இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!" ஆலையமணியின்   ஓசையை   நான்   கேட்டேன்,   அருள்மொழி   கூறும் பறவையின் ஒலி கேட்டேன் " -  இந்தப்பாடலை  எங்கள் மூத்த தலைமுறையினர்   மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல்.  ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது.  அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை,  அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம்,  கணையாழி அலுவலகம் இப்படியாக பல.

கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன்மார் காந்தி -அண்ணாத்துரை குடும்பத்தினர் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. முன்னர் ஹென்ஸ்மன் ரோடு என அழைக்கப்பட்ட இந்த வீதி கண்ணதாசன் சாலை என மாற்றப்பட்டிருக்கிறது.  1984 ஆம் ஆண்டு முதல் காந்தி கண்ணதாசன் குடும்பத்தினருடன் எனக்கு நெருக்கமான நட்பு. கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா, அந்த இல்லத்தின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு என்னுடன், கவிஞரைப்பற்றிச்சொன்ன பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றுதான் ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன்  பாடல் பிறந்த தகவல்.

ஒரு காலத்தில் கவிஞரிடம் பாடலுக்காக வந்து தத்தமது கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமர்ந்திருந்த அந்த இல்லத்தின் விறாந்தாவிலிருந்துதான் பார்வதி அம்மா என்னுடன் நீண்டநேரம் உரையாடினார்கள்.  இது நடந்தது 1984 ஆம் ஆண்டு.  1990 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களை நான் விஜயா மருத்துவமனையில்தான் பார்த்துப்பேசினேன்.  84 இல் சந்தித்தபொழுது, எத்தனை பிள்ளைகள்..? எனக்கேட்டார்கள்.  இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். " அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. "   என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான்.  முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா? வந்திருக்கானா? கூட்டிக்கொண்டு வாப்பா’ என்றார்கள்.  " நாளை இரவுதான் இலங்கையிலிருந்து வருகிறான். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துவிட்டேன். நாளை நிச்சயம் அழைத்து வருவேன்” என்றேன். ஆனால், அதற்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் தன்னிடம் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டுவிட்டார்.  அதாவது பார்வதி அம்மா மருத்துவமனையிலிருந்து வீடு  திரும்பாமலேயே மேலுலகம் சென்றுவிட்டார். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் என்ற பாவமன்னிப்பு திரைப்படப் பாடலை, இந்த காதல் மனைவியை மனதிலிருத்தியே கவிஞர் எழுதியிருந்தார்.

என்னால் மறக்கவே முடியாத எதிர்பாராத மரணங்களில் அவர்களின் மறைவும் ஒன்று.   மறுநாள் நானும் மல்லிகை ஜீவாவும் அந்த அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். அன்றுதான் சிவாஜிகணேசனையும் அங்கு சந்தித்தோம்.   தமிழகம் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் தவறாமல் சென்று தரிசிக்கும் இல்லம்தான் கண்ணதாசன் வீடு.  உணர்வு பூர்வமான ஏதோவொரு உறவு எனக்கு அங்கே இருப்பதாகவே இன்றும் நம்புகிறேன். அந்த அம்மா அமர்ந்திருந்து எனக்கு கவிஞரின் கதைகளைச்சொன்ன அந்த வாசல்படியை மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் தொடுவேன்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்த எனது தங்கை குடும்பத்தினரும் குறிப்பாக மருமகள் ஜனனியும்  அங்கு வருவதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தமையால் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினேன். வீட்டின் மேல் மாடியில் கண்ணதாசன் பதிப்பகம் இயங்குகிறது. அங்கே காந்தியின் அலுவலகத்தில் எனக்கொரு அதிசயம் காத்திருந்தது. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் தமிழாக்கத்தின் பல பதிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்தது கண்ணதாசன் பதிப்பகம். ஒருசமயம் அப்துல்கலாமுக்கு வேறு சில புத்தகங்கள் தேவைப்பட்டிருக்கிறது. காந்தி கண்ணதாசன் அவற்றை பார்சலில் தபால் மூலம்   டில்லிக்கு அனுப்பியிருக்கிறார். கிடைத்ததும் தமது தனிப்பட்ட வங்கிக் காசோலையில் புத்தகங்களின்  விலைக்குரிய பணத்தை எழுதி அனுப்பியிருக்கிறார் அப்துல்கலாம். காந்தி , அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி மாற்றவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்திருந்த அப்துல்கலாம், காந்தியை சந்தித்தபொழுது, " என்ன நீங்கள் நான் அனுப்பிய செக்கை பேங்கில் போடவில்லையா?’- என்று கேட்டிருக்கிறார்.  உடனே காந்தி, "  அது சேர், போட வேண்டிய இடத்தில் போட்டு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்”என்றாராம்.

