- டானியல் ஜீவா -பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31

1 தவிப்பு - - டானியல் ஜீவா -

என்னெண்டு தெரியல நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற  மசிலி இறிகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ...  கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது.  குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காரி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் ரியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊரில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இஇருக்குது என்று என் மனம் சொல்லியது.

தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன்.  ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.

”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்¡£ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.

”நேற்று நீங்க வேலை தேடப் போய்ற்றேங்க எண்டுதான் சொன்னனான். அதுக்கு அவள் என்னைத் தீண்டு போட்டாள். நீங்க வேலை தேடப் போறதில்லையாம், ஊர் சுற்றிப் போட்டு சாப்பாட்டு நேரம் பார்த்து வாறியளாம் எண்டு கவிதா சொல்லுறாள். கல்யாண றெஜிஸ்ரேசன் வருகிற திங்கக்கிழமை ஸ்காபரோ ரவுண் சென்ரலில பதிவு செய்கிறதாம். கல்யாணம் மா¢யகொறற்றி சேச்சிலை ஒழுங்கு பண்ணியிருக்கிறாளாம். கல்யாணக்காட்டு அடிக்கிறதுக்கு பரடைஸ் அச்சகத்தில குடுத்திட்டாளாம். என்னமோ எனக்கு பயமாக இருக்குது. தம்பி உன்ர போக்குக்கும் அவளின்ர போக்குக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், நான் குறுக்கிட்டு,

”இதெல்லாத்தையும் என்னோடு கதைச் சிருக்கலாம்தானே.... அவ ஏன் என்னோட முகம்விட்டு கதைக்கிறாவில்ல நான் என்ன அவவ திண்டா போடுவன்...?”

”தொண்ணூறு நாட்களில்ல ஏதாவது செய்தே ஆகனும். இல்லையென்றால் அது பெரிய சிக்கலில வந்து முடியும்.” மாமி சொல்லும் போதே கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.

அச்சம் படர்ந்த பார்வையோடு மாமியின் முகத்தைப் பார்த்தேன். பாவம் மனிசி. ஒரேயொரு பிள்ளை. நல்ல அழகான பெயர் கவிதா. நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகுது. ஒரு நாள் கூட குண்டி குத்தி இருந்து, என்கூட கதைச்சது கிடையாது. எங்கட வீட்டாரும், மாமியும் விரும்பித் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணினவிய, என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம்தான் இந்த உறவு தொடங்கி, எனக்கு நல்லாய் நினைவுகூட இருக்கு. மன்னாரிலே பனங்கட்டிக் கொட்டிலில் அகதியாய் அம்மமாக்களோடு இருக்கக்கேல ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் எண்டு நினைக்கிறேன். மாமி ரெலிபோன் எடுத்து அம்மாக்கிட்ட கல்யாணம் சம்மந்தமாக கேட்டா. அம்மா என்னட்ட கேக்காமலே ஓமெண்டு சொல்லிப்போட்டா.... வெளிநாட்டுச் சம்மந்த மல்ல! அதுமட்டுமல்ல அம்மா சொல்லுத் தட்டாத பிள்ளையல்ல. நான், எப்படியோஇங்க வந்து சேர்ந்துட்டன். வாழ்வுதான் திசை தெரியாமல்இருக்கிறது. கவிதாவை கல்யாணம் செய்வதா....? நினைக்கவே மனசு எரிச்சல அடைகிறது. வாழ்வின் நெளிவு சுழிவு தெரியாத எனக்கு, வாழ்க்கைத் துணைவியாய் வருபவள்..? எந்தக  கோணத்தில் பார்த்தாலும், அவளின் அந்நிய கலாச்சாரத்துக்குள் என் மனம் அடங்க மறுக்கிறது. நெஞ்சு நொந்து சுருங்குகிறது.

”தம்பி என்ன மோன கடுமையாய் யோசிக்கிறியள்?” மாமி கேட்டதும் நினைவிலிருந்து சுயத்திற்கு வந்தேன்.

”என்ன தம்பி எத்தனை நாளாய் போய்ச்சு....ஒருநாள் கூட மனம் திறந்து கதைச்சது கிடையாது. வேலைக்கு போறாள், வாறாள், சாப்பிறாள், தன்ர பாட்டில போய் நெத்திர கொள்ளுறாள். விடிய எழும்பினா வேலைக்கு போறாள். இதென்னெண்டு ஒண்டுமா புரியல....? இங்க என்ன தம்பி....பெரிய மனுசங்க எண்டு யாரையும் மதிப்பதில்லை. எத்தனை தாய் தேப்பன்மார் பெத்துப்போட்ட பிள்ளைகளை நினைச்சு கண்ணீர் வடிக்கிறாங்க....நான் என்னால ஆனமட்டும் அவளுக்கு புத்திமதி கூறிப்போட்டேன் அவளும் கிறுங்கிற மாதிரி தெரியல....”

சற்று மெளனித்து விட்டு மீண்டும் தொடங்கினா...

”கல்யாணம் பேசும் போதே இவள் விருப்பமில்லையெண்டு சொல்லிந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது. இப்ப என்னண்டால் நீங்க வந்த பின்ன மூஞ்சியைக் காட்டிக் கொண்டு திரியிறாள். என்ர இவர் இருந்திருந்தாலும் ஏதாவது சொல்லிக்கில்லி ரிக்கட்டிப் போடுவார். அவரை கோதாரியில வீழந்து போன, பிரண்டு போன, இந்தியன் ஆமிக்காரன் கடலுக்கு போய்விட்டு வரக்கில சுட்டுப் போட்டானுங்க. அதிலயிருந்து ஊரக்குள்ள இருக்கவே பிடிப்பில்லாமல் போய்ச்சுது. எனக்கு அப்பதான் கவிதா ஸ்பொன்சர்  பண்ணி எடுத்தவள். வந்ததிலிருந்து ஒருதாய் எண்டு என்ன மதிச்சு நடந்தது கிடையாது. என்ன செய்யிறது. “..தென்னையைப் பெற்றால்இளநீரு, பிள்ளையப் பெற்றால் கண்ணீரு என்று தெரியாமல்தானா பாடினாங்க...” மாமியின் கண்கள் கலங்கியது. நான் கண் வெட்டாது, மாமியின் பேச்சையே உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால மாமி விம்மி....விம்மி அழத்தொடங்கினா. அழுது கொண்டே...

