ஶ்ரீராம் விக்னேஷ்தெப்பக்  குளத்தின்  தென்புறத்தில்,
திண்டில்  அரச   மரநிழலில்,
செப்பற்  கடங்கா  அருள்சுரக்கும்,
சிவனார்  உமையாள்  முதற்குமரர்,
தொப்பை  வயிற்றார் :  துதிக்கை  யார்,
தூங்கா  மல்தினம்  கண்விழித்து,
குப்பைக்  குணத்தார்  செயல்கண்டு,
குமுறு  கின்றார்  குழம்புகின்றார் !

“ஆற்றங்   கரையோ  குளக்கரையோ,
அதிலோர்  அரச  மரநிழலோ,
ஏற்றம்  பெறவே  இனிதுநின்  றால்,
என்னை  ஏனதில்  இருத்துகின்றார்?
வேற்று  மதத்தார்  கோவிலெல்லாம்,
விண்புகழ்  சேர்க்கும்  மேன்மைபெற,
நாற்றம்  பிடித்த  இடத்திலெல்லாம்,
நமையேன்  வைத்து  நசிக்கின்றார் ?

காலைப்   பொழுதில்  அபிஷேகம் : பின்,
கடமைக்  கெனவொரு  சிறுபூஜை !
மாலைப்  பொழுதிலும்  இதுதொடரும்,
மதிப்பாய்  தினமும்  இருவேளை !
வேலை   என்று   இதைத்தொடர்ந்து,
வெறுப்பை  உளத்தில்  ஏற்றுகின்றார் !
நாலு  தலையார்  நம்மாமர்,
நமக்கென  ஏனிதை  எழுதிவைத்தார் ?

இரவுப்  பொழுது  வந்துவிட்டால்,
இதயம்  துடித்தே  இடியிடிக்கும்!
பரவும்  செறிவாய்  ஒருகூட்டம்,
பார்க்கையிலே  நிலம்  இழிவடையும்!
தெருவும்  ஓரமும்  சாக்கடைபோல்,
தெரியும்  திரியும்  மாறிவிடும்!
இரவுப்  பொழுது  விலகுமட்டும்
இருப்பேன் : வீசும்துர்  நாற்றத்திலே!

பொழுது   விடிந்தால்   அப்போதும்,
போவோர்  வருவோர்  மட்டுமன்றி,
தொழுவோர்  கூடத்  தம்மூக்கை,
துரிதாய்  பொற்றித்  துதிக்கின்றார் !
அழுகல்  துணிகள் : அசிங்கங்கள்,
அனைத்தும்  குளத்தில்  கழுவுகின்றார் !
அழுதும்  பயன்தா  னேதெனக்கு ?
அந்நீ   ரினில்தான்   அபிஷேகம் !

இருகை   கூப்பி  வணங்கவரும்,
இந்துப்  பக்தர்  என்முன்னே,
ஒருகை   விரலால்  மூக்கடைத்து,
ஒருமன  தின்றித்  தொழும்செயலை,
சிரமத்  துடனெதிர்  கொள்கின்  றேன் !
சிந்தை  நொந்தே  வெதும்புகின்றேன் !
பரமன்  மகனார்  எந்தனுக்கே,
பரிதவிப்  பென்றால்  பிறர்க்கெப்படி ?

அவ்வை  சொல்லிய  வெண்பாபோல்,
அரிசி  பருப்பு  பொரிகடலை,
ஒவ்வும்  இனிமை   உடன்சேர்த்து,
ஒன்றாய்ப்   படைத்தால்  சனங்கூடும் !
அவ்வா  றெனக்குப்  படைக்குமதை,
அன்புட   னேநான்   உண்டிருந்தால்,
எவ்வா   றிருக்கும்   எதிர்காலம் ?
எவர்பின்  படைப்பார்  பிரசாதம் ?

தெப்பக்   குளத்தைக்   கட்டியவன்   தனை
தினந்தினம்  நினைத்தே  ஏங்குகின்றேன் !
எப்பேர்ப்   பட்ட   நிர்வாகம் :  அன்று
எனக்கென   இருந்தது  குருயோகம் !
தெப்பத்   திருநாள்   தனில்மட்டும்,
திரள்வார் :  அவர்தான்  மெய்யடியார் !
குப்பைத்   தனம்:தினம்  குளிக்கும்இவர்,
குணத்தில்   சிறிதும்   மெய்யறியார் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.