ஆசிரியரின் என்னுரை!

- கடல்புத்திரன்  (பாலமுரளி) - இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான 'தாயகம்'பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின்  முயற்சியில் குமரன் வெளியீடாக 'வேலிகள்' என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது.  நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.

இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.  மகிந்த ராஜபக்சா அரசாங்க  காலத்தில்   அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது.   ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.   .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 %  …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.

சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் 'பதிவுகள்'இணைய இதழில் வெளியாகின்றது.


அத்தியாயம் ஒன்று!

தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது. அவன் அப்பன் சிலவேளை "அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது" என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப்பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச மானியத்தைப்பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள். அந்தப்பகுதி பிரபல்யமாகவும், அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்கமாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன்பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப்போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.

கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள். கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரமாக நின்றது.

“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப்பிடிக்க வைக்க வேணும்" முருகேசின் கோபப்பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.

இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக்கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்யவந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு துணிவாக எதிர் கொண்டவர்கள்   .ஆட்தொகை, ஆயுதம் பற்றி எல்லாம் கவலைப் படாத கூட்டம். இப்ப,இயக்கப் பெடியன் ஒருத்தனையே காட்டமாக எதிர் கொள்கிறார்கள். இவர்கள், சடாரெனச் சுட்டுத்தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? தெரியவில்லை. எனவே, பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தீவு மக்கள் முன்னர் பண்ணை வழியாலும் காரைநகர் வழியாலுமே சென்று கொண்டிருந்தார்கள். கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் ‘மண்டை தீவு முகாம்’ திறக்கப்பட்டபோது, அது அடைபட்டுவிட்டது. காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக…. இரண்டாவதும் தடைப்பட்டுவிட்டது.இதனால், கவனிப்பாரற்று கிடந்த அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவையை ‌ பயன் படுத்த‌பிரசித்தமடைந்து விட்டன.

இவ்விடத்தில்,சிறிய வள்ளங்களை மட்டும் அதிகமாக கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள்,  தலைக்கு இரண்டு மூன்று ரூபா என வசூலித்து மக்களை தீவுப்பகுதியில் கொண்டு போய் விடத் தொடங்கினார்கள்.இரு கரைகளிலும் மினிபஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின. பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அவர்களுடைய தீவுப் பகுதித் தோழன் ஒருத்தன் கூட பீத்தல் தட்டிகளுடன் ஒரு சிறிய மண்ணெண்னெய்க் கடை போட்டு விட்டிருக்கிறான்."என்னடா,இப்படி போட்டிருக்கிறாய்?மழை வந்தால் தெப்பமாய் நனைத்து விடுவாய்யே?"என்று அன்டன் கேட்க ,"இது தொடக்கம்"என்று சொல்லிச் சிரிக்கிறான்.

கடல் வலயச் சட்டங்களால் மீன் பிடிப்பு அறவே இல்லாதிருந்தது.

கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்தார்கள். அதன் வருவாய் போதவில்லை.பொதுவாக எல்லா மீனவர்களுமே சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். இந்த வருவாய்  அவர்களது வறுமையை கணிசமான அளவு விரட்டியது எனலாம். பரவாய்யில்லையாய்…  இருந்தது.

தொழிலற்றிருந்த நவாலி, ஆனைக்கோட்டை மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களை உடனடியாக‌ கல்லுண்டாய் கடலினுாடாக ஒட்டி கொண்டு அங்கே வந்தார்கள். அவர்களின் ஒரு வள்ளத்தில் இவர்களுடைய‌ இரு வள்ளங்களை அடக்கலாம். ஒரு ட்ரிப்பிலே வந்தவர்கள் அதிக பணம் காண‌,உழைக்க.இவர்களுக்கு கோபம் உண்டாகியது. கோபம் எப்பவும் நாசம் விளைவிக்கிற ஒன்று தான்.

எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப் பகுதி பொறுப்பாளரான ஒரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பெடியன் ஒரளவுக்கு ஏற்றிருந்தான். அதன்படி வாலையம்மன் பகுதியினர் தீவுக்கு ஆட்களை, சாமான்களை கொண்டு போவதென்றும் மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பார்ப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே, பெரிய வள்ளம் ஒன்று இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருந்தது. முழுமையான‌ மீறல். எனவே வாலையம்மன் பகுதியினர் வள்ள ஒட்டத்தை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத் தொடங்கினர்.
ரவுண் பக்கமிருந்து தீவுப்பகுதியிற்கு உத்தியோகத்திற்குப் போக வந்தவர்களும், ரவுணிற்கு பல்வேறு தேவைகளுக்காக போக வந்த தீவு மக்களும் ….இருபகுதியிலும் குவியத் தொடங்கினார்கள்.

கடற்பரப்பு வள்ள ஒட்டமற்று புயலுக்கு முன்னால் வருகிற அமைதிபோல இருந்தது.அந்தப்பெடியன், அமைதியாயிருக்கச் சொல்லிக் கேட்டிருந்தான்.

'ஒட்டிய ஆட்கள் யார்’ என அவன் விசாரிக்கையில் அக்கரையிலிருந்து சனத்துடன் ஒரு பெரிய வள்ளம் கரை நோக்கி வந்துகொண்டிருந்தது.

கதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை விழுந்து போனது "டேய் ஒட்டுறவனிட கையை முறியுங்கடா" கத்தினான் முருகேசு. சிறிய வள்ளத்தில் 5, 6 பேர் தாவி ஏறினார்கள். வள்ளம் நேரே பெரிய வள்ளத்தை நோக்கி ஒடியது. ஒட்டிகள் இருவரையும் பிடித்து இழுத்து வீழ்த்தி பறித் தெடுத்த‌ துடுப்புத்தடி.களால் போட்டு சாம்பித் தள்ளிவிட்டார்கள். ஒருத்தனுக்கு முழங்கால் உடைந்துபோனது. மற்றவனுக்கு பலமான கண்டல்காயங்கள். திரும்ப தமது வள்ளத்தில் ஏற‌ ,அந்த வள்ளம் திரும்ப கரை யை நோக்கி முனங்கிக் கொண்டு நோக்கி ஒடியது.

வெற்றிப் பெருமிதத்துடன் இவர்கள் கரை சேர்ந்தனர்.

பதினைந்து நிமிடம் இருக்கும். அக்கரையிலிருந்து ஐந்தாறு பெடியள்களுடன் நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி வேகமாக‌ விரைந்து வந்தன.அவர்களுக்குள் திகில் பரவத் தொடங்கியது.

“வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்களடா” என தில்லை கத்தினான்.

“நீதானே ஒப்புதல் தந்தாய்” என்று முருகேசன் தொட்டு பலர் திக்குவாய்யனைச் சூழ்ந்துகொண்டனர்.

நிலைமை சீர் கேடாகிவிட்டது என்று அனைவருக்கும் புரிந்தது. கனகன் அண்ணணை இழுக்க ஒடினான். மற்றவர்களும் தம் உறவினரை இழுத்துக்கொண்டு வர ஒடினார்கள்.அதற்கிடையில் யாரும் எதிர்பாராத‌ நிகழ்வுகள் நடந்துவிட்டன.
வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல்வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்து எடுத்து விட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்துவிட்டிருந்தான்.இரத்தக்காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள் கரை சேர்ந்தன.

“எவன்ரா?, எங்கட பெடியள்களை அடிச்சது’ பொறுப்பாளர் போல இருந்தவன் கோபமாக இறங்கினான்.

வடிவேலு நின்ற கோலத்தை பார்த்தபோது அவனுக்கு நிலமை விளங்கவில்லை. பொதுவாக தீவில் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் ஒரளவு பகைமையற்ற இழைக்கள் காணப்பட்டன.

“தோழர், டொக்டர் யாரிட்டைப் போவோம். காயத்திற்கு இழை பிடிக்கவேண்டியிருக்கும்” என்று கேட்டான்.

“பறித்தவற்றைத் தராதவரைக்கும் நான் உவ்விடத்தை விட்டு நகர மாட்டன்” என்று உறுதியாகத் தெரிவித்தான். சர்வேசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘அவன் பாடு’ என்று விட்டு விட்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தோரணையில் கேட்டான்.

“எவன்ரா, தோழர்ர‌ கையை உடைச்சது?” அவனுடைய அதிகாரத் தோரணையைப் பார்த்து  சூழ இருந்த‌வர்கள் திக்பிரமைப் பிடித்து பயத்துடன் நின்றார்கள்.

வடிவேலனின் தோழர்களும் வானில் வந்து சேர்ந்தார்கள். தலைவர் போல இருந்தவர் அவனை வானில் ஏறச்சொன்னார். அவன் மறுக்கவே, இழுத்து வானில் ஏற்றி விட்டு “யாருமே வள்ளம் ஒடவேண்டாம்” என்று அறிவித்தான்.
‘வோக்கியை’ எடுத்து யாரோடேயோ சிறிதுநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பிறகு, வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து "இனிமே இயக்கங்கள் வள்ளங்களை ஒட்டும்’ என தெரிவித்துவிட்டு வானில் ஏறிப் பறந்தான்.

கனகனுக்கு நாசமாய்ப் போன படகு ஒட்டம் என்றிருந்தது. இவர்கள் அனைவரு மே மரவள்ளங்களையே ஓட்டினர் .ஒரு சிலரிடமே   அவுட்புட் மோட்டர்கள் இருந்தன‌ . அவர்கள் பின் பகுதியில் பொறுத்தி வள்ளத்தைச் செலுத்தினார்கள். பலர் தடிகளால் தான் வலித்தார்கள்.வறிய நிலையில் இருந்த மீனவர்கள்,. வளப்பம் பெறுவதென்பது மிக மெதுவாக நடக்கிற ஒன்று .இந்த கடலில் தொழில் செய்ய வட்டுக் கோட்டை,வடக்கராலி மீனவர்கள் கூட வ ருகிறவர்கள் .கடல்ப் போக்குவரத்தை மேற்கொண்டவர்கள் இந்த கரையில் இருந்த தெற்கராலி மீனவர்கள் மாத்திரமே.இவர்கள் எவரிடமுமே பைபர்கிளாஸ் படகுகள் இருக்கவில்லை.

ஒருகாலத்தில், ஓடிய ரோலர் எனப்படுற பெரிய மரவள்ளம் ஒன்றும்,ஓட்டமற்று ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.கடற்படையினரின் அட்டகாசம் அதிகரித்த பிறகு அதனை ஓட்ட முடியவில்லை போல இருக்கிறது . அரச படையினரின் கொடூரக்குணம் பிரசித்தமே. தமிழும் தெரியாத சிங்களவர்கள் வடக்கு,கிழக்கை ஆட்டிப் படைக்க அடங்கா ஆசை கொண்டிருந்தார்கள் . அவர்கள், பழைய அரச ராஜ துரோகச் சட்டத்தை அப்படியே ஜனநாயகத்தில், பயங்கரவாதச் சட்டமாக்கி விட்டு,  இந்த படையினரூடாகத் தான் சொல்ல அஞ்சுகிற குரூரமான செயல்களை எல்லாம் புரிந்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் முதல் இலக்கு மீனவர்கள் தான் .

