அத்தியாயம் 10

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.  காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப் பண்ணைகளில் வேலை செய்யும் ஒரு ஆண் நாய் படுத்து கிடந்தது. அது சுந்தரம்பிள்ளை சாமுடன் உள்ளே வந்ததால் ஏற்பட்ட கதவின் ஓசை கேட்டு தலையைத் திருப்பி பார்த்தது. அதன் கண்களில் வரவேற்பு உணர்வு தெரியாத போதும் வெறுப்பு தெரியவில்லை. பெரிய மருத்துவ ஆஸ்பத்திரிகளில் கான்சர் என்ற குணமடையாத நோய் பீடித்தவர்கள் இருக்கும் வாட்டின் பக்கம் போய் நாம் பார்க்க போனவரை பார்த்து விட்டு மற்றவர்களைப் பார்த்தால், அவர்கள் கண்களில் எதையும் பொருட்படுத்தாத ஏகாந்தமான தன்மை தெரிவதை அவதானிக்க முடியும். நாங்கள் எப்படியும் சில நாட்களில் இறக்கப்போகிறோம். இந்த மனிதனின் அறிமுகம் நமக்கு தேவையற்றது என்ற உணர்வு அவர்கள் கண்களில் தெரியும். அதே மாதிரியான உணர்வைத்தான் சுந்தரம்பிள்ளையால் அந்த நாயின் கண்களில் உணரமுடிந்தது. வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்டேன் என நினைத்து விட்டு கூண்டின் உட்பக்கம் மீண்டும் தலையை திருப்பிக் கொண்டது .

புளுகீலர் என சொல்லப்படும் அந்த நாய்கள் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் சிதறியோடும் பண்ணை மாடுகளை கணுக்காலின் கீழ் பகுதியில் கடித்து நிரைப்படுத்தும். அவை கடிக்கும் போது இரத்தம் வடியாது. ஆனால் வலி ஏற்படும். அதிகம் குரைக்காது, அமைதியாக செயலில் ஈடுபடும் இந்த நாயொன்று இரண்டு மனிதர்களின் வேலையை செய்யும். அக்காலத்தில் இருவர் குதிரையிலும் இக்காலத்தில் மோட்டார் சைக்கிளிலும் முன்னே செல்லும் போது இரண்டு நாய்கள் பின்னாலே ஆயிரம் மாடுகளை ஒன்று சேர்த்து நிரைப்படுத்தி பட்டிக்கு கொண்டு செல்லும் காட்சியை வட அவுஸ்திரேலிய மாட்டுப் பண்ணைகளில் காணலாம் . இந்த நாய்கள் உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி விசுவாசம் உள்ளவையாக இருக்கும். மாடுகளின் பிரசவவேளையில் நரிகள், காட்டு நாய்களிடம் இருந்து கன்றுகளை பாதுகாக்கும். ஆயிரக்கணக்கில் இறைச்சி மாடுகள் உள்ள பண்ணையில் ஒரே நேரத்தில் திறந்த வெளியில் இரவு பகல்லென பல மாடுகள் கன்றுகளை ஈனும் போது மனிதர்களால் காவல் இருக்க முடியாது. இந்த நாய்கள் இன்றியமமையாத துணையாக பண்ணையாளருக்கு இருக்கின்றன. இந்த நாய்கள் மேலும் ஆரோக்கியமானதாக திறந்த வெளிகளில் சிவிப்பதும் பல மைல் தூரம் நடக்கவும் தோதான உடல் வலிமை உள்ளவை. இந்த நாய்கள் நகரப்புறத்தில், வீடுகளின் பின் வளவுகளில் வளர்க்கும் போது பயிற்றப்படாமல் கடிநாய்களாககவும், உடற் பயிற்சியற்ற குண்டு நாய்களாக மாறிவிடுகின்றன.

அந்த புளுகீலரின் நோய் குறிப்பை பார்த்த போது வாகனத்தில் செல்லும் போது வெளியே பாய்ந்ததால் நடந்த விபத்தில் முன்காலும் பின்காலும் முறிந்திருக்கிறது. இடது பின்னங்கால் தொடையில் உருக்கு பிளேட் ஒன்றையும் வலது முன்னங்ககாலில் உருக்கு கம்பியையும் வைத்து ரிமதி பாத்தோலியஸ்சால் சிகீச்சை செய்யப்பட்டிருந்தது.

சுந்தரம்பிள்ளையால் அந்த நாயை அடையாளம் காணமுடிந்தது. இரண்டு நாட்களின் முன்பு ஆபரேசன் தியேட்டரின் இந்த நாயைதான் ஆபரேசன் செய்து கொண்டிருந்தான். அந்த வேளை முள்ளம்தண்டைப்பற்றி கேட்டதும் ஆத்திரப்பட்டு மதுச்சாலைக்கு சென்றதைக் குறிப்பிட்டான். இது திறமையாக செய்ய வேண்டிய கடினமான வேலையானதால் இதை செய்ய பல மணி நேரங்கள் எடுத்திருக்கும்.. இப்படியான வேலைகளால் தலைமை வைத்திய காலோஸ்ககும் ரிமதிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஜோனை அழைத்து ஜோன் இந்த நாயின் உடலை அடுத்த பக்கம் திருப்பி விட்டிர்களா என கேட்டபோது ‘ ஆம் ஆனால் அதனது உடல் பகுதி அதிக அசைவில்லை. மேலும் கடிக்க வருகிறது.’ என்றான்.

‘காலும் கையும் உடைந்திருந்தால் நீ கூட அப்படித்தான் இருப்பாய் ஜோன்’ என்றான் சாம்

‘சாம், நாயின் தலையில் பெரிய பெட்சீட்டால் மூடு’ என்றதும் சாம் அருகில் இருந்த பெரிய தடிப்பான பெட்சீட்டால் தலையில் போட்டு அமர்த்தியதும் சுந்தரம்பிள்ளை நாயின் அருகே குனிந்து கையில் இருந்த கத்திரிக்கோலின் பிடியால் ஒன்றன் பின் ஒன்றாக வலது , இடது முழங்கால் சிரட்டையின் சிறிது கீழே மெதுவாக அடித்தான். அந்த இரண்டு பின்னங்கால்களிலும் எந்த அதிர்வும் ஏற்படவில்லை. ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகத்தை உறுதி செய்ய பின்னங்கால்களின் விரல்களில் பலமாக கிள்ளினான்;. எதிர்பார்த்தது போல் எந்த அதிர்வும் இல்லை. ஆனால் முன்னங்கால்களின் விரல்களில் கிள்ளிய போது உடனே கால்களை உள் இழுத்து வலியின் உணர்வுகளை காட்டியது.

‘இந்த நாயின் முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டதால் பின்னங்காலில் உணர்வு இல்லை என்றான் சுந்தரம்பிள்ளை. அவனது மனத்தில் ஒரு பெருமிதம் நிழலாடியது. ரிமதியின் தவறான செய்கையை இங்கு வெளிவந்துவிட்டது

‘இது ரிமதியின் வேலை. அப்பிடியே அவரிடம் பொறுப்பு கொடுப்போம்.’ என்றான் சாம்

‘இன்று மாலை ஐந்து மணிக்குத்தான் ரிமதி வேலைக்கு வருகிறான். இந்த வாட் இரவுண்டை முடித்து விட்டு எக்ஸ்ரே எடுப்போம்.’

வாட் இரவுண்டை முடித்ததும் அந்த புளு கீலருக்கு மயக்க மருந்தை கொடுத்து தள்ளு வண்டியில் தூக்கி வைத்து தள்ளியபடி இருவரும் வந்தபோது எதிரே வந்த காலோசிடம் ‘இது ரிமதியின் வேலை. முதுகெலும்பு முறிந்த நாய்க்கு கால்களை பொருத்தி இருக்கிறார்’ என்று சாம் கூறியதும் ‘அப்ப இதுவே ரிமதி பாத்தோலியஸசின் பெரிய சாதனையாக இருக்கும்’ என்ற சொன்ன போது காலோசுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு ‘எக்ஸ்ரேயை எனக்கு கொண்டு வரவும்’ என சொல்லி விட்டு போனான்

எக்ஸ்ரேயை எடுத்ததும் தானே அதை டெவலப் பண்ண இருட்டறையுள் சென்றான் சுந்தரம்பிள்ளை. இரண்டு முறை எக்ஸரே எடுத்த போதும் அந்த படம் அதிக துலக்கமாக இருக்கவில்லை . ஒன்று அதிக கறுப்பாகவும் மற்றயது வெள்ளையாகவும் இருந்ததால் அவற்றை எறிந்து விட்டு மூன்றாவது முறையாக டெவலப் பண்ணியதும் முதுகெலும்பில் நெஞ்சுக்கும் இடுப்புக்கும் இடையில் உள்ள ஏழு நாரி எலும்புகளில் மேலிருந்து மூன்றாவதுக்கும் நாலாவது முதுகெலும்புக்கும் இடைப்பகுதி சிறிது விலகி இருந்தது.அந்த இடத்தில் எலும்புக்கிடையில் இருக்கும் டிஸ்க்கெனும் பகுதி வெளித்தள்ளி இருந்தது. இதைப் பார்த்ததும் ரிம்மின் தவறால் அவன் அவமானப்படப் போவது சுந்தரம்பிள்ளைக்கு மனத்துக்கு மகிழ்சியை கொடுத்தது. பழி வாங்கும் மனித உணர்வு மிக அடிப்படையான தொன்று. சாதாரண மனிதர்களில் இருந்து படித்தவர்கள் என இந்த உணர்வில் வேற்றுமையில்லை. கூனியின் பழிவாங்கும் உணர்வு இராமாயணத்தை தந்தது. இதே உணர்வு சுந்தரம்பிள்ளைக்கு தோன்றியதில் வியப்பில்லை. ஆனால் நாகரீகமடைந்த சமூகத்தில் அதற்கு வேறு காரணங்களும் காட்டப்படவேண்டும்.

இவ்வளவு விரைவில் ரிமதி பாத்தோலியஸ்சுடன் ஒரு குத்து சண்டையில் ஈடுபட வேண்டும் என சுந்தரம்பிள்ளை நினைத்திருக்கவில்லை. அறிவுசால் தொழில் செய்பவர்கள் தொடர்ச்சியாக அறிவை விருத்தி செய்வது அவசியம் அதிலும் மருத்துவ சிகீச்சை விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு நினைப்பு. நாம் எப்பொழுதும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவர்களில்லை. தொடர்ச்சியாக புதியவற்றை அறிந்து கொள்ளளுதல் அவசியம். மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொள்ள எப்பொழுதும் வாய்ப்பு உண்டு. இதைத்தான் இரண்டாவது கருத்தை அறிந்து கொள்ளுதல் என்று மருத்துவத்தில் கூறுவார்கள். பத்துக்கு மேற்பட்ட மிருகவைத்தியர்கள் வேலைசெய்யும் இடத்தில் இரண்டாவது கருத்தை ஒருவரிடம் கேட்டு அறிந்து கொள்ளும் வாயப்ப்பை பயன்படுத்தாத தனது செயலுக்கான விலையை ரிமதி பாத்தோலியஸ் கொடுக்கும் நேரம் வந்தது. அவனது கெட்டகாலம் எனது வடிவில் வந்துள்ளது என சிவா சுந்தரம்பிள்ளை நினைக்க வைத்தது ஆபிரேசன் செய்து கொண்டிருக்கும் போது முதுகெலும்பு பிரச்சனையை சுந்தரம்பிள்ளை எழுப்பியபோது அதைப் பற்றி பேச ரிம்மினது கர்வம் இடம் கொடுக்கவில்லை. கால்களில் உருக்கு பிளேட்டை வைத்து எலும்பை பொருத்திய பின் அதை எக்ஸ்ரேயில் எடுத்த போது முதுகெலும்பையும் எக்ஸ்ரே எடுத்திருக்கலாம்?

கர்வமா அல்லது அலட்சியமா?.

எதுவாக இருந்தாலும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். தவறுகள் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. விதைத்த பயிர்போல் அவை அறுவடைக்கு வந்தே தீரும். அவற்றை அலட்சியம் செய்வது இந்த தொழிலில் நன்மை பயக்காது.

இந்த நாயின் கால்களில் உணர்வு இல்லை என்ற தகவல் உரிமையாளருக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் ஆபரேசன் செய்ய முன்பு இதை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்பதற்கு திருப்திகரமான காரணம் உரிமையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்;. ஆப்பிரேசன் செய்த ரிமதி பாத்தோலியஸசின் தவறாக இருந்தாலும் இறுதியில் வைத்தியசாலையே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த பிரச்சனையை சுந்தரம்பிள்ளை எதிர் நோக்கிய போது அனுபவசாலியான சாமின் கருத்து உதவிக்கு வந்தது. ‘தலைமை வைத்தியரான காலோஸ் சேரத்திடம் விட்டு விடுவோம். காலோஸ்சுக்கு இது அதிர்ஸடவசமாக கிடைத்த ஆயுதம். ஏற்கனவே ஸ்ரிவனும் ரிமதியும் பலரிடம் கையெழுத்து கடிதம் காலோஸ்க்கு எதிராக மறைமுமாக சேகரித்து வருகிறார்கள். எதிர்வரும் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவிருக்கும் போட் மீட்டிங்கில் அவற்றை சமர்பிப்பதற்கதற்கு தயாராகிக் கொணடிருக்கிறர்கள் என்ற விடயத்தை எற்கனவே பலர் காலோசின் காதில் போட்டு வைத்திருக்கிறார்கள்.’

‘சாம் இந்த யுத்தத்தில் யார் தோற்றாலும் அதன் விளைவாக பலர் காயமடையப் போகிறார்கள். என்பதுதான் முக்கியமான விடயம்’ என சுந்தரம்பிள்ளை கூறிவிட்டு ,நாயை சாம்முடன் கூட்டுக்கு அனுப்பி விட்டு எக்ஸ்ரேயை கொண்டு காலோசை பார்க்க சென்றான். நான் இங்கு வந்து சில நாட்களில் இந்த யுத்தத்தில் பங்காளியாக இருக்க வேண்டியதாக உள்ளது. இங்கே பாண்டவர்கள் நல்லவர்கள் துரியோதனர்கள் கெட்டவர்கள் என்பது போல் பிரித்து பார்க்க முடியாது. அப்படியான கருப்பு வெள்ளைத் தன்மை இதிகாசத்துக்கு சரியாக இருக்கலாம். இந்த நிகழ்காலத்தில் அப்படியான நிலை இல்லை. இரண்டு பக்கத்திலும் நல்லவர்கள்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பார்கள். கெட்டவர்களில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது. இதேபோல் நல்லவர்கள் என கருதப்படுபவர்கள்; வாழ்க்கையிலும நுளைந்து பார்த்தால் இருள் சூழ்ந்த பகுதி உள்ளது. இதை மேலும் நுட்பமாக அணுகும் போது ஒவ்வொருத்தரிலும் நல்லது கெட்டதும் கலந்து இருக்கும் என்பதே நவீன காலத்தில் பொருத்தமானது. சுந்தரம்பிள்ளையின் குறுகிய வாழநாள் காலத்தில் இலங்கை ,இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் வேலை செய்தபோது அறிந்து கொண்ட உண்மை.

தலைமை வைத்தியரான காலோஸ் சேகரத்தைத் தேடிய போது வைத்தியசாலையின் செயலாளரின் அறையில் இருப்பதாக அன்ரு மூலம் அறிந்து அங்கே சென்று கதவைத் தட்டிய சுந்தரம்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அந்த வைத்தியசாலையை கொண்டு நடத்தும் முகாமைத்துவத்தின் செயலாளர் ரொன் ஜொய்ஸ், கணக்காளர் ஜோன் லிஸ்மோரும் இருந்தனர்.

‘நான் பின்பு சந்திக்கிறேன்’ என காலோசை பார்த்து சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்த போது ‘பிரச்சனையில்லை மிஸ்டர். வந்தவிடயத்தை சொல்லும்’

‘இந்த நாயின் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் விலகி இருக்கிறது. இரண்டு முழங்கால் சில்லில் அதிர்வு இல்லை. உணர்வு இல்லாத விடயத்தை உரிமையாளருக்கு சொல்லவேண்டும். ஆனால் இந்த நாயை தொடர்சியாக பார்த்து, எலும்பு ஒப்பரேசன் செய்தது ரிமதி பாத்தோலியஸ். இந்த விடயத்தை நான் செய்ய விரும்பவில்லை. மேலும் ஒரு வைத்தியர் இதை பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்’.

‘இது ரிமதி செய்த அடுத்த வேலை ரொன்’ என ஒரு அட்காசமான சிரிப்புடன் ஜோசே சொன்ன போது சுந்தரம்பிள்ளைக்கு புரியவில்லை ‘வேறு என்ன வேலை செய்திருக்க முடியும்?’

‘நான் வருட இறுதியில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று பேரப் பிள்ளைகளுடன் செலவிடுவோம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது வரையில் சிலமாதங்கள் நிம்மதியாக கோப்புக்களை பார்த்து காலத்தை கடத்துவதற்கு நினைத்துக்கொண்டிருந்தேன். ஓன்று மாறி ஒன்று என பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.’ என்றார் அந்த செயலாளராகிய ரொன் ஜொஸ்.

அப்பொழுது மேசையில் இருந்த கோப்பு ஒன்றை கையில் தூக்கி ‘இதுதான் எனக்கெதிராக ரிமதியும் ஸ்ரிவனுமாக சேர்ந்து இந்த வைத்தியசாலையில் உள்ள சிலரிடம் இருந்து தயாரித்த கடிதக் கோவை. இதனால்தான் வேலைக்கு சேர்ந்த அன்று எந்த வேலைத்தல அரசியலிலும் தொடர்பு படவேண்டாம் என எச்சரித்தேன்’.

ஏற்கனவே ரிமதியினால் காலோசின் அணிக்கு தள்ளிவிடப்பட்ட விடயம் இவர்களுக்குத் தெரியாது. இந்த நாயின் கருணைக் கொலையின் பின் ரிமதி என்னை எவ்வளவு வெறுப்பான் என்பது மனத்துக்குள் நினைத்துப் பார்த்த போது சிறுவயதில் சுந்தரம்பிள்ளையின் தாத்தா கூறிய ஒரு பழய பாட்டின் சிறுபகுதி நினைவுக்கு வந்தது. ‘வேதியரும் கோழிகளும் வேசியரும் வைத்தியரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள் என்ற கருத்தில் சொல்லியது. இது இக்காலத்தில் இந்த பண்பாடு நாகரீகம் வளர்ந்த மெல்பேன் நகரில் அந்தப் பாட்டின் பொருள் புரிந்தது. விஞ்ஞானம், நாகரீகம் என மனித குலம் எவ்வளவு முன்னேறினாலும் இருந்தாலும் மனிதர்களின் அடிப்படைக்குணங்களான காம, பேத, குரோதங்கள் மாறுவதில்லை.

‘இதை இரண்டு விதமாக செய்யலாம் ரொன். இதில் உப்பு சப்பில்லை என இந்த பெட்டிசனை தூக்கி குப்பைக் கூடையில் போடலாம். அதற்கு உமக்கு அதிகாரமிருக்கு. அதைத்தான் நான் செய்வேன். அப்படி இல்லையென்றால் முகாமைத்துவ கூட்டத்தில் இதை சமர்பித்து அவர்களது முடிவுககு விடலாம். அவர்கள் தேவையெனில் காலோசை அழைத்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ள முடியும்;’ எனக் கூறிவிட்ட ஜோன் லிஸ்மோர் தனது தடித்த மீசையைத் தடவியபடி கதிரையை விட்டு எழுந்தார்.

இப்பொழுது ஜோன் லிஸ்மோர் எந்தப் பக்கம் என சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தது. ஆனால் அறுபத்தைந்து வயதான ரொன் ஜொய் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரது முகமோ உடல் மொழியோ காட்டிக்கொடுக்கவில்லை. அவரது வழுக்கை விழுந்த தலையும் முழுமையாக சவரம் செய்யப்பட்ட முகம் புதிதாக குயவன் ஒருவனால் வனையப்பட்ட பானை போல இருந்தது. அந்த பானை முகத்தில் மூக்கு கண்ணாடி அணிந்து கிறீம் நிற கம்பளி சுவடட்ர் அணிந்திருந்தார். அவரது வயிறு நிறைமாத பெண்ணின் வயிறு போல் இருந்தது மட்டுமல்ல மேலும் கீழும் அசைந்த விதம் அவர் சிரமத்துடன் பிராணவாயுவை தேடுபவராக காட்டியது. இவர் ஓய்வு பெற்றாலும் பலகாலம் பேரக்குழந்தைகளோடு வாழப்போவராக தெரியவில்லை.