" என்ன புரியவில்லையே? புரியும்படியா சொல்லுங்க. "  என்றார் அப்துல்கலாம்.

" அது சேர், நான் அந்தச் செக்கை என்றைக்குமே வங்கியில் போடமாட்டேன். அதனை கண்ணாடிச்சட்டத்திலிட்டு அலுவலகத்தில் மாட்டியிருக்கிறேன். "  என்றாராம் காந்தி கண்ணதாசன். அந்த உணர்வுபூர்வமான கண்ணாடிச்சட்டத்தை  அன்று  பார்த்தேன்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனுக்கு பாரதீயஞான பீட விருதும்-பரிசும் கிடைக்கவிருப்பதாக செய்தி வெளியானதும், குறிப்பிட்ட உயர்விருதையும் பரிசையும் ஜெயகாந்தனுக்கு வழங்குவதற்கு முன்னர், ஜெயகாந்தனைப்பற்றிய தகவல்களைபெற்று ஜனாதிபதியிடம் கொடுக்கவேண்டிய கடமை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் சென்னையிலிருக்கும் காந்தியைத்தான் அவசரமாகத்தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  காந்தியும் தேவைப்பட்ட நூல்களை சேகரித்து அனுப்பியிருக்கிறார்.  இந்தத்தகவல்களெல்லாம் மருமகள் ஜனனிக்கு மட்டுமல்ல எமக்கும் சுவாரசியமாகத்தானிருந்தன.

அந்த இல்லத்தில், பெரிய கண்ணாடி அலுமாரிகளுக்குள் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதி, நூறு நாள் ஓடிய- வெள்ளிவிழாக்கண்ட  திரைப்படங்களுக்காக அவர்பெற்ற வெள்ளிக்கேடயங்களும் கிண்ணங்களும் காட்சி தருகின்றன.

" எல்லாம் பழைய படங்களாக இருக்கே மாமா" என்றாள் ஜனனி.

" ஆமாம் பழையபடங்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் மறக்கமுடியாத படங்கள். பாடல்கள். " கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " என்ற பாடல்தான் அவர் சினிமாவுக்கென எழுதிய முதலாவது பாடல். இறுதியாக இறப்பதற்கு முன்பு எழுதிய பாடல்தான் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்- ஸ்ரீதேவி நடித்து கமலுக்கு தேசிய விருது கிடைத்த மூன்றாம் பிறை படத்தில் வந்த கண்ணே கலை மானே. ( இந்தப்பெயரில் சமீபத்தில் ஒரு திரைப்படமும் வெளிவந்துள்ளது.)

எனது மருமகளிடம்,  "  உனது காலத்தைச்சேர்ந்த   சினேகாவுக்கோ, தமன்னாவுக்கோ,  நயன்தாரவுக்கோ, அசினுக்கோ,   சிரேயாவுக்கோ , ஹன்ஸிகாவுக்கோ,  த்ரிஷாவுக்கோ,  அஜித்துக்கோ,  விக்கிரமுக்கோ விஷாலுக்கோ,  விஜய்யுக்கோ,  சூர்யாவுக்கோ , கார்த்திக்குக்கோ  அவர் பாடல்கள் எழுதும் முன்பே போய்ச்சேர்ந்து விட்டார். அதாவது நீ பிறப்பதற்கு முன்பே  ”என்றேன்.