இந்தியத் தமிழர் என்றில்லை,எல்லாத் தமிழர்களையும் பிடிக்காது.  மீனவர்களைச்…. சுட்டே கொன்று விடுவார்கள். வசமாக அகப்பட்டால் கசாப்புத் தனமாக வெட்டிக் கொல்றதையும் செய்து வந்தார்கள். ஆழம் குறைவான கடல் என்றபடியால் கடற்படையினரின் பைபர்கிளாஸ் படகுகள்,பாரம் கூடிய ரோந்துப் படகுகள் இப்பகுதிகளில் பிரவேசிக்க முடியவில்லை.  அதனாலே ஓரளவு தப்பிப் பிழைத்து தொழில் செய்து கொண்டிருந்தார்கள்.

கடலில் ஓடிய பாதைகள் கண்டு வேறு ஓட வேண்டும். பெரும்பாலும் இருட்டிலே தொழில் நடந்தது.மேலே கெலிகப்டர்கள் வெளிச்சம் அடித்துப் பறக்கிற போது சிக்கல் தான். அதிலிருந்து யந்திர துப்பாக்கியிலிருந்து பறக்கிற குண்டுகளிலிருந்து தப்ப வேண்டும்.அவை வார போது சாக்குகளால் மூடி மறைத்து விடுவார்கள் . கடலம்மாவும் காப்பாற்றி வந்தாள். ஆழமான பண்ணைக்கடல் சற்று தூரத்தில் தான் இருந்தது.கடலிலே பிறந்து வளர்ந்தவனால் ஆழக் கடலில் மீன் பிடிக்காமலும் இருக்க முடியாது .

அடங்கிக் கிடப்பவர்களா மீனவர்கள்?

சங்க இலக்கியங்களில் கப்பலை 'திமில் என 'அழைத்தார்கள் என அறியப்படுகிறது,ஒரு காலத்தில் கடலைக் கலக்கி ஓடிய முன்னோர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ இவர்கள்? என்ற ஐயமும் இருக்கிறது.இங்கே தொழில் செய்பவர்களை திமிலர்கள் என அழைக்கிறார்கள். அந்த பழைய வீரமும் ரத்தத்தில் கலந்திருந்தது.

அதே போல சுளிபுரத்தைச் சேர்ந்தவர்கள் முக்குவர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள். அதாவது, கடலில் பிடிப்பவற்றை பல வேறு ஊர்களிற்குக் எடுத்துச் சென்று விற்கிற வணிகர்கள். இவர்களுக்கிடையில் இடையில் ஏதாவது வரலாற்றுத் தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை? ஒரு காலத்தில் சிறப்புற்ற மீனவ சமூகமாக இங்குள்ள மக்கள் இருந்திருக்க வேண்டும். இலங்கை ஒரு இறைமை உள்ள நாடு இல்லை. அது இன்னமும் காலனி ஆட்சியைத் தான் புரிந்து கொண்டிருக்கிறது .எசமானர்கள் தான் மாறி விட்டிருக்கிறார்கள். அஸ்தமிக்காத திமிரைக் கொண்ட பிரித்தானியரிடமிருந்து காலம் பல நாடுகளை விடுவித்தது போல தமிழர்களையும்,காலம் இவர்களின் நுகத் தடியிலிருந்தும் ஒரு நாள்  விடுவிக்கும்.

கோட்டையிலும் ,மண்டை தீவுக்காம்பிலும் இருந்த படையினரின் கண்ணில் ஒருமுறை பட்டு விட்ட நாவாந்துறை, குருநகர் ,கரையூர், பாசையூர் மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டது காலகாலமாக அந்த மீனவர்க் குடும்பங்களை பாதித்துக் கொண்டிருக்கிற ஒரு வரலாற்றுத் துயரம். அவர்களிற்கான நினைச்சின்னத்தை, குருநகர் பகுதியில் காணலாம். தமிழாராட்சி மாநாட்டில் இறந்தவர்களிற்கான நினைவுச் சின்னத்தை கோட்டைப் பகுதியில் கட்டியது போன்ற …இன்னொரு …. சின்னம்.

அச்சம்பவம், 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்ததாக இருக்க வேண்டும்

கழுகு இயக்கம் அரசியல் அமைப்புகளைக் கட்டிக் கொண்டு இயங்கிற ஒர் இயக்கமாக இருக்கவில்லை. அவர்களுடைய பிரதேச முகாம்களே இராணுவ முகாம்களாகத் தான்  இருந்தன. முறைக்கு இரண்டு சாரர்களையும் கூட்டி," இனி மீறக் கூடாது" எனச் சொல்லி அவர்களையே ஓட வைத்திருக்க ஒரு அரசியல் அமைப்பு அவசியம் . அதைக் கட்டிக் கொள்ள‌ அவர்களிற்கு நேரம் இல்லை. தவிர அவர்களுடைய தீவுப் பொறுப்பாளரை காயப்ப்படுத்தியது இல்லாமல் ஆயுதங்களையும் பறித்திருத்திருக்கிறார்கள். எனவே மக்களை தண்டிக்க விரும்பினார்கள். அது தான் இயக்கங்கள் ஓடும் என்ற ஓரேயடியாய் புரட்டிப் போட்ட‌ உத்தரவு.

