கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே  !

சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !

உழவரெலாம் மகிழுதற்கு
உதவிடட்டும் சித்திரையும்
உழைப்பவர்க்கு மனநிறைவை
ஊட்டிடட்டும் சித்திரையும்
நாட்டினிலே அமைதிவர
நல்வரவாய் இருந்திடட்டும்
நமையெல்லாம் மகிழ்விக்க
சித்திரையை வரவேற்போம் !

ஈழத்தில் சித்திரையும்
இனிப்பாக இருக்கட்டும்
இந்தியாவில் சித்திரையால்
எல்லோரும் சிறக்கட்டும்
வாழவந்த நாட்டினிலும்
மனங்குளிரச் செய்யட்டும்
வாழ்த்திநின்று சித்திரையை
வரவேற்போம் வாருங்கள் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.