”என்ர இவர் தங்கப்பவுண். நான் கல்யாணம் செய்யிறத்து முதல் அவர்கூட பேசியதே கிடையாது. ஒரு முறையில் பார்த்தால் அவர் சொந்தம் தான். எங்கட வீட்டுக்காரரும், அவங்கட வீட்டுக்காரரும் பேசித்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க நான் கூட பெரிசாப் படிச்சது கிடையாது. இவர் களங்கண்ணி வலைத் தொழில் சாகிற வரையும் செய்தவர். சிகரட் குடிப்பழக்கம் கிடையாது. வெத்திலை பாக்குக்கூட போடுறது கிடையாது. ரியாய் உங்களைப் போல தான் அவற்ற குணம். வலைஇழுக்க சாமத்தில போகக்கில என்ன எழுப்புங்கோ. நான் தேத்தண்ணீ போட்டுத் தாறன் எண்டு சொன்னா அவர் சொல்லுவார், “நீ ஏன்ரி அந்தச் சாமத்தில எழும்பி உன்ர நித்திரையை குழப்பிறாய். நான் போகக்கில சந்தியில காக்கவட கடையில ஒரு தேத்தண்ணீ குடிச்சிட்டு போறனடி” எண்டு சொல்லுவார். நல்ல மனுசன். வீட்டில சும்மா எண்டு இருக்க மாட்டார். விறகு கொத்தித் தருவார். மிளகாய்த்தூள் இடிச்சுத் தருவார், வலை பொத்துவார். நான் கொஞ்ச நேரம் கூட அவர விட்டிட்டு இருக்க மாட்டன். எங்கயும் வெளியால அவர் போனவரென்டால் எப்ப வருவார்.... எப்ப வருவார் எண்டு வாசலிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அவரும் அப்படித்தான் எங்கயும் போனால் நேரத்தமினக் கெடுத்தாமல் சுறுக்கென்று வந்துடுவார்.இதென்ன இந்தக் காலத்து புள்ளயல நினைச்சாலே கவலையாய் இருக்குது. இவள் கவிதாவிக்குப் புறகு எங்களுக்கு ஒரு புள்ளயும் பிறக்கேல அதால அவளை கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டோம். மாமியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது. கனத்த அழுகுரல் அடங்கிப் போகவும். தொலைபேசி கிணுகிணுக்கவும் ரியாய் இருந்தது. மாமி தொலைபேசி இருக்கும் இடம் தேடிப் போய் தொலைபேசியை எடுத்து “கலோ” என்று மாமி சொல்ல....மறுமுனையிலிருந்து ஏதோ குரல் வர....

“இரு கவிதாவ?” என்று மாமி கேட்டா.

இனியும் இந்தக் கதிரையில் தொங்கிக் கொண்டிருக்க மனம் இடம் கொடுக்கல. சடக்கென எழும்பி படுக்கை அறைக்குள் வந்தேன். இனம்புரியாத சந்தேகம் இதயத்துள் குடிகொண்டது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதும் தன்மான உணர்ச்சி காரணமாய் தன் பெற்ற மகனேயே கங்கையில் விட்டது போல் கவிதாவையும் பிறந்தவுடன் அவள் குணத்தை மாமி அறிந்திருந்தால் கட்டையடி முனங்கால எறிந்திருப்பாளோ கவிதாவை.....
என்னுள் தேங்கிக் கிடந்த தேக அலுப்பும், வேதனையும் கண்ணீர் வழி கசிந்தது. உடலுழைப்பில் உரமேறிய உடலில் சந்தேக வலை மாயமாய் வந்து மடிந்து கொண்டது. கவிதாவின் வாழ்வின் மேல் இருந்த என் மதிப்பீடுகள் மங்கிப்போய் மாமியின் மீது சந்தேகம் படர்ந்தது.

மாமி வேணு மெண்டு திட்டமிட்டு இந்தக் கதை கதைக்கிறவ...? அச்சம், அருவருப்புத் தன்மையோடு என்னுள் அரியாசனம் ஏறியது.இவகாட்டும் பா¢வும் பாசமும் என்மீது எதற்காக......? ஆர்வத்தை நாசுக்காக புலப்படுத்தி தன்மனதில் இடம் பிடிக்கிற முயற்சியா?

அறுபதோ, அறுபத்தெட்டோ தெரியல.இந்தக் கிழட்டு வயதுக்கு ஒரு பொடியன் தேவையாக்கும். தன்ர புருசன்ர குணம் மாதிரி எண்டு என்னைப் பார்த்து எந்தத் துணிவில சொல்லுவா? கனடாவில பொம்பிளையல் ரியில்ல எண்டு ஊரில இருக்கேக்க சொன்னவிய அது சரியாய்ப் போச்சு. நேற்று தலையிடிக்குது எண்டு சொன்னவுடன் பாஞ்சு விழுந்து ஓடிவந்து நெத்தியில விக்ஸ் தடவி விட்ட வடிவை பார்த்தாலே அவ வேற பிளான்னில என்ன மடக்கப் பாக்கிற போல. எனக்குள் இருந்த கோபம் ஐயமற்று மாமியில் முடங்கியது. இன்டைக்கு இரண்டில் ஒண்டு பார்க்கத்தான் வேணும் எண்டு நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியால் வருவதற்கும், திடீரென வந்த ஒப்பாரிச் சத்தத்துடன் நான் திறக்க வந்த கதவை மாமி தட்டவும் ரியாய் இருந்தது.

”தம்பி....தம்பி....” என்று தலையில அடிச்சபடி நின்ற மாமியின் கோலத்தைக் கண்டதும், கொப்பளித்துக் கொண்டு வந்த கோபம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது. என்னங்க....என்னங்க.... என்னங்க நடந்துட்டெண்டு சொல்லிப் போட்டுத் தான் அழுங்களன்?

