- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கல கலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி  !

பெரு நோயின் தாக்கத்தால்
பெருந் தாக்கம் விளைந்திருக்கு
தெரு எல்லாம் களையிழந்து
உரு உடைந்து நிற்கிறது
வருங் காலம் தனையெண்ணி
மக்கள் மனம் தவிக்கிறது
வாடும் நிலை போயகல
வந்து நிற்பாய் தீபாவளி  !

புத்தாடை மனம் இருக்கு
புதுத் தெம்பு வரவேண்டும்
சொத்தான சுற்ற மெலாம்
சுகங்காணும் நிலை வேண்டும்
நித்தியமாய் வாழ் நாளில்
நிம்மதியும் வர வேண்டும்
நீள் சுகத்தை சுமந்தபடி
நீ வருவாய் தீபாவளி  !

மனக் கலக்கம் போக்குதற்கு
வழி கொண்டு வந்துவிடு
மாசகன்று மருள் அகல
வரங் கொண்டு வந்துவிடு
மனை எல்லாம் மங்கலங்கள்
மீண்டும் வர வந்துவிடு
மனமகிழ விருந்து தர
வந்து நிற்பாய் தீபாவளி  !

உள முடைந்து நிற்பாரை
உயிர்ப் பூண்ட வந்துவிடு
வளம் இழந்து நிற்பாரை
நிலை உயர்த்த வந்துவிடு
நிலம் எங்கும் நிம்மதியே
நிலவி விட வந்துவிடு
நலன் மிக்க செய்தியுடன்
வந்து நிற்பாய் தீபாவளி  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.