தமிழச்சி தங்கபாண்டியன்சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி,  இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும்  வளர்ந்தவர்.  கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள்  திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி,  தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே  ஊடகங்களும்  அடையாளப்படுத்துகின்றன.  சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர்.  தான் பிறந்த  கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக  நேசித்துவருபவர்.  கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த  கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி,  ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய வேளையில்  2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி,  குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். குறிப்பிட்ட ஆய்வு நூலில்,  அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட  கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983)  பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட  இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.
\
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன்,  அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில்  அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர்.  அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன்,  ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.

தந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்தது. மல்லாங்கிணறில் தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட  நினைவு மண்டபத்தில் வருடந்தோறும் பல தானதருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கும்.

தமிழச்சியின் தம்பி தங்கம் தென்னரசு முன்னைய கலைஞரின் ஆட்சியில் கல்வி அமைச்சர்.  தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர். தமிழச்சியின் கணவர் சந்திரசேகரன்  காவல் துறையில் உயர் அதிகாரியாக  பணியாற்றியவர். இரண்டு அழகான பெண்குழந்தைகளின் தாய்.  ஒரு  மகளுக்கு கடந்த ஆண்டு சென்னையில் திருமணமும் நடத்திவைத்துவிட்டார். வீட்டில் குடும்பத்தலைவி. பொதுவெளியில் கவிஞர், ஆய்வாளர்.  பேச்சாளர். இயங்குநிலை சமூகச் செயற்பாட்டாளர்.
தமிழச்சியின்  எஞ்சோட்டுப்பெண், வனப்பேச்சி, அருகன், மஞ்சனத்தி,  பாம்படம்  முதலான கவிதைத் தொகுப்புகள் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன.

தமிழ்நாடு  கணையாழி இதழ்,  அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டபோது,  அதில் பிரசுரமான  மெல்பன் எழுத்தாளர் ( அமரர்) அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.

தமிழச்சியின்  பாம்படம் என்னும்  கட்டுரைத்தொகுப்பில் "சிலோன் காலனி " என்ற படைப்புள்ளது. அதனை 2010 ஜூலையில் எழுதியிருக்கிறார். அதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகவே பார்க்க முடிகிறது. தமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை. வட- கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.
விடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது,  அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை,  அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை. ஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.

“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீட்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி  மாறி துணைக்குப் படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா."

இந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்: "யுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன். அவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன். 'இருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.' (அனார் -  கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதுவில் வசிக்கும்  கவிஞர்)

தமிழச்சி,    சொல்தொடும் தூரம் என்ற தனது தொகுப்பில் நாவல், கவிதை,  நாடகம்,  காப்பியம்,  ஒப்பீடு தொடர்பாக எவ்விதமான பாரபட்சமுமின்றி, உள்நோக்கமுமின்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார். இந்நூலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனையும் ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்‌ஸ்பியரையும் நேர்த்தியாக அழகியலோடு சுவாரஸ்யம் பொங்கும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார்.  தான் எழுதிவரும் கட்டுரைகளை விமர்சனப்பாங்கில் எழுதினாலும் தன்னை இவ்வாறுதான் அடையாளப்படுத்துகிறார்: " கட்டுரைகளை,  விமர்சகராகவேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாதன் காரணமாக அழிந்துபோயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால், கவனப்படுத்தவேண்டியதை கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ளவேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன்."

சொல் தொடும் தூரம் தொகுப்பில் இறுதியாக இடம்பெறும் கட்டுரை,  மரண தண்டனைக்கு எதிரான அவருடைய கருத்துக்களை பதிவுசெய்கிறது. அதற்கு தமிழச்சி சூட்டியிருக்கும் தலைப்பு: "நீதியின் அளவுகோல்கள் - நியாயங்களைத் தீர்மானிப்பவை அதிகார மையங்களே" மீள் பிரசுரத்திற்கு தகுந்த பல கட்டுரைகளை இந்நூலில் தமிழச்சி வரவாக்கியிருக்கிறார்.

தமிழச்சியின் படைப்புலகம் பற்றி பலரும் விரிவாகத்திறனய்வு செய்துள்ள காலமும் கவிதையும் என்ற நூலும் வெளியாகியுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க மட்டுமல்ல, ஒரு படைப்பை அணுகவும் பயிற்சி வேண்டும் எனச்சொல்லிவருபவர் தமிழச்சி.

பிற்குறிப்பு: மெல்பனில்,  தமிழச்சி தங்கபாண்டியனுடனான சந்திப்பும் நிழல்வெளி நூல் அறிமுகமும் எதிர்வரும் 25 ஆம் திகதி (25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் வேர்மண்ட் தெற்கு சமூக இல்லத்தில் ( Karobran Dr, Vermont South VIC 3133 ) நடைபெறும். கலை இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.