அது ஏன் கேப்பான்..? அந்த தலையால தெறிச்சுப் போவாள், கவிதா யாரோ கயனாக் காரனோடு வேலை செய்யிற இடத்தில பழக்கமாம். அவனோடயே தான் இருக்கப் போறன் எண்டு சொல்லிப் போட்டுப் போறாள். குறுக்கால விழுந்து போவாள். பெத்து வளத்துவிட்ட நன்றியையும் மறந்துட்டு எளியன்தனமான வேலை செய்து போட்டாள். “..அவள் செத்துப் போய்ற்றாள்...அவள் செத்துப் போய்ற்றாள்....” என்று சொல்லி நெஞ்சில அடிச்சு அழுது கொண்டிருந்தா மாமி. நான் மலைத்துப் போனேன்........எதுவும் பேசாமல் ஊமையாய் நின்றேன்.  பிள்ளையைப் பிரிந்த பிரிவு ரேகை முகத்தில்  இழையோடியது .விழிகள் சிவந்து வீங்கியது . அழுகை நின்ற பாடில்லை, அவ அவமானப்பட்டது போல் துடித்து அழுதுகொண்டே பார்வை என்னில் நிலை நிறுத்திக் கொண்டு, “நான் செத்துப் போனால்.., கொள்ளி வைக்கிறது நீங்க தான். என்னுடைய பிள்ளை நீங்கதான். நான் லோயரோட கதைச்சு இங்கேயே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். நான் தனிக்கட்டையில்ல எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில வாழந்து செத்துப் போவேன்.மாமி சொல்லும்போது என் மனக் கண்கள் என்னையறியாமல் அழுதது. என் தவறான கணிப்பு தகர்ந்து, கோபங்களெல்லாம் சிதிலமாகி.., கழிவிரக்கம் கொண்டது. நான் இழந்த தாயே என் முன்னால் நிற்பது போல் தோன்றியது. ஜயமும், அச்சமும் அகன்று அகல் விளக்கொளியொன்று என்னுள் படர்ந்தது.


பதிவுகள் மே 2002 இதழ் 29

வாழ முற்படுதல்....... - -டானியல் ஜீவா-

“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்"

அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி மெல்லிய குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான்.

"ஒன்றுமில்லை கனிமொழி" என்றான்.

"இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அரியண்டத்துள் வாழ்வது. இரவு பகலாய் கண்விழித்து மாடாய் உழைத்தும் உங்களுக்கு இந்த நிலை. ஒரு நாள் இரண்டு நாளெண்டல்ல நித்தமும் இதே கூத்தாகத்தான் இருக்கு. ஏன் நீங்க அழுகிறீங்க எண்டு எனக்குத் தெரியாதோ நேற்று உங்கடஐயா பேசினதை நினைச்சுத்தான் கவலைப்பட்டு அழுகிறியள்"

“இல்லையம்மா”.

கனிமொழியை அவன் அம்மாவென்று தான் அழைப்பது வழக்கம். அவள் ஆழ்மனதில் ஆழமாக பதிவாகிய எண்ணங்களுக்குள்சுழன்றடித்தது மனம்....ஒவ்வொரு நிகழ்வாய் மலர்கோத்து மகிழ்ந்தது. தன்னை அம்மா என்று அழைத்ததை நெஞ்சில் பசுமை நினைவுகளால் நிறைத்தாள். அந்நிகழ்வை இதயத்தில் இருத்திவிட்டாள்.

“என்னை அம்மா என்று ஏன் அழைக்கிறீர்கள்?”

கனிமொழி அடக்கமான குரலில் கேட்டதற்குச்
சாந்தன் சொன்னான்.

“நான் உங்களை என் அம்மாவுக்கு நிகராக நினைக்கிறேன் அதனால்தான் .... உங்களைப்பிரியவேண்டி வந்தால் என்னால் உயிர்வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களைப் பிரிந்த வாழ்வு எனக்கு வாழ்வாய் இருக்காது. அது ஏதோ உயிரற்ற உடலாய் இருக்கும்"

“நானும் அதே போல் தான் நான் உங்களை அத்தான் என்றே அழைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அம்மா, அப்பா, கடவுள் எல்லாம் நீங்கள் தாங்க" கனிமொழிசொல்லும் போதே

கண்களில் ஈரக்கசிவுகள்.

தன் கணவர் எவ்வளவு முரண்பாடுகளும் தங்கள் பெற்றோருடனும் ஏற்பட்டபோதும் சாந்தன் தன்மீது கொண்ட அன்பில் சிறு மாற்றமும் இல்லாத வாழ்வை நினைத்து பெருமைப்பட்டாள். அவள் சாந்தனைப்பற்றி கோர்த்து வந்த வாழ்வு நிறைவாகத் தான் அவளுக்குக் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவள் எதிர்பார்த்ததை விட. ஆயினும் தன் கணவரை சுடுசொல்லால் கொடுமைப்படுத்துவதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.

கொழும்பில் வருடக்கணக்கில் நிற்கும் வரை லொட்சுக்கு காசும் சாப்பாட்டக்கு பணமும் பிள்ளை தான் அனுப்ப வேண்டும். ரெலிபோன் எடுக்காட்டியா அவர் வாங்குகின்ற பேச்சு கொஞ்சநெஞ்சமா? ரி மாமா படிக்கவைத்தார். பிள்ளையை வளர்த்தார் இல்லையெண்டு சொல்லேல. அதற்காக பிள்ளையை இப்படியுமா கஸ்ரப்படுத்தவேண்டும். குடிக்கிறதற்கு காசு கொடுக்கேல்லை எண்டால் வெல்பெயாருக்கு அடிப்பனடா எண்டும், தொட்டதற்கும் பட்டதற்கும் தன்னைப்பார்ப்பதில்லை எண்டு தான் குறை. நான் வந்து மூன்று மாதத்திலேயே என்னென்ன காரணமெல்லாம் சொல்லி வெல்பெயார் எடுக்கத்தொடங்கிட்டாங்க. இனியாவது பாவம் அவங்க இளம் குடும்பம் வாழட்டும் எண்டு விடுவதும் கிடையாது. போகவர ஒவ்வொரு குத்தல் கதை சொல்லி அழவச்சிடுவாங்கள். கனிமொழி மனதால் நினைத்து திட்டித்தீர்த்தாள்


"கனிமொழி..... என்னம்மா?"

சாந்தனின் அமைதியான குரல் கேட்டு சோகம் தேங்கிய விழியோடு நிமர்ந்தாள். கண்குவளைக்குள் இஇருந்து கண்ணீர்த் துளிகள் சித்திரம் வரைந்தது. கெஞ்சும் கண்கள் பா¢தாபமாய்ப்பார்த்தது.

"என்னதான் இஇருந்தாலும் உங்கட ஜயா இப்படி பேசியிருக்கக் கூடாது. தண்ணீ மூக்கு முட்ட போட்டா காரணமற்ற கொழுவல் போடுவது உடலோடு ஊறிப்போயிற்று உங்க ஜயாவுக்கு" சொல்லிக் கொண்டு கனிமொழி அழுதாள். சாந்தன் மனதைத் தேற்றுவதற்காக கனிமொழி பக்கத்தில் நெருங்கி  கண்ணீரைத் துடைத்தான். அவள் மார்பில் சாய்ந்து தேம்பித்தேம்பி அழுதாள்.


“அழகைதான் வாழ்க்கையா”?