‘எனக்கு இன்னும் சிந்திக்க சில நாட்கள் இருக்கின்றன’ எனக் கூறிவிட்டு இப்பொழுதுதான் சுந்தரம்பிள்ளையை பார்த்தார்.

அவரது பார்வை உனக்கு என்ன வேண்டும் என்பது போன்று இருந்தது. இவ்வளவு நேரமும் சுந்தரம்பிள்ளை காலோசிடம் மட்டும் பேசினாலும் அந்த சிறிய அறையில் இருந்தவர்கள் எல்லோருக்கும் பேசிய விடயம் புரிந்திருக்கும். சுந்தரம்பிள்ளை இதை இவருக்கு மீணடும் திரும்ப சொல்லவேண்டுமா என நினைத்துக்கொண்டிருந்த போது ‘இது ரிமதியின் வைத்திய சாகசம். முதுகெலும்பு முறிந்த நாய்க்கு இரண்டு கால்களில் ஐந்து மணி நேரமாக ஆபிரேசன் செய்திருக்கிறார். இதை என்ன செய்வது என இந்த புதிய வைத்தியரான சிவா வந்து என்னிடம் ஆலோசனை கேட்கிறார். இந்த நாயை கருணைக்கொலை செய்வதுதான் ஒரே வழி. ஆனால் இதை நான் செய்யப் போவதில்லை. எனக்கு அடுத்தபடியாக அதிக காலம் இங்கு வேலை செய்யும் மாக்கிரட் ஓடயனிடம் அந்த நாயை மீண்டும் பரிசோதித்து பார்த்து விட்டு மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்ய சொல்லப் போகிறேன்’ என காலோஸ் சேகேரா வெளியேறினார். அவரைத தொடர்ந்து ‘அது நல்லது’ என ஆமோதித்த படி ஜோன் லிஸ்மோர் வெளியேறிய போது அவர்களை பின் தொடர்ந்தான். சுந்தரம்பிள்ளை.

————-

காலோசின் மனத்தில் இன்று பல விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இன்று இரவு நண்பன் ஒருவனின் விருந்துக்கு போக வேண்டும் எனவே விரைவாக வேலையில் இருந்து வரும்படி மனைவியின் கட்டளை நீதிமன்றத்தின் பிடியாணை போல் இருந்தது. இதேவேளையில் இன்று இரவு ஒன்பது மணிக்கு மெல்பேன் விமான நிலயத்தில் பழய தோழி மரியா வந்து இறங்குகிறாள். போத்துக்கல்லில் இருந்து படிக்கும் காலத்தில் நண்பியாக இருந்த மரியா சிலமாதங்கள் மெல்போனில் உள்ள உறவினருடன் தங்கிருக்க வருகிறாள். இன்றைக்கு அவளை பார்க்கவேண்டும். அவளது நினைவுகள் காலேசின் உடலில் புது இரத்தத்தை ஏற்றி கதகதப்பை உண்டாக்கியது. மனதில் அவளது நினைவுகள் பட்டாம்பூச்சியாக சிறகடித்தது. புதினைந்து வருடத்துக்கு முன்பு அவளுடன் லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பழகி தன்னை மறந்து திரிந்தகாலம் வாழ்க்கையின் வசந்தகாலம். எந்த நிபந்தனையில்லாமல் இருந்தது அவளது நட்பு, ஏற்கனவே தீமோரில் காதலியாக இருந்த லுயிசா ஊரில் இருந்து வந்தால் மரியாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மரியாவின் தொடர்பு ஒரு விதமான காட்டாறு போன்ற உடலெங்கும் பாய்ந்து ஓடிய காம உணர்வு. அது திடீர் என நிறுத்தபட்டது, சிறு குழந்தையிடம் காகம் தட்டிப்பறித்த பட்சணமாக நெஞ்சுக்கு நிறைவாக இல்லை. பிரிந்த சில மாத காலத்தில் மரியா ஒரு காலோசின் நண்பனோடு பழகி அவனைத் திருமணம் செய்து கொண்டாள். காலோசும்; லுயிசாவும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள்.

பதினைந்து வருடகாலத்தின் பின் மீண்டும் அவளது குரலை தீடீரென தொலைபேசியில் கேட்டபோது இன்ப அதிர்சியாக இருந்தது. ஏதுவும் சொல்லாமல் ‘நான் மெல்பேனுக்கு வருகிறேன் . என்னை சந்திப்பாயா?’ எனக்கேட்டு விட்டு தான் வரும் திகதியையும் விமான நேரத்தையும் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாள்.

கடந்த சில மாதங்களாக ஸ்ரிவனாலும் ரிமதி பாத்தோலியஸசாலும்; இந்த வைத்தியசாலை நிர்வாகத்துகக்கு ஏற்படும் தொல்லைகள் மிசேலுடன் ஏற்பட்ட விவகாரம் எல்லாவற்றையும் தனது தனியான பிரச்சனையாக எடுத்து ஆத்திரப்பட்டுக்கொண்டிருக்கும் ஜோசேக்கு மரியா வருவது சந்தோசமான மாற்றமாக, மருந்தாக இருந்தது. இந்த மாற்றம் ஓரு வலியால் துடிக்கும் ஒருவனுக்கு வலி நிவாரணமாக இருந்தது. காமத்தை விட கொடிய வியாதி உலகில் இல்லை. ஆனால் காமம் இல்லாத உலகு எவ்வளவு வெறுமையானது என நினைத்த போது, சிறு துணியும் அற்ற நிர்வாணமான தேவதையாக மரியா வந்து பிரித்தானிய நாட்டு விமானத்தில் இறங்குவதாக தெரிந்தது. ஒலிவ் நிறத்தில், இத்தாலிய பளிங்கில் செதுக்கிய உடலுடன், காற்றில் பறக்கும் கரிய கூந்தலுடன் கொஞ்சம் சராசரிக்கு சிறிதான முலைகளை வலது கையாலும் மறைத்தபடி இடது கையால் இடைக்கு கீழ் அம்மணத்தை மறைக்க மறு கையால் போராடி தோற்றபடி வந்து இறந்கி வந்தாள். அவளது யோனியை மறைத்த கரிய கேசங்களை அவளது கைகளால் மறைக்க முடியவில்லை.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு லிஸ்பனினின் அவளோடு நட்பாக இருந்த அந்த சம்மர் காலத்தில் பல தடவை நீச்சலுடை அணிவதற்கு யோனி மயிரொதுக்க சிகையலங்காரத் கடைக்கு அவளை கொண்டு சென்றதும், ஒருநாள் கடற்கரை வீதியில் இருந்த சிறிய மூலைக் கடையில் அவள் பச்சை குத்திக்கொண்ட கொண்ட கருந்தேள், அவளது இடது தொடையில் பளிச்சென்று தெரிந்தது.

‘காலோஸ்’ என சுந்தரம்பிள்ளை தோளில் தட்டினான்;.

‘நல்லதொரு கனவை தொலைக்கப் பண்ணிவிட்டாய். சிலகணத்தில் அவளை அணைத்துக் கொண்டு காற்றிடை நீராவியாக கலந்து கொள்ள தயாராக இருந்தேன். என்ன வேணும்.?’ படபடப்பாக

‘நீ பகல் கனவு காண்கிறாய். அங்கே இந்த முதுகெலும்பு முறிந்த நாயை சாம் றொலியில் வைத்த கொண்டிருக்கிறான். நான் என் செய்ய?’

‘நான் சொன்னதென்று இந்த நாயை பரிசோதிக்க சொல்லி மாரகிரட்டிடம் சொல்லு’

‘அது உமது வேலை. தயவு செய்து மார்கிரட்டிடம் வந்து சொல்லவும்’

‘உன்னோடு பெரிய பிரச்சனை’ என சலித்துக் கொண்டு கூறிக் கொண்டு இருவருமாக அந்த வைத்தியசாலையின் இடது பக்கத்தில் இருந்த பரிசோதனை அறைகளில் முதலாவதாக இருந்த அறைக்கதவை இரண்டு முறை தட்டி விட்டு உள்ளே சென்றனர்.

அந்த அறையின் பரிசோதனை மேசையில் ஒரு ஜேர்மன் செப்பேட் நாய் படுத்திருந்தது. அந்த நாய் மயக்கத்தில் இருந்தது போல் அசைவற்று இருந்தது. இரண்டு கண்களும் அகலமாக திறந்திருந்தது. மேசையின் அருகில் அந்த நாயின் சொந்தக்காரப் பெண் சிரித்தபடி மாக்கிரட், அருகே நின்று கொண்டிருந்தார்

மாரக்கிரட்டை சில முறை எதிர்ப்பட்ட இடங்களில் பார்த்து ஹலோ சொல்லி இருந்தாலும் சுந்தரப்பிள்ளை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. பேசிய ஒரு சில வார்த்தைகளின் தொனியில் இருந்து அயர்லாந்தில் இருந்து வந்த மிருக வைத்தியர் என நினைக்க வைத்தது. வழக்கமாக பெண்கள் சம்பந்தபட்ட விடயங்களை கேட்காமலே அள்ளி வழங்கும் வள்ளலான சாமும் மார்கிரட்டை பற்றி கூறாததால் தெரிந்து கொள்ளும் வாயப்பு இருக்கவில்லை.
மார்கிரட்டை பார்க்கும் போது அந்த வயது பெண்களுக்குரிய எந்த அலங்காரமில்லாமல் டெனிம் பாண்டடிலும், மேல் உடலில் நீல நிறத்தில்; சாதாரண சுவட்டர் அணிந்திருந்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும். தலையை ஒட்ட கிராப் பண்ணியிருந்தாள். பல நரைத்த மயிர்கள் தலையில் தெரிந்தன. எந்த ஒரு ஒப்பனையோ அல்லது பாவனையோ அற்று இருந்தது அவளது தோற்றம்.

‘என்ன காலோஸ்?’ என விளித்தாள்.

‘சிவா ஒரு எக்ரேயை வைத்துக் கொண்டு என்னிடம் அவிப்பிராயம் கேட்கிறார். இந்த நாய் ஏற்கனவே எனது நண்பர் டாக்டர் ரிமதி பாத்தோலியஸால் இரண்டு கால்களையும் ஆப்பிரேசன்; செய்யப்பட்டது. தற்போது இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையில் நான் இதில் தலையிட விரும்பவில்லை. எனக்கு அடுத்தான சீனியர் நீர்தான் மார்கிரட். இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என சொல்லிவிட்டு வெளியேறினான்

‘நான் பார்த்துக் கொள்ளகிறேன். சிவா, சில நிமிடம் அவகாசம் வேண்டும்’ என்றாள்.
சுந்தரம்பிள்ளையை அந்த அறையில் விட்டு விட்டு காலோஸ் வெளியேறினான்
மேசையில் கிடந்த அந்த சிவப்பும் கருப்புமான செப்பேட் நாய்க்கு கழுத்து, இடுப்பு கால்கள், என பல இடங்களில் சிறிய ஊசிகள் குத்தப்பட்டிருந்து. அந்த நாய்க்கு பக்கத்தில் நின்ற ஏஜமானி நாயின் முகத்தை தடவினார். மாக்கிரட் அந்த ஊசிகளை மெதுவாக விரல்களை உருட்டிக் கொண்டு ‘இனனும் சில நிமிடத்தில் ஊசிகளை எடுத்து விடுவேன்’ என்றாள்.
மாக்கிரட் செய்வது அகியுபங்சர் என்ற சீன மருத்துவ முறை என்று சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தாலும் ‘என்ன நோய்காக அக்கியுபங்சர் செய்கிறீர்கள்? என்றான்

‘ஷீபாவுக்கு தற்பொழுது பத்து வயது. இப்பொழுது ஆத்திரையிற்ரிஸ் என்ற முடக்கு வாதம் வந்து விட்டது. முடக்கு வாதத்திற்கு அக்கியுப்ஙசர் குணப்படுத்தும் என்பது எனது அனுபவம்.’

‘எத்தனை முறை செய்யவேண்டு;ம்?’

‘வாரத்துக்கு ஒரு தடவையாக மூன்று வாரம் செய்துவிட்டு அதன் பின் தேவைக்கு ஏற்றபடி செய்தால் போதும்’ எனக் கூறிக்கொண்டு நாயின் இடுப்பிலும் முதுகுப்பகுதிலும் இருந்த ஊசிகளை அகற்றினாள்.

ஊசிகளை அகற்றியதும் ஷீபா உறக்கத்தில் இருநது விழித்தது போல் எழுந்ததும் மார்கிரட்டின் உதவியுடன் மெதுவாக தரையில் இறங்கி மிகவும் நாகரீகமாக தனது ஏஜமானியின் அருகே நின்று, தன்னை சுற்றியுள்ளவர்களைப் பார்த்தது. சுந்தரமூர்த்திக்கு வியப்பாக இருந்தது. இந்த ஷீபாவின் நடை பார்வை பாவனை எல்லாம் பார்பதற்கு மேன்மையாக இருந்தது.

வடஆசியாவில் ஒரு காட்டுப்பகுதிகளில் புதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வேட்டையாடும் மனிதன் தனக்கு வேட்டைக்கு உதவியாக ஓநாயை இனத்தில் இருந்து வந்த காட்டு நாயை வளர்த்து தனது தேவைக்கு மட்டுமல்ல, உற்ற தோழமைக்கும் வளர்த்தான். தொடர்ச்சியான வளர்ப்பும் பயிற்சியும் அவைகளது மரபணுவில் மாற்றத்தை உண்டு பண்ணி, காட்டு மிருகத்துக்கு உரிய தன்மையை இழப்பது மட்டுமல்லாது மனிதர்களின் பல தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப பலவேறு வடிவங்கள், குணங்கள் என புதிய வர்க்கங்கங்களாக உருமாற்றமடைந்துள்ளன. நாய் வர்க்கங்களின் பரிணாம வளர்ச்சி மனிதர்களின் படைப்புத்திறனுக்கு மகத்தான சாட்சியம்.

ஆவலை அடக்கமுடியாமல் ‘ஷீபாவை யார் பயிற்சி கொடுத்தது?’

‘ஷீபா விக்ரோரிய பொலிசில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு மூட்டுவாதம் காரணமாக இரண்டு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றது. அப்பொழுது நான் தத்தெடுத்தேன்’ என்றார் அந்தப் பெண்.

நோய் வந்த நாயை தத்தெடுத்து அதற்கு வைத்தியம செய்யும் அந்த பெண்ணை ‘மிகவும் நல்ல வேலை செய்கிறீர்கள்’’ என பாராட்டியபோது அந்தப் பெண் ‘எனது அதிஸ்டம் ஷீபா கிடைத்தது. இதற்கு முன்பு மூன்று ஜேர்மன் செப்பேட் நாய்களை வளர்த்தேன். ஆனாலும் அவையொன்றும் ஷீபாவுக்கு அருகில் வரமாட்டா’ என கூறிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

‘சிவா எக்ரேயை பார்போம் ‘என வாங்கி பார்த்து விட்டு உதட்டை பிதுக்கிய படி சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் பேசாது அந்த அறையின் பின் கதவை திறந்து கொண்டு பார்மசி வழியே வெளியே சென்ற மார்கிரட் வெகு வேகமாக சுந்தரம்பிள்ளையிடம்; எதுவும் பேசாமல் பரக்க பரக்க அந்த கொரிடோரால் நடந்தார். நடக்கும் போது ஏதோ சில வார்தைகள் அவரது உதட்டை விட்டு வெளிவந்த போதும் அவை காற்றில் கலந்துவிட்டன. அந்த அயர்லர்து ஆங்கிலம் பின்தொடரும் சுந்தரம்பிள்ளைக்கு புரியவில்லை. நேர் எதிரே நின்று பேசும் போது உதடுகளின் அசைவை வார்ததைகளுடன் இணைத்து புரிந்து கொள்ளமுடியும். பின்னால் தொடரும்போது அது முடியாது.

இருவரும் நாய்க்கூட்டை அடைந்ததும் மார்கிரட் சாமின் உதவியுடன் அந்த நாயின் பின்னங்கால்களை கால்களை தட்டியும் அழுத்தியும் பரிசோதிதது விட்டு ‘இது உண்மையில்; பெரிய முட்டாள்தனம். சாம், உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு தா’ எனக் கூறினாள்.

‘இந்த நாயை அவசரப்பட்டு ஆபரேசன் செய்தது தவறு. நாலு நாட்கள் வீணாக இந்த நாய் வேதனையடைந்திருக்கிறது. உடனடியாக கருணைக்கொலை செய்திருக்க வேண்டும்’ என்ற போது உரிமையாளரின் தொடர்பை சாம் ஏற்படுத்தி கொடுத்தான்

‘மிஸ்டர் தொம்சன் உங்களது நாய்க்கு முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கால்களை ஆபரேசன் செய்தும் பிரயோசனம் இல்லை. எங்களுக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுக்கவேண்டும் என சொல்லி அந்த அனுமதியை பெற்று விட்டு அந்த நாய்குரிய கோப்பில் அதை எழுதி கையெழுத்து வைத்த விட்டு ‘சிவா நீங்களே அதை செய்யுங்கள்’ என சொல்லிட்டு சென்றாள்.

மார்கிரட் சென்ற அந்த கதவு வழியால் நுழைந்த கொலிவூட் உடலை நீட்டி வில்லாக வளைத்து வாலை கொடிக்கம்பம்போல் நேராக்கி தினவெடுத்து விட்டு ‘தம்பியின் கதை கந்தல். ரிமதி கடித்து குதறப் போகிறான்’ என்றது. அதை பொருட்படுத்தாமல் சுந்தரம்பிள்ளை தனது வேலையில் ஈடுபட்டு அந்த நாயின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

ஏற்கனவே போர் பிரகடனப்படுத்தப்படடிருப்பதால் தவிர்க்க முடியாது. இந்த விடத்தில் அவமானப்படும் ரிமதியின் ஆத்திரத்துக்கு ஆளாவது நிட்சயமானது. இதை கொலிங்வூட் சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை.


அத்தியாயம் 11

நோயல் நடேசன்டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல.

இந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.அவர் திறமையானவாராகவும் இருக்கவேண்டும். குருஷேத்திரத்தில் தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார். அதேபோல இங்கு தளபதி பொறுப்பு வைத்தியசாலையியில் நேர்சாக பல வருடங்களாக வேலை செய்யும் ரீவன் ஸ்ரெயின் மேல் சுமத்தப்பட்டது. ரீவன், டாக்டர் காலோசை வெறுக்கும் ஒருவன். அத்தோடு இப்படியான வேலையை விரும்பி செய்பவன். அவனுக்கு தொழில் சங்க பிரதிநிதியாக அந்த வைத்தியசாலையில் வேலை செய்வது வசதியாகி இருந்தது. பலரை சந்தித்து காலோஸ் சேரத்தின் தவறுகளை சொல்லி அவரை இந்த வேலையில் இருந்து விலக்குது இந்த வைத்திய சாலையின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது எனவும் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் காலோஸ் மீது இல்லை என அழகாக பேசி இந்த கழுத்தறுப்பு வேலையை முன்னெடுத்தான். மற்றவர்களை போல் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவராக ரீவன் தன்னை காட்டிக் கொள்வதில்லை. சிறுவயதில் வைத்தியசாலையில் சேர்ந்து வேலை செய்வதுடன் ஒருவிதமான ஆத்மார்த்த உறவுடன் வேலை செய்யும் ரீவனை தனிப்பட்ட ரீதியில் வெறுப்பவர்கள் கூட வேலையில் குறை சொல்ல துணியமாட்டார்கள். இந்த வைத்தியசாலையில் அவன் வைத்துள்ள விசுவாசமே அவனுக்கு காலோஸ் மேல் அளவு கடந்த வெறுப்பை உருவாக்கியது.

ரீவன் பதினேளு வயதிலே இந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்து இப்பொழுது பதினெடடு வருடமாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறான்.. வைத்தியசாலையில் அதிக காலம் வேலை செய்யும் ரீவன் ஒரு யூத இனத்தை சேர்ந்தவன். அவனுக்கு ஆபரேசன் உபகரணங்கள் மற்றும் எக்ரே மெசினுகளை பற்றி சங்கதிகள் தலை கீழாக தெரியும். எந்த உபகரணம் வேலை செய்யாத போது எல்லோருக்கும் ரீவனது தேவை ஏற்படும். முக்கியமாக இளம் பெண் வைத்தியர்களுக்கு ஆரம்ப காலத்தில் உபகரணங்களால் சங்கடங்கள் ஏற்படும் போது அவனது உதவி தேவைப்படும்.

