- சுப்ரபாரதிமணியன் -கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு  எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா.  இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி  நடத்துபவர். இதய நோயாளி.  நட்பால் இணைகிறார்கள். ரூபாவுடன் பாலியல் ரீதியான உறவாகவும் அமைகிறது ஆனால் ரூபாவின் நிலையை அறிந்து கொள்பவர் விலக நினைக்க  அது இயலாததாக இருக்கிறது. அவரின் மனைவியும் குடும்பங்களும் தூசிக்கின்றனர்.அவர் நோய் வாய்ப்பட்டு இறக்கிறார்.  இந்த உறவு குறித்து எரிச்சலாகி . மனைவியின் தம்பி ரூபாவைக்கொல்ல கத்தியுடன் வருகிறான். முன்பே பல முறை ஆண்குறியை அறுக்க எத்தனித்து வெற்றி காண இயலாத நிலையில் கொல்ல வந்தக் கத்தியைப் பயன்படுத்தி ஆண் குறியை அறுத்து விடுகிறாள் ரூபா. நாட்டியத்தில் அக்கறை கொண்டவள். அவள் பயன்படுத்தும் சலங்கையை அவரின் கல்லறையில் சமர்ப்பிக்கிறாள்.( இது தேவையில்லாததாகிறது..நாட்டியத்தை கைவிடும் குறியீடாகவே அமைகிறது )

ஒரு ஆண் பெண்ணாக மாறும் போது அக்குடும்பம் அதை எதிர்கொள்ள சிரமப்படுவது சிறப்பாகவே உள்ளது. ஒழுக்க உணர்வில் தத்தளிக்கிறார்கள். ரூபா  தன்னைக்கண்டுகொள்கிற விபத்தை இப்படம் தெரிவிக்கிறது.  தென்ஆசிய சமூகத்தால் திருநங்கைகள் பார்க்கப்படும் விதம் பற்றிய நுணுக்கமானப் பார்வை இப்பட்த்தில் உண்டு..திருநங்கைகளின் பொருளாதார நிலை, பாலியல் தொழில் செய்வது, பணததிற்காக நடந்து கொள்ளூம் விதங்கள் விசித்திரமாகவே காட்டப்பட்டுள்ளன. அந்த சமூகம்பற்றிய இரக்கமானப் பார்வையை இப்படம் தொனிக்கிறது . கனடாவில் ஒரு ஆண் பெண்ணாக மாற சட்ட ரீதியான அங்கீகாரம் உள்ளது. ஆனால் தன்னை வடிவமைத்துக் கொள்ள  கோகுல் பம்பாய் செல்லுவதும் அங்கிருக்கும் தாயின் பிம்பம் அவள் கனடா வந்த் பின்னும் வழிநடத்துவதும்  வலிந்து திணிக்கப்பட்டதாகும்.

ஷோபாசக்தியின் இயற்பெயரில் படத்தின் தலைப்பில் பெயர் வருகிறது. அந்த இயற்பெயரை அறியாத எனக்கு ஷோபா சக்தியை திரையில் காணும் போது அதிர்ச்சிதான் ஏற்பட்டது.  அவரின் நடிப்பில் தேர்ச்சியின்மை அதிர்ச்சியும் கூட.

லெனின் சிவம் கணினி மென்பொறியாளர். அந்த வேலையை விட்டு விட்டு திரைப்படத்துறையில் கால் பதித்து சில குறும்படங்கள், இனியவர்கள், 1999 கன் அண்ட் ரிங் போன்ற படங்களை முன்பு எடுத்தவர் . தொடர்ந்த அவரின் முயற்சிகள் தமிழ்த்திரைப்பட உலகிற்கு வளமை சேர்ப்பவை  . சமீபத்திய கோவா திரைப்பட விழாவில் இது திரையிடப்பட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.