அவன் வலக்கரம் கொண்டு தலையை தடவிக்கொடுத்து குழம்பியிருந்த மயிர்களை நீவி விட்டான். அவனுள்ளும் அழுகை தேங்கி நின்றது. ஆயினும் அவன் அழவில்லை. தன் மனதை தேற்றினான்.


“அத்தான் நீங்கள் என்நெஞ்சோடு சாயும் போது ஒரு சுகம் எனக்கு வருமே அந்தச்சுகம் எப்போதும் என்கூடவே இஇருக்க வேண்டும். என் மார்பில் உங்கள் தலை புதைத்து என் முகத்தை அண்ணார்ந்து பார்ப்பீர்களே.......அந்த பார்வை எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரையில் உங்களை கண்கலங்க விடமாட்டேன். எனக்கு எல்லாம் நீங்கள் தான் எண்டு தான் வந்திருக்கிறேன். அதே போல் தான் உங்களுக்கு எல்லாமே நான் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தால் கூட என்மனம் தாங்காமல் தவிக்கிறது. அந்த காய்ச்சல் எனக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை என்று கூட நினைப்பேன். சில வேளைகளில் உங்கள் மனம் படும் வேதனையை என்னால் பார்த்து சகிக்க முடியாமல் இருக்கிறது"

“கனிமொழி........."

"என்னுங்க”?

"இப்படி பெரியவர்த்தையெல்லாம் சொல்றெங்கே......."

ஒரு கணம் கனிமொழியின் முகத்தை கீழ்நோக்கி பார்த்தபோது அவளின் கீழ்த்தாடையோடு மோதுண்டு நின்றது முகம்.

“உங்க மூக்கு அழகாயிருக்கு”....... அவன் எதையோ சொல்ல நினைத்து இப்படியொரு வார்த்தையைப் போட்டான். கனிமொழியின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆயினும் அவள் எந்தவித அசுமாத்தமும் இல்லாமல் அவள் முகம் கிடந்தது.

"கனிமொழி நீங்க கொழும்பில் நிற்கும்போது ரெலிபோனில் சொன்னது நினைவிருக்கா........?"

“எதைப்பற்றியுங்க? நிறைய நீங்க கதைச்சனீங்க. எதுவெண்டு தெரியல?"

"நம் குழந்தையை என்னால் சுமக்கமுடியுமென்டால் நானே சுமப்பேன் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா?"

"ஓமொம்..... அதையேன் இப்ப நினைவுபடுத்திறீங்க?"

"நீங்க சொன்னேங்க பெண்குழந்தை எண்டால் ஜந்து மாதம் நீங்கள் சுமப்பதாவும் ஜந்து மாதம் என்னையும் சுமக்கச்சொன்னீங்க. ஆண் குழந்தையென்றால் பத்து மாதமும் நீஙகளே சுமப்பதாக சொன்னீங்க. ஆனால் பெண்குழந்தை தான் நமக்குப் பிறந்திருக்கு ஆயினும் நீங்க தான் பத்து மாதமும் சுமந்து பெற்றிருக்கிறீங்க. அப்பவே கேப்பமென்று மறந்து போனேன். ஏன் பெண்குழந்தை விருப்பம் இல்லையா? சீதனம் கொடுக்கவேண்டும் என்டதற்காகவா?"

“அப்படி நான் நினைக்கேலேயங்க. எனக்கு உங்களைப்போல குணத்தோடு ஒரு ஆண்முதலில் தேவையுங்க  பின்னர் எப்படிப் பிறந்தாலும் பரவாயில்லங்க"

“ஏனுங்க உங்களைப் போல் பெண்ளை உங்களைப்போல குணத்தோடு பிறந்தால் சரியில்லையாங்க”?

சற்றும் எதிர்பாரத பதிலை கேட்டு முகத்தில் மந்தகாசம் பூத்தது.

"இப்படியே கதையைச் சொல்லி சொல்லி என்னை சிரிக்க வைத்து விடுவீங்க. நான் தான் உங்கள் மனக்கவலையைத் தீர்க்க மருந்து என்னும் கண்டுபிடிக்கவில்லை?" என்றாள்.

“நீங்க வேலைக்கு போவதற்கு முதல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு வேலைக்கு அனுப்பின பின்தான் நான் தேனீர் கூட குடிப்பேன். நீங்க வேலைக்கு போன பிறகு நான் நானாக இருப்பதில்லை.எப்போது நீங்க வருவீங்க என்று எதிர்பார்த்தபடியே என் மனம் துடித்துக்கொண்டிருக்கும். என் கண்காண உங்கள் கண்ணில் தூசி கூட விழவிடமாட்டேன். அந்தளவு உங்கள் மீது கண்ணும் கருத்துமாக இருப்பேன்"

"மெய்தானா.......?" சாந்தன் கேட்டான்.

"ஓமுங்க.... உங்களை நம்பித்தான் கனடா வந்தனான். உங்களைத்தவிர எனக்குயாரு இருக்கிறாங்க........"

சாந்தன் மெல்லிய குரலில் "என்னால் முடிந்தவரை உங்களுக்கு வாழ்க்கைத் துணையாய் இருப்பேன். அதேபோல் நீங்கள் என் வாழ்க்கைத் துணையாக இருக்கவேண்டும். அதைவிட்டுட்டு எனக்கு வேலைக்காரியாக இருப்பதை நான் விரும்பமாட்டேன். அப்படி உன்மனதில் இருந்தால் அதை அடியோடு வெட்டியெறிந்து விடும். குடும்பம் வாழ்வுக்கு அடிப்படை புரிந்துணர்வுதான்.  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை"

"ஏதோ பெண்விடுதலை என்றெல்லாம் கதைப்பாங்க அதையா நீங்க சொல்லிறியள்?"

"எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் எனக்குச் சமமாக நீ இருக்கவேண்டும். என் உயிர் நீதான். இந்தச் சொத்துடமைச் சமூதாயத்தில் நீ எனக்கென்று எழுதப்பட்ட சொத்தாக நான் நினைக்கல. எந்த நிலையிலும் நீ சுயமாக என்னோடு வாழ்வது பற்றி முடிவெடுக்கலாம்”

சாந்தனின் அப்பழுக்கற்ற மனதின் வெளிப்பாட்டை ஆமொதிப்பது போல் தலையசைத்தாள்.

