எழுத்தாளர்  முருகபூபதிமுப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர்  இன்றைய தினம், மே 31 ஆம் திகதி,  யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது   எனக் கேள்விப்பட்டதும், அங்கிருந்த பதட்டமானசூழ்நிலை களையும் பொருட்படுத்தாமல், வீட்டிலே தடுத்தபோதும்  கேளாமல், மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக் கொடுமையைப் பார்த்தேன். எனக்கு என்ன நேரமோ காலம் கடந்துதான் (2003இல்)  மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப் பார்த்தபோது  வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activist ஆக மாறியே போக்கிக்கொண்டேன்.

யாழ்.பொதுநூலகம்எரிக்கப்பட்டதை அறிந்தவண.பிதா தாவீதுஅடிகள் மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா  சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவரதுபடத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள்,   யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் எரித்திருந்தார்கள்.  யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடியதாக அறிந்தேன்.  அச்சம்பவத்தின் பின்னர் யோகேஸ்வரனை அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களின் கொழும்பு வாசஸ்தலத்தில்தான் சந்தித்தேன்.

1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள். இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு இருக்கிறார்கள் என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன். காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில்,  "புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?" (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த மிலிட்டரி  பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார். ஜீவா என்னை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார். நிலையம் வெறிச்சோடிக்    கிடந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இரவுபத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன்   பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன்.  கைத்தொலைபேசி இல்லாத அக்காலத்தில் நீர்கொழும்பில்  எனதுவீட்டார் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் எனது   வரவுக்கு காத்திருந்தனர். நீர்கொழும்பில் வாழ்ந்த இனவாதச் சிந்தனையற்ற சில முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்கள இளைஞர்களுடன்   இணைந்தேன். வண.பிதாதிஸ்ஸ பாலசூரியா அவர்களின்   தலைமையில் ஒன்று திரண்டோம். யாழ்.பொதுநூலக  எரிப்புக்கு கண்டனம் தெரிவித்துகூட்டம் நடத்துவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்காகவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம். அச்சமயம் நீர்கொழும்புக்கு அருகாமையில் சீதுவை   என்னுமிடத்தில் வசித்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும்  பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும் எம்முடன் இந்தக்கூட்டத்தில் இணைந்து கொண்டார். யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்துஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது.  ஏதும்  குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

நாம் அரசின் உளவுப் பிரிவினரால்  கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அந்த  இயக்கத்தை முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில் நான் அங்கம் வகித்திருந்த நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் அதன் அப்போதைய தலைவர் அ.மயில்வாகன்   தலைமையில் நீர்கொழும்பில் நூல்களும்வர்த்தக அன்பர்களிடம் நிதியும் சேகரித்தோம்.பின்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதியுட்பட சேகரிக்கப்பட்டவற்றை  கட்டிடக்கலைஞர்  வி.எஸ்.துரைராஜா  முன்னிலையில் வழங்கினோம்.

அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்:

“ இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம்  “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன்  சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த  ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை  “

யாழ்.பொது நூலக எரிப்பு தொடர்பாக “  வலிசுமந்த நூலக நினைவுகள் “  என்ற எனது கட்டுரை, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான எனது சொல்லத்தவறிய கதைகள்  நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.