ரீவன் தொழில்நுட்ப அறிவுடன் அனுபவத்தாலும் பல வைத்திய விடயங்களை அறிந்து வைத்திருப்பதால் லைசென்ஸ் பெறாத மிருக வைத்தியரைப் போல தொழில்ப்பட்டான். இந்த விடயங்களால் காலோஸ்சுக்கும் சாமுக்கும் ரீவனைக் கண்ணிலே காட்டமுடியாமல் இருந்தது. இதை விட சாம் ஒரு இஸ்லாமியன். காலோஸ் ஒரு தீவிர கத்தோலிக்க மதத்தையும் போப்பையும் ஆதரிப்பவன். இப்படி இவர்கள் வெறுப்பில் மத வேறுபாடும் இருக்கலாம் என சுந்தரம்பிள்ளையால் ஊகிக்க முடிந்தது.

மத வேறுபாடுகள் பெரிதாக தலைகாட்டாத இடம் இந்த வைத்தியசாலை. ஆனாலும் இந்த விடயங்கள் கண்களுக்கு தெரியாத போதும் காற்றுப்போல் மத வெறுப்புகள் இருப்பதை பேச்சுகளில் உணர முடிந்தது.

ஒரு நாள் காலோஸ் சுந்தரம்பிள்ளையிடம் ‘நான் மிருக வைத்தியராக வந்திருக்காவிட்டால் கத்தோலிக்க மத குருவாக வந்திருப்பேன’ என்றான்.

அதைக்கேட்டக் கொண்டிருந்த அண்ரு ‘நல்ல வேளை கத்தோலிக்க மதம் தப்பியது’ என்றான்.

‘இப்பொழுது மட்டும் நல்ல நிலையிலா இருக்கிறது. நேற்றுக் கூட அவுஸ்திரேலிய ஆதிவாசிக் குழந்தைகளை பல வருடங்களுக்கு முன் செமினறிகளில் வைத்து கல்வி புகட்டும் போது அவர்கள் மீது பாலுறவு வன்செயல் புரிந்ததாக செய்தி வந்துள்ளதே’ என சுந்தரம்பிள்ளை கூறிய போது அந்த இடத்தில் காலோஸ் இருக்கவில்லை.

மீண்டும் சுந்தரம்பிள்ளை ‘சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால் சமுகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை அவர்களிடம் கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்க வேண்டும் என எதிர்பார்கிறது. இந்த எதிர்பார்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மத பீடங்கள் நீருபித்த வண்ணம் இருக்கின்றன. என்றான்

‘சிவா நீ மதங்களை வெறுப்பவனா? என்றான் அண்ரு.

‘மதங்கள் மனிதர்களின் மனச்சாட்சியாலும் கனவுகள் மற்றும் இறப்பின் பயத்தால் உருவாகிய ஆன்மீக சிந்தனையின் விளைவாக உருவாகினவை. இந்த சிந்தனை ஒரு பரிணாம வளர்சியாகிறது. மதங்கள் இந்த ஆன்மீக வளர்சியில் தொற்றிய நோய்க்கிருமி போல் சீவிக்கின்றன. அதைக்கூட மனிதர்கள் சக்கரைவியாதி இரத்த அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்வது போல் சகித்துக்கொள்ளமுடியும். இதில் விருப்போ வெறுப்போ எனக்கு இல்லை. ஆனால் மதத்தின் பேரால் காலம்காலமாக நடக்கும் கொடுமைகள் சகிக்கமுடியாதவை.’

‘உண்மையயான வார்த்தைகள். ஆனால் இதைக் கேட்க காலோஸ் இந்த இடத்தில் இல்லை என்பதுதான எனது கவலை என்றான்.’

சுந்தரம்பிள்ளைக்கு ரீவனை சந்தித்த போது விரும்பவோ வெறுப்பதற்கோ மனம் வரவில்லை.காரணம் அது சுந்தரம்பிள்ளையின் இயல்பில்லை. அத்துடன் முதலாவதாக சந்தித்ததும் ~ நீங்கள் தான் புது வைத்தியார? உங்கள் வரவு நல்வரவாகுக எனக் கூறி இறுக்கமாக கையை குலுக்கினான். மெலிந்த தோற்றம் , கலைந்த தலை ,கூர்மூக்கு கொண்டு இடது காதில் காதில் பெரிய வெள்ளி வளையமும் அணிந்து இருந்தான். இடுங்கிய கண்கள், ஒட்டிய கன்னங்கள் ஆனால் தீர்க்கமான பார்வையுடன் அவனை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தியது.பெரும்பாலான நேரத்தில் கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்.
ரீவன் பெரும்பாலும் இரவு வேளைகளில் வேலை செய்வதால் அவனை கிழமைக்கு சில தடவைகள் மட்டுமே சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. காலோஸ் சம்பந்தமான விடயத்தில் ரீவன் சுந்தரம்பிள்ளையை அணுகவில்லை.
—-

மாதத்தில் முதலாவது செவ்வாய்கிழமை காலை நேரத்தில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் மத்திய வங்கி கூட்டம்கூடி நாட்டின் பணப்புளக்கம், வட்டி வீதம் சம்பந்தமான கொள்கைளை மறு பரிசீலனை செய்யும். அந்த கூட்டம் முடிவதற்கு நண்பகல் இரண்டு மணியாகும். நாட்டில் உள்ள சகல தொலைக்காட்சி வானெலி பத்திரிகைகள் அந்த கூட்டத்தின் முடிவுகளை மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள். இந்த கூட்ட குறிப்புகளில் இருந்து நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் மாதாமாதம் ஏற்படும் மாற்றங்கள் நாட்டில், வழங்கப்படும் வட்டிவிகிதம், மற்றும் நுகர் பொருட்களின் விலையேற்றம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து சாதாரணமக்கள் வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. சராசரி அவுஸ்திரேலியன் இந்த செவ்வாய்க்கிழமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறானே இல்லையோ இந்த நாள் அவனது தலைவிதியை நிர்ணயிக்கும் நாளாகும்.

மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை இன்னெரு கூட்டம் ஒன்று மெல்பேனில் இந்த வைத்திய சாலையின் மீட்டிங் அறையில் நண்பகல் இரண்டு மணிக்கு தொடங்கும். மத்திய வங்கி கூட்டம் போல் முக்கியத்துவம் இல்லாத போதும் இந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைத்திய சாலையின் நிர்வாக குழு இரண்டு மணி நேரம் கூடி எடுக்கும் முடிவுகள் முக்கியமானது.

மேல்பேனின் கிழக்கு புறநகர்களில் வாழும் வசதி படைத்தவர்களில் அறுபத்தைந்து வயதுக்கு மேல் வேலைகளில் இருந்து ஓய்வு எடுத்தவர்கள் இந்த நிர்வாக குழுவில் அங்கத்தினராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் முதுமையால் நடக்க முடியாத போதும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பெண்கள் பெரும்பாலானவர்கள் உயர்ந்த தோற்றம் அளிக்க உயர்ந்த குதியோடு கூடிய பாத அணியுடன் சிறிதளவு கூனியபடி முழங்காலுக்கு கீழே வரையும் மறைக்க மேற்சட்டை அணிந்திருப்பார்கள். கடும் சிவப்பான உதட்டுசாயமும் மூக்கு கண்ணாடியும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். அவர்களின் சராசரி வயது எழுபத்தைந்து இருக்கும். சுருக்கமாக சொன்னால் அகதா கிரிஸ்டியின் கதைகளில் வரும் மிஸ் மாப்பிள் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு தகுதியை பெற்றிருப்பார்கள். பெரிய தொகையை இந்த வைத்தியசாலைக்கு அளித்தவர்களாக இருப்பார்கள்.

இந்த செவ்வாய்கிழமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் வழக்கமான நிர்வாகம் சம்பந்தமான விடயங்களோடு தலைமை வைத்தியரைப் பற்றிய புகார் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என்ற விடயம் அங்கு வேலை செய்வோர் எல்லோரிடமும் செய்தியாக பரவியிருந்தது. எப்படி இப்படியான விடயங்கள் வெளித் தெரிகின்றன என்பது புதிரானது.

புகார் செய்தவர்களே இந்த பரப்புரைகளையும் செய்திருக்க வேண்டும் என நினைப்பதற்கு காரணம் உண்டு. ஒருவனை தண்டிப்பதற்கு முன்பு அவனை துர்நடத்தையை வெளிப்படுத்தி அவன் மற்றவர்கள் மத்தியில் தண்டனைக்கு உரியவன் என்ற கருத்தை உருவாக்கிய பின்புதான் தண்டனை வழங்கவேண்டும் என்பது மிகப் புராதனமான கருத்தியல். ஏதோ காரணத்தால் அவன் தண்டனையில் இருந்து நிரபராதி என தப்பித்தாலும் கூட இந்த பிரசாரம் அவனுக்கு பாதிப்பை அளித்துவிடும். இந்தப் பாதிப்பால் தன்னம்பிக்கை, சுற்றத்தின நம்பிக்கையை இழந்து விடுகிறான். இந்த நம்பிக்கையில் காலோஸ்சுக்கு எதிரான புகார் விடயத்தையும் புகார் கொடுத்தவர்கள் வெளியில் கசிய விட்டிருப்பார்கள்.

அந்த செவ்வாய்கிழமை காலை பத்து மணியளவில் வழக்கம் போல் இரண்டாவது ஆலோசனை அறையில் ஒரு லபிரடோர் நாயை பரிசோதித்துக் கொண்டு சுந்தரம்பிள்ளை இருக்கும் போது திடீர் என பின்பக்க கதவால் கொலிங்வூட் உள்ளே வந்தது.

லாபடோரின் கழுத்தில் வேறு ஒரு நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்தை கழுவுவதற்கு மட்டுமே தேவையாக சிறிதளவு மயக்கமருந்து கொடுத்து விட்டு, காயத்தை கழுவிக் கொண்டிருந்த போது அந்த நாய் அசையாமல் கண்களை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அரை மயக்கத்தில் இருந்த லாபிரடோர் கொலிங்வுட்டைக் கண்டதும் உடனே தலையை உயர்த்தி குரைத்தது. ஆனால் மயக்க மருந்தால் கால்களை நிமிர்த்தி எழும்ப முடியவில்லை.

எல்லோரிடமும் நட்புடன் வாலையாட்டியபடி வளைய வரும் இந்த லபிரடோர் நாய்களுக்கு ஏன்தான் பூனைகளை தங்கள் ஜன்ம விரோதிகளாக நினைக்கின்றன?.

‘கொலிம்வூட் வெளியே போ’ என்று துரத்திய போது கொலிங்வூட் வந்து சுந்தரம்பிள்ளையின் காலை பிராண்டியபடி ‘உடனே வா . இது எமேர்ஜன்சி’

‘நான் மயக்கமடைந்த நாயை விட்டு விட்டு வரமுடியாது. உன்னை மாதிரி ஓசியில் சாப்பிடுபவன் அல்ல. வேலை செய்ய வேண்டும்’.

இந்த மாதிரி சுந்தரம்பிள்ளை பூனையுடன் பேசுவதை பாரத்து வியப்புடன் சிரித்தபடி நின்றாள் அந்த லப்பிரடோரின் பெண் உரிமையாளர். லப்பிரடோர் அரைமயக்கத்தில் இன்னும் இருமுறை வைவ் வைவ் என்றது. கோலிங்வுட் விடுவதாக இல்லை. முன் இரண்டு கால்களையும் பாவித்து சுந்தரமூர்த்தியின் பாண்ட்டை இழுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்சியாக வேலையை செய்த போது கொலிங்வூட் இப்பொழுது நகத்தால் காலை பிராண்டியதால் நகங்கள் கால்களில் கீறத் தொடங்கியது. என்ன என்றுதான் என சென்று பார்ப்போம் என நினைத்து அந்த உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே வந்த சுந்தரம்பிள்ளை கொலின்வூட்டை பின்பற்றி பல் வைத்திய அறைக்கு சென்றபோது அங்கு கண்ட காட்சி சுந்தரம்பிள்ளையை அதிர வைத்தது.

அந்த சிறிய அறையில் பல் வைத்திய உபகரணங்கள் ,மேசை, காஸ் சிலண்டர் என்பன வைக்கப்பட்டிருப்பதால் அதிக இடம் இல்லை. திறந்த கதவின் உள்மூலையில் மட்டும் இரண்டு பேர் நிற்க இடம் உள்ளது. அந்த மூலைக்குள் கொலிங்வூட் பாய்ந்து சென்றது. அங்கு சுந்தரம்பிள்ளை கண்களைத் திரும்பிய போது சாம் வலது கையின் இரண்டு கைவிரல்கள் ரீவனது இடது காதில் அணிந்துள்ள பெரிய வெள்ளி வளையத்துக்குள் கொக்கியபடி இருந்தன. சாமின் கையை பிடித்தபடி அழாக்குறையாக ரீவன் விடும்படி மன்றாடினான். கோலின்வூட்டுக்கு பின்னால் சென்ற சுந்தரம்பிள்ளையை இருவரும் எதிர்பார்கவில்லை.

‘சாம் தயவு செய்து ரீவனை விட்டு விடு’

‘இந்த பாஸ்ரட்டுக்கு என்ன துணிவு இருந்தால் என்னை காலோஸ்சுக்கு எதிராக கையெழுத்து கேட்பான்.’ என்று விரல்களை எடுக்காமல் கேட்டான்.

நல்லவேளையாக வேறு ஒருவரும் அந்த நிகழ்சியை பார்க்க முடியாத மறைவான மூலையாக இருந்தது.

‘தயவு செய்து விரல்களை எடு சாம்’ என்று மீண்டும் கடுமையான குரலில் கூறிய போது சாம் விரல்களை எடுத்தான்

‘ரீவன் நீங்கள் போகலாம் என்ற சுந்தரம்பிள்ளைக்கு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனது முகம் இரத்த சிவப்பில் இருந்தது. அது கோவத்தில்லோ அல்லது அவமானத்திலோ அல்லது இரண்டாலும் இருக்கலாம்..

‘ஏன் இப்படி செய்தாய். ரீவன் காது பிய்ந்திருந்தால் வீண் பிரச்சனையாகி இருக்கும்.’

‘பயப்பட வேண்டாம் நான் வெருட்டவே அப்படி செய்தேன். என்னை கொரிடோரில் வைத்து கடிதத்தில் கையெழுத்து வைக்கும்படி கேட்ட போது மெதுவாக உள்ள வர சொல்லி விட்டுத்தான் செய்தேன் ஆனால் இந்த சம்பவம் எப்படி உங்களுக்கு தெரியும்?’

சாமின் சிரிப்பில் ஒரு சாதனையாளன் மற்றும் திருடன் என ஐம்பது வீதம் கலந்து இருந்தது,

‘இதோ இந்த கொலிஙவூட் தான் எமேர்ஜன்சி என என்னைக் கூப்பிட்டது.’

‘பிளடி கொலிங்வூட’

‘நீ கொலிங்வுட்டுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டி இருப்பாய். நான் மயக்கமடைந்த நாயின் புண்ணை சுத்தப்படித்திக் கொண்டிருந்தேன். கொலிங்வுட் நகத்தால் பிராண்டி அழைத்ததால் நான் அரைவாசியில் வந்தேன்.’

—–

நண்பகல் இரண்டு மணிக்கு முன்பாக சகல குழு அங்கத்தினரும் வந்து விட்டனர். செயல் குழு அங்கத்தவர்கள் வந்ததும் சடங்கு சம்பிரதாயம் போல் சில வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆண்கள் பலர் வைத்தியசாலையை சுற்றிப் பார்ப்பார்கள். கூட்டில் அடைக்கப்பட்டு அனாதையாக எத்தனை நாய்கள் பூனைகள் புது உரிமையாளருக்காக காத்திருக்கிறது என்பதை அறிவது அவர்களுக்கு முக்கியமான ஒரு விடயமாக இருக்கும்.

மெல்பேனில் பல காரணங்களால் பராமரிக்க முடியாத மற்றும் வீடுகளில் இருந்து தப்பியோடும் நாய்களும் பூனைகளும் இங்கே கொண்டு வரப்படும். அவை விக்டோரிய மாநில சட்டத்துக்கேற்ப ஒரு கிழமை வைத்து பாராமரிக்கப்படும். இதில் நோய் உற்றவை, வயதானவை, மூர்க்க குணம் உள்ளவை ஏழு நாட்களின் பின் கருணைக்கொலை செய்யப்படும். மற்றவையை சுவீகாரத்துக்காக இங்கே கூடுகளில் இருக்கும். இவைகளின் எண்ணிக்கை காலத்துக்கு காலம் வேறுபடும். மார்கழி, தை போன்ற விடுமுறை மாதங்களில் எண்ணிக்கை கூடிவிடும். அஸ்திரேலியாவில் விடுமுறைகாலத்தில் உரிமையாளர்கள் விடுமுறைக்கு போவதால் இப்படியான வீடுகளை விட்டு தங்களுக்கும் சுதந்திரமான விடுமுறையை நாடி ஓடிய நாய்கள், பூனைகள் தெருக்களில் ஓடும் வாகனங்களுக்கு உயிர் தப்பும் போது இங்கு கொண்டு வரப்படும். ஆண்விலங்குகளும் பெண்விலங்குகளும் மனிதர்களின் எல்லைகளையும் கட்டுப்பாடுகளை மீறும் இனப்பெருக்க காலத்திலும் இந்த வைத்தியசாலையின் அவைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.

செயற்குழு அங்கத்தினரான திருமதி கிளிபேட் பூனைகளை விரும்புவர். அவர் பூனைகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்று சிலவற்றை எடுத்து மார்போடு அணைத்து முத்தம் கொடுத்து அவர்களோடு கலந்துரையாடல் செய்வார். இவரது அன்புத் தொல்லையை பல பூனைகள் விரும்பினாலும் சில விரும்புவது இல்லை. கூட்டில் தங்களது சுதந்திரத்தை தொலைத்து விட்டு சிறையில் இருப்பது போன்ற மனஅழுத்தத்தில் இருப்பவை. இப்படியான அணைப்புகளை விரும்பாததால் சீறுவதும், கீறுவதும் ஆக புரட்சியில் ஈடுபடும். திருமதி கிளிபேட் பல முறை நகங்களாலும் பற்களாலும் கீறப்பட்டு, கடிக்கப்பட்டு இரத்த காயமடைந்துள்ளார். இதற்காக பூனைப்பகுதில் வேலை செய்யும் ஹெதரும், மோரினும் செவ்வாய்க்கிழமை காலையிலே பூனைக் கூட்டில் எச்சரிக்கையாக அணைப்புகளை விரும்பாத பூனைகளை அடையாளம் கண்டு அவைகள் இருக்கும் கூடுகளில் ‘இவைகளை தொடவேண்டாம்’ என எழுதிப் போட்டுவிடுவார்கள். இந்த செய்கையால் திருமதி களிபேட்டின் காயங்கள் குறைந்தாலும் முற்றாக தடை செய்ய முடிவதில்லை.. ஹெதருக்கம் மோரினுக்கு சாதுவாக காட்சியளித்து விட்டு திருமதி கிளிபேட்டை மட்டும் வெறுக்கும் பூனைகள் இந்த மெல்பேனில் இருக்கத்தான் செய்கின்றன.

பூனைகள் நாய்களோடு ஒப்பிடும்போது விசித்திரமான குணம் உடையவை. தங்களுக்கு உணவு தேவைப்பட்தால் மனிதனைத் தேடி வந்து வீட்டு மிருகமானவை. அவைகளின் சரித்திரம் நாய்களில் இருந்து வேறுபடுகிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்ப மனிதர்கள் வேட்டையாடுவதிலும், காய்கனிகளை தேடுவதிலும் சலிப்படைந்ததாலோ இல்லை பற்றாக்குறை நிலவியதாலோ விவசாயத்தின் மூலம் உணவைப் பயிரிட்டான். அடுத்த வருடத்திற்கு உபரி தானியங்களை மீண்டும் விதைத்து பயிர் வளர்த்தான்.

மேற்காசியா எனப்படும் தற்போது ஈராக் மற்றும் சிரியா என்ற பகுதிகளில் முதல் முறையாக உணவை பயிரிட்ட நிலப்பண்பாடு கொண்ட மனித குலம் வாழ்ந்தது. உணவு தானிய உற்பத்தியாக கோதுமை அங்கேதான் பயிரிடப்பட்டது.

மனிதர்கள் மிருகங்களை காட்டில் தேடிப் போய் பிடித்து தமது தேவைக்காக வீட்டில் ஆடு, மாடு, குதிரை என வேறு காலகட்டத்தில் வளர்த்தார்கள். ஆனால் பூனைகள் உணவுக்காக மனிதர்களை நாடிவந்து வீட்டு மிருகங்களாகின. இன்றும் தனது உணவு நேரம் வரும்போது மனிதர்களின் கால்களில் உராய்ந்து உணவு கேட்டு அருந்தி விட்டு தன்பாட்டிலே போய்க் கொண்டிருக்க பூனைகளின் சந்தர்ப்பவாதமான குணத்தில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் சிறிதளவாவது மாற்றமில்லை.

தானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அதில் தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து எதிர்காலத்துக்காக வைத்த போது அதை நாடி வந்த எலிகளைத் உணவாக உண்ண தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு வீட்டுப் பெண்களின் செல்லப்பிராணியாகி தங்களையும் வீட்டு மிருகமாக்கி கொண்டன. வயலுக்கு விவசாயத்துக்கு ஆணுடன் போகாத பெண்களுக்கு துணையாக இருந்தன.

திருமதி கிளிபேட் பூனைகளின் மேல் கரிசனையுடன் இருப்பதுபோல் திருமதி ரிச்சாட் நாய்களின் இரசிகை. அவர் குறைந்த பட்சம் செயற்குழுக் கூட்டத்திற்கு அரைமணிக்கு முன்பாக வந்து ஒரு நாயையாவது சங்கிலியில் கட்டி தெருவால் பதினைந்து நிமிடமாவது நடந்த பின்பு தான் அவரது பொச்சம் தீரும். அப்படி ஒன்றை நடத்தி கொண்டு போகும் போது அந்த நாய்க்கு கழுத்தில் ஒரு ஸ்காவ் போன்ற துணியை கட்டி அலங்கரித்தபடிதான் வெளியே தெருவுக்கு கொண்டு செல்லுவது வழக்கம் அவரது இந்த செய்கையை பலருக்க சிரிப்பை உண்டாக்கும். ஆனால் அவர் இதை பற்றி சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

திருமதி ஓச்சட் டாகடர் காலோஸ் சேரத்திடம் தனது ரொய் ஸ்னுசர் நாயை கொண்டு வந்து ஒவ்வொரு மாதமும் வைத்திய ஆலோசனை கேட்பார் அவரை பொறுத்தவரை டாக்டர் சேரம் மடடும்தான் மிருகவைத்தியம் தெரிந்தவர் அவருக்காக பல நிமிட நேரம் காத்திருந்து ஆலோசனை பெறுவார். வைத்திய சாலையில் உள்ள மற்றவர்கள் எழுபத்தைந்து வயதான திருமதி ஓச்சட்டுக்கும் நாற்பது வயதான டாக்டர் சேகரத்திற்கும் ஆத்மரீதிதான காதல் உள்ளதாக தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

அன்று நடந்த நிர்வாக குழு கூட்த்தில் இளைப்பாறிய அக்கவுண்டன்ட் திரு லோட்டன் தலைமை தாங்கினார். வழக்கமான அன்றாட விடயங்களோடு புதிய விடயமாக வைத்தியசாலைக்கு பக்கத்தில் உள்ள ரயர் கடையிருக்கும் நிலம் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் அதை வாங்கினால் பழய வைத்தியசாலையை இடித்து விட்டு புதிய வைத்தியசாலையை கட்டலாம் என்ற விடயம் எடுத்துக்கொளளப்பட்டது. அறுபது வருடமாக இருந்த பாரம்பரியமான கட்டியத்தை இடிப்பதற்கு பலருக்கு உடன்படு இல்லை. பல செயற்குழு மீட்டிங்கில் இந்த விடயம் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. ஆனால் பக்கத்து நிலத்தை வாங்குவதில் ஒருவருக்கும் எதிர் கருத்து இருக்கவில்லை.

ஒரு மணி நேரமாக இந்த விடயம் அலசி ஆராயப்பட்டது. இதன் பின்பு இந்த வைத்தியசாலைக்கு டொனேசன் கொடுப்பவர்களுக்கு வருமானவரி விலக்கு எடுப்பதும் மற்றய அரைமணி நேரம் பேசப்பட்டது. இந்த விடயம் இலகுவானது அல்ல. அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கமே இந்த வரிவிலக்கு விடயத்தை தீர்மானிக்க முடியும். காலம் காலமாக மனிதர்களுக்கு தொண்டாற்றும் நிறுவனங்களுக்கே இந்த வரிவிலக்கு உள்ளது. இந்த வழக்கத்தை மாற்றி சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த பாராளமன்ற அங்த்தவர்கள் பலரிடம் பேசவேண்டும். இதற்கு ஒரு செயற்குழு அமைத்து செயற்படவேண்டும் என முடிவு எடுக்கப்பட்து.

தொடர்ச்சியாக நடந்த மீட்டிங்கில் பலர் களைத்து போய்விட்டார்கள். திருமதி ஒச்சாட்டுக்கு இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் மூச்சு வாங்கும் . சிலர் மட்டும் கேக்குகளை உண்ணும் போது பலர் அவற்றை தொடவில்லை. அவர்களுக்கு சக்கரை வியாதி இருக்கலாம். தேநீரை அருந்த தொடங்கும் போது ‘இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. அதை பற்றியும் பேசவேண்டும் என ஆரம்பித்தார். செயலாளர் ரொன் ஜோஸ். அவரது தோல்பையில் இருந்து ஒரு கோப்பு உருவி வெளியே எடுக்கப்பட்டது.

‘என்ன? என விளித்தார் லோட்டன்

‘டாக்டர் சேரத்திற்க்கு எதிராக புகார் வந்திருக்கு’

‘என்ன மாதிரியான புகார்’மீணடும் லோட்டன்

‘பெண்களை இழிவாக நடத்துவதாகவும் பெண்களை துன்புறுத்துவதாகவும் இதில் எழுதப்பட்டிருக்கு.

‘யார் இதை கையெழுத்து இட்டு இருக்கு?’

‘இதில் பெண்கள் சிலர் கையெழுத்திட்ருக்கிறரர்கள்.அத்துடன் ரீவன் ஸ்ரெயின் டாகட்ர் ரிமதி பத்தோலியஸ் கையெழுத்துதுப் போட்டிருக்கிறார்கள்.’

‘இது ஒரு குப்பை. டாக்டர் காலோஸ் சேரத்தை எனக்கு நன்றாக தெரியும். பதினைந்து வருடங்களாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறார். அவர் இப்படி எதுவும் செய்யப்கூடிய மனிதரில்லை’ எனக் கூறிவிட்டு திருமதி ஓச்சட் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்..

அவரது வாதத்தை பெரும்பாலான பெண் அங்கத்தினர் ஆமோதித்து தலையாட்டினார்கள் திரு லோட்டன் சிறிது சிந்தித்து விட்டு ‘இதைப்பற்றி காலோஸ்சிடம் கேட்டீர்களா?

‘கேட்டேன். அப்பொழுது அவர் இது ரிமதியும் ரீவனும் தனிப்பட்ட விரோதத்தால் தனக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்றார்.’

‘நாங்களும் காலோஸ்யை அழைத்து கேட்டால் இதே போல்தான் பதில் வரும். மேலும் இந்த குற்றசாட்டுகளில் எதுவும் பிரத்தியேகமாக எவராலும் வைக்கப்படாமல் பொதுவானதாக இருப்பதால் இதை இப்படியே விடுவது தான் நல்லது’ என்று லோட்டன் விளக்கியபோது எல்லோரும் ஆமோதித்தார்கள.;

‘பத்துவருடங்கள் தலைமை வைத்தியராக எந்த பிரச்சனையும் இல்லாது இந்த வைத்தியசாலையை ஒழுங்காக நடத்தும் ஒருவரை நாங்கள் கௌரவிக்க விட்டாலும் அவமானப்படுத்தக் கூடாது’ என்று திருமதி ஓக்சட் சொல்லியபோது அதுவே அந்த நிர்வாக குழுவின் கடைசி வார்தையாக இருந்து.

ரொன் ஜொஸ் முகத்தில் சிறிது ஏமாற்றம் நிழல் ஆடியது. காலோஸ்யை குறைந்த பட்சம் நிர்வாக குழுக்கூட்டத்தில் விசாரித்திருக்கலாம் என்பது அவரது அபிப்பிராயமாக இருந்துது. இதே நேரத்தில் ஓய்வுபெற சில மாதங்களே இருக்கும் போது தனது அபிபிரயத்தை வெளிக்காட்டி அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென்பதால் இது விடயததில் மேலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் அவர் தயாரில்லை


 

அத்தியாயம் 12

நோயல் நடேசன்அமரிக்காவில் மேற்குப் பகுதில் உள்ள கலிபோனியாவில் ஒரு கிழமையாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ அவுஸ்திரேலிய தொலைகாட்சியில் மணிக்கொரு தடவை விபரமாக காட்டப்படுகிறது.அமரிக்கா நட்பு நாடு என்பதாலா? உண்மைதான். ஆனால் அதை விட இருநூறு அவுஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயை அணைக்க உதவி செய்வதற்கு தொண்டர்களாக அமரிக்கர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணமாகும்.  அவுஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்ரஸ் காடுகளில் கோடைகாலத்தில் திடீர் என ஏற்படும் காட்டுத்தீ மிகப் பயங்கரமானவை. பெற்ரோல் நிரம்பியுள்ள டாங்கரில் நெருப்பு பற்றியது போல் ஆரம்பித்து ,அந்த நெருப்பு உருண்டையான தீ பிளம்புகளாக பல கிலோ மீட்டர் வேகத்தில் வெடித்துக் கொண்டு வேகமாக செல்லும் இந்த பிளம்புகள் அக்கினிக் கோளங்களாக உருண்டு செல்லும் வழியில் எது இருந்தாலும் உடனே பஷ்பமாகி விடும். வீடுகள், கிராமங்களை அழித்து ,மனித உயிர்களையும் மற்றும் பண்ணை மிருகங்களையும் சாம்பலாக்கிவிடும். வருடாவருடம் கோடைகாலத்தில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அவுஸ்திரேலியர்கள் தீவிரமான பயிற்சி உள்ளவர்கள். விக்டோரி மாநிலத்து தீயணைப்பு படையில் ஒரு குழுவினர் கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்கு அமரிக்கர்களுக்கு உதவியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளார்கள்

பல நாட்களாக காட்டுத்தீ இன்னும் கலிபோனியாவில் எரிந்து கொண்டிருக்கிறது என்பதையிட்டு ஆனந்தப்படும் ஒரே சீவன் தானாகத்தான் இருக்கமுடியும் என்பது ஷரனுக்கு உள்ளத்து உணர்வில் ஒரு புறத்தில் வெட்கமாக இருந்தது. மற்ற மனிதர்களின் துன்பத்தை இட்டு ஆனந்தப்படுவது நாகரிகமானது அல்ல என்றாலும், தனிப்பட்ட ரீதியில் இந்த காட்டுத் தீ தொடர்சியாக கட்டுக் கடங்காமல் இருப்பதனால் தனக்கு நல்லது என்ற மனநிலையை தவிர்க்க முடியாது அவள் இருந்தாள். தன்னளவில் அதற்கு நியாயமும் கற்பித்துக் கொண்டாள். மற்றவர்களது துன்பத்தில், அழிவுகளில் இன்பமடைவது பெரிய முரண்பாடான விடயமாக அவளுக்கு தெரியவில்லை. அந்த மனநிலைக்கு காரணம், அங்கு எரியும் காட்டுத் தீயால்தான் இங்கு மெல்பனில் அவளுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. நோயால் துன்பப்படுவர்களது பணத்தில் வைத்தியர்கள் வாழ்கிறார்கள். அதே போல் மற்றவர்களின் வாழ்க்கைத் துன்பங்களை வைத்து வக்கீல்கள் பணம் பண்ணுகிறார்கள். படைவீரர்களது அழிவில் அரசியல்வாதிகள் அதிகாரத்தை பெறுவதும் தொளிலாளிகளின் துன்பத்தில் முதலாளி இலாபமடைவது போல்தான் கலிபோனிய காட்டுத்தீயால் தனக்கு கிரிஸ்ரியனிடம் இருந்து தற்காலிகமாகவேனும் ஒத்தி வைக்கப்பட்ட விடுதலை கிடைத்துள்ளது என்பதால் காட்டுத்தீயால் அதியுறும் கலிபோனிய மக்கள் மீது தனக்கு அனுதாப மேற்படவில்லை என தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டாள். என்னை வக்கிரமானவள், குருரமான மனநிலை கொண்டவள் என மற்றவர்கள் நினைத்தால் தன்னை இந்த நிலைக்கு தள்ளி வைத்தவர்களே பொறுப்பாகும் என தனக்கே சமாதானம் கூறியபடி மனசாந்தியும் தேடினாள்.
காட்டுத்தீ சில நாட்களில் அணைந்து விடும். அழிந்த காடும் மீண்டும் துளிர்த்து காடாகிவிடும். ஆனால் எனது துன்பம் அப்படியானது அல்ல. மற்றவர்களால் தீராது. அதை நான் வருடங்களாக அனுபவித்து வருகிறேன். அதை யாருக்கு சொல்வது?

மெல்பேனின் மேற்கு பகுதியின் பிரதான வீதியால் செல்லுபவர்கள் தொழிற்சாலைகளினதும், நகர கழிவுகளும் கலந்து பலநாள் இறந்த மிருகத்தின் வாடைக்கும் மல வாடைக்கும் இடைப்பட்டதான ஏதோ இரசாயன மணத்தை அனுபவிக்க வேண்டும். அந்த பிரதான வீதியில் அமைந்து துர்வாடையை வெளிவிடும் தொழிற்சாலைகளுக்குக்கு சிறிது தூரத்தில் நகரக் குடியிருப்புகள் அமைந்து இருந்தாலும் காற்று பலமாக வீசும் போது லவுட்டன் நகரத்தில் உள்ளவர்கள் அசுத்த வாடைக்கு தப்ப முடியாது.

இரண்டு நாட்களாக ஷரனது இரண்டு மாடி வீட்டில் வீசும் காற்று அசுத்தமான வாடையுடன் குளிராக இருந்தாலும், பகல் நேரத்தில் யன்னல்களை திறந்தே வைத்திருந்தாள். அந்த அசுத்தக் காற்று அவளது வீட்டை எங்கும் நிறைத்து உடலைத் தழுவி கழுத்து இருந்து காலில் வரையும் உள்ள உரோமங்களின் துவாரங்களின் உள்நுளைந்து புல்லரிக்க வைக்கிறது. இனம் புரியாத இன்பமான ராகம் இதயத்தில் மீட்டப்படுகிறது. கிரிஸ்ரியன் இல்லை என்ற நினைப்பினால் ஏற்படும் கிளர்ச்சி, முழுமையான உடலுறவில் ஏற்படும் காமஉணர்வில் ஏற்படும் உன்மத்தத்தமான இன்பத்துக்கு நிகராக இருந்தது.. இந்த இரண்டு நாட்களில் பல தடவை ஷரன் நிர்வாணமாக படுக்கை அறைக்கும் குளிப்பறைக்கும் வளய வந்தாள். குளிரோ , அசுத்த வாடை எதுவும் தடையாக இருக்கவில்லை. தனது உடல் ,மனம் இரண்டிலும் தனது ஆட்சி உரிமையை நிலைநாட்ட அந்த நிர்வாணகோலம் அவளுக்கு உதவியாக இருந்தது. தனது உடலை தன்கைகளால் தடவி தான் ஒரு சூனியமில்லை. உயிரும் உணர்வும் கொண்ட பெண் என குளியலறையின் பெரிய கண்ணாடி முன்பாக பலதடவை உறுதிப்படுத்திக் கொண்டாள். தன் அழகைப் இரசிப்பதற்காக நிர்வாணமாக நிலைக்கண்ணாடி முன்பு நின்ற காலம் மறந்து, இப்பொழுது தனது இருத்தலை உறுதிப்படுத்தி பார்பதற்காக நிகை்கண்ணாடி முன் நிற்பது கேவலமாக இருந்தது.

சுதந்திரத்தை இப்படி இழந்தது யாரால்?

சுதந்திரம் என்பது கூட அவரவர் மனம் சார்ந்த அகவயமான விடயம். சிறையில் சந்தோசமாக இருப்பவர்களும் வீட்டில் சிறைப்பட்டு இருப்பவர்களும் உண்டு. உண்மையில் புள்ளிவிபரம் எடுத்தால் வீட்டில் சிறை இருப்பவர்களே அரச சிறையில் இருப்பவர்களை விட அதிகம். இதில் இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.

சில காலங்களாக ஷரனுக்கு கிறிஸ்ரியனுடன் வீட்டில் இருப்பது காற்று புகாத அறையொன்றில் இருப்பது போன்ற மூச்சுத் திணறுகிறது இந்த சிறைவாசத்தில் இருந்து தப்ப நெருக்கடியான மனித கூட்டமொன்றில் தவறிவிட்ட சிறு குழந்தை , அந்தக் கூட்டத்தில் நிற்கும் மனிதர்களின் ,ஆயிரக்கணக்கான கால்களிடையே வெளியேறுவதற்கு சிறிய இடைவெளியை தேடுவது போன்ற மனநிலையில் தவித்தாள். தனது மனநிலையை பகிர்ந்து கொள்ளவோ, சொல்லி தோளில் தலைவைத்து ஆறுதலடைவதற்கும் ஒருவர் அவளுக்கு கிடைக்கவில்லை.

அவளது நாய் லைக்கா அடிக்கடி தனது முகத்தை அவளில் தேய்த்து ஆறுதல் அளித்து துணையாக இருந்தாலும் அதால் அவளைப் புரிந்து கொள்ள முடியுமா? ஆறுதல் வார்த்தை பரிமாற முடியுமா?

கிரிஸ்ரியன் இல்லாத அந்த குளிர்காலத்து இரவுகள் அவளுக்கு அவனைத் துணையாக அடைய முன்பு இருந்த சுதந்திரத்தை நினைவுபடுத்தின. அந்த மனவோடையில் ஓடும் சுதந்திர நீரோட்டத்தை வீட்டில் நிம்மதியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று வயதே நிரம்பிய மகன் மார்க்கை சிறிது தூரத்தில் உள்ள அம்மாவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, லைக்கா என்ற தனது நாயை மட்டும் துணையாக அந்தப் பெரிய வீட்டில் இருக்கிறாள்.

இப்பொழுது அனுபவிக்கும் சுதந்திரம் நிரந்தரமானது அல்ல. இரண்டு கிழமைகள் மட்டுமே என்பது ஷரனுக்கு தெரியும் . கிரிஸ்ரியன் கலிபோனியாவில் இருந்து வந்தால் மீண்டும் பழய நிலைக்கு வந்து விடும். அடி ,உதை, அதட்டல், மிரட்டல் எனும் வன்முறையின் வட்டத்தில் மீண்டும் சிக்கி சுதந்திரத்துக்கு ஏங்கும் அடிமை போல் ஆகிவிடுவாள். வெளியே சொல்ல முடியாத உடல் வன்முறை மட்டுமல்லாது அவனது பார்வை, பேச்சு ஏன் அவனது மூச்சு காற்று கூட அவளுக்கு அக்கினியாக தெரிகிறது.

கட்டிலில் படுத்தபடியே தனக்கு நடந்தவையை நினைத்தபோது அவளுக்கு நம்ப முடியவில்லை.
பலவற்றிற்கு தானே காரணம் என புரிந்தாலும் ஆத்திரம் அகங்காரமும் மனத்தில் அமைதியை ஏற்பட விடவில்லை. எங்காவது ஓடி விடவோ அல்லது எதையாவது உடைக்கவோ அவளது மனம் விரும்பியது. யாரையாவது வார்தையால் துன்புறுத்த வேண்டும் அல்லது கராத்தே முறையால் யாருக்காவது நாலு உதை விடவேண்டும் நினைப்பு திடீரென வந்தது. இரு வருடங்களாக அனுபவித்த கொடுமை நினைத்து அழுவதற்கே இடைவெளி இல்லாமல் போய்விட்டது என்ற நினைப்பு அவளை பைத்தியமாக்கியது. காயம் பட்ட மிருகத்திற்கு அழுவதற்கும், கூக்குரலிடவும் காட்டில் கிடைக்கும் சுதந்திரம் தனக்கு வீட்டில் இல்லை. தனது துன்பங்களை அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் நீயாக தேடிக்கொண்ட வினை என்பாள். மனத்தின் படபடப்பால், நினைவுகளிள் தொடர் பலகாலமாக உக்கிய கயிற்றை கையில் எடுத்தது போல் அறுந்தபடி இருந்தது. மன நிலை அதற்கேற்றபடி அமைதி ,குழப்பம் என இரு வேறு நிலைக்கு மாறி மாறி நிலத்திற்கும் கொப்புக்கும் தாவும் குரங்காகியது.