வைகறைப்பொழுதில் கண்சிவக்கச் சிவக்க எழும்பி அரையும் குறையுமாக அவசரப்பட்டு வேலைக்கு ஓடி அந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலைக்கு பஸ் எடுத்து ஓடி உடலைத் திண்ணும் இரவு ஓய்ந்து உறங்க கனவெல்லாம் சிதையும். வாழ்வு கரையும். சாந்தனுக்கு கனிமொழியின் இருப்புத்தான் அவன் மனதின் காயங்களுக்கு செப்பனிட்டது. அவளின் வருகையால் தான் மண்ணில் வேரோடிய காதல்கொடி கனடாவில் பூத்துக்குழுங்கியது. ஒரு ரோஐ¡வனத்தைப் பார்க்கின்ற அழகு சாந்தனுக்குள் எழும். ஏதேனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூட சாந்தனை உதாரணமாய் சொல்லிக் கொள்வாள். கனிமொழி என்ற பெயருக்கு நு¡று வீதமும் பொருத்தமானவள். தன்னைப்போலவே மற்றவர்களையம் மதித்து நடப்பவள். பச்சத்தண்ணி அப்பாவி எண்டெல்லாம் சாந்தனால் சொல்லப்படுபவள். சாந்தனின் பெற்றோருக்காக காதலையே தள்ளிவைத்து முதலில் அவர்கள் இங்கு வந்த பின் தன்னை ஸ்பொன்னசர் பண்ணச் சொல்லி வாக்கறுதி கொடுத்துளூ அதன்படி அவள்  நடந்தும் கொண்டவள்.சிறு பிராயம் தொட்டு கனிமொழியின் கண்களில் விழுந்து உள்சதை வரை ஊடுருவிப் பாய்ந்தவன். ஆயினும் சாந்தன் கனடா வந்து ஆறுவருடத்தின் பின்னரே கனிமொழியியை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தான்.

அவன் மனச் சுமையை இறக்கமுடியாமல் நெஞ்சு பிசைந்து நீண்ட கனம். இருவரிலும் அடர்த்தியான மெளனம் செல் அடித்து ஒய்ந்து கிடக்கும் மண்போல. இதயம் இருண்டு விசாரப் பட்டது. கண்களில் ஏதோ இனம் புரிந்த சோகம் அவனில்.  நினவுச்சூழல் ஊருக்கு போனது...

கனிமொழி!அவன் உயிரில் எழுதிய ஓவியம். கண்களின் பார்வை காதலின் முதல் விதையல்லவா! அன்று தான் சாந்தனும் கனிமொழியும் நேரில் பேசியதாக ஞாபகம் சாந்தனுக்கு. ஒரே ஊர் ஒரே பாடசாலை, ஒரே தெரு சிறு வயது முதல் முளைத்த பார்வை என்றாலும் அன்று தான் முதல் பார்வை. வகுப்பறையில் கணிதபாடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்காக சாந்தனிடம் கேட்க முயன்றுளூ காதல் வலையில் சிக்குண்டாள்

பகல் இடைவேளை எல்லோரும் வெளியில் போய்விட்டார்கள். வகுப்பறையில் சாந்தனும் கனிமொழியும் தான். தூரத்தை விலக்கி மேசைதான் இருந்தது. மெல்ல எழுந்து கனிமொழி நடந்து வந்தாள்.

நிலா பகலில் வந்து ஒளிதெறித்ததுபோல்.

“அவள் நிலவா அல்லது நிலாதான் அவளா”?

ஒரு புன்னகை மலரோடு சாந்தனுக்குப் பக்கத்தில் வந்தாள்.

கனிமொழிதான். மெய்மறந்து நிமிர்ந்தான்.

“என்ன கனிமொழி” என்றான்.

வெக்கத்தால் நாணம் சிவந்த பார்வை வீச்சுக்கள். ஒரு கணம் தான்.

“சாந்தன்.... கணித பாடத்தில் ரீச்சர் சொன்னது விளங்கேல அது தான் உங்ககிட்ட கேட்கலாமெண்டு வந்தனான்" தயங்கித்தயங்கி உடைந்த குரலில் கேட்டாள்.

“ஏன் கனிமொழி..... விளங்கேலேயண்டால் ரீச்சர் கிட்ட கேட்டிருக் லாம் தானே”? எடுத்தறிந்து பேசுவது போல் சாந்தன் சொன்னான். ஒரு மயான அமைதி அவளில் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்மொழிதல் தருவான் என்று வனப்புடன் இருந்த மனது வாடிப்போனது. உள்ளம் வெந்து கண்கள் உருகிக் கலங்கின.

“என்ன கனிமொழி ஒரு மாதிரிப்போச்சீங்க.”?

“ஒண்டுமில்ல”.......

“ஒரு சிக்கல் கேட்க வந்த எனக்கு முகத்திலே அடிச்சமாதிரி பதில் சொல்லிவிட்டீங்க ஒரு பெண்ணை புரிந்து கொள்கின்ற பக்குவநிலை உங்களிடம் இருக்கெண்டு.”

சொல்லி முடிப்பதற்குள்..

"ரி... ரி... என்ன சொல்லிப்போட்டேன். கொஞ்சம் பகிடியாக பேசவேண்டுமெண்டதற்காக அப்படிச் சொன்னேன். அதற்குள்ளே இவ்வளவு தவறான புரிதல் உங்கள் மனதில் எழுந்து விட்டது. ஏதும் புண்பட சொல்லிவிட்டேன் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்"

"நான் உங்களை மன்னிக்கிறதா? என் மனதில் தெய்வமாய் வைத்து நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். நானா உங்களை மன்னிக்கிறது"

அடுத்த வார்த்தை சாந்தனிடம் இருந்து வருவதற்குள் வகுப்பறையை இடைவேளை மணி நிரப்பியது. அது தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வார்த்தைகள்.

அன்று தொடக்கம் தன் மனதை பறிகொடுத்து காதல் அவளில் விழித்தது அவன் உற்றுப்பார்க்கிற இஇடமெல்லாம் அவன் உழைப்பே வியாபித்துக் கிடக்கிறது. தொடர்மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரு அறைகொண்ட வீடு தான் ஆயினும் அவன் இரவும் பகலும் உழைத்தவையெல்லாம் தன் தாய், தகப்பன், சகோதரர்கள் என்றே கரைந்து போன கனேடிய டொலர் ஒவ்வொன்றும் அவன் மனதுக்குள் முண்டியடித்து முண்டியடித்து நேற்று நிகழ்ந்தது போல் பின்னல் கொடியாய் படர்ந்தது. இடி மின்னலாய் நெருப்புடன் நெஞ்சில் இறங்கியது.