கனகனின் நண்பர்களின் இயக்கமும் பெரிதாக இருந்தது தான். ஆனால்,பல்வேறுப் பிரச்சனைகளால் பலவீனமானதாகவே இருந்தது. அதனால் கழுகின் உத்தரவுக்கு எதிர் உத்தரவு போட்டு இயங்க முடியவில்லை.

மக்களின் தோல்வி இயக்கங்களின் தோல்வி தான்! அதை புரிந்து கொள்கிற‌ நிலையில் இயக்கங்கள் இருக்கவில்லை என்ற‌ படுகிற‌து. இவர்கள், தங்களை '’மக்கள் இயக்கம்' என்று வேறு  சொல்லிக் கொள்கிறவர்கள் .ஒன்றிருந்தால்,ஒன்றில்லை...என்ற கதை தான். இப்படியான நிலைகளால் தான் இன்று தமிழர்பகுதிகளைச்   சிங்கள நாடு ஆண்டு கொண்டிருக்கிறது.   

எப்பவும், பிழையான நகர்வுகள் மேற் கொள்ளப்பட்டால்,அதன் வழியே செல்லவும் கூடாது, செல்ல விடவும் கூடாது.சொல்வது இலகு.நடைமுறையில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாத நிலை. மக்களின் உழைப்பைப் பறித்துக் கொண்ட போது ,அதை எதிர்த்துக் கதைக்காமல் நாவடைத்துப் போய் இருந்தார்கள்.கதைத்தாலும் சீராக மாட்டாது என்றாலும் கூட கதைக்கப்பட வேண்டும் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது.  தாழ்வுச் சிக்கல்களில் சிக்கிய சமூகம் முன்னேற முடியாததில்லை. முன்னேற முடியும்.அதற்கு அவர்கள் ‘அரசியல்’ படிக்க வேண்டும். அவர்கள் ஒற்றுமை படாத நிலைக் கண்டு தான் பாரதி "வாய் வீச்சில் வீரரடி"என துயரம் பொங்க பாடுகிறான்.

குமையும் ஏலாமைச் சூழலில்,அதிகார துப்பாக்கிகளின் கீழ் நசியும் அடிமைச் சூழலில் நியாயத்தை எடுத்துச் சொல்வதையும் விட்டு விடக் கூடாது.ஈழத்தமிழரின் நசிந்த  வாழ்க்கையில்,காலத்திற்கு காலம் தலைவர்களும்,மக்களும்,மதத் தலைவர்களும் நியாயத்தை அதிகாரத் தோரணையில் இல்லாமல் நட்பு வழியில் பல தடவைகள் சொல்லிக் களைத்திருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாதவர்களாகத் தான் நம் வைத்தியர்களும்,பொறியியலாளர்களும் படித்து வருவதாக நம் கல்வி கிடக்கிறது.

அவை குப்பையோடு குப்பையாக சேர்ந்து கலந்து கூலாப்பாணியாகி, சீர் தூக்கிப் பார்த்து சொல்ல முடியாமல் ஒவ்வொன்றாக அழிகிறதாக‌....,ஒவ்வொன்றாக குப்பையைக் கிளறுற பொறுமையும் நமக்கில்லை,சந்ததிகளுக்கு அவற்றை எல்லாம் எடுத்து ஒளிப்பாக, உரத்துச் சொல்லுறதும் இல்லாத சோம்பேறிகளாகவும் நாம் போய்க் கொண்டு இருக்கிறோம்?

எல்லாவற்றையுமே யாரும் சொல்லித் தான் நாமும், நமது சந்ததிகளும் அறிய வேண்டியவர்களா? என்ன‌?, நாமாகவே ஒருவித தேடலுடன் அவற்றை எல்லாம் அறிய முயலக் கூடாதா? என்ன‌ ! சுய நம்பிக்கையும் ,சுய முயற்சியும் இ ல்லாத என்ன ஜென்மங்கள் நாம் !

இதற்கெல்லாம் அறிவதற்கு தடையாய் பிரித்தானியக் கல்வி முறை தான்... இருக்கிறது என எனக்குப் படுகிறது. எமக்கென்று ஒரு கல்வி முறை இருந்தது. அதைப் போல எமக்கென்று இருந்த பழையவற்றை …பலவற்றையும் தூசி தட்டி பார்க்க ...வேண்டிய அவசியங்களும் எமக்கு இருக்கின்றன என்றே எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கின்றன 1500, 1600 ம் ஆண்டு காலங்கள் வரையில் பாய்மரக் கப்பல்கள் வடகடலில் பயணித்திருக்கின்றன என்று சொல்லப்படுகின்றன‌.எமது மண் மட்டுமில்லை கடலும் கூட விடுதலை பெற வேண்டும்.நாவாய்த் துறை,நாவாந்துறையாகி அழைக்கப்படுற இடங்கலெல்லாம் இன்றும் இருக்கின்றன.இவ்விடங்கள் எல்லாம் திரும்பவும் உயிர்ப் பெற்றெழ வெண்டும். எமது கனவுகளை நாம் இழந்து விடக் கூடாது; தொலைத்தும் விடக் கூடாது.. ஒருத்தனுக்குத் தோன்றி மட்டும் என்ன பிரயோசனம்?,எல்லாருக்கும் தோன்ற வேண்டும். அப்துல்கலாம் சொன்னது போல எல்லோரும் கனவு காணுங்கள்

அந்த காலத்தைப் போல நமது கடலில் ந‌ம் வள்ளங்கள்,பாய்மரக் கப்பல்கள்,படகுகள்...நிறைய இல்லாட்டிலும் நாலு,ஐந்தாவது நந்திக் கொடிகளுடன் மிதக்க வேண்டும். முழுமையான அதிகாரம் படைத்தாக‌ மாகாணவரசாக நா மும் நெஞ்சை நிமிர்த்தி நிமிர்ந்து நிற்க வேண்டும். நீண்ட பெருமூச்சுகள் தான் சூடாக‌ வெளியேறுகின்றன‌.