ஷரனின் கணவன் கிரிஸ்ரியனுக்கு கலிபோனியாவில் ஏற்றபட்ட தீயை அணைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்ட்ட இருநூறு தீயணைப்பு வீரர்களில் ஒருவன் மட்டுமல்ல அந்த குழுவுக்கு கப்டனாக அவனே சென்றுள்ளான். ஆரம்பத்தில் போகும் போதே அவள் தன்னை வெறுப்பது தெரியும். கலிபோனியாவில் இருக்கும் நாட்களில் ஷரன் பெற்றோர் வீட்டுக்கு சென்று சந்தோசமாக இருப்பாள் என நினைத்தான். ஆனால் இப்படியாக தனது வீட்டிலே இருந்து தனிமையை விரும்பி அனுபவிப்பாள் என எதிர்பார்த்திருக்கமாட்டான். அவனைப் பொறுத்தவரை தனது தவறுகளை தவறுகளாக ஏற்றுக்கொள்வது அவனுக்கு சுபாவமாக இருக்கவில்லை. தேவையில்லாமல் பொய் சொல்லுகிறாள் என்பது கிரிஸ்ரியனுக்கு ஷரன் மீது ஆத்திரத்தை அளிக்கும் விடயமாக இருந்தது.

ஷரனுக்கு சிறு தவறுகளையும் பெரிதாக்கும் தந்தை மிகவும் கண்டிப்பானவர். முன்னாள் இராணுவத்தில் கடமையாற்றிய தகப்பன் சிறுவயதில் அவளுக்கு ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அப்படியாக கண்டிப்பான சூழ்நிலையில் வளரும் போது சிறிய குழந்தைத்தனமான தவறுகளை மறுப்பது, மறைப்பது தேவையாக இருந்தது. அதே வேளையில் சிறுவயதிலே புத்திசாதுரியமாக இருந்ததால் அது அவளுக்கு இலகுவாக இருந்தது. சிறுவயதுக் குறும்புகளை கெட்டித்தனமாக மறைப்பதில் தனது சாதுரியத்தை தானே மெச்சினாள். அழகையும் ,அறிவையும் அளவுக்கு அதிகமாக பெற்றிருந்ததால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் ஷரனுக்கு இருந்தது. தன்னை அளவுக்க மீறி நம்பத் தொடங்கி அந்த உணர்வு வரம்பை மீறி பாயும் வெள்ளம் போல அவள் மீது அவளுக்கு அவள் மேல் காதலாகிவிட்டது. பாடசாலையில் ஆசிரியர்கள் பலராலும் அவள் உற்சாகப்படுத்தப்பட்டு “ரொம்போய்” என செல்லமாக அழைக்கப்பட்டாள். இப்படியான பாராட்டுகள் அவளது மனத்தில் நானும் ஆண்களைப் போல் உடல் வலிமை பெற வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியதால், பதினைந்து வயதில் கராத்தே பயில வேண்டும் என வீட்டில் நச்சரித்து ஏற்கனவே பழகிய பலே நாட்டிய வகுப்பை இடைநிறுத்தி விட்டு புதிதாக கராத்தே வகுப்பில் சேர்ந்தாள். அந்த கராத்தை வகுப்புகளை நடத்த வந்த கிரிஸ்ரியன் காதலனாக ,கணவனாக, இப்பொழுது காலனாக தெரிகிறான்

முப்பது வயதைக் கடந்த கிரிஸ்ரியன் ஏற்கனவே திருமணம் செய்து பிரிந்து இருந்த காலத்தில்தான் மெல்பேனில் பகுதி நேரப் பயிற்சியாளராக இருந்த வேலையில் இருந்து விலகி தனது வீட்டருகில் ஒரு காராத்தே வகுப்பை சொந்தமாக தொடங்கியபோது ஒரு ரீன் ஏஜ் பெண்ணாக அந்த வகுப்பில் வந்து சேர்ந்தாள். மற்ற பிள்ளைகள் எல்லாம் சிறுவர்களாகவும் சிறுமியர்களாக இருந்தபோது இவள் மட்டும் தனியாக நடப்பட்டு உரம்போட்டதால் மதாளித்து வளரும் செவ்வாழைக் கன்று போல் தோன்றினாள். அவுஸ்திரேலியாவில் தாராளமாக கிடைக்கும் உணவு, விட்டமன்களுடன் சிறுவயதில் இருந்தே செய்த உடற்பயிற்சிகள் , வருடக்கணக்காக பயின்ற பலே நடனம் அவளுக்கு விரிந்த தோள்களும் அழகாக, செதுக்கியது போன்ற இடுப்பு என பதினைந்துவயதில் அழகை அமோகமாக அள்ளி வழங்கி இருந்தது. அவளது தேகத்தின் வளர்ச்சியால் நாலு வயது கூடுதலாக மதித்து எட்டாவது வகுப்பில் இருந்த போது பல தடவை பதினோராவதா அல்லது பன்னிரணடாவது வகுப்பா என பலரால் கேட்கப்பட்டிருக்கிறாள்.

பலே நடனம் பயின்றதால் இவளது கால்களும் கைகளும் சுதந்திரமாக இயங்கி கராத்தை பயிற்சியை இலகுவாகின. ஷரன் கராத்தே பயிற்சியில் விரைவில் தேறியதால் அவளுக்கு தனியாக பயிற்சி கொடுக்கவேண்டி இருந்தது.

அந்த நாள் எப்படி மறக்கமுடியும்?

—-

அவுஸ்திரேலியாவுக்கு உரிய யுகலிக்கப்டஸ் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை. அவை என்றும் இளமையாக காட்சி தரும் பெண் தெய்வங்கள் மாதிரி எக்காலத்திலும் பருவகாலங்களை வென்று பச்சைப் பசேலன காட்சி தரும். ஆனால் ஐரோப்பியர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட மரங்கள் இலையுதிர்காலத்தில் மஞ்சளாகி இலைகளை உதிர்த்து குளிர்காலத்தில் நிர்வாணமாக பருவகாலத்தை வெளிப்படுத்தும். நாங்கள் பகலவனுடன் புணர்சிக்கு தயாராகிவிட்டோம் என பகிரங்கமான விளம்பரப்படுத்தும் போது உள்ளுர் யுகலிக்கப்டஸ் மரங்கள் மட்டும் பச்சை சீலை போர்த்தியபடி சொல்லும் செய்தியென்ன?

நாங்கள் இந்த நாட்டின் ஆதிகுடிகள். வந்தார் வரத்தாரான உங்களப் போல் வெட்கம் கெட்டவர்கள் அல்ல என்பதா?

அது ஒரு இலையுதிர்காலத்து சனிக்கிழமையின் மாலை நேரம். மேற்குத்திசையில் சென்னிற மேகங்கள் அவசரமற்று நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால் பகலவன் அவசரமான வேலைக்கு செல்வது போல விரைவாக மறைந்து கொண்டிருந்தான். வெரபி கொமியுனிட்டி சென்ரரின் அருகே சிவப்பு நிற ஹோல்டன் கார் அங்கு பரந்து விரிந்து மஞ்சள் கலந்த சிவப்பு இலைகளை உதிர்தபடி நின்ற மப்பிள் மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டதும் பிரயாணிகள் சீட்டில் இருந்து இறங்கிய ஷரன் தோளில் சிறிய பையை கொழுவியபடி தயங்கித் தயங்கி உள்ளே நடந்தாள்.

அவளது மனத்தில் நினைவுகள் சிறிது துாரத்தில் உள்ள பிளாசாவில் உல்லாசமாக படம் பார்க்கும் தோழிகளுடன் இருந்தது. இந்த கிளாஸ் இல்லாவிடில் தோழிகளுடன் பிளாசாவில் படம் பார்க்க திட்டமிட்டு இருந்தாள். கடந்த கிழமையில்தான் அவசரமாக இவளுக்கு அடுத்த கிழமை நடக்க இருக்கும் கராத்தேயின் மஞ்சள்பட்டி தேர்வுக்காக இந்த விசேட வகுப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.

அவளது ஹகீல் அணிந்த பாதங்கள், அந்த சென்ரரின் முன்பகுதியில் உதிர்க்கப்பட்டு, மஞ்சள் சிவப்பு கலந்த கம்பளமாக தரையை மூடியிருந்த மாப்பிள் மரத்தின் இலைகளை இரண்டாக பிரித்துக் கொண்டு சென்றன. ‘ஒரு மணி நேரத்தில் சொப்பிங்கை முடித்து விட்டு வருகிறேன்’ எனத் தாய் அவளை நோக்கி கூறிய வார்த்தைகள் அவளில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. பதினைந்து வயதில் தாய் தந்தையரை முதலாவது எதிரியாக பார்க்கும் ரீன் ஏஜ் குணத்தோடு காரில் இறங்கி நடக்கும்போது புதிதாக ஒரு கவலை அவள் நினைவில் வந்து சேர்ந்தது. அவள் அலட்சியத்தோடு போட்ட மேலாடை உடலை இறுக்கவது போல் இருந்தது. அந்த இறுக்கத்துக்கு காரணம் புதிய பிராவா இல்லை வெளியாடையா என்பதே அவளது கவலையாக இருந்தது.

கராத்தே பயிற்சி வகுப்பு நடக்கும் கொம்மியுனிற்ரி ஹாலின் கதவை திறந்து உள்ளே சென்றவளுக்கு அங்கு வெளிச்சம் இல்லாமல் இருளாக இருந்தது ஏமாற்றமாக இருந்தது. தோள் பையை கழற்றி ஓரத்தில் வைத்து விட்டு வாசிங் அறையில் சென்று அங்குள்ள கண்ணாடியில் தனது ஆடை அலங்காரத்தை மீண்டும் பார்க்க சென்றாள். உள்ளே சென்று உடலை வளைத்து திருப்பி பார்த்தபோது பிராதான் இறுக்கவது என முடிவாக தெரிந்தது. அந்த இறுக்கம் கராத்தை பயிற்சிக்கு தடையாக இருக்கும் என்றதால் மேலாடையை கழற்றிவிட்டு முன்பக்கத்தை பிடித்து இழுத்து பெரிதாக்க முடியமா எனப் பார்த்தாள். அது சரி வராததால் பின்பகுதியை சிறிது சுண்டி இழுத்தபோது பிராவின் பின்பகுதியில் உள்ள இரண்டு கொக்கியில் கீழ் கொக்கி தெறித்தது. கண்ணாடியில் ஒரு முலை மேலும் மற்றது கீழுமாக தோற்றமளித்தது. ‘ஷிற் மம் , மலிவாக வாங்கினால் இப்படித்தான்’ என கூறிவிட்டு பிராவை கழற்றி குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டு தலைமயிரை ஒதுக்கிட்டு முகத்தையும் உதட்டையும் கண்ணாடியில் பார்த்து விட்டு கழுத்தை திருப்பி நளினத்தை வரவழைத்து தன் அழகை வியந்தபடி சில நிமிடங்கள் நின்றாள். பின்பு வெறும் உடல் மேல் மேலாடையை மட்டும் அணிந்து அதற்கு மேல் கராத்தே உடுப்பை போட்டபோது முலைக்காம்புகள் துரித்திக் கொண்டு நிற்பதை பார்த்து, பதினைந்து வயதில் எனக்க இது அதிகம் என மார்பகங்களை பார்த்து கூறி விட்டு கிளாசை இரத்து செய்த விட்டு வீட்டுக்கு செல்வோம் என நினைத்தாலும் இப்பொழுது அம்மா வரமாட்டள். கிறிஸ்ரியனுக்கு என்ன காரணம் சொல்லி கிளாசை இரத்துப் பண்ணுவது என தன்னை நொந்து கொண்டு வாசிங் அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வரும்போது ‘ லேட்டானதற்கு என்னை மன்னிக்க வேணடும்’எனக்கேட்டபடி உள்ளே வந்தவன் வாசலில் இருந்த லைட்டின் சுவிச்சை தட்டி எரியவிட்டான. ஷரனுக்கு அவன் முன்பு நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டு தலை குனிந்து விட்டாள். சில வினாடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு ‘இன்று கிளாசை இரத்து பண்ணுவதற்கு ஏலுமா? என்றாள்.

‘ஏன் என்ன பிரச்சனை ? உடம்புக்கு முடியவில்லையா?

‘இல்லை’

‘அப்ப என்ன?’

சிறிது நேர மவுனத்தின் பின் ‘இன்று கிளாஸை நடத்தலாம். ஆனால் ஒரு நிபந்தனை’

கிறிஸ்ரியனுககு மனத்தில் சிறிது ஆத்திரம் ஏற்பட்டது. இவளுக்கு என்ன வந்தது? நிபந்தனைகள் வைக்கிறாளே?

‘இன்று என்னைப் பார்க்காமல் கிளாஸ் எடுக்க வேண்டும். எனது பிரா அறுந்து விட்டது. அதை சுழட்டி எறிந்து விட்டு வந்திருக்கிறேன்’

பதினைந்து வயதுப் பெண்ணிடம் இப்படியான பெரிய வார்த்தைகளா?

இந்த வார்த்தைகளை கிரிஸ்ரியன் எதிர்பார்காததால் மவுனமாகிட்டான்.

அவனைப் கண்களால் துளைப்பதுபோல் பார்த்தபடி நின்றாள் ஷரன்.

சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு ‘நான் எனது மாணவிகளை அப்படி பார்ப்பது இல்லை. நீ வெட்கப்பட வேண்டியது இல்லை. பயிற்சியை தொடங்குவோம் ‘என்று சொல்லி விட்டு தனது கராத்தே உடையை அணிவதற்காக ஆண்களின் வாசிங் அறைக்க சென்றுவிட்டான்.

இந்தப் பதிலை ஷரன் எதிர்பார்கவில்லை. தன் அழகு , இளமை அந்த இடத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு குப்பைக் கூடையில் தனது பிரா போல் தூக்கி வீசப்பட்டதான உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. பத்து சிநேகிதிகளுடன் செல்லும் போது எதிரில் வரும் ஆண் தன்னை மட்டுமே பாரக்க வேண்டும் அல்லது பார்பான் எனபது ஷரனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. பல முறை இந்த விடயத்தில் பந்தயம் கட்டி விட்டு மற்றய நண்பிகளிடம் இருந்து விலகி செல்லும் போது எதிரில் வரும் ஆண் தன்னை பார்பதாக நினைப்பதுடன், மற்றவர்களுக்கு சொல்லி காட்டுவது வழக்கம். இப்படியான தற்பெருமை பல முறை ஷரனை சிநேகிதிகளிடம் இருந்து அன்னியப்படுத்துவது இவளுக்கு புரிந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் இருப்பதை விளம்பரப்படுத்துகிறேன். நீங்கள் அதற்கு எரிச்சல் அடைய வேண்டாம் என்பதே இவளது பதிலாக இருக்கும்.

கிரிஸ்ரியன் வார்த்தைகள் அவளது கர்வத்தில் ஊசியால் குத்தியது போல் வலித்தது. அவளது அழகிய வதனக்தை ஆத்திரமும் அவமானமும் கிரகணம் போல் கவ்வின. கோபத்தால் சிவந்த முகத்துடன் அங்கிருக்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விட விரும்பினாள். இவனிடம் இருந்து கராத்தே கற்றுக் கொள்வதை நிறுத்தவேண்டும். இங்கிருந்து ஓடுவதுதான் நல்லது.

ஓடினால் ஐந்து கிலோமீட்டரில் இருக்கும் வீட்டுக்கு ஒடவேண்டும். அம்மாவுக்கு எப்படி காரணத்தை சொல்லுவது? இதை எப்படி புரியவைப்பது என்பதால் மனத்தை மாற்றிக்கொண்டாள். வேறு விதமாக இதற்கு முடிவு கட்டவேண்டும். ‘ஷரனை அவமானப்படுத்தியவர்கள் தப்ப முடியாது அதற்கு பதிலாக அவர்கள் பலமடங்கு அவமானப்படவேண்டும். நான் யார் என்பதை சில காலத்தில் காட்டுகிறேன். அழகையும் அறிவையும் ஒருங்கு சேர வைத்திருக்கும் நான் இவனை எனக்கு பின்னால் வர வைக்கும் வரையும் கரத்தே வகுப்புக்கு பிராவே கட்டப் போவதில்லை’ என சபதம் போட்டு வாய் விட்டு சொல்லி சிரித்தாள்.

ஷரனது முக பிரதிபலிப்புகளை காணவோ, வார்த்தைகளை கேட்கவோ கிறிஸ்ரியன் அவள் எதிரே இருக்கவில்லை. இருந்திருந்தால் இப்பொழுது என்ன சொல்லி விட்டேன்? இவளுக்கு என்ன நடந்துவிட்டது? என தன் தலையை பிய்த்துக் கொண்டிருப்பான்.அவன் வாசிங் அறையில் இருந்து காராத்தே உடையணிந்து வந்த போது ஷரனும் தன்னை சுதாரித்தக் கொண்டு பயிற்சிக்கு தயாரானாள்.

பல பிரத்தியேக வகுப்புகள் மூலம் கராத்தேயின் கறுப்பு பட்டியையை பெற்றுக்கொண்டதோடு உயர்தர பரீச்சையிலும் தேறி பல்கலைக்கழகத்தில் முதல் வருட மிருகவைத்திய மாணவியாக விட்டாள். நினைத்தது போல் கிரிஸ்ரியன் காதலியாகவும் ஆகிவிட்டதின் மூலம், நினைத்ததை முடித்த பெருமை அவளது கர்வத்தையும் அகங்காரத்தையும் கூட்டிவிட்டது.

ஷரன் பல்கலைகழகம் புகுந்தவுடனே வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்ரியனுடய வீட்டில் வந்து வசிக்கத் தொடங்கியதற்கு காதலுக்கு அப்பால் ஒரு காரணம் இருந்தது. பாட்ணராக ஒன்றாக ஒரு வீட்டில் வாழும் போது சொத்துரிமை வந்துவிடுகிறது. அவுஸ்திரேலிய சட்டத்தில் ஒன்றாக கூடி வாழும் பர்டினர்கள் மனைவிக்கு சமமாக அங்கீகாரம் கிடைக்கிறது. பதினெட்டு வயதில் கிறிஸ்ரியனுடய சொத்துகள் மூலம் பல மில்லியன்களுக்கு சொந்தக்காரியாகிய விடயம் ஷரனின் பெற்றோர்கள்கூட அறிந்திருக்கவில்லை.

——

பல்கலைக்கழகம் முடிந்தவுடன் கருவுற்றதால் வேலைக்கு போகவில்லை. வீட்டில் இருந்தபடி தனது வாழ்க்கையை சந்தோசமாக கழித்தாள். அந்த காலத்தில் கிரிஸ்ரியன் அவளை பட்டுத் துணியில் பொத்தி வைத்த வைரமாக நடத்தினான். ஷரன் பட்டத்து இளவரசியை போல் அவனது வீட்டில் வலம் வந்தாள்.

அமைதியாக சென்ற அவளது வாழ்க்கையின் நீரோட்டத்தில் அலைகள் மோதியது. குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையின் நுனிகரும்பு வாயில் கசந்தது. கிரிஸ்ரியனுக்கு நீண்ட நேரம் வேலை, இரவு வேலை, மற்றும் அவசர அழைப்பு போன்றவை உள்ள தீயணைப்பு படை வேலையில் ஏற்படும் உடல் களைப்புடன், ஏற்படும் மனத் தளர்வோடு வீட்டுக்கு வரும் போது முக மலரச்சியோடு தன்னை உபசரிக்கும் சாதாரண ரக மனைவியை தேடுபவனுக்கு, தனது ரீன் வருடங்களை தன்னிலும் பதினைந்து வயது கூடிய ஒருவனுக்காக தொலைத்து விட்ட அறியாமையை எண்ணி பச்சாபத்தில், விட்டதை பிடிக்கும் மனநிலையில் தனது அழகையும் அறிவையும் மேர்கூரி வெளிச்சம் போட்டு விளப்பரபடுத்த நினைக்கும் ஷரனது செயல்கள் பிடிக்கவில்லை. ஷரனது இளம் வயதின் பலதரப்பட்ட சிறு பிள்ளை விளையாட்டுகளை பொறுத்துக்கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ள தயாராகிய கிரிஸ்ரியனுக்கு பொறுத்துகொள்ளமுடியாத விடயம் அவனது காம உணர்வுகளுடன் பூனை – எலி விளையாட்டு காட்டுவது. தனக்கு பிடிக்காதது வீட்டில் நடந்தால் அல்லது தனக்கு விரும்பிய கவனிப்பு கிறிஸ்ரியனிடம் இருந்து கிடைக்காவிடில் வேறு அறைக்குள் குழந்தையுடன் படுத்து கொள்வது, தலையிடி என சொல்லிவிட்டு மாத்திரை போடுவது போன்ற விடயங்கள் ஆரம்பத்தில் சிறுபிள்ளை விளையாட்டு போல் ஆரம்பித்தாலும் போகப் போக கிறிஸ்ரியனை பொறுமையை இழக்க வைத்தது. கைக்குழந்தைக்காரி என்றதால் மனத்துக்குள் திட்டியபடி இருந்தான். வெளிப்படையாக விரக்தியை காட்டவில்லை. ஆனால் வேலைக்கு போகவேண்டும் என ஷரன் பேசத் தொடங்கிய போது இரண்டு பேருக்கும் இடையில் உருவாகிய வாய்த்தர்க்கம் ஷரனது இடது கன்னம் கண்டி சிவப்பாகியதில் முடிந்தது. இந்த சம்பவத்தின் பின் ஒரு கிழமை குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றாள். அங்கு அதிக நாள் இருப்பதற்கான வரவேற்பு இல்லாததால் வீடு திரும்பி, வீட்டுக்கு அருகாமையில் பகுதி நேர மிருகவைத்தியராக வேலையொன்றில் சேர்ந்தாள். இரண்டு வருடங்களாக நிழல் யுத்தம் நடைபெறுகிறது. சொத்துகள் பற்றிய சிந்தனையும், சிறுகுழந்தையும் விவாகரத்தில் ஈடுபடாமல் இரண்டு வருடத்தை தள்ள வைத்தது.