இரவு கண்விழித்து விழிப்பின் அசதி அவனில்..........சற்று கனிமொழியின் மடியில் கண்மூட

“டொக்...டொக்.....டொக்....என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.கனிமொழியின் மடியிலிருந்து எழுந்தான்.

"கனிமொழி ஒழும்பி கதவைத்திறந்து விடுங்கோ"

அவள் கேட்டும் கேளாதது போல் இருந்தாள்.

"யாருமா...? உங்கட ஐயாவும் அம்மாவும்தான். கோயிலுக்கு போயிற்று வருவினம். அவயிட்ட திறப்பு இருக்குத்தானே திறந்து வரட்டும்..ஐக்கட்டுக்குள்ள  இருக்கிற துறப்பை எடுத்து திறக்க பஞ்சியாக்கும்"

மீண்டும் டொக்..டொக்.. என்ற சத்தம் கேட்டது.

கனிமொழி எழுந்து கதவைத் திறக்கவில்லை. அவர்களே திறந்து உள்ளே வந்தார்கள்.உள்ளே வந்த வேகம் வித்தியாசமாக இருந்தது.நடையில் புதிய தென்பு முளைத்தது சாந்தனின் அம்மாவிற்கு. மனதை அழுத்திக்கொண்டு கண்களில் தீ பரவ முகத்தில் கோபத்தின் கீறல்கள். ஏதோ முனகினாள்

அவ்வளவுதான் கனிமொழிக்கு நெஞ்சிலிருந்து நெருப்பாறு பீறிட்டு எழுந்தது போல் என்று மில்லாதவாறு கோபம் வந்தது. ஆயிரம் ஆயிரம் கனவுகளின் சிதிலங்கள் அவள் மனதில் இருந்து உடைந்து பனிப்படலமாய் உறைந்து இறுகியது. என்றெனும் இல்லாத போக்கில் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள். இது தற்சயலாக எழுந்த நிகழ்வா? இல்லை தானாக உள்ளுக்குள் விதையாக மலர்ந்ததா? எப்படியோ அவள் கோபம் கொண்டாள்.

"மாமி நீங்க நீனக்கிற மாதிரி என்ர புரசன் நோஞ்சாண்டியில்ல. அவர் வெட்கத்திற்காக வாயை மூடிக்கொண்டிருக்கிறார். உங்கட எளியந்தனமான வார்த்தையெல்லாம் கேட்டு எங்களுக்கு வாழவேண்டிய தலையெழுத்தல்ல. வீட்டுப்பிரச்சினைகள் வெளியில் தெரிந்தால் வெட்கம் என்டதற்காக மெனமாய் வாழ்கிறோம். இனிமேல் அவரைப் பற்றி ஏதேனும் கதைத்தால் நடக்கிற வேற "என்றாள் கனிமொழி

அவ்வளவும்தான்.. வந்தவர்கள் வாயடைத்துப்போய் நின்றார்கள்


 

பதிவுகள் ஜனவரி 2003 இதழ் 37


திரேசா        - நாவாந்துறை டானியல் ஜீவா-

ள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல; என் கால நகர்வில் கடந்து சென்ற ஜந்தாண் ஆண்டுகளுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது. .வயதெல்லை தாண்டி வார்த்தைகள் வலுவிழந்து மானிடமே ஒவ்வொரு கணமும் மரணித்துக் கொண்டும் மரணத்தினுடாக வாழ்வைத்தேடுகின்ற மைந்தர்களில் திரேசாவின் இழப்பு ஆயிரத்தில் ஒன்றாக மறைந்து போயிருக்கலாம். ஆனால் என் கண்முன்னே கணப்பொழுதில் சிதைந்து போன அவளது உடல் என் இதயத்தில் ஆழமாய் பதிவாகிவிட்டது. அவளது மரணம் நேற்று நிகழ்ந்தது போல இன்னும் என்னும மனத்திரையிலிருந்து விலகாது ஒட்டிக்கொண்டிருக்கின்றது. என்னில் எழுந்து பின் மறைந்து போகின்ற நிகழ்வுகளைப்போல் அல்லாது என் இதயமே வெடித்திடும் போல் இருக்கின்றது. என் வாழ்வில் முடிந்து போன சோகங்களில் முற்றுப்பெறாத கவிதை வரிகளுக்கு கருப்பொருளானள். . . .

திரேசாவின் மரணம் அந்த மீனவகிராமத்தே வியப்பில் ஆழ்திய நிகழ்வுதான். அன்று எல்லோர் முகங்களிலும் சோகம் கவிழ்ந்து கிடந்தது ஊர் எங்கும் வீசிய உப்புக்காற்றுக் கூட இழப்பைத் தாங்கிக் கொள்ளும் முடியாமல் சோகத்தை சுமந்த படி சென்றது. மண்ணுக்குள் நேர்ந்த மாரடைப்ப¨ நிணைந்து என் செஞ்சே தீப் பிளம்பானது. இருள் விலகிடாப் பூமியில் இன்னுயிர் ஈந்தும் முடிவவுறாத சோகங்களுமே சொந்தமாயின.  அடிவானத்தைக் கடல் குடிக்க உயிர்களை இரும்பு உண்ணும். வைகறையின் சத்தம் அதிகாலை ஆறு மணியை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.

தொழிலாளர்களும் காக்கை தீவு செல்கின்ற மீன் வியாபாரிகளும் நாவந்துறை மீன் சந்தைக்கு முன்பாக கூடுவார்கள். நாவாந்துறை சந்தை நாவலர் வீதியும் காரைநகர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மீன் சந்தைகளில் ஓலளவு வசதியாக உள்ள சந்தைகளில் நாவந்துறை மீன் சந்தையும் ஒன்று. இறைச்சி வகைகளும் மரக்கறி வகைகளும் உட்பட விற்பனை செய்யப்படுகின்றன. இச் சந்தையில் இருந்து காக்கை தீவுச் சந்தை ஒன்ரரை மைல் தொலைவில் உள்ளது. விடியற்காலை ஏழு மணியில் இருந்து பதினொரு மணி வரை கூடி பின்னர் கலையும். நாவாந்துறைச் சந்தை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி பிற்பகல் வரை நீடிக்கும்.

இரண்டு மீன் சந்தைகளிலும் வியாபாரம் செய்பவர்களில் திரேசா  ஒருத்தி. சந்தைக்கு முன்பாக தேனீர்க் கடையும் இருக்கின்றன. பின்பக்கமாக அழகிய கடற்கரை இருக்கின்றது. இந்தக் கடலை நம்பியே இங்குள்ள மீனவர்கள் வாழ்கிறார்கள். கரையோர்தில் மேவப்பட்ட வெண்மணல் புதிய அழகை கொடுத்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசைகள் முளைக்கத் தொடங்கின.