ஒட்டிகள் எல்லோரும் சோர்ந்த முகத்துடன் கலையத் தொடங்கினார்கள்.

தாமரையையும்,கழுகையும் சேர்ந்த இயக்கப்பெடியள்கள் எல்லாருடைய மரவள்ளங்களையும் எடுத்தனர். ஒரு நுனியில் கயிறைக்கட்டி அவற்றை மூன்று, நான்கு பெடியளுடன் நீரில் தள்ளினார்கள்.

குவிந்திருந்த சனம் இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறியது. நிறைந்ததும் கயிறை வைத்திருந்தவன் கடலில் நனைந்தபடி முன்னால் இழுக்க, பக்கப்பகுதிகளில் இருவர் நின்று ஒருவன் தள்ள, பின்பகுதியில் ஒருத்தன் தள்ள, வள்ளங்கள் நகரத் தொடங்கின. ஒன்றரை மைல் நீளமான அந்தக் கடல் ஆழமற்ற அலைகளற்ற தன்மையைக் கொண்டிருந்ததால் ஒட்டிகளின் உதவி இல்லாமலே …சமாளிக்க முடிந்தது.

அன்று, மக்களுக்கு …இலவச சேவை !

‘உவங்கள் எதற்கும் துணிந்தவர்கள்’ என்ற வியப்பு கண்களில் படர கனகன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

(தொடரும்)


(பதிவுகள்.காம்) கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு! - வ.ந.கிரிதரன் -

புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான 'வேலிகள்' மற்றும் 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியனவும் 'தாயக'த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல 'பதிவுகள்' இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  'சிறுகதைகள்.காம்' இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் 'வேலிகள்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான 'வெகுண்ட உள்ளங்கள்' பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

'வேலிகள்' தொகுப்பின் பின் அட்டையிலுள்ள இவரைப்பற்றிய அறிமுகத்தில் சில தகவற் பிழைகளுள்ளன. இவர் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னும் பகுதியில். ஆனால் இவரது பால்ய காலத்தின் பெரும்பகுதி கழிந்தது கடலோரக்கிராமங்களிலொன்றான 'வடக்கு அராலி'யில். வவுனியாவிலும் இவரது குழந்தைப்பருவத்தின் சில ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.  மேலும் 'வேலிகள்' நூலின் பின்னட்டை அறிமுகத்தில் இவர் கனடாவுக்கு 'அகதி'யாகப் புலம்பெயர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவர் கனடாவுக்கு நிரந்தர வசிப்பிட உரிமைபெற்றுப் புலம் பெயர்ந்தவர்.

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் இவருமொருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றேன். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது.

வெகுண்ட உள்ளங்கள் கூறும் கதைதானென்ன?

இந்நாவல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்டதென்பதை நாவலாசிரியரின் நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பினில் காணமுடிகின்றது:

"சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைந்து சில பொதுவான அபிப்பிராயங்களைக் கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன்.' (வேலிகள்; பக்கம் 59)
அத்துடன் நாவல் முழுவதும் ஆசிரியர் பேச்சுத்தமிழைத்தாராளமாகவே பாவித்திருக்கின்றார். அதற்குமொரு காரணத்தை நாவல் அறிமுகத்தில் கூறியிருக்கின்றார்:

"இரு தமிழ் வழக்கை விட்டு - உரையாடலை பேச்சுத்தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்- ஒரு தமிழில் - எல்லாவற்றையும் பேச்சுத்தமிழில் - எழுதிப்பார்க்கப்பட்டது." (வேலிகள், பக்கம் 59).

அராலித்துறை, கொழும்புத்துறை ஆகிய சிறிய துறைகள் அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நாவல் இவ்வாறு பதிவு செய்கின்றது:

" தீவு மக்கள் முன்னர் பண்ணை  வழியாலும்,  காரைநகர் வழியாலுமே  சென்று கொண்டிருந்தார்கள்.  கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் மண்டைதீவு முகாம்  நிறுவப்பட்டபோது  அது அடைப்பட்டு விட்டது.  காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக இரண்டாவதும்  தடைப்பட்டுவிட்டது.  இதனால் கவனிப்பாரற்றுக்கிடந்த  அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவை பிரசித்தமடைந்தன. இவ்விடத்தில்  சிறிய வள்ளங்களை  மட்டும் அதிகமாகக்கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள்  தலைக்கு இரண்டு  மூன்று ரூபா என வசூலித்து தீவுப்பகுதியில் கொண்டுபோய் விடத்தொடங்கினார்கள். இரு கரைகளிலும் மினி பஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின.  பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. (வேலிகள்; பக்கம் 62)