இந்த இரண்டு வருடத்தில் தாய் வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தாள். தந்தை இறந்தபோது தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அவளை அப்படி செய்யவைத்தது.மனத்தின் சோகங்களை சொல்லி ஆறுவதற்கு வடிகாலாககூட தாயால் இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் தான் என்பது ஷரனுக்கு நன்றாத் தெரியும்.

கருவுற்று இருந்த போது ஷரனது தந்தை இறந்ததாக தாயின் தொலைபேசி வந்தபோது ‘உன் புருஷனுக்காக நான் வந்தாலும் அழமாட்டேன். அப்படி இருக்க நான் வந்து போவது அர்த்தமில்லாத விடயம்.’

‘இதுதான் உனது முடிவா?’

உனக்காக வேணுமென்றால் வருகிறேன்’ என்றாள்.

‘உனது தகப்பன் என்பதை நினைத்துக்கொள்’

‘அம்மா ,அவர் என்னையும் உன்னையும் கொடுமைபடுத்தியதையும் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன்’

‘அவர் காலத்து ஆண்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அதுவும் இராணுவத்தில் இருந்ததால் கரடுமுரடாக இருந்தார்.’

‘அந்த கரடுமுரட்டுத்தனத்தை நான் பேசவரவில்லை. உனக்கு தெரியாமல் வேறு தொடர்பு வைத்திருந்ததை நான் நினைத்துப் பார்கிறேன்’.

‘அது ஒரு மின்னல்போல். ஆண்கள் பலருக்கு அப்படி தொடர்புகள் இருந்தது. அவரது தொடர்பு தானாக இல்லாமல் போய்விட்டது.மேலும் அதைப்பற்றி கவலைப்படவேண்டியது நான். உனக்கு என்ன வந்தது?’

‘உன்னால் அவரை இலகுவாக மன்னிக்க முடிகிறது. நான் கொலையே செய்திருப்பேன்.’

‘அப்படி கொலை செய்ய முனைந்தால் தொண்ணுறு வீதமான ஆண்கள் இறந்தும் தொண்ணுறு வீதமான பெண்கள் சிறையிலும் இருக்கவேண்டி இருக்கும். தெரியுமா?’

‘என்னால் மன்னிக்க முடியாது. நான் அதற்காக சிறை செல்வதற்கும் தயார்’

‘உன்னோடு தர்கம் செய்ய நான் தயாரில்லை. நீ வருகிறாயா இல்லையா?

‘அதுதான் உனக்காக வருகிறேன் என சொன்னேன்.’

‘அப்படியானால் நீ வரவேண்டாம்’

‘உனது விருப்பம்’

‘இப்படியான விட்டுக் கொடுப்பில்லாமல் நீ வாழ நினைத்தால் அது முடியாமல் இருக்கும் என்பதை பிற்காலத்தில புரிந்து கொள்வாய்’ என்று கூறியது நினைவில் வந்தது.’

மேல்பேன் சிட்டி வைத்தியசாலையில் வேலை கிடைத்தபோது பல வருடங்களுக்கு பின் உண்மையான சந்தோசத்தை அடைந்தாள். இந்த பதினைந்து வைத்தியர்கள் கொண்ட இடத்தில் விதம் விதமான சர்ஜரிகளும், நோய்களும் கொண்ட செல்லப்பிராணிகள் வந்து சிகிச்சை பெறுவதால் இங்கு பெறப் போகும் பயிற்சி எதிர்காலம் முழுதும் தொடர்ந்து வரும் என்பதும், இந்த பயிற்சியை வைத்து வரும்காலத்தில், சொந்தமாக தொழில் தொடங்க முடியும். அதுவே தனக்கு சுதந்திரமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என்பது அவளது எதிர்கால கனவாக இருந்தது. அவளது கனவை அறிந்ததால் கிரிஸ்ரியனுக்கு அவள் வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை. முழு நேர வேலை செய்தால் அது அவளது கர்வத்தையும் அகங்காரத்தையும் அதிகப்படுத்தும். அதைவிட மார்க்கை கவனிப்பது குறையும். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களும் பகுதி நேர வேலை செய்தவள் இப்பொழுது முழு நேரம் செய்ய போவதை தடுக்க முடியாது என்பதால் அவளது இஸ்டத்துக்கு விட்டிருந்தான்.

கலிபோனியாவுக்கு கிறிஸ்ரியன் போனதால் ஷரனுக்கு தன்னை ஆசுவசப்படத்திக் கொண்டு சிந்திக்க நேரம் கிடைத்தது. .இரண்டு நாட்கள் பகலும், மூன்றாவது நாள் இரவும் தொடர்ந்து வேலை செய்யும் போது கிடைத்த இரண்டு நாள் விடுமுறை அவளுக்கு வரப்பிரசாதமாக இருந்ததது. முதல் நாள் சிகை அலங்காரத்துடன் கால், கை நகங்களை ஒழுங்கு படுத்தி கால்களின் மயிரை வக்சினால் அகற்றுவதற்கு பெரும்பாலான பகல் நேரம் களிந்து விட்டது. கடந்த நான்கு வருடங்களாக தன்னை கவனிக்காது தவறவிட்டதை நினைத்த போது அவளுக்கு கண் கலங்கியது. ரீன் காலத்தில இருந்து பல்கலைக்கழக காலத்திலும் கிரிஸ்ரியனோடு இருந்த நாட்கள் கொன்ரயினரில் வைத்து அனுப்பப்ட்ட அகதியை போல் குறைந்த பிராணவாயுவை சுவாசித்துக் கொண்டு மூச்சத் திணறியபடி வாழ்ந்திருக்கிறேன். எனக்க நானே கைவிலங்கு இட்டுக் கொண்டது என்று அம்மா சொன்னது எவ்வளவு உண்மையானது?.

எப்படி தொலைத்த நாட்களை திரும்பிப் பெறப்போகிறேன்?

நிர்வாணமாக படுத்துக் கிடந்தவளுக்கு கட்டிலின் அருகே உள்ள சிறிய மேசையில் அடல்ற் சொப்பில் நேற்று வாங்கி வந்த டில்டு பாக்கட் உடைக்கப்படாமல் கிடந்தது. எடுத்து உடைத்து பார்த்தாள். அது ஆபிரிக்க ஆணின் ஆண்குறி போல் கருமையான இரப்பரால் செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே வீட்டில் வெள்ளை ஆண்குறி இருக்கிறது. கடையில் வேண்டும் போதாவது வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் அதைத் தேர்ந்தெடுத்தாள்.

கடந்த ஒருமாதமாக எந்த உடல் அணைப்பு இல்லாமல் இரவுகளை கழித்தாள். பல இரவுகள் வேலை என கிரிஸ்ரியன் வராமல் இருந்தான் மற்றய இரவுகளில் கட்டிலின் மறுபக்கத்தில் முகத்தை திருப்பியபடி ஷரனில் உடல்படாமல் தூங்கினான். ஷரனுக்கு அவன் நடத்தைகள் வித்தியாசமாக இருந்தாலும், இவள் வீம்பு அதை பொருட்படுத்த மறுத்தது. முழுநாள் வேலையான நாட்களில ஏற்பட்ட உடலின் களைப்பு, உடல் உறவு எண்ணத்தையே இல்லாமல் பண்ணி இருந்தது. இதனால் கிரிஸ்ரியன் புறக்கணிப்பு ஒரு விதத்தில அவளது தேவையாக இருந்தது.

பியூட்டி பார்லருக்கு போய் வரும் வழியில் அந்த அடல்ற் சொப்பின் விளம்பரப் பலகையின் கவர்சியில் உள்ளே சென்றாள். விற்பனைக்கு அங்கு நின்ற அந்த இளம் பெண், நத்தார் காலத்துக்காக வளர்க்கப்பட்ட பன்றிபோல் பருத்து கொழுப்பாக இருந்தாள். அவளது இரண்டு கைகளிலும் கறுப்புக் கலரில் டிராகன் மிருகத்தை பச்சை குத்தி இருந்தாள். இறுக்கமான கருப்பு பெனியன் அவளது பருமனை மேலும் வெளிக்காட்டியது. உடலை ஒழுங்காக பராமரித்து வைத்துக்கொள்ளத் தெரியாத ஜன்மமா இருக்கிறளே? இறுக்கமாக கட்டிய மூட்டைபோல் பிதுங்கி இருக்கும் இலச்சணத்தில் இவளுக்கு என்ன பச்சை குத்தல் வேண்டி இருக்கிறது? அந்தப் பெண் மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டது. நேராக டில்டோவை வைத்திருக்கு செல்புக்கு சென்று ஒரு டில்டோவை எடுத்துக்கு கொண்டு அந்த விற்பனைப் பெண்ணை நோக்கி வந்தாள் அந்த டில்டோவை எடுத்ததைக் கண்டு ‘இதைப் பாவித்த அனுபவம் உண்டா’ எனக் கேட்டபோது ‘இல்லை’ என உதடுகளை பிதுக்கி ஒன்றாக குவித்து சொன்னது அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது.

‘முதல் தடவையா?’ என சொல்லி முடிக்க முன்பாக இடைமறித்து ‘நான் ஒரு சேர்ஜன். இதை எப்படி பாவிப்பது என கண்டு பிடிப்பேன். உமது உதவி தேவைப்படாது.’ எனக்கூறி விட்டு, வாய் பேசாது திகைத்து சிலையாக போன அந்த பெண்ணின் கைகளில் காசைக் திணித்து விட்டு வெளியே சிறிது துாரம் நடந்து விட்டு, மீண்டும் கடையின் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் வந்து ‘உமது முகம் இப்படி போனது எனக்கு பிடித்திருக்கு’என ஏளனம் கலந்த புன்னகையுடன் மிகுதிக் பணத்தை வாங்கினாள். காரில் ஏறிய போது அப்படி அந்தப் பெண்ணுக்கு அப்படி சொல்லி இருக்க கூடாது என நினைக்கவும் தவறவில்லை.

பல முறை சண்டை நடந்தாலும் ஒரு கிழமைக்கு மேல் உடலுறவு கொள்ளாமல் ஒதுங்கி இருப்பது கிரிஸ்ரியனின் வாடிக்கையல்ல. இந்த முறை ஒரு மாதமாகிவிட்டது. சிட்டி வைத்தியசாலைக்கு சேர்ந்தபின் இரண்டாம் முறையாக நான் சனிற்ரறி பாட் கட்டவேண்டி இருந்தது. அப்படியானால் நாலு கிழமைக்கு மேலாக இருக்கவேண்டும். வேலையில் நான் மறந்து போய் இருக்கலாம். கார்த்திகை மாதத்து நாய் போல் பன்னிரண்டு மாதமும் இருக்கும் கிறிஸ்ரியனால் எப்படி மறக்க முடியும்? நான் நிறைமாதத்தில் இருந்தபோது கூட தேடி அலைந்தானே? என்ன நடந்தது? ஏதாவது இரகசியத் தொடர்புகள் வேறு பெண்களுடன் ஏற்பட்டுவிட்டதா? எதற்கும் கலிபோனியாவில் இருந்து வரட்டும்.

மனத்துக்குள் சினம் கொப்பளித்தது. பாஸ்டட் நான் அடிவாங்கிக் கொண்டு அவனுக்காக அடிமை போல் இருக்கிறேன். இவனுக்கு வேறு பெண் தொடர்பு ஏற்பட்டால் இரவில் ஆளை முடிக்க வேண்டியதுதான். இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். மூன்று வருடத்துக்கு முன் விவாகரத்து செய்தால் நான் என்பாட்டில் போய் கொண்டிருப்பேன் என சுய களிவிரக்கம் அவளை பீடித்தது.

எழும்பி அந்த டில்டோவை எடுத்த்து உடைத்து பார்த்தாள். நிர்வாணமாக நின்ற தன்னையும் கையில் இருந்த டில்டோவையும் பார்த்து விட்டு வாய்விட்டு சிரித்தாள் ‘இந்தளவு கீழ் நிலைக்கு நான் போய் இருக்க கூடாது. வீணாக அந்த பச்சை குத்திய பெண்ணுக்கு அலுப்புக் கொடுத்தது தான் மிச்சம் ’ எனக் குப்பைக் கூடைக்குள் போட்டு அந்த குப்பை பையை கட்டி போட்ட பின்பு மீணடும் கட்டிலில் வந்த இருந்து கொண்டு கிரிஸ்ரியன் வேறு பெண்ணொருத்தியிடம் தொடர்பு ஏற்படுத்தி பிரச்சனைப்படுத்தாமல் விபசாரியிடம் போய் வந்தால் அதை என்னல் மன்னிக்க முடியும். அப்படியானாலும் ஆண் உறையை உபயோயோகித்திருப்பான் என நம்புகிறேன். தனது உடலை கவனமாக உடற் பயிற்சி செய்து பாதுகாத்து வருபவன் இந்த விடயத்தில் கவனமாக நடப்பான். இல்லாவிடில் இரத்த பரிசோதனையின் மருத்துவப்பத்திரத்தை கேட்டு விட்டுதான் உன்னோடு உடலுறவு கொள்வேன் என சொல்வேன். தன்னை நம்பவில்லை என அடிப்பான். இப்ப மட்டும் அடிக்காமல் இருக்கிறானா? என தனக்குத்தானே பேசிக்கொணடாள்.

லைக்காவை இன்றைக்கு வாக்கிங் கொண்டு செல்லவேண்டும் என்ற சிந்தனை வந்ததும் உடைமாற்றிக்கொண்டு வெளிக் கிளம்பினாள் லைக்காவின் முகதில் பாதி கறுப்பும் பாதி வெள்ளையுமான புல் ரெரியர். அவளை எதிர்பார்த்தபடி வாலை ஆட்டியபடி அவளது கால்களை சுற்றி வந்தது


அத்தியாயம் 13

நோயல் நடேசன்‘சாண்டரா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிட்னிக்கு போய் விட்டாள்’ என்றான் சாம்.

‘என்ன அப்படி அவசரமாக?’

‘சாண்ராவின் காதலி மெலிசா ஆண் நண்பரோடு சென்றுவிட்டதால் இருவரது உறவும் சண்டையில் முடிந்தது’

‘மெலிசா விட்டு போனால் ஏன் சிட்னி போக வேண்டும்? தனது வேலையை விடவேண்டும்?

‘அது உங்களுக்கு புரியாது. இவர்களது உறவில் ஒருவரை ஒருவர் விட்டு விலகுவதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோடு செல்வதை மிகவும் பாரிய துரோகமாக மன்னிக்க மாட்டார்கள்.’

‘இது புதுமையானது. எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயம் என நினைக்கிறேன்’எனறான் சுந்தரம்பிள்ளை

சாண்டிரா லெஸ்பியன் உறவு வைத்திருக்கும் பெண். சாமுக்கும் சுந்தரம்பிள்ளையும் சாண்டிராவை சினேகிதியாக நினைத்து பழகி வந்தனர். அவளோடு மறக்க முடியாத சம்பவம் சிலகாலத்திற்கு முன்பு இருவருக்கும் நடந்தது.

இந்த மிருக வைத்திய சாலைக்கு ஒரு ஆம்புலனன்ஸ் சேவை உண்டு. வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் நோயுற்ற செல்லபிராணிகளை வைத்தியசாலைக்கு கொண்டு வந்து வைத்தியம் பார்த்து விட்டு மீண்டும் திருப்பி கொண்டு போய் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கும் வேலை இந்த அம்புலன்சால் சாத்தியப்படும்.

இந்த வைத்திய சேவை வைத்தியசாலையின் சுற்று வட்டாரத்திலே உள்ளவர்களுக்கு மட்டும்தான் செய்வது வழக்கம். இந்த சேவைக்கு ஒரு குறைந்த அளவு பணத்தை அறவிடுவார்கள். இந்த அம்புலன்சின் சாரதியான சாண்டராவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். மிகவும் வேடிக்கையானவர். கள்ளம் கபடம் இல்லாமல் நேரடியாக பேசுவதும் அதே வேளையில் தன்னை சீண்டுபவர்களிடம் எடுத்து எறிந்து தூசண வார்த்தைகளை பாவிப்பதும் இவரது சுபாவம். இவர் ஒரு லெஸ்பியன். அதாவது பெண்களிடம் மட்டும் உறவு வைத்துக் கொள்பவர்.

ஆண்வர்க்கம் அலட்டிக் கொள்ளாத சாராசரிக்கும் குறைவான அழகுதான். ஆனால் சிரிப்பதும் கண்ணை விழித்து கதைப்பது கழுத்தை வெட்டுவது கவர்ச்சியாக இருக்கும். அவளது முகத்தில் மோதகத்திற்கு வைத்த முளை போன்ற சிறிய மூக்கில் ஒரு வெள்ளி வளையம் அவளது முகத்திற்கு அழகு சேர்த்து பார்பவரை மீண்டும் பார்க்கச் சொல்லும். எப்பொழுதும் பாண்டு, சட்டை அணிந்திருப்பாள். தலையும் குறப்பாக மயிரை வெட்டிய தோற்றம்.

சாண்டரா ஒரு நோயடைந்த பிராணியை கொண்டு வந்தால் அந்த பிராணிக்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் என்பது வைத்தியசாலை நடைமுறை. அதற்கு காரணம் சாண்டரா வேறு நோயுற்ற மிருகங்களை கொண்டு வர மீண்டும் வாகனத்தில் திரும்பி செல்லவேண்டும்.

சில வைத்தியர்கள் சாண்டராவை புறக்கணித்து காத்திருக்க வைப்பார்கள். இதை தாங்க முடியாமல் கண்டபாட்டில் தூசண வார்த்தைகளால் சாண்டரா மற்றவர்களிடம் பேசுவார். சாண்டராவின் லெஸ்பியன் பாலியல் உறவு பல பேருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது என்பது அவர்கள் சாண்ரா இல்லாத போது புறம் பேசுவதில் இருந்து வெளிப்படையாக தெரிந்தது. இப்படி வெறுப்பை காட்டுபவர்களில் சிலர் மட்டுமே ஆண்கள். பெரும்பாலானவர்கள் சாண்டராவைப் பற்றி ஏளனமாக பேசி தங்கள் மன அழுத்தங்களை தீர்த்துக்கொள்வார்கள்.மற்றவர்கள் வெளியே சொல்லாமல் மவுனமானமாகவும்,மற்றவர் கூற்றுக்கு ஆமாப் போட்டும் புறக்கணிப்புகள் செய்தார்கள். ஒரு விதத்தில் தலித் சமூகத்தினரை இந்தியாவில் புறக்கணிப்பு செய்வது போன்றது என எடுத்துக் கொள்ளலாம்.

ஓரு பால் உறவுக்காரரை புறக்கணிப்பு செய்யமுடியாது என அவுஸ்திரேலியாவில் சட்டவிதிகள் இருந்தாலும் இந்த மாதிரியான புறக்கணிப்புகள், ஏளனங்களை பொறுத்து போக வேண்டிய நிலைதான் உள்ளது. இவர்களை சட்டை செய்யாமல் தனது வேலையை பார்த்துக் கொள்வதே சாண்டராவின் தனித்தன்மை. சாண்டரா மேல் இருந்த இந்த அழுத்தம் பிற்காலத்தில் லெஸ்பியனான பெண் மிருக வைத்தியர் ஜெசிக்கா வந்த போது ஆரம்பத்தில் இருந்ததை விடக் குறைந்ததை உணர்ந்து கொள்ளமுடிந்தது. ஒரு விதத்தில் இங்கேயும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சாதிப் புறக்கணிப்பு மாதிரியான ஒற்றுமையை சுந்தரம்பிள்ளையால் பார்க்க முடிந்தது. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தாழ்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் உயர்சாதியினரால் புறக்கணிப்பவர்கள் அதே வேளையில் உயர்மட்ட உத்தியோகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இருந்தால் உயர்ஜாதியினர் அடங்கி தங்கள் காரியத்தைப் பார்ப்பார்கள்.

