொடுக்கும் தன்மை கொண்டது

லோந்தர் பனை :-
லோந்தர் பனை மரங்கள் பர்மா, தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் வளர்வதாக குறிப்பிடப்படுகின்றன. இம்மரங்களின் ஓலைகள் கூந்தல் பனை ஓலைகளைப் போன்று நீள அகலங்களைக் கொண்டும், நாட்டுப் பனை ஓலைகளைப் போன்று தடிமனாதாகவும் இருக்கும்.

இவ்வோலைகளில் எழுத்தாணி கொண்டோ அல்லது அதன் மீது அரக்கு பூசி தூரிகையினால் மை கொண்டோ எழுதப்பட்டுள்ளன. இவ்வகை ஓலைச்சுவடிகள் ஓரப் பரப்பின் மீது சிவப்பு வண்ணமும் தங்க இழைகள் ஒட்டியும் அழகுப்- படுத்தப்பட்டுள்ளன.

பனையோலை தயாரிக்கும் முறை:-
1).பனை மரங்களில் ஆறுமாதக் காலம் வளர்ந்த ஓலைகளே எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. 2).இதனை நிழலில் காய வைத்துத் தலையோலைகளை குறுகிய அடி நுனிகளையும் ஓலைகளின் நரம்புகளையும் நீக்கி விட்டு ஒரே அளவாக ஓலைகளை வெட்டிக்கொண்டு நிழலில் காய வைக்க வேண்டும். 3) வழவழப்பான கல், சங்கு, கொண்டு தேய்க்க வேண்டும். 4) தேய்க்கப்பட்ட ஓலைகளை இரு பலகைக்கிடையில் வைத்து கட்டி ஓலைகளின் இருபுறமும் வளைவாக இருக்குமாறு வெட்டப்பட வேண்டும். இவ்வாறு வெட்டப்படும் முறையை ஓலை நறுக்குதல்  என்பர். 5).ஒரே அளவாக வெட்டப்பட்ட  ஓலைகளை ஒன்றாக வைத்து துளையிட வேண்டும். 6).துளையிடப்பட்ட ஓலைகளைக் கயிறு கொண்டு கட்டி வைக்க வேண்டும். 7).இவ்வாறு தயாரிக்கப்பட்ட எழுத பெறாத ஓலைகளை வெள்ளோலைக் கட்டுகளைப் புகுபாட் (ருடீர்ருPழுவு) எனக் குறிப்பிடுகின்றனர். 9). ஒலையைத் தயாரிக்கும் பணியை ஓலை வாருதல் என்பர். 10). எழுதும் ஓலைகளுக்காக மட்டும் பயன்பட்ட பனை மரங்களை ஓலை வெட்டுப்பனை என்றும், தனியாக பிரிக்கப்பட்ட அல்ல்து நரம்பு நீக்கிய ஓலைகளை ஓலைச்சிறகு என்றும் கூறுவர். 11). ஓலையை சுத்தம் செய்து வெட்டுவதற்குப் பயன்பட்ட கத்தியை ஓலைவாரி என்றும் குறிப்பிடுவார். இவ்வாறு பனையோலைகளை ஓலைச்சுவடிகளாக தயாரிக்கப்படுகின்றனர்.

சுவடி அழிவிற்கான காரணங்கள்:
எழுதப்பட்ட சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிவிற்கு உள்ளாகின்றன. அழிவை ஏற்படுத்தும் காரணிகளின் அடிப்படையில் சுவடிகளின் அழிவை மூன்று வகையாகப் பகுக்கலாம்.
அவை,
1.    இயற்கை அழிவு
2.    செயற்கை அழிவு
3.    அறியாமை அழிவு

இயற்கை அழிவு:
உலகில் உருவாக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் இயற்கையாக ஏற்படும் பல்வேறு காரணிகளால் அழிவிற்குள்ளாகின்றன.
அவை,

 

தூசு
ஒளி
தட்பவெப்ப நிலை
நீர்
மழை
வெள்ளம்
தீ

செயற்கை அழிவு:

மக்களின் விருப்பு,வெறுப்பு, சமயக் காழ்புணர்ச்சி மன்னர்களுக்கிடையேயான போர் போன்ற பல்வேறு கார்ணங்களால் சுவடிகள் அழிவிற்குள்ளாகியுள்ளன.
இயற்கைச் செயற்கை அழிவு எனக் கொள்ளலாம்.

போரினால் அழிவு
தீயினால் அழிவு

அறியாமை அழிவு:

அனல் வாதம்
புனல் வாதம்

வெளிநாட்டவர் எடுத்துச்சென்ற காரணத்தினால் அழிவு ஏற்பட்டன.

முடிவுரை:-
காகிதம், அச்சுப்பொறி ஆகியவற்றின் வருகையால் ஓலைச்சுவடிகளில் இலக்கியங்களை எழுதி வைக்கும் பழைய முறை காலாவதியாகிப் போய் விட்டது. சுவடியில் எழுதுவோர், சுவடிகளைப் படிப்போர் ஆகியோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதன் விளைவாக இக்கலை தமிழக மண்ணில் மிக வேகமாக அழிந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் குறைந்தபட்சம் சுவடிகளைப் படிக்கும் பயிற்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.இதைச் செய்ய தவறிவிட்டால், அழிந்து கொண்டிருக்கின்ற நமது சுவடிகளைப் படிக்க முடியாத நிலையும், பயன்படுத்த முடியாத நிலையும், பதிப்பித்து நூல்களாக வெளியிட முடியாத நிலையும் ஏற்படும். ஓலைச்சுவடியியலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால் பழந்தமிழரின் எழுத்து - எழுது பொருட்கள் - எழுதுபடுபொருட்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

பார்வை நூல்கள்:
1.கலித்தொகை- புலியூர் கோசிகன்
2.சைவ திருமுறைகள்- ஆறுமுக நாவலர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -