வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினாறு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

முதல் நாள் மதியத்திலிருந்து  செல்விக்கு உடல் நலமில்லாதிருந்தது. இரவில் வெகுநேரம்வரை காய்ச்சலில் அனுங்கிக்கொண்டு கிடந்தவளோடு தூங்காமல் விழித்திருந்தாள் நிலா. காலையில் அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. என்றாலும் உடம்பு சுகமாயிருந்தால் பத்து மணிக்கு மேலே வந்தால்போதுமென்று செல்வநிதிக்கும் நிலாவுக்கும் கூறிவிட்டு, சரணையும் உதவிக்கு மறித்துவிட்டு மற்றவர்களோடு காண்டீபன் சந்தைக்குப் போயிருந்தான்.

“இன்னுமொருக்கா மன்னார் போய்வந்தாத்தான் காய்ச்சல் செல்வியைவிட்டு போகும்போல. இல்லாட்டி இப்பிடித்தான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கப் போகுது” என்ற நிலாவின் வேடிக்கையில் சிரித்துக்கொண்டுதான் மூவரும் பத்து மணியளவில் புறப்பட்டிருந்தனர்.

ஐப்பசி தொடங்கியிருந்தும் மாரி வராத காலமாயிருந்தது அது. சுள்ளிட வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது. இன்னும் சூரியன் சாய்ந்தே நின்றிருந்ததில் வாதரவத்தை வெளியை அடையும்வரை வெய்யிலின் தாக்கம் இருக்கவில்லை.

பகலில் குண்டு குழிகளைத் தாண்டி சுலபத்தில் சைக்கிளை மிதிக்க முடிந்திருந்தது அவர்களால். ராணுவ தடையரண்களையும், வெளிகளையும், கோயில்களையும் தாண்டி சாவகச்சேரி மகளிர் கல்லூரியையும் கடந்தாயிற்று. தபால் கந்தோரைக் கடந்து வர சாவகச்சேரி ராணுவ சோதனை தடையரண் வந்தது. முன்னாலிருக்கிற ஏ9 பாதையில் ஏறிவிட்டால் அடுத்த நூறு மீற்றர் தொலைவில் இருந்தது சாவகச்சேரி சந்தைத் தொகுதிக் கட்டிடம்.

வழக்கமான வேகத்தில் மூவரும் வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பாதையில் சோதனைத் தடையெதுவும் போட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களது கண்களுக்குத் தெரியாத தடை விழுந்திருந்தது. அவர்கள் காவல் தடையரணுக்கு வர அந்தத் தடையைக் கண்டார்கள்.

மூன்று ராணுவத்தினர் அவர்களை நிற்கும்படி கையை நீட்டினர். வாசலில் அக்கமும் பக்கமுமாய் இரண்டு பேர் நீட்டிய துவக்குகளுடன். ஒரு யுத்த சன்னத்தம்!

நிலா நிதானமாக என்ன பிரச்னை எனக் கேட்டாள்.

உடனடியாகவே அவளை எரிக்கும் கண்களால் பார்க்கிற ராணுவத்தானிடமிருந்து பதில் வந்தது.

என்ன சொன்னானோ சிங்களத்தில்.

நிலா தங்களுக்கு சிங்களம் தெரியாதென்றாள்.

அதில் நின்றிருந்த ஒருவன், அந்த உடுப்போடு போகமுடியாது என்று ஆங்கிலத்தில் சொன்னான்.

“ஏன், இந்த உடுப்புக்கு என்ன? இந்த உடுப்போடுதானே இவ்வளவு நாட்களாக இந்த வழியால் போய்வந்தோம்? இதுவொன்றும் ஆயுதப் போராளிகளின் சீருடையில்லையே. இது இயக்கத்து பெண்களின் நிர்வாக வேலைக்கான சீருடை” என்றாள் நிலா.
அவளுக்கு வார்த்தைகள் படபடத்தன.

அவளுக்குத் தெரிந்திருந்தது, அன்றுவரை தன்னுடைய  சீருடையை எரிப்பதற்கிருந்த ராணுவத்தானின் வன்மம்தான் அப்போது வெளிப்பட்டிருக்கிறதென்று.

அவர்கள் கேட்கிற மனநிலையில் இல்லையென்பது வெளியாகவே தெரிந்தது.

“இல்லை, இது புலிப் பெண் போராளிகளின் சீருடைதான்.” அவளை முன்னே வந்து தடுத்த ராணுவத்தான் சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவர்களின் மேலதிகாரியைக் கூப்பிடும்படியும், தாங்கள் அவரோடு பேசிக்கொள்வதாகவும் நிலா கேட்டபோது, அவர்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் விஷயம் உள்ளே சென்றடைந்திருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. முகாமில் ஏற்பட்ட அரவமும், வெளியே வந்து சில ராணுவத்தினர் நடப்பதைக் கண்டுகொண்டும் இருப்பதிலிருந்து அது தெளிவானது.

தெருவிலும் போக்குவரத்திலிருந்த பொதுமக்கள் எட்ட எட்டவாய் நின்று பார்த்துவிட்டு போய்க்கொண்டிருந்தனர்.
சிறிதுநேரத்தில் சம்பவத்தைக் கண்டவர்கள் சென்று தகவலளித்ததன் பேரில் காண்டீபன் சைக்கிளில் ஸ்தலத்துக்கு  விரைந்து வந்தான்.

காண்டீபன் வர நிலைமை இன்னும் இறுக்கமானது. “இந்த உடுப்பு போராளியளின்ர சீருடையாம். இந்த உடுப்போட போகேலாதாம், காண்டீபனண்ணை.” நிலா சொன்னாள்.

உடனடியாக அவர்களது முகாம் பொறுப்பதிகாரியை தான் கண்டு பேசவேண்டுமென்றான் காண்டீபன்.
வெளியே கணிசமான பார்வையாளர்கள் கூடிநின்றதில் இனிமேலும் தான் ஒதுங்கியிருக்க முடியாத சந்தர்ப்பத்தைப் புரிந்துகொண்டு பொறுப்பதிகாரி வாசலுக்கு வந்தான்.

பெண்களுக்கான அந்த நிர்வாகச் சீருடையுடன்தான் அவர்கள் அத்தனை நாட்களாக அந்தப் பாதையால் போய்வந்துகொண்டு இருப்பதை காண்டீபன் எடுத்துச் சொன்னான். அது போராளிப் பெண்களின் சீருடையல்ல என விளங்கப்படுத்தினான்.

“அந்த உடுப்பு புலிப் பெண் போராளிகளின்டதான். அதனால அவங்கள தடையரண் தாண்டிச் செல்ல அனுமதிக்க மாட்டம்” என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்ததுபோலவே அவனும் சொன்னான்.

“புலிகள் இயக்கத்தினரை அவர்களது நிர்வாகச் சீருடையோட செல்வதை தடுக்கிறதால நீங்கள் யுத்த நிறுத்த விதிகளை மீறுறீங்கள். நீங்கள் இனியும் இவையைத் தடுத்தா நாங்கள் உங்கட மேலிடத்தில  முறைப்பாடு செய்வம்” என்றான் காண்டீபன்.
“முறைப்பாடு பண்ணுறதெண்டா பண்ணு” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தான் பொறுப்பதிகாரி.

தன் மேலதிகாரியுடன் பேசியிருப்பான்போல. திரும்ப வந்து சொன்னான், “அவங்க சேர்ட்டுக்கு மேல கட்டியிருக்கிற அந்த கறுப்பு பெல்டை கழற்றியிட்டு போகட்டும். அப்ப எங்களுக்கு பிரச்னையில்லே.”

“பெல்டை அவிட்டிட்டு போகட்டுமாமோ?” நிலா சீறினாள். “அது இந்த ஜென்மத்தில நடக்காது காண்டீபனண்ணை.”

“பெல்டை அவிழ்க்க வேணும். இல்லாட்டி இந்த தடையரணால போக ஏலாது” என்றான் அவளது சீருடையை எரித்துவிடுமாப்போல வழக்கமாய்ப் பார்க்கிறவன்.

காண்டீபன் உடனடியாக கிளிநொச்சியிலுள்ள தங்களின் சமாதான செயலகத்தோடு தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினான். சமாதான செயலகம் நிலைமையின் சிக்கலை உணர்ந்து யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவுக்கு அறிவித்தது. விபரத்தை நிலாவுக்குச் சொன்னான் காண்டீபன். “யுத்தநிறுத்த குழு எந்தநேரமும் இஞ்ச வந்திடும். நிலமையை மோசமாக்காமல் இருக்கட்டுமாம்.”

“பெல்டை கழட்டு. இந்தமாதிரி நீ இதில பெல்டோட நிண்டா உன்னை நான் அரெஸ்ட் பண்ணுவன்” என்று கொதித்தான் ராணுவத்தினன்.

பெண்கள் இருவருக்கும் அந்த அதிகாரத்துக்கு அடங்குகிற எண்ணம் இருக்கவில்லை. “நீ அறெஸ்ற் பண்ணுறது யுத்த நிறுத்த விதி மீறல். நான் ஆயுதம் வைத்திருக்கவில்லை. இது என்னுடைய நிர்வாக சேவைக்கான சீருடை. இந்த அடையாளத்தை அழித்துவிட்டுப் போக நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டன்.” நிலா சீறிக்கொண்டிருந்தாள்.

மேலே சிங்களத்தில் அவன் பேசியது எவ்வளவு வன்முறையையும், கொடூரத்தையும், ஆபாசத்தையும் கொண்டிருந்ததென யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

பிறகு கையிலிருந்த தனது துவக்கை தோளில் கொளுவிய ராணுவத்தான் சடாரென அவளது இடுப்பிலுள்ள பெல்டில் கைபோட்டு அதை அவிழ்க்க முயன்றான்.

நொடிப்பொழுது தாமதமில்லாமல் பெல்டை இடுப்போடு சேர்த்து இறுக்கினாள் நிலா.

வீதியால் போய்வந்துகொண்டிருந்தவர்கள் தள்ளி நின்று அதை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றனர்.

பொறுப்பதிகாரி ராணுவத்தானிடம் ஏதோ சொன்னான். அதைக் காட்சியாக்க வேண்டாமென சொல்லியிருப்பானோ? “நிமால்…  எப்பா… எப்பா…”

அதைக்கூட ராணுவத்தான் கேட்கிற நிலைமையில் இல்லை. அவன் ஒரு வெறிநிலையை அடைந்திருந்தான். நாளும் நாளும் அந்தச் சீருடையைக் கண்டு கொதிப்பேறி அதை எரிக்கமுடியாத அவலத்தில் இருந்தவன் அவன். அந்த நிலையில், தனது வார்த்தை அந்தப் பெண் போராளியால் மதிக்கப்படாது போனது மட்டுமில்லை, அதை அப்புறப்படுத்துகிற தன் முயற்சியையும் ஒரு அசாதாரண பலத்தைக் காட்டி எதிர்த்து நிற்கிறாள். அவன் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருக்கிறான். அவனால் விட்டுவிட முடியாது.

யாரும் தடுக்க முனையவில்லை.

எந்த பலப் பிரயோகமும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.

“பிளீஸ்… அவளை விடச் சொல்லுங்கோ…” என்று பொறுப்பதிகாரியிடம் காண்டீபன் சொல்லிக்கொண்டு இருந்தான். அவன் அவளுக்கு கைகொடுத்தாக வேண்டும். அவன் அவர்களது குழுத் தலைவன். அவன் பொறுத்திருப்பதற்கும் ஒரு எல்லை இருந்தது.

எந்த விநாடியிலும் எதுவும் நடக்கலாம்.

அப்போது எதிரே சந்தியிலிருந்து திரும்பி யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினரது வாகனம் வந்தது.

நிமால் என்கிற அந்த ராணுவத்தான் நிலாவின் இடுப்பிலிருந்து கையை எடுத்தான்.

நிலா சுயமரியாதையின் நெருப்பு கொளுந்துவிட்டெரிய ஆக்ரோஷத்தோடு நின்றுகொண்டிருந்தாள். அவளது உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.

யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் நடந்த சம்பவத்தை விளக்கினான் காண்டீபன். பிறகு, முறைப்பாட்டைக் கையளிக்க விறுவிறென காகிதமெடுத்து எழுதினான்.

யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினர் முகாம் பொறுப்பதிகாரியுடன் பேசினர். அவர்களுக்குள்ளும் அது விஷயத்தில் சமரசம் எட்டப்படவில்லை என்றே தெரிந்தது. யாழ்ப்பாண ராணுவ தலைமை அலுவலகத்துடன் கதைத்ததில், அப்போதைக்கு அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் இயக்க அரசியல் பொறுப்பாளருடனும், கொழும்பு ராணுவ மேலிடத்துடனும் தொடர்புகொண்டு  அந்த விஷயத்தில் முடிவெடுக்கும்வரை அவர்கள் வழக்கம்போல போய்வருவதற்கு சம்மதமானது.

இயக்க போராளிகள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

ஒரு ஆயுதமற்ற போராட்டத்தை அன்று நிலா முதன்முறையாக எதிர்கொண்டிருந்தாள். அதில் வெல்லவும் செய்திருந்தாள். அது அவளுக்கானது மட்டுமில்லை, ஆயிரம் ஆயிரம் புலிப் பெண் போராளிகளுக்கான போராட்டமும்.

பலாத்காரமாக அவளது இடுப்பு பெல்டை அப்புறப்படுத்த முயற்சித்த ராணுவத்தான் அவசியமில்லாமலே சிரித்துக்கொண்டு அப்பால் நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு சிரிப்பிலும் ஒரு ஆணாயும், ஒரு படையாளியாயும், ஒரு சிங்களவனாயும் அவனடைந்த தோல்வி எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.

போய்க்கொண்டிருந்தபோது, “காண்டீபனண்ணை, என்ர உடுப்பை எரிக்கிறமாதிரி பாக்கிறான் ஒருதனெண்டு சொன்னனெல்லோ, அது அவன்தான்” என்றாள் நிலா.

காண்டீபன் ஒன்றும் சொல்லவில்லை.

அந்தக் கண்களில் தன் சீருடையை எரித்துவிடும் மூர்க்கம் கண்ட நாளிலிருந்து ஒரு அசம்பாவிதத்தை நிலா எதிர்பார்த்தே இருந்தாள். ஆனால் தன் இடுப்பிலே கைபோட்டு பெல்டைக் கழற்றுமளவு  ஆகுமென அவள் எண்ணியிருக்கவில்லை. இடுப்பிலே அவனது கை விழுந்து பெல்டை இழுத்தபோது நிலா பதறிப்போனாள். கை தானகாகவேதான் இறங்கி பெல்டை அமர்த்திப் பிடித்தது. அது பெண்ணாயும் அவளுக்கு இயன்றிருந்த ஒரு தற்காத்தலின் செயற்பாடுதான். ஆனால் பிறகுதான் அவளுக்கு தெரிந்தது, தான் ஒரு ராணுவத்தானின் வலிமைக்கெதிராகவும் நின்றுகொண்டிருக்கிறாள் என்பது. இன்னொரு ராணுவத்தான் நிமாலின் உதவிக்கு வந்திருந்தாலும்கூட அவள் அன்றைக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டாள். ஏது விளையுமாயிருந்தாலும்தான்.

முன்னாலிருந்த மூடப்பட்ட விருந்தினர் விடுதி, அதனருகில் உடைந்த நீதிமன்றக் கட்டிடம், எதிர்க்கவிருந்த  வெளிக் குண்டுக் காயங்கள் பூசப்பட்ட தேவாலயம் எல்லாம் கடந்து பஸ் நிலையம் தாண்டி அவர்கள் சந்தைக் கட்டிடத்தை அடைந்தனர்.
சம்வபம் ஏற்கனவே அங்கு பரவியிருந்தது. அவளை அவர்கள் பெருமையோடு பார்த்தார்கள். அவளது தோல்வி அவர்களது தோல்வியாகவும் இருந்திருக்குமல்லவா?

யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களாய் வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அதுவரை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

நிலா தானும் நண்பிகள் சிலரும் எண்ணியதுபோலவே யுத்தநிறுத்தம் ஒரு வேகத்தில் தன் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருந்தாள்.

கருணா அம்மானின் பிரிவோடு பெரும்பாலும் இயக்கத்தின் பலம் பாதியாயிற்று. அரசியல் தீர்வுக்கான சரியான வழிகாட்டியாயிருந்த அன்ரன் பாலசிங்கம் கடுமையான சுகவீனமுற்றிருந்தது இவை எல்லாவற்றையும்விட பாரதூரமாக இருந்தது. வெளியுலகின் விருத்தி தெரியாத மனிதர்கள் இனி அரசியல் பேசுவார்கள். அது சமாதானத்தை ஒட்டுமொத்தமாய் நிராகரித்த ஒரு அரசியலை நிர்ப்பந்திக்கும்.

சீருடைச் சம்பவம் நடந்த அந்த 2004இன் நடுப் பகுதி, இலங்கை அரசியலில் மிகுந்த தடுமாற்றமான காலமாக இருந்தது. நாளையை நிச்சயிக்க முடியாத கொடூரங்களின் களம் விரிந்திருந்தது. கிழக்கில் மார்கழி 2004 மார்கழியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னால் வெகு தீவிரத்துடன் அவை தொடங்கியிருந்தன.

படையிலிருந்து சில ராணுவத்தாரும், சங்கங்களிலிருந்து சில புத்தபிக்குகளும் ஓடிவிடுகிறார்களென்பது அரசினதோ, புத்தசங்கத்தினதோ பலஹீனமேயில்லை. அரசு கிழக்கின்மீதான ஒரு போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதான தகவல் வெளியே கசிந்திருந்தது. முதலில் அதனுடைய யுத்தம் ராஜதந்திர ரீதியாக இருக்குமென்றும் கதையிருந்தது. ஒருநாள் சந்தைப் பொறுப்பைக் கைமாற்றிவிட்டு காண்டீபனையும் குழுவினரையும் வன்னிக்கு வரும்படி இயக்க மேலிடத்தின் தகவல் வந்தது.

தன்னைத் தேடியபடி இருக்கும் தன் ஆயுதத்தைக் காணும் தவிப்போடு அந்த நாளை நிலா காத்திருந்தாள். அவளை வீட்டுக்குச் சென்றுவர ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தான் காண்டீபன். ஒருநாள் காலையிலே போய் மறுநாள் மாலையில் நிலா  புத்தூருக்கு திரும்பினாள். அதற்கு முன்னர் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தை சென்று பார்த்துவர அவள் மறக்கவில்லை.

வெண் நடுகல் வரிசைகளில் நூறு நூறு ஆத்மாக்களின் தவிப்பைக் கண்டுகொண்டும், புலம்பலைக் கேட்டுக்கொண்டும் திரும்பியபோது கஜந்தன் அவளது நினைவுக்கு வந்தான்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.