இவ்விதமாக அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெற்ற அராலித்துறை மேலும் பலரை ஈரக்கத்தொடங்கியது. கடல்வலயச் சட்டங்களால் மீன் பிடித்தல் அறவே இல்லாதிருந்த காலகட்டமது. கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்த காலகட்டம். இதனால் பொருளியல்ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்களுக்கு அராலித்துறைக்கேற்பட்ட முக்கியத்துவம் இன்னுமொரு வழியில் உழைப்பதற்கான வழியினைத் திறந்து விட்டது.  சிறிய வள்ளங்களை வைத்திருந்த வாலையம்மன் கோவிற்பகுதிக் கடற்தொழிலாளர்கள் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டுபோய் விட்டு உழைக்கத்தொடங்கியதைக் கண்ட கடல் வலயச் சட்டங்களால் தொழில் முடக்கப்பட்டிருந்த நவாலி, ஆனைக்கோட்டைப்பகுதி மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களைக் கல்லுண்டாய்க் கடலினூடு அராலித்துறைக்குக் கொண்டுவந்து பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்லத்தொடங்கினார்கள். இது சிறிய வள்ளங்களை வைத்துப் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு அதிருப்தியினைத்தருகின்றது.

இந்த இருபகுதி கடற்தொழிலாளர்களுக்கான தொழில் ரீதியிலான முரண்பாடுகள் இயக்கத்தின் தலையீட்டினை அங்கு ஏற்படுத்துகின்றது.

"கரையிலிருக்கிற எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப்பகுதிப் பொறுப்பாளரான ஓரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பொடியன் ஓரளவுக்கு ஏற்றிருந்தான்.  அதன்படி வாலையம்மன் பகுதியினர்  தீவுக்கு ஆட்களை , சாமான்களைக் கொண்டு போவதென்றும் , மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பாப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது. "(வேலிகள்; பக்கம் 63).

இவ்விதமாக முடிவாகியிருந்த சூழலைக் கெடுக்கும் வகையில் பெரும் வள்ளமொன்று அராலித்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தீவுப்பகுதிக்குச் சென்ற செயலானது மீண்டும் வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்குகின்றது. தமது தொழிலினை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத்தொடங்கினர்.  இதனால் தீவுப்பகுதிக்குச் செல்ல வந்த பயணிகள் போக்குவரத்து ஏதுமின்றிப் பெருகத்தொடங்கினார்கள்.  அச்சமயம் இன்னுமொரு பெரிய வள்ளம் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. முருகேசு என்ற கடற்தொழிலாளர் தலைமையில் சிறிய வள்ளத்தில் பெரிய வள்ளத்துக்குச் சென்ற வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள் பெரிய வள்ளத்து கடற்தொழிலாளர்களைப் பலமாகத்தாக்கினார்கள். ஒருவனது காலை ஒடித்தார்கள். அந்த வள்ளத்தைத் துரத்தி விட்டுப் பெருமிதத்துடன் கரைக்குத்திரும்புகின்றார்கள் வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களில் 'ஐந்தாறு -பெடியள்க'ளுடன்  நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி விரைந்து வருகின்றன. இதனை ஆசிரியர் இவ்வாற்று விவரிக்கின்றார்:

"அவர்களுக்குத் திகில் பரவத்தொடங்கியது. 'வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்' எனத்தில்லை கத்தினான். 'நீதானே ஒப்புதல் தந்தாய்' என்று முருகேசன் தொட்டுப் பலர் அவனைச்சூழ்ந்து கொண்டனர்." (வேலிகள்; பக்கம் 64).

இவ்விதம் வந்த மற்ற இயக்கத்துப் போராளியான வடிவேலு என்பவன் இடுப்பிலிருந்த ரிவால்வரை எடுத்து மேல் வெடி வைக்கவே, அப்பகுதியினர் அவன் மேல் பாய்ந்தரவனிடமிருந்த ரிவால்வர், மகசீன், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்ததுடன் அவன் தலையிலும் அடித்து மண்டையை உடைத்து விட்டார்கள். அவனோ தன்னிடமிருந்தவற்றைத் திரும்பப்பெறாமல் அவ்விடத்தைவிட்டு நகர்வதில்லையென்று நிற்கின்றான். இதற்கிடையில் வடிவேலுவின் இயக்கத்தினர் அங்கு வருகின்றனர். 'இனிமேல் இயக்கங்கள் வள்ளங்களை ஓட்டும்" என்று அறிவிக்கின்றனர். இவ்விதமாக வள்ளங்களில் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்வதும், கொண்டு வருவதும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கைகளிலிருந்து இயக்கங்களின் கைகளுக்கு மாறுகின்றன. இங்கு ஒன்றினைக் கவனிக்கலாம். இனிமேல் இயக்கங்கள்தாம் வள்ளங்களை ஓட்டுமென்று மற்ற இயக்கத்தினர் அறிவிக்கின்றனரே தவிர தாம் மட்டும்தான் வள்ளங்களை ஓட்டுவதாக அறிவிக்கவில்லை. அதற்கும் ஒரு காரணமிருந்தது. அக்காலகட்டத்தில் இயக்கங்கள் அனைத்தும் தமிழ்ப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்தன. ஒருவரையொருவர் முற்றாக அழிக்கத் தொடங்கியிருக்கவில்லை.

மற்ற இயக்கத்தினர் மீது மக்கள் நடாத்திய தாக்குதல் காரணமாக வள்ளமோட்டுதலை இயக்கங்கள் எடுப்பதாக மற்ற இயக்கம் அறிவிக்கின்றது. அதே சமயம் இயக்கத்தினர் மீதும் அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தெளிவாக நாவலில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே நாவலில் பெரிய வள்ளக்காரர் தீவுப்பகுதியிலிருந்து பயணிகளைக் கொண்டுவரவேண்டுமென்றும், வாலையம்மன் பகுதியினர் பயணிகளை, பொருட்களைக்கொண்டு செல்வதென்றும் இயக்கத்தினனான திக்குவாய்க்காரனொருவனுடன் அப்பகுதிக்கடற்தொழிலாளர்கள் கதைப்பதாகவும், அச்சமயத்தில் பெரிய வள்ளமொன்று பயணிகளை ஏற்ற அப்பகுதிக்கு வருவதாகவும், அவ்வள்ளத்தில் வந்தவர்கள் மீது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்விதம் தாக்கப்பட்டவர்கள் யார்? ஏனைய பகுதி மீனவர்களா? அல்லது இரு பக்கத்தினருக்குமிடையில் சமாதானம் செய்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

அதே சமயம் நாவலின் இன்னுமோரிடத்தில் தீவுப்பகுதியில் இயங்கிய இயக்கத்தின் போராளியொருவனின் கை வாலையம்மன் பகுதியினரால் முறிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயக்கத்தின் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து ஆறுபேரைக் கைது செய்து கொண்டு போனதாகவும் கூறப்பட்டுள்ளது. (வேலிகள்; பக்கம்  70).

மற்ற இயக்கத்தின் போராளியொருவனின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயுதங்கள் களையப்பட்டது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டதைபோல இயக்கத்தின் மேல் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தெளிவாக விபரிக்கப்படவில்லை. ஒருவேளை நூலின் சில பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளனவோ?

நாவலில் வரும் கீழுள்ள வசனங்கள் விளக்குவதென்ன?

"..ஆனால் இரண்டையும் (இயக்கங்களை) உடனே அணுகப்பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கின்றார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கின்றார்கள்.  அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு இருக்குமோ? அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாககிவிடும்..."(வேலிகள்; பக்கம் 66)

ஆசிரியர் ஓரிடத்திலும் இயக்கங்களின் பெயர்களைக்குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அந்த இயக்கங்களைக் குறிக்கக்குறிப்பிடும் வார்த்தைகளைக் கொண்டு அவ்வியக்கங்களின் பின்னணியினை ஊகிக்க முடியும். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இயங்கிய முக்கியமான பெரிய இயக்கங்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்தாம். கழகம், இயக்கம் என்று தமிழீழ் மக்கள் விடுதலைக் கழகம் குறிக்கப்படுகின்றது. மற்ற இயக்கமென்று தமீழிழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறிக்கப்படுகின்றதென்பதை அறிய முடிகின்றது. 'மற்ற இயக்கத்தை'ப்பற்றிக் குறிப்பிடும்போது ஒரு சமயம் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:

"மற்ற இயக்கத்தைப் போய்ச்சந்திப்பதென்றால் அவர்களுடைய  பிரதேசக் காம்புக்குப் நேரடியாகப் போக வேண்டும்.  ஆயுதங்களோட அவர்கள் எந்த நேரமும் புழங்குவதால் பெடியளை அனுப்பப் பயப்பட்டார்கள். "(வேலிகள்; பக்கம்  69)

இதிலிருந்து மற்ற இயக்கமென்று குறிப்பிடப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் என்று ஊகிக்க முடிகிறது. இதே சமயம் இயக்கமென்று குறிப்பிடப்படும் இயக்கத்தின் செயற்பாடுகள் விரிவாகவே நாவலில் விபரிக்கப்பட்டிருக்கின்றன.

"பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் பேரில் ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கம் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும். பிறகு அவர்களது  ஏ.ஜி.ஏ.சைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி,.ஏ.க்களுக்கு மத்தியில் அடிக்கடி கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால் சாதாரண விதாரணயார் பிரிவுகளுக்கு அயலில் மானிப்பாய் விதானையாருடன் இருந்த பழக்கம் அவர்களோடு நிலவவில்லை. பெரிய பிரச்சினைகளைப் பொதுவாக ஏ.ஜி.ஏ மட்டத்தினர் கதைத்துத் தீர்த்துக்கொள்வர். பிரச்சினை மோசமானால் அவர்கள் எல்லாருக்கும் தலைமையாயிருக்கிற அரசாங்க அதிபருக்குக்கொண்டு போவார்கள். எல்லா அமைப்புகளையும் பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது.  விதானையார், ஏ.ஜி.ஏ தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜி.ஏ. அமைப்புகளுக்குக்கொண்டு போகலாம்." (வேலிகள்; பக்கம் 68)\

இவ்விதமான விபரிப்புகள் அந்த இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பதைப் புலப்படுத்துகின்றன. நாவலாசிரியர் அந்த இயக்கத்தில் ஆரம்பத்தில் இணைந்திருந்ததன் காரணமாகவும், அப்பகுதி மக்களுடன் நன்கு இணைந்து பழகியவர் என்பதாலும் அப்பகுதி மக்கள் பற்றியும், அந்த இயக்கம் பற்றியும் நாவலில் விரிவாகவே தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

இவ்விதமாக இரு பெரும் இயக்கங்களுடன் மோதிக்கொண்ட அப்பகுதி மக்கள் அம்மோதல்கள் ஏற்படுத்திய, ஏற்படப்போகின்ற பாதிப்புகளைத் தணிக்க அல்லது சமாளிக்க எவ்விதம் முயற்சி செய்கின்றார்களென்பதை நாவல் விரிவாகவே விபரிக்கின்றது.