சுந்தரம்பிள்ளையை பொறுத்த விடயத்தில் சாண்டரா கொண்டு வந்த செல்லப் பிராணிகளுக்கு முன்னுரிமை அளித்து விடுவான். இந்த பாலியல் விடயம் அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமல்ல, வேலையிடத்தில் இந்த விடயங்கள் அவசியமற்றது என்பது சுந்தரம்பிள்ளையின் கருத்து. இதைவிட தன்னை லெஸ்பியன் என மறைக்காமல் சொல்லிய அவளது நேர்மையும் பிடித்திருந்தது. ஒரு முறை தியேட்டரில் ஆபிரேசன் செய்து கொண்டிருந்து போது உள்ளே வந்தததும் சுந்தரம்பிள்ளை சாண்ட்ராவின் மூக்கு வளையம் நன்றாக இருக்கிறது சொன்னதும் அங்கு வேலை செய்கு கொண்டிருந்த சாம் ‘சாண்ராவின் அடுத்த வளையத்தை நீங்கள் பார்க்கவில்லை. பார்க்காததால்தான் மூக்கு வளையத்தைப் பாராட்டுகிறீரகள்.’ பீடிகை போட்டான்

மர்மமான புன்னகை அவனது முகத்தில் மலை மேல் மழை முகில் என படிந்திருந்தது.

சுந்தரம்பிள்ளை பதில் சொல்லு முன்பு ‘அதைப் பற்றி பேசாதே பாஸ்ரட்’ என சாண்ட்ரா கூறிவிட்டு வாயைத் திறக்க முற்பட்ட சாமின் வாயை பொத்தினாள்.

சாண்டரா சராசரி பெண்களிலும் பார்க்க உயரமும் உறுதியான உடலும் கொண்டதால் சாம்மினால் அவளது கையை உடனே தள்ளி விடமுடியவில்லை. இரண்டு நிமிடங்கள் ஒருவரில் இருந்து ஒருவரை விடுவிக்க சிறிய மல்யுத்தம் ஆபிரேசன் தியேட்டரில் நடந்தது.

இருவருக்கு நடந்த இழுபறியால் மறைக்கப்பட்ட விடயத்தில் பெரிய சூக்குமம் இருப்பதாக தோன்ற, அதை அறிய சுந்தரம்பிள்ளையின் மனம் ஆவல் கொண்டது. நெக்ரரீன் பழத்தின் கொட்டையை விழுங்கி, அந்தக் கொட்டை வயிற்றில் அடைத்து மூன்று நாளாகிய பின்பு வைத்தியசாலைக்கு கொண்டு வந்த மால்ரீஸ் நாயின் குடலில் அந்த கொட்டையை வெளியே எடுப்பதற்காக் செய்த நாயின் வயிற்றை வெட்டி ஒப்பரேசனைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவனது கைகள் நாயின் வயிற்றின் உள்ளேயும் கண்கள் சாண்டராவிலும் இருந்தது

‘சரி நான் சிவாவுக்கு சொல்லவில்லை’ என சரணடைந்து சாம் சாண்ட்ரா பிடியில் இருந்து விலகினான்

‘கமோன் சாண்ட்ரா என்னிடம் என்ன மறைக்கிறாய்?. சாமுக்கு தெரிந்தது ஏன் ஏனக்கு தெரியக்கூடாது? என நாயின் குடலில் சிக்கிய நெக்ரரீன் கொட்டையைத் தேடியபடி

‘என்ன நாய் குடலையெல்லாம் வெளியால் எடுத்து போடுகிறாய்? என்றபடி மேசையின் அருகே வந்து நாயின் வயிற்றை உற்றுப் பார்த்தாள் சாண்டரா

‘நாயின் வயிற்றில் சிக்கிய நெக்ரரீன் கொட்டையை தேடுகிறேன். இது கடலில் மீன் பிடிப்பது போல் பொறுமையாக செய்யவேண்டும். நீ கதையை மாற்றாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்’ என சொல்லிக் கொண்டு இருந்த வேளையில் சுந்தரம்பிள்ளை யின் கைவிரல்கள் இரைப்பையில் இருந்து துவங்கி நாயின் குதம்வரையும் உள்ள குடலை மெதுவாக இரண்டாவது தடைவையாக வருடிக்கொண்டு வரும்போது நடுக்குடலில் தடிப்பாக அந்த கொட்டை பிடிபட்டது. மெதுவாக இழுத்து அந்த குடல் பகுதியை நாயின் மேல் விரித்த துணிமேல் பரப்பி விட்டு சாமிடம் விசேசமான குடல் இடுக்கியை எடுக்க சொல்லி அதனால் அந்த நெக்ரரீன் கொட்டை இருந்த பகுதியின் இருபக்கத்திலும் செருகிவிட்டு குடலை வெட்டத் தொடங்கினான். ஆவலாக அருகே வந்து கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சாண்ட்ரா ‘ஏன் வெட்டுகிறய்’? என்றாள்
‘இந்த கொட்டை அடைத்திருந்த பகுதி பழுதாகிவிட்டது. இந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும் இரத்தகுளாய்கள் உடைந்து விட்டதால் இந்தப் பகுதி இறந்து விடும். இந்தப் பகுதியை எடுத்தால் மட்டுமே இந்த நாய் உயிர் வாழும்’.

வெட்டிய குடலின் பகுதிகளை மீண்டும் ஒன்றாக தைக்கும் போது சாம் உதவி செய்தான். சாம் இப்பொழுது ஒப்பரேசனில் பங்கு பற்றியதால் சாணட்ரா குடலை தைப்பதற்கான உபகரணங்களை எடுத்து தருவது போன்ற மற்றய உதவிகளை செய்து கொண்டிருந்தாள். இரண்டு மணிநேரமாக நடந்த ஒப்பரேசனில் மூவரும் கவனம் செலுத்தியபடியால் ஒருவரும் அதிகம் பேசவில்லை. தைத்த குடலை சேலையினால் கழுவி வயிற்றுள் போட்டதும் சாம் மீண்டும் ‘சாணட்ரா அந்த வளையம் பற்றி சொல்லவில்லை’ என கிண்டினான். சுந்தரம்பிள்ளை தன் பங்குக்கு ‘சாண்டரா இந்த விடயம் எனக்குத் தெரியாவிட்டால் இந்த ஒப்பரேசன் செய்து இந்த நாயை காப்பாற்றிய திருப்தி எனக்கு கிடைக்காது.’

‘சாம் களிசறை . நீர் டீசண்டானவர்’ .

‘இதை அறிந்து கொள்ள நான் களிசறையாகிறேன்’

‘ஓகே போய்ஸ்’ என கூறிவிட்டு சத்திர சிகீச்சை மேசையின் அருகே வந்து தனது ஒற்றை முலையை இலங்கையில் வடமாகாணத்தில் அந்தக்காலத்தில் பஸ் ரிக்கட்டை கண்டக்டர் கொடுத்த போது வயதான பெண்கள் சிலர் மார்புக்குள் இருந்து மணிபர்ஸ்சை எடுப்பது போல் வலது கையால் இடது பக்கத்து முலையை வெளியெடுத்தாள்.

மிகவும் அருகாமையில் நடந்த விடயம் எதிர்பாராதது. சுந்தரம்பிள்ளைக்கு வாயில் எச்சில் காய்ந்துவிட்டது.இதயம் ஒரு முறை துடிக்க மறந்துவிட்டது. கையில் இருந்த ஆபரேசன் உபகரணங்கள் கையை விட்டு விலகின. இரண்டு அல்லது மூன்று விநாடிகள் மட்டும் நீடித்தது அந்த காட்சி மனத்தில் வண்ண படமாக பதிந்து விட்டது. பொன்னிற முலையின் சிவந்த காம்பில் அரை அங்குல விட்டத்தில் சிறிய வெள்ளி வளையம் மேல் கீழாக போடப்பட்டிருந்தது. அத்துடன் முலை காம்பின் மேல்ஓரத்தில் இருந்து மேல் நோக்கி சிவப்பு ரோஜா இரண்டு இலைகளுடன் மலர்ந்து இருப்பது போல் பச்சை குத்தப்பட்டிருந்தது. மனித குலத்தின் ஆதாரமானதும் அழகானதுமான அந்த இடத்தில் சிவப்பு பச்சையில் வண்ணம் தீட்டி வெள்ளியாபரணம் போட்டு மேலும் அழகு படுத்தி இருந்தாள்.

இப்பொழுகு சாம் ‘நான் பார்க்கவேண்டும்’ என பின்னால் இருந்து அருகில் வந்த போது முலையை மறைத்து விட்டு ‘ உனக்கு இல்லை’ எனக்கூறி விட்டு சாமின் முதுகில் ஓங்கி அடித்து விட்டு சான்ரா வெளியே சென்றாள்.

சுந்தரம்பிள்ளை அதிர்சியில் இருந்து மீண்டு அடி முடி ஆராச்சியில் இறங்கினான்

‘சாம் இதை எப்படி தெரிந்து கொண்டாய்?

‘சாண்ட்ரா வளையம் போட்டவுடன் வைத்திய சாலையில் வந்து தகவலை சொல்லியபோது நான் காட்ட சொன்னேன். வெகு சாதாரணமாக எனக்கு காட்டினாள்.’

‘சாணட்ரா எங்வளவு காலமாக இங்கே வேலை செய்கிறள்’?

‘ஐந்து வருடத்துக்கு மேலே’

‘தொடர்சியாக லெஸ்பியன் தானா? இல்லை இடையில் ஏற்பட்டதா?

எனக்கு தெரிந்தவரை இப்படித்தான் . நிலையாயான ஒரு பெண் துணை இல்லை. இதனால் பல விசித்திரமான சம்பவங்கள் இங்கே நடந்துள்ளது. லீசாவுக்கு சண்ட்ராவைக் கண்டால் பயம்.

‘ஏன் பயம்?

‘ஓரு நாள் பார்மசியில் லீசா குட்டையான சட்டை அணிந்தபடி கதிரையில் ஏறி உயரமான செல்புகளில் மருந்துகளை அடுக்கிக் கொண்டிருக்கும் போது அந்த வழியால் வந்த சாண்ரா ‘எவ்வளவு அழகான கால்கள்’ என சொன்னதை கேட்டதும் லீசாவுக்கு பயத்தில் கதிரையில் இருந்து விழ முயற்சித்தாள். இதைப்பார்த்து சாண்டரா லீசாயை விழாமல் பிடித்தாள். இந்தப் பிரச்சனை பெரிதாக்கி லீசா நிர்வாக குழு செயலாளரிடம் புகார் செய்தாள். பின்பு இருவரும் ஒருவரோடு வேலை செய்யக்கூடாது. நெருங்கி இருக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.

‘இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. நான் இப்படியான விடயத்தை கேள்விப்படவில்லை.’’

‘இன்னொரு கதையை கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். இந்த நாயையை மயக்கிவிட்டு சொல்கிறேன்’ என கூறிய சாம் ஒரு கரிய டோபமான் நாயை கொண்டுவந்தான். அதன் இடது பின்னங்கால்கள் இழுத்தபடி நடந்தது.

‘இதுதான் குறுசியேற் லிகமென்ரை அறுத்த நாய்’

‘இதைத் தொடங்கினால் இன்று மாலை முடிக்க முடியுமா’? என கேட்ட படி சுந்தரம்பிள்ளை முன்கால் இரத்த குளாய் வழியே மயக்க மருந்தை செலுத்தி விட்டு அந்த காலில் சோதனை செய்தான். வழக்கப்படி அந்த லிகமென்ற் அறுந்தால் தெரியும் முழங்கால் ஈடாட்டம் அந்த மூட்டில் தெரிந்தது.

அந்த டொபமானை மேசையில் கிடத்தி மயக்க வாயுவையும் ஒட்சிசனையும் கொடுத்கு விட்டு நான் அந்த முழங்காலை வெட்ட தொடங்கியதும் சாமுக்கு அதிக வேலை இல்லை. மயக்க மருந்தின் ஆழத்தையும் சுவாசம் சீராக நடக்கிறதா என பார்பதுதான். அதைக்கூட செய்வதற்கு மெசின் இணைக்கப்பட்டு இருப்பதால் சாம் சுந்தரம்பிள்ளைக்கு கதை சொல்வதைதான் பெரும்பாலும் செய்து கொண்டிருந்தான் இலங்கையின் வட பகுதியியில் சுருட்டு தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இராமயணம், பாரதம் படிக்க என ஒருவர் ஒவ்வொரு கொட்டிலுக்கும் இருப்பார்கள். இங்கு சாம் அது போல் சாம் சாண்டராவின் கதையின் இரண்டாம் பாகத்தை தொடங்கினான்.

‘வைத்திய சாலையில் உள்ளவர்களில் பல பேர் கடந்த வருடம் நத்தார் பண்டிகையைக்கு முந்திய நாள் நோரேலின் வீட்டில் விருந்து வைத்தார்கள். பல வகையான மது பானங்களும் பரியாறப்பட்டது. நடந்த விருந்தில் பங்குபற்றிய சில பேர் கஞ்சாக்காரர். விருந்தின் முடிவில் அங்கு சிலர் எழும்ப முடியாமல தங்கிவிட்டார்கள். இதின் நொரேலின் தம்பி குடிவெறியில் பக்கத்தில் படுத்து கிடந்த சாண்ராவோடு உடல் உறவு கொண்டுவிட்டான். விடியத்தான் விடயம் சாண்ராவுக்கு தெரிந்ததும் அவனை கடிந்து விட்டு, ஒரு கிழமையாக வேலைக்கு வரவில்லை. எவருடனும் தொலைபேசித் தொடர்பு வைக்கவில்லை. அவளது நண்பர்கள் சாண்ராவை தேடி வீட்டுக்கு போன போது வீட்டை பூட்டிக்கொணடு இருளில் கட்டிலில் படுத்திருந்ததாக கூறினார்கள். அந்த ஒரு கிழமை சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு உயிர் வாழ்ந்ததாக தெரிகிறது. அதன் பின்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வைத்தியம் நடந்தது. அதிர்சியில் இருந்து மீண்டு வருவதற்கு சாண்டராவுக்கு சிலகாலம் சென்றது.’

‘நொறேலின் தம்பிக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா?’

‘இது வன்முறையாக நடந்தது அல்ல. கஞ்சா மற்றும் மதுவெறியில் இருவரும் இருந்தாலும் ஓரளவு சாண்ராவின் சம்மதம் இருந்ததாக அவன் கூறினான்.’

‘அப்ப என்ன பிரச்சனை இதில்.’

‘லேஸ்பியனாக இருந்த சாண்ராவால் தனது தவறை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆண் தொடர்பை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி தண்டனையை அளித்து இருப்பதாக மனவியலாளர் கூறியதாக கேள்விப்பட்டேன்.’

‘இது ஒரு சிக்கலான மனநிலை. இதை நாங்கள் புரிந்து கொள்வது கடினம்.’

சாண்டராவின் கதையை கேட்டபடி சுந்தரம்பிள்ளை மாலை நேரத்தில் அந்த டோபமானின் முழங்கால் மூட்டை சத்திர சிகீச்சையால சரிப்படுத்தி முடிக்கும் போது மீண்டும் சாண்டரா வந்தாள்

‘எப்படி நண்பர்களே’ என மகிழ்வுடன் கேட்டபடி வந்து அந்தப் பெரிய டோபமானை மேசையில் இருந்து இறக்க சாமுக்கு உதவி செய்தாள்.

‘என்ன சாண்ரா இன்று எங்களுடன் டின்னருக்கு வருகிறாயா? என கேட்டு சாம் கண் சிமிட்டினான்.

‘’நேரமில்லை.இன்று நான் ஒயிஸ்ரர் பாருக்கு போகிறேன்.’

‘அதென்ன விசேடம் அந்த பாரில்’ என்றார் சுந்தரம்பிள்ளை

‘அது மெல்பேனில் லெஸ்பியன்கள் போகும் பார்’ எனக்கூறி சிரித்தான் சாம்

அவுஸ்திரேலியாவில் சிட்னியும் மெல்பேனிலும் ஒரு பால் உறவுகளில் ஈடுபடுவர்களுக்காக தனியாக கபேக்களும் பார்களும் உண்டு. மற்ற நகரங்களிலும் நாட்டுப்புறத்திலும் இருந்து இளைஞர்களும் யுவதிகளும் சிட்னி மேல்பேனுக்கு வேலை தேடி வருவார்கள். சட்டரீதியாக இவர்கள் பாதுகாக்கப்பட்டாலும் மறைமுகமான புறக்கணிப்பு உண்டு. இரவுகளில் இரு ஆண்கள் கைகோரத்துக் கொண்டு சென்றால் அவர்கள் மற்றய இளைஞர்களால் கேலிக்குள்ளாகி அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாவது நடக்கும். பெண்களது லெஸ்பியன் உறவு ஒப்பீட்டு அளவில் பொறுத்துக்கொள்ளப்படுகிறது.

வைத்தியசாலையில் வேலை செய்பவர்களில் ஒருபால் உறவு உள்ள ஆண்கள் இருந்தாலும் தங்களை இனம் காட்டுவதில்லை. பெண்களில் சாண்ரா மற்றும் புதிதாக வந்து சேர்நத டாக்டர் ஜசிக்கா மட்டுமே வெளிப்படையாக தஙகளை வெளிக்காட்டிக் கொள்பவர்கள்..

சாண்டராவுடன் சாமும் சுந்தரம்பிள்ளையையும் அந்த ஒயிஸரபாருக்கு செல்லத் தயாராகினார்கள். ஆரம்பத்தில் சாண்ரா மறுத்துவிட்டாள். ‘உங்களை கொண்டு சென்றால் எனது நண்பர்களுக்கு பிடிக்காது. நீங்கள் எல்லாம் ஸ்ரெயிட்டானவர்கள். உங்கள் நடத்தை உங்களை காட்டிக்கொடுத்து விடும். சாம் அங்கு வந்து லெஸ்பியன் பெண்களை தன்னுடன் டேற்றுக்கு கூப்பிடக்கூடியக் கூடிய ஒரு காவாலி. எனது பெயர் கந்தலாகிவிடும்’ என்றாள்.

‘கமோன் சாண்ட்ரா அந்த கிளப்புக்கு ஸ்ரெயிட்டானவர்கள் போகக் கூடது என எந்தக் சட்டமும் இல்லை. நீ முன்னால் போ, நாங்கள் பின்னால் வருகிறோம். நீ எங்களை தெரியாது என்று சொல்லு’ என்றான் சிறிது கோபமாக.

சாண்ராவுக்கு முகம் களையிழந்து போய் விட்டது. இரண்டு கைகளையும் சுவரில் வைத்துக் கொண்டு சுவரை பார்த்தபடி சில வினாடிகள் நின்றாள். ஏதோ குற்றம் செய்து விட்டவள் போல் தனக்குள் உணர்ந்து விட்டாள் என்பதை அவளது உடல் மொழி காட்டியது.சாமின் வார்த்தைகள் அவளைப் பாதித்துவிட்டது.

மவுனமாக சில நிடங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாக‘மன்னிக்கவும் நண்பர்களே. உங்களை கூட்டி செல்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.நீங்கள் அமைதியாக நடக்கவேண்டும்.’

‘எங்களுக்கும் ஒரு விண்ணப்பம் உள்ளது’ என்றான் சாம்

‘என்ன’?

‘நாங்கள் ஒயிஸ்ரர் கிளப்புக்கு வந்த விடயம் இங்கே ஒருவருக்கும் தெரியக் கூடாது.’

‘ஓகே அப்படியானால் என்னை இந்த வைத்தியசாலையின் வாசலில் இரவு ஏழு மணியளவில் சந்திக்கவும்.’