தமிழ்நாட்டில் காரைக்குடிக்கு சமீபமாக சிறுகூடல்பட்டியில்  1927 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் 24 ஆம் திகதி பிறந்த கண்ணதாசன் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களுக்கும் பின்னால் ஒரு கதை நிச்சயமாக இருக்கும்.  ஜனாதிபதியைப்போன்று  சம்பாதிக்கிறார்.  இந்தியாவைப்போன்று   கடன்படுகிறார்   என்று  ஒரு கவியரங்கில் ஒரு கவிஞர்,   கண்ணதாசன்   முன்னிலையிலேயே   பாடியிருக்கிறார்.  கடனுக்கும் கண்ணதாசனுக்கும் மிகமிக நெருக்கம் என்பார்கள். அவரே தன்னைப்பற்றி தனது பொறுப்பற்ற போக்கினால் தேடிக்கொண்ட கடன்தொல்லைகளைப்பற்றி  ஒரு கவிதை  எழுதியிருக்கிறார். " குருவின்றி  வித்தையைக்   கற்றவன்   நெஞ்சிலே   குடி  கொள்ள அமைதி   இல்லையே !  சேர்கின்ற   பொருள்களைச்   செம்மையாய்   எந்நாளும்   காக்கவும் திறமை   இல்லையே! "

கண்ணதாசனின்   படைப்புகளை பலரும் தமது பட்டப்படிப்புகளுக்காக ஆய்வுசெய்திருக்கின்றனர்.  அவரைப்பற்றி   இன்றைக்கும்   உலகில் ஒரு மூலையில் யாராவது ஒருவர்  எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பார்கள்.  அவரது பிறந்த தினம் -  நினைவு தினம் வரும்பொழுதெல்லாம் யாரோ ஒருவர் ஏதாவது ஊடகத்தில் கட்டுரை எழுதுவார். தமிழர்கள் வாழும் தேசங்களிலெல்லாம் ஒலிபரப்பாகும் வானொலிகளில் அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.  தன்னைப்பற்றி மிகவும் தீர்க்கதரிசனமாக அவரே எழுதிய கவிதை வரிகள்:- 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.'

கவியரசர்   இறந்தபின்னர்   குமரி அனந்தன் சொன்ன வார்த்தைகளை மறக்கமுடியாது. " சொர்க்கத்துக்குச்செல்லும்போது   ஒரு கரத்தில் மதுவும்   மறுகரத்தில் மாதுவும்   இருக்கவேண்டும்   எனச்சொன்னவரின்   வாழ்வில் நடந்ததோ வேறு,  அவர் எதிர்பார்த்த சொர்க்கத்துக்குச்செல்லும்பொழுது,    அவரது   ஒரு கரத்தில் அர்த்தமுள்ள   இந்து மதமும் மறு கரத்தில்   யேசு காவியமும் இருந்தன."

எழுத்தாளர்   வண்ணநிலவன் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்,  “ சினிமாச்சமாச்சாரங்களை   விட்டுவிட்டுப்பார்த்தால்,   பாரதிக்குப்பின்னர் தமிழில்  ஒரு முழுமையான கலைஞன் கண்ணதாசன்தான.” 

கண்ணதாசனின் முதல்தாரம் பொன்னம்மாளுக்கு பிறந்த பிள்ளைகளில் கலைவாணன் கண்ணதாசனும் கண்மணி சுப்புவும் தமிழ்த்திரையுலகில் பிரவேசித்தனர்   பின்னாளில் மற்றுமொரு மகன் அண்ணாத்துரை விவேக் நடித்த பல படங்களில் விவேக்குடன் துணை நடிகராக பல நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றுகிறார். காந்தி கண்ணதாசன் பதிபகத்துறைக்குள் பிரவேசித்துவிட்டார். தமிழ்நாடு தமிழ்ப்பதிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். கண்ணதாசனின்   பேரன்  கார்த்திக் காந்தி  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில்  குடும்பத்துடன்  வசிக்கிறார்.  கண்ணதாசனின்   நினைவுகளுக்கு  அவரது  பாடல்கள்  போன்று  மரணமும்  இல்லை  மறைவும்  இல்லை.