திரேசா தேனீர்க் கடை வாசல் படியில் நின்ற படி ““கடகத்தை கொஞ்சம் இறக்குமோன““ என்று விடுவலை வானைப் பார்த்துக் கொண்டிருந்த ரவியிடம் சொன்னாள். இறக்கிய கையோடு கபூர் காக்காவிடம் கூடான தேனீர் போடச் சொன்னாள். கபூர்க்காக்காவின் தேத்தண்ணிக் கடையில் வாடிக்கையாளர்களில் திரேசாவும் ஒருத்தி. காலையில் காக்கை தீவு மீன் சந்தைக்கு போவதற்கு முதல் கப’ர்க்காக்காவிடம் ஒரு பிளேன் ரீ சுடச்சுட குடித்துப் போட்டுத்தான் கால் நடையாக காக்கை தீவுக்கு போவது வழக்கம். தனக்காக எதையும் சேர்த்து வைக்காது பிள்ளைகளின் வாழ்விற்காக உழைத்து ஓடப் போனவள் நீண்டு நெடுத்த உடல்கட்டும் ஒன்று இரண்டு கறுப்பைத்தவிர வெண் நாரையின் நிறம் போல் தலைமுடி வெளுத்துப்போன சீத்த ச் சட்டையும், பச்சை நிற நு¡ல் சேலையும், இடுப்பினில் துணிப்பையும், அதன் பக்கமாக செபமாலையும் இதுதான் அவளது வெளித்தோற்றம். அனால் அவளது மனசு கடலைப்போல் எல்லையற்று, பரந்து விரிந்து கிடக்கின்றது. மனித நேயம் மடியினில் அடைகாத்து வைப்பாள் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியையும் தன் அறிவுக்கேற்ப்ப வெற்றி கொண்டு வாழ்பவள். காலை எழுந்ததும் தேத்தண்ணீக்கடை, காக்கை தீவுச் சந்தை , நாவாந்துறைச் சந்தை வடு£ திரும்பியதும் கோடிப் பக்கமாக கடகத்தையும், சுளகையும் கழுவி வைத்து விட்டு, சின்னத்தூக்கம். அழுந்ததும் கிழவிகளோடு ஊர்க்கதை பின்னர் ஓலைக் குடிசையில் ஒட்டுத்தூவாரத்தில் உறைவிடம் மீன்டும் அடுத்த நாள் காலை காக்கை தீவை நோக்கி இப்படியோ அவளது பத்து வருடமும் ஓடியது. இந்த மீன் வியாபாரத்திற்கு வருவதற்கும் அவளுக்குள் ஒரு சோகம் ஒளிந்து கடந்ததை மறக்கமுடியாது.

ஒவ்வொரு வணி பதினைஞ்சும் இங்கு பரலோகமாதா திருவிழா நடைபெறும் ஒன்பது நாள் நோவினையும் ஒரு நாள் பாடல் பூசையுடன் திருவிழாவை சிறப்பிக்க நாட்டுக் கூத்தும் நடைபெறும். இம்முறை கலைக்கவி நீ. எஸ்தாக்கி எழுதி பெலிக்கான் அண்ணாவியாரால் நெறிப்படுத்தப்பட்ட தென்மோடி நாட்டுக் கூத்தான செபஸ்தியார் நாட்டுக் கூத்து நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்த்தவ மதத்திற்காக தங்கள் உயிரை இன்னுயிர் ஈந்தவர்களில் செபஸ்தியாரும் ஒருவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டதே செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

திரேசா அவளது கணவர் அருளர், பிள்ளைகள் எல்லோருக்கும் நாட்டுக்கூத்தென்றால் உயிர். வறுத்த சோளகம் கொட்டையும், கச்சானும் , சுடுதண்ணிப் போத்தலில் தேத்தண்ணியோடும் மேடைக்கு முன்னால் உட்காந்திருவார்கள்.கடசிசெபத்தியாரின் கட்டத்தை பார்த்துவிட்டுளூவலை இலுக்கப் போகலாம் என்ற முடிவெடுத்து காத்திருந்தார் அருளார். இரவு மூன்று மனியாகிவிட்டது. பனி உதிர்ந்து கொண்டிருந்தது. நட்சத்திரங்கள்வான்வெளியில் விரவிக்கிடந்தன குளிர்நிலாவில் திரேசாவின்தலைஈரமாகியது.கூத்தும் நடுப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது வழமை போல் கடசிப்பகுதியில் வரும் செபத்தியார் வேடத்தை அண்ணவியார் பெலிக்கான் அவர்களே ஏற்று நடிக்கிறார். கடசியில் வரும் யோகன் இராசாவும் வந்திட்டார்ளூ இனிக்கடசி செபத்தியார் வரப்போகிறா¡ர் என்ற ஆவலோடு அருளாரின் கண்கள் அகல விரிந்தன. திரேசாவின் பார்வையும்தான். இயேசுவின் மறுஉருவம்போல் சித்திரவதை செய்யப்பட்ட உடல்காயயங்களோடு சிகப்புநிறடை உடலோடு இறுக்கப்பட்டுளூமேடையில் தோன்றினார் அண்ணாவியார் பெலிக்கான்.காத்திருப்பின் அர்த்தம் உள்ளத்தில் இன்பஉணர்வலையை மீட்டிய கணமே தொழிலுக்கும் போகவேண்டிய கடமை உணர்வும் அவனுள் எழுந்தது.தொழிக்கு போகவில்லையென்றாள் பிள்ளைகள் பட்டினியாய் கிடப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு தொழிக்கு யுத்தமானன்.

திரேசா நான்போயிற்று வாறேன் என்றார் அருளார். நாட்டுக்கூத்தையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிந்த திரேசா ஒரு கணம் அருளாரை திரும்பிப்பார்த்து ஏனணன இன்னும் கொஞ்சம் தானே இருக்குது தொழிக்கு போகமல் பார்க்கலாம்தானே என்று ஒரே மூச்சில் சொன்னாள். இங்கெரப்பா இண்டைக்கு மங்களம் பாடமாட்டாங்க..... ஏனென்றாள் அடுத்த சனிக்கிழமை நிலவு வந்துவிடும் தொழிக்கு போகத்தேவையில்லை விடிய விடிய பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார் அருளர். கடலில் நீந்தியும்,சுழியோடியும் களம்கட்டி வளைத்தும்,புயலோடும்,அலையோடும் போரடச்சென்ற அருளர் இன்று வரை வீடுதிரும்பவில்லை.மண்டைதீவிலிருந்து வீசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகத்தில் இனம் புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தொராம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகமும் சுமக்கத்தொடங்கியவள் இன்று வரை சுமக்கிறாள்.

திரேசா தேத்தண்ணீயை ஒரு முறடு குடித்து விட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.அடிவானம் சிவந்து இரவு நிலா குறுகிக் குறிகி கடலுக்குள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காக்கை தீவு போகாமல் நிற்பதை திரேசா உணர்ந்தாள். வெள்ளாப்புக் கொடுத்து விடிவதற்குள் காக்கைதீவு போச்சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கில் விறுவிறுப்பாக நடக்கத்தொடங்கினாள். வழமையான நடையைவிட இன்று வேகமாகத்தான் நடக்கிறாள். சொந்த வாக்கையிலும் கூட திரேசா ஒரு நாளோ இருநாளோ நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடமாக நடதே பழக்கப்பட்டவள்.

மொத்தமாக ஆறு பிள்ளைகள் ஜந்து பெண்களும், ஒரு பையனும். ஜந்து பெண்களுக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுத்து சீரும்சிறப்புமாக திருமணம் செய்து வைத்தாள். கடைசி மகன் தாசனை பி. ஏ வரை படிக்க வைத்தாள். படித்து முடிந்ததும் கொழும்பில் உத்தியோகத்தோடு திருமணம் செய்து கொண்டான். ஊர்ப்பக்கமே திரும்பிப் பார்ப்பது கிடையாது. நன்றி கெட்டவனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் கூட இவ்வளவு வயது வந்தும் ஆச்சி காக்கைதீவு போய் கஸ்ரப்பட வேண்டுமா என்று ஒரு கணம் கூட சிந்திப்பதில்லை. தானும் தன் குடும்பமும் என்று கொழும்பில் உல்லாச வாழ்க்கை.

செபமாலை சொல்லிக் கொண்டு வந்த திரேசா வசந்தபுரத்தைத் தாண்டி காக்கைதீவை நெருங்கி விட்டதை உணர்ந்தாள். கடசிக் காரணிக்கத்தை விரைவாக சொல்லி முடித்தாள். நேற்றும் ஓடா நீராம் மச்சச் சாதி ஒன்றையும் காணல எங்களுக்குத்தான் சுனை நீர், ஓடா நீர் வெள்ளிக் கிழமை நிலவு என்று தனக்குள் முனுமுத்தபடி நடந்தாள்.

வாடைக்காற்று வந்தால் சோர்ந்து கிடக்கும் மீனவர்கள் விழிப்பார்கள். நல்ல மீன் சாதிகள் பிடிபடும். களங்கண்ணியில் வெள்ளை இறால் பாட்டு இறால் என்று பிடிபடும். மீனவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பில் சிரித்து விளையாடும். திரேசாவும் அப்படித்தான். ஏனென்றாள் அவர்களை நம்பித்தான் அவளது வாழ்க்கை. என்றும் இல்லாதாவாறு அறியப்படாத அன்னியமுகங்களால் காக்கைதீவு மீன் சந்தை நிரம்பி வழிந்தது. கோட்டையில் இருந்து ஆமி செல்லடிக்கிறாங்கள் என்றதால் யாழ்ப்பாணத்துச் சந்தைகள் இயங்காமல் போய்விட்டது. அதனால் மீன் வாங்குவதற்காக புதிய புதிய முகங்கலெல்லாம் சந்தையில் கூடிவிட்டது.

வள்ளத்தில் இருந்து கூறி விற்கும் கூறியான் அந்தோனியின் குரல் வானத்தைத் தொடும்போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார்கள் எங்கு மலிவான விலையில் மீன் விற்பார்கள் என்பதற்காகவோ தெரியவில்லை. கரையைத் தட்டிக்கொண்டிருந்த வள்ளங்களில் தொழிலாளர்கள் மீன் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இறால் வியாபாரி முருகேசு தராசு படியோடு ஓரமாக நின்று கொண்டிருந்தார். கனிபாவின் பாயாச அடுப்பைச் சுற்றி பக்கத்தில் இருக்கும் வடைக்கார கிழவியை முற்றுகையிட்டபடி இளவட்டங்கள்.

திரேசா அவசர அவசரமாக தான் கொண்டு வந்த கடகத்தை தலையில் இருந்து இறக்கினாள். கடகத்துக்குள் இருந்த பலகையை எடுத்து தனக்கு வசதியாக வைத்துவிட்டு உற்காந்தாள். வள்ளத்தில் இருந்து வந்த வாசு மீனை ஒரு சுளகிலும், இறாலை ஒரு சுளகிலும் போட்டான். அந்தக் கணமே தென் திசையில் இருந்து இரைச்சலோடு ஹெலி வந்துகொண்டிருந்தது. ஹெலிச் சத்தத்தைக் கேட்டு ஒரு சிலர் ஹெலி வருகுது சுடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். தாழப்பறந்து வந்த ஹெலி சுடத்தொடங்கியது. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மனித நாகரிகத்திற்கு அப்பால் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்திற்கு சிதறி ஓடினார்கள். பின்னர் இடியோடு வந்த புயல் மழை ஓய்ந்து விட்டது. ஹெலியின் சத்தம் குறைந்தது. திரைப்படங்களில் காணப்படும் அழிவுகளின் காட்சியாக காக்கை தீவு சீரழிந்து கிடந்தது. மரங்களில் ஹெலி சுட்ட காயங்களின் தழும்புகள் இந்துமா சமுத்திரத்தையும் தாண்டி எங்கள் அழுகுரல் உலகம் எங்கள் பக்கம் விழிக்கவில்லை. மையான அமைதி. வயதான திரேசா எழும்பி ஓடுவதகுள் வேட்டுக்கள் தீர்ந்து விட்டது. சிதறிப்போய்க் கிடந்த மீன்களுக்கிடையில் திரேசா இரத்த வெள்ளத்தில கிடந்தாள். என் கட்டிலில் அருகில் இருந்த மணிக்கூடு எலாம் அடிக்கத் தொடங்கியது. என் நினைவுகளெல்லாம் கலைந்தது. நான் இன்னும் தூங்கவில்லையே? நேற்றிரவு கழுவித் துடைத்த சட்டிகள் நினைவிற்கு வந்தது. ஓடு ஓடு வேலைக்கு ஓடு என்று என் மனம் சொல்லியது.