இதுதவிர நாவல் மேலும் இயக்கத்தின் செயற்பாடுகள் சிலவற்றை விபரிக்கின்றது. அப்பகுதியில் பாவிக்கப்படாமலிருந்த வீடொன்றினை இயக்கத்தின் போராளிகள் பொறுப்பெடுத்து இயக்க  முகாமாக்குகின்றார்கள். அந்த வீட்டுக்குப் பொறுப்பாக இருந்த அயல் வீட்டுக்காரர் வீட்டு உரிமையாளர் கொழும்பிலிருப்பதாகவும், விரைவில் வரவிருப்பதாகவும் கூறி வீட்டுச் சாவியினைக் கொடுக்கத்தயங்கின்றார். அவரை ஒருவாறு சமாளித்து அந்த வீட்டினைப் பொறுப்பெடுத்து இயக்க முகாமாக்குகின்றனர். அவ்விதம் முகாமாக மாற்றும்போது அந்த வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து அறையொன்றில் போட்டு, சாவியினால் பூட்டி விட்டு, அந்தச் சாவியினையும் அந்த அயல் வீட்டுக்காரரிடமே கொடுத்து விடுகின்றார்கள்.

அத்துடன் நாவல் விபரிக்கும் இன்னுமொரு விடயம் அந்தபோராளி இளைஞர்கள் தாம் வள்ளங்களைத் தம் இயக்கம் சார்பில் ஓட்டத்தொடங்குவதுதான். ஓட்டிகள் இருவரைச் சம்பளத்துக்கு வைத்து வள்ளத்தை ஓட்டுகின்றார்கள். அதனை நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:

"திலகனுக்கு படகு ஓட்டம் பற்றி தெரியாதபோதும், மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போர்ட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஓட்டிகளாக அனுமதித்தான்.  இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனஔ இருந்ததால்.. அவன் மற்றவனை தெரிவு செய்யலாம்.  அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களைப் போடாதபோது , படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டது. ஆழமற்ற கடலானதால் ஓடியோடி ஆழமான பாதைகண்டு ஓட வேண்டும். இல்லாது போகிறபோது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஓட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவம் மிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்தினான். ஒரு நாள் சம்பளமாக அவன் ஓட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. ஓட்டம் சீராக நடைபெற்றது. " (வேலிகள்; பக்கம் 80-81)

இருந்தும் வெற்றிகரமாக நடத்த முடியாததால் படகுச் சேவையை இயக்கத்தின் தீவுப்பகுதியிடமே இறுதியில் கொடுக்கும்படியாகின்றது. இதுதவிர நாவல் இன்னுமொரு விடயத்தையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது.  அதனை கதாசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

"..வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த ஏ.ஜி.ஏ. அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்துச் செயற்படுத்தியது.... காம்பிற்கு பின்னாலுள்ள வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப்பகுதியை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள். மூன்று நான்கு நாட்கள் முழுமூச்சாக செயல்பட்ட அவர்கள் வெற்றியடைந்திருந்தனர். அது முதல்தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள  பெரிக்கு  இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை  அவர்களுக்கு இருந்தது.  ட்ரக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக்கொண்டு  போய் கடலில் இறக்கப்பட்டபோது பெடியன்கள் கரகோசம் செய்தார்கள்.  கையோடு கொண்டுவந்த  பலகைகளை மரவேலை தெரிந்த ஒரு பெடியன் கம்பிச் சட்டத்தின்மேல் வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக்கொடுத்தபடி  பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை  இரண்டு மணித்தியலத்தில் முடிந்தது..." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாகத் தயாரிக்கப்பட்ட மிதவை சாதனை படைத்ததாக நாவலில் விபரிக்கப்பட்டிருகின்றது.

"அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. சுயமூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட் , மோட்டார்கள், ஷெல்கள் .. இந்த வரிசையில் இதுவும் ஒன்று.  தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயம்தான். .." (வேலிகள்; பக்கம் 90)

"அதிலே மினிபஸ், கார். ட்ராக்டர் போன்ற வாகனங்கள் இலகுவாக இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாக நாவல் இயக்கங்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதாமல் தமது பாதைகளில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் , ஒரு கடற்கரைக் கிராமமொன்றில் அன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களை விபரிக்கும் அதே சமயம் இயக்கச் செயற்பாடுகளை விபரிப்பதன் மூலம் அவற்றை ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அதே சமயம் அக்கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அங்கு இயங்கிக் கொண்டிருந்த வாசிகசாலைச் செயற்பாடுகளை இன்னுமொரு தளத்தில் நாவல் விபரித்தாலும், இந்நாவலின் முக்கியத்துவமே அராலித்துறைக்கு அனறைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தையும், அங்கு அக்காலகட்டத்தில் இயங்கிய அமைப்புகளின் செயற்பாடுகளைப்பற்றியும் ஆவணப்படுத்தியதில்தான் இருக்கிறது. இன்னும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கலாமென்ற எண்ணம் ஏற்பட்டாலும், ஓரளவாவது ஆவணப்படுத்தியிருப்பதில்தான் இந்ந நாவலின் முக்கியத்துவமே தங்கியிருக்கின்றது. அந்த வகையில் 'வெகுண்ட உள்ளங்கள்' அளவில் சிறுத்திருந்தாலும், கூறும் பொருளில் கனமானது; தவிர்க்க முடியாத படைப்புகளிலொன்று.

அத்தியாயம் இரண்டு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.