மனக்குறள் 9 & 10

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !

எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !

வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !

ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!

அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!

 

திரையிசைப் பாடல்கள் தேசக் கவிதை
பெருகியதே நீதிநூல் போல்!

காப்பியங்கள் நாடகம் காணும் புதினங்கள்
நேத்திரம் செய்த நிதி!

சாகித் தியவிருது சந்தித்த எல்லாமும்
ஆகும் வனவாசம் ஆக !

வாழ்வியலைப் பாடும் மனத்தோடும் நாள்தோறும்
தாய்மொழியைக் காத்தான் தரம்!

பேச்சு எழுத்து புயலாய் அரசியலிற்
காய்த்துப் பழமானான்; காண்!

மனக்குறள்-26  வாழ்க அங்கோர் தமிழ்ச்சங்கம் 

அங்கோர் தமிழ்ச்சங்கம் ஆலும் கவிஞ(ர்)வலம்
கம்போ டியாவொடும் காண்!

இந்தநூற் றாண்டின் இருக்கை யிதுவாகத்
தந்தநூற் றாண்டே தகை!

தனக்கோள் என்கத் தரணியிற் பூக்கும்
கனங்குழை யாம்தமிழ் காப்பு!

வையத் திருந்து வருங்கவி யோர்க்குமே
கைகொடுத் தேற்றும் கவி!

சங்கம் வரலாற்றுச் சார்ந்த இலக்கியம்போல்
அங்கோர் இயற்றும் அகில்!

பனையும் வயற்காடும் பாரொடுங் காணும்
சுனையிடும் அங்கோர் சிறப்பு!

அங்கோவார்ட் என்ப(து) தணிநகர்க் கோவிலாம்
கெம்மர் மொழியின் கிளவி!

அங்கோர் தமிழ்ச்சங்கம் ஆன்ற கவிமன்றம்
எங்கும் பொலிந்தார் இயற்றி!

பல்லவ மன்னர் பசுமைக் கெமருமே
சொல்லும் தமிழர் சிறப்பு!

வாழ்க தமிழ்ச்சங்கம் வாழ்க கவிமன்றம்
வாழ்க தமிழொடுந்தான் வையம் !

(கெமர்-கம்போடிய மொழி)

மனக்குறள்-27 கெந்தவை நன்நகர் கீழடியின்கதை

கெந்தவை நன்நகர் கீழடி யின்மதுரை
தந்ததே வாழ்வின் தளம் !

நான்கென்கத் தேடும் நடைமுறையி லாராய்ச்சி
மேம்பாடு கண்டாரே வேர்!

ஐந்தாயி ரத்தும் அகழ்விற் கிடைத்தபொருள்
முந்தை இருப்பின் விதை !

கிறித்துமுன் ஆறென்கக் கூறுநூற் றாண்டுப்
பேறின் புகல்கண்டார் பேசு !

மட்பாண்டம் காதணிகள் மாநகரம் நீரகழி
எண்தாயக் காயும் இருப்;பு !

நாகரிகம் வாழ்வியல் நற்கட்டு மானங்கள்
ஆக மிளிர்ந்தார் அரண்!

சிந்துவெளி வாழ்வும் சிறக்குங் கீழடியின்
தங்குமடி வாழ்வின் தரம் !

எலும்பிற் பலகண்டார் ஏரெழுத் தாணி
எழுதும் முனைகண்டார் இன்னும் !

இந்தியா மட்டுமன்றி ஏழுலக மெல்லாமும்
சிந்துமே கீழடியின் தேசு !

ஐந்துகட்ட ஆய்வும் அகழ்வு தொடர்ந்திடுமோர்
விந்தை எழுதும் வியப்பு !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.