—-
ஓயிஸ்ரர் கிளப்புக்குக்கு வருவதாக சுந்தரம்பிள்ளை சொன்னாலும் அவன் மனத்தில் பயம் தொற்றிக் கொண்டது. இப்படி ஒரு கிளப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு போக முடியாது. சொல்லாமல் சென்று விட்டு இரவு வீடு சென்று ஓவர்டைம் செய்தாதாக பொய் சொல்லவேண்டும். அவுஸ்திரேலியாவுக்க வந்த மூன்று வருடங்களில் சாதாரண நைட் கிளப்புகளுக்கே போன அனுபவம் இல்லை. மெல்பேன் நைட்கிளப்புகளுக்கும் இரவுக் கேளிக்கைகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும் என்பதை அறிந்தே இருந்தாலும் புலம் பெயர்ந்த பின்பு சாதாரண வாழ்க்கை தொடக்குவதே கடினமாக இருந்த போது இப்படியான கேளிக்கைகளுக்கு நேரமும் பணமும் இருக்கவில்லை. பெரும்பாலான புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை அவுஸ்திரேலியா போன்ற புகலிடங்களில் நுனிக்கரும்பை சுவைப்பது போல்தான். பலருக்கு அடியில் சுவையான பகுதி இருப்பது தெரியாத அப்பாவித்தனமாக இருப்பார்கள் .புலம் பெயர்ந்த வாழ்வு ஒரு விதத்தில் ஆழமான கடல் விழுந்தவனது நிலை போல் தொடர்ச்சியாக கால் கைகளை அடித்துக்கொண்டிருந்தால்தான் மிதக்க முடியம். அழகிய சுண்ணாம்பு பாறைகளும் வண்ண வண்ண மீன்களும் விலைமதிபற்ற முத்துக்களும் அந்தக் கடலில் நிறைந்து இருப்பது அவர்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சாண்ராவிடம் வேடிக்கையாக கேட்ட ஒரு விடயம் இப்படி விபரீதமாக மாறிவிட்டது.அவளும் சீரியாசாக இதை எடுத்து ஒப்புக் கொண்டுவிட்டாள். சாம்மால்தான் இதெல்லாம் வந்தது. ரொப் லெஸ் பாருக்கு சென்ற பின் வேலை இடத்தில் தெரிய வந்தது மாதிரி இதுவும் தெரிய வராது என்பது என்ன நிட்சயம்?. இதை வைத்துக்கொண்டு ரிம் பாட்தோலியஸ் போன்றவர்கள் வாயை மெல்லப் போகிறார்கள் என்பதும் வயிற்றில் புளி கரைத்தது. இதே வேளையில் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் ஒப்புக் கொண்ட ஒரு விடயத்தில் இருந்து பின் வாங்குவது கோழைத்தனம் என்பதும் அத்துடன் புதியதை தெரிந்து கொள்ளும் ஆவலும் சேர்ந்து தயக்கத்தையும் பயத்தையும் பின் தள்ளவிட்டது.

மூன்று பேரும் ஒன்றாக காரில் அந்த மெல்பேனின் பிரதான நகர பகுதியில் உள்ள அந்த கிளப்பை அடைந்த போது மெதுவாக தூறல் விழுந்தது. இரவு நேரமானதால் கூட்டத்திற்கு குறைவில்லை. நைட்கிளப்புகள் உள்ள பிரதேசமானதால் இளையவர்கள் கூட்டத்தையே பார்க்க முடிந்தது.ஒரு நகரம் பகலிலும் இரவிலும் விளித்திருக்கு போதுதான் முழுமை பெறுகிறது. சில நகரங்கள் அலுவலகங்களை மட்டும் கொண்டதால் மாலையானதும் வெறித்து விடுகின்றன. இப்படியான இடங்கள்ளில் இரவில் நடமாட முடியாது போய்விடுகிறது. அப்படி வெறிச்சோடி விடுகிறது. பெரிய கடைகள், அலுவலகங்கள், நைட் கிளப்புகள், ஹோட்டேல்கள் எல்லாம் ஒருங்கே அமைந்திருப்பதும் அதற்கேற்றபடி பஸ், இராம் என வாகன வசதிகள் பொது மக்கள் போய்வரக் கூடியவிதத்தில் மெல்பேன் உள்ளது. முதலாவது பாராளமன்றம் உருவாகி கால் நூற்றாண்டுகளாக அவுஸ்திரேலியாவின் தலைநகராக இருந்ததும் இதற்கு காரணமாகும்.

காரை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு கிளப்பை நோக்கி சென்ற போது வாசலில் உள்ள பவுன்சர் சாண்ராவை பார்த்து சிரித்து விட்டு சுந்தரம்பிள்ளை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை சுந்தரம்பிள்ளை சுரண்டி நேரடியாக உனக்கு இங்கு என்ன வேலை எனக் கேட்பது போல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை இந்தியனாக தோற்றமளிக்கும் ஒருவன் இப்படியான கிளப்புக்கு வருவது முதல் முறையாக இருக்கலாம்.

ஒடுங்கிய, இருளான பாதையில் சிறிய படிககளால் மேலே சென்றடைந்ததும் அங்கே வலது புறமான இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த பெண்ணிடம் ஆளுக்கு தலா ஐந்து டாலரை கொடுத்ததும், வலது கையில் முழங்கைக்கு கீழே ஒரு மை தோய்த்து கொண்ட முத்திரை இட்டாள். அதில் அந்த கிளப்பின் பெயர் எழுதி இருந்தது. அது பணம் கொடுத்ததற்கான அடையாள முத்திரை. பணத்திற்கு பற்றுசீட்டு கொடுக்காமல் இப்படி முத்திரை அடையாளம் கடுதாசிகளை மிச்சப்படுத்தி மரங்களின் சிதைவைக் குறைக்கும் அதே வேளையில் பணம் பெற்றதற்கான பற்றுசீட்டு இல்லாதது அரசாங்கத்திற்கு வரி கட்டுதலையும் மிச்சப்படுத்தும்.

உயரமான படிகளில் மேலே சென்றதும் அந்த கிளப் இருந்தது. புதன்கிழமையானதால் அதிக கூட்டம் இல்லை. பத்துக்கு குறைந்த ஆண்களும் பெண்களுமாக இருந்து குடித்தார்கள். சிலர் உணவை உண்டார்கள் ஒரு புறத்தில் சிறிய மேடை இருந்தது. அது நிகழ்சிகள் நடத்தும் இடம் ஆனால் அப்பொழுது வெறுமையாக இருந்தது. அதற்கு இடது பக்கததில் மதுபானம் விற்கும் பார் இருந்துது. அங்கு சென்று ஆளுக்கு ஒரு கிளாஸில் பியரை வாங்கி வந்து காலியாக இருந்த இடத்தில் மூவரும் உட்கார்ந்த சில நிமிட நேரத்தில் போது ஒரு இளம் பெண் வந்து சாண்ராவை கட்டி அணைத்து உதட்டோடு முத்தம் கொடுத்தாள். பெண்ணுக்கு ஆண் கொடுக்கும் முத்தத்தில் எவ்வளவு ஆசையிருக்குமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் மெதுவான சத்தத்தோடு இச் இச் என பொறாமைப்படும்படி இருந்தது.

இருபது வயதைக் காட்டும் வட்டமான முகத்துடன் அவள் காதிலும் கழுத்திலும் வெள்ளி வளையங்கள் போட்டிருந்தாள். தலைமயிரை குறப்பாக வெட்டி இருந்தாள். அவளது உடல் அளவுக்கு மேல் உப்பியிருந்தது. கடவுள் கழுத்ததை வைக்க மறந்து விட்டது தெரிந்தது. இரண்டு பருத்த மார்பகங்கள் எப்பொழுதும் மேற்சட்டையை விட்டு வெளியே வரத் தயாராக இருப்பது போல் அவள் உடை இருந்தது.. அவளது உடல் அங்கங்கள் அனைத்தும் அவள் அணிந்திருந்த உடைகளை எதிரியாக நினைத்து சுதந்திரத்தை தேடித் திமிறின. மெலிசா என்று மெதுவாக கூறிவிட்டு அவளைக்கு சாண்ரா சாமையும் சுந்தரம்பிள்ளையையும் தன்னுடன் வேலை செய்பவர்கள் என அறிமுகப்படுத்தினாள். நான்கு பேரும் பியர் அருந்தும் போது சங்கீதம் தொடங்கியதும் சாண்ராவின் கைகள் அந்த பெண்ணின் இல்லாத இடுப்பை தேடி வளைத்ததது. சாம் முகத்தை திருப்பிக் கொண்டு சுந்தரம்பிள்ளையின் காதில் ‘ஆண்களின் அதிஸ்டம் மெலிசா லெஸ்பியனாக இருப்பது’ என்ற போது கெவி மெட்டல் சங்கீதம் அந்த இடத்தை புயல் போல் வந்து நிறைத்தது. இதற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் போல் பலர் ஆடத் தொடங்கினார்கள்.

சங்கீதம் இப்பொழுது உச்சத்தை அடைந்தபோது பலர் இணைந்து பிணைந்து ஆடத் தொடங்கியதும் ‘நண்பர்களே, எங்கள் பியரை பார்;த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சாண்ட்ராவும் நடனமாட சென்றுவிட்டாள். இருளாக இருந்தாலும் அந்த ஹாலின் மேலே தொங்கிய கண்ணாடி குமிழின் சுழலும் வெளிச்சத்தில் அங்கு ஆண்களும் ஆண்களும் பெண்களும் பெண்களும் முத்தமிட்டபடி ஆடுவது தெரிந்தது. சுந்தரம்பிள்ளைக்கு சிரிப்பு வந்தது. அதை பார்த்து விட்டு சாம் ‘இன்று இங்கு வந்தது தவறு. என்னால் இதை பார்க்க முடியாது. அருவருக்கிறது.’ என கூறிவிட்டு எழுந்தான். ஏற்கனவே அவனது மன நிலை புரிந்த சுந்தரம்பிள்ளைக்கு அது வியப்பாக இருக்கவில்லை.

‘கொஞ்சம் பொறு. இந்த பாட்டு முடிய சாண்ரா வந்ததும் போவோம்.’

இரு இளைஞர்கள் வந்து அந்த ஹலோ சொல்லி விட்டு மேசையில் எதிரே இருந்தனர் அவர்களை சாம் பொருட்படுத்தவில்லை. அவர்கள் சிரித்தபடி சுந்தரம்பிள்ளையிடம் நாங்கள் பியர் உங்களுக்கு வேண்டுவதாக கூறியதும் சுந்தரம்பிள்ளை இப்பொழுது குடித்தாக மறுத்தான்;. அவர்களில் ஒருவர் சுந்தரம்பிள்ளையின் தோளில் கை வைத்தபடி சிரித்தார். அந்த சிரிப்பு சுந்தரம்பிள்ளைக்கு பிடிக்கவில்லை. மெதுவாக அவனது கையை தனது தோளில் இருந்து எடுத்தார். அந்த விலக்கப்பட்ட கை தோளில் இருந்து விலகி முதுகை நோக்கி சென்ற போது அந்த கையை சாம் பிடித்து பலமாக முறுக்கினான். அவனது காதில் ‘பாஸ்ரட் நாங்கள் உன்னைப் போல் புவ்ரா இல்லை.|

அவன் வலியால் குனிந்தபடி மன்னிப்பு கேட்டான் . ஆனால் சாம் கையை விடவில்லை

‘சாம் அவனது கையை விடு’என சுந்தரம்பிள்ளை விடுவித்த போது மேசையில் இருந்த பியர்கள் தட்டுபட்டு சிதறியது. நல்ல வேளை கிளாசுகள் நிலத்தில் விழவில்லை. இருளில் நடந்ததால் இந்த சம்பவம் ஒருவரதும் கவனத்தை ஈர்க்கவில்லை.

‘இந்த இடத்தை விட்டு நாம் வெளியேறி அடுத்த தெருவில் இருக்கும் பெண்கள் நடனமாடும் கிளப்புக்கு செல்வோம். இங்க நாம் வந்தது வீண்’ என கூறிவிட்டு சுந்தரம்பிள்ளையின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான் சாம். சுந்தரம்பிள்ளையை பொறுத்தவரை சாண்டராவை தேவையில்லாமல் வலியுறுத்தி இந்த கிளப்புக்கு வந்தது ஆரம்பத்திலே பிடிக்கவில்லை. இப்படியான விடயத்தில் சாமை குருவாக நினைத்ததால் எதிர்ப்பு கூறாமல் வந்தது தவறு . அதிலும் இந்த விடயம் தேவையில்லாமல் நடந்தது என எண்ணியபடி பேசாமல் சாமை பின் தொடர்ந்தான்

ஆண்களுக்கான பிரத்தியேகமான கிளப்பிற்கு அதிக தூரம் நடக்க வேண்டிஇருக்கவில்லை . அடுத்த வீதியில் அமைந்திருந்தது. மாலைநேரத்தில் இருந்த மழைத் தூறல் நின்று விட்டது. இந்தக் கிளப்புக்கு செல்லும் பாதை வெளிச்சமாகவும் அதிக கூட்டமாக இருந்தது. மேலும் வாசலில் நின்ற பவுன்சர் எந்த வித்தியாசமான பார்வையும் பார்க்கவில்லை. மனத்தில் தயக்கமற்று, சாவகாசமாக உள்ளே சென்ற போது ஆண்களுக்கு மட்டும் பிரத்தியேகமான அந்த கிளப்பிலும் கட்டணத்தை வசூலித்துவிட்டு உள்ளே செல்லவிட்டார்கள். சிறு மேடையின் மத்தியில் உள்ள கம்பில் பெண் மார்பு , இடுப்பு கச்சை மட்டும் அணிந்து நடனமாடிக் கொண்டிருந்தாள்.அங்கும் சென்றது சாமின் கண்கள் அகல விரிந்து முகம் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ஒரு வாய் பியரை உறிஞ்சி காய்ந்த உதடுகளை நனைத்து விட்டு ‘இதை விட்டு விட்டு ஒருமணித்தியாலத்தை வீணாக்கி விட்டோம். எவ்வளவு அழகான உடம்பு’ என அந்த ஆடும் பெண்ணைப் பார்த்து கூறினான். சாமை போல் பேச கூச்சப்பட் சுந்தரம்பிள்ளை சிரித்தபடி கண்ணால் அந்தப் பெண்ணை கட்டி அணைத்தபடி ஆட்டத்தின் முடிவில் இடுப்பு கச்சையை கழற்றும் தருணத்துக்காக காத்திருந்தான். அவள் ஆட்டத்தின் போது மேடையின் அருகே வந்த போது அருகில் இருந்தவர்கள் டாலர் நோட்டுகளை இடுப்பு கச்சையில் செருகினர். அப்படி செருகியவர்கள் அருகே சென்று உடலை உராய்வதும் அவர்கள் மடியில் இருப்பதுமாக அவர்களது பணத்துக்கான சேவையை செய்தாள். அவளது உடலில் தொட முயன்ற சிலரை கைகளை சிரித்தபடியே இலாவகமாக விலக்கினாள்.

சாம் இவள் எப்பொழுது இடுப்புக் கச்சையை கழட்டுவாள்? எனக்கூறிக்கொண்டு கையில் உள்ள வாச்சைப் பார்த்தான்.

சாம்முக்கு சிறு குழந்தையுண்டு. மாலையில் வேலை முடிந்த பின் குழந்தையை பராமரித்தால்தான் மனைவியால் சமைக்க முடியும்.; சாமின் மனைவி இளம் வயது மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதால் ஒழுங்காக சமைக்க கூட தெரியாது என சொல்லி இருந்தான்.

‘சாம் போவோமா?’

‘இல்லை இவள் இடுப்பு கச்சையை கழட்டிய பின்பு போவோம்.

‘அவள் கழட்டின பின்பு போனால் உனக்கு சாப்பாடு கிடைக்காதே?’

‘இன்று பிற்சா எடுத்துக் கொண்டுதான் வீட்டுக்கு போக வேண்டும்’

ஆணின் மனதில் இப்படியான சிந்தனைகள் கம்யுட்டரில் பரோகிராம் செய்யது போல் இருக்கின்றன. மறைப்பதும் மறுப்பதும் போலித்தனமாகிவிடுவது மட்டுமல்ல அப்படி செய்யும் போது வக்கிரமானவர்களாக பலரை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது ஒரு இளம் பெண் மார்பிலும் இடுப்பிலும் கச்சை மட்டும் அணிந்தபடி பார்வையாளர் மத்தியில் வந்து சாமுக்கும் சுந்தரம்பிள்ளைக்கும் இடையில் நாற்காலியையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். அவளது மேனியில் வேர்வையின் ஈரம் காயாது இருந்தது. உருக்கிய தங்கத்தில் குளித்து விட்டு ஈரம் எடுக்காமல் வந்தவள் போல் காட்சியளித்தாள். தற்பொழுது நடனமாடும் பெண்ணுக்கு முன்பாக இவள் ஆடி இருக்கலாம். அவளது உடலில் எந்த இடத்திலும் அளவுக்கு மீறிய தசைப்பிடிப்போ வயிற்றில் மடிப்போ தெரியவில்லை. மார்புகள் தெறித்து விழுவது போல் இருந்ததை பார்க்காமல் இருக்க எந்த ஆணாலும் முடியாது.

குழைந்த குரலில் ‘நண்பர்களே உங்களுக்காக நான் தனிமையில் நடனமாடி எனது மார்பு கச்சையையும் இடுப்பு கச்வையையும் கழட்டுவேன். அது உங்களுக்கு வேணுமா?’

‘அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும்’என்றான் சாம் சிரித்தபடி

‘இருபது டாலர்கள் மட்டுமே’

‘தொடமுடியுமா. நான் ஹோனி மூட்டில் இருக்கிறேன்’ என பர்சை திறக்க முயற்சித்தான்.

‘கட்டாயமாக தொடமுடியாது ,நோட்டி போய்’ என்று சாமின் தலையில் செல்லமாக குட்டினாள்.

‘எவ்வளவுக்கு பணம் கொடுத்தால் தொடமுடியும்?’

‘தற்போதைக்கு எவ்வளவு கொடுத்தாலும் முடியாது. எனது போய் பிரண்தான் இந்த கிளப்பின் மனேஜர்’ என சாவகாசமாக கூறினாள்.

‘இப்பொழுது நடனமாடும் பெண் இடுப்பில் இருந்து கச்சையை கழட்டியபின் உனது விடயத்தை யோசிக்கிறேன்’ என்றதும் அந்தப் பெண் எழும்பி சென்று விட்டாள்

அந்த நேரத்தில் மேடையில் ஆடிய பெண் இடுப்பு கச்சையை கழற்றி சுற்றி இருந்தவர்களை நோக்கி எறிந்து விட்டு அந்த கம்பத்தை சுற்றி வேகமாக சுற்றினாள். பலரது கூக்குரலில் உச்சஜதியில் எழுந்து அங்கு நிரம்பி இருந்த சங்கீதத்தை அமிழ்த்தி விட்டது.

அடுத்த பெண் ஆடுவதற்கு பதினைந்து நிமிடங்களாவது செல்லும். அவள் ஆடத் தொடங்கினால் எழும்புவதற்கு மனம் வராது. அப்படியாக இங்கு இருந்தால் இன்று இரவு சாப்பாடு கிடையாது என சாம் சுந்தரம்பிள்ளையை அழைத்தபடி வெளியே வந்தான் வந்தான். சுந்தரம்பிள்ளை சுயநிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் எடுத்தது.

‘சாம் இந்தப் பெணகள் தங்களது அழகை முதலாக்கி பணமாக்கிறார்கள். அதே வேளை ஆண்களை எப்படி கையாளுவது என்பதும் புரிந்திருக்கிறது.’

‘அதை விட இந்த மாதிரியான கிளப்புகளை நடத்துவது மெல்பேன் அண்டவேல்ட்டை சேர்ந்தவர்கள். கறுப்புபபணத்தை வெள்ளையாக்க இந்த கிளப்புகள் பயன்படும்.’

‘உண்மையாகவா?’

‘நான் கேள்விப்பட்டது’ என சாம் கூறியபோது வீட்டில் என்ன பொய்யை காரணத்தை சொல்லலாம் என சுநதரம்பிள்ளையை சிந்திக்க தொடங்கிவிட்டான். அப்போது இவ்வளவு நேரமும் மனத்தில் மோதியபடி இருந்த காம உணர்வு முற்றாக விடைபெற்று விட்டது.

—–

வெளிப்படையான சாண்ட்ராவின் பேச்சும் நடத்தையும் சுந்தரம்பிள்ளைக்கு பிடித்திருந்து. ஒளிவு மறைவு இல்லாமல் நட்புறவோடு இனிமையாக பழகும் சாண்டிரா வைத்தியசாலையை விட்டு சென்றது சாமுக்கும் கவலையை அளித்தது. அன்று மதியம் சுந்தரம்பிள்ளையும் சாமும் மதுசாலைக்கு சென்று பியரை அருந்தும் போது சண்டிராவின நட்பை மடடுமல்ல அவளோடு தொடர்பான சம்பவங்களையும் இரை மீட்டினர். வைத்தியசாலையில் பலர் சாண்டரா ஒரு பெண்ணாகப் பார்காமல் இரண்டும் கெட்டானாக பார்த்ததால் அவள் வைத்தியசாலையை விட்டு விலகியது அவர்களுக்கு மனத்தில் நிறைவைக் கொடுத்தது. சாண்டராவின் வேலையை புதிதாக ஒருவர் செய்ததால் வைத்தியசாலைக்கு அவளது இராஜினாமா பாதிப்பை கொடுக்கவில்லை. அறுபது வருடத்திற்கு மேலாக இயங்கும் இந்த வைத்தியசாலையை எவரது இழப்பும் பாதிக்காதது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.