- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -1. நினைக்கின்றோம் இதுநாள்!

கார்முகிலின் கார்த்திகையிற் கஞ்சநிமிர் வஞ்சிநிலம்
கற்பெனவே பெற்ற குரலாய்
போர்அனைய வெஞ்சுருளில் வீழ்ந்துவி;டச் சொந்தமொடு
பொங்கிவருந் தீயின் அலையாய்
ஊர்உலகம் பார்த்துறவே ஓலமுடன் வீழ்சடலம்
உள்ளதனை உப்பும் நினைவாய்
மார்அடித்து வாதையுற மன்றுருக யாம்பதறி
வைத்துஅழு கின்றோம் அறிவீர்!

நீள்மடியில் ஓர்கணமும் நெஞ்சுருகும் வஞ்சநிலை
நீதியெனுஞ் சார்பு நிலையில்
கோள்பரவ நின்றதி(ல்)லை கூடியொரு வாழ்வுடனார்
கொஞ்சுமுல காற்றும் படியே
தாள்பரவ வள்ளுவனார் சாற்றிவிடும் மன்நெறியில்
தங்கநிறை கொண்ட இனமாய்
ஏழ்உலகும் வார்ப்பெடுத்து இன்னுருவாய் நீதிநெறி
இட்டுவலங் கொண்டார் இதுநாள்!

ஏறியுயிர் குண்டழுத்தி ஏகமுடன் போர்வழுதி
இன்னுயிரும் போன தறிவோம்
காறியுமிழ் கின்றதொரு கஞ்சலெனப் போயகலாக்
கண்ணியமுங் கண்டு மகிழ்ந்தோம்!
ஊறுசெய நின்றதிலை உண்மையெனப் போற்றுமொரு
உள்ளஇனங் காண விளைந்தோம்!
சாறுமொரு வாகைநிலச் சத்தியமும் வழுவாத
சாகரமாய் எல்லவரும் வாழ நினைத்தோம்!

தன்மனது தானறியத் தற்கொடையிற் செந்தணலின்
தங்கமெனத் தன்னை எரித்தார்!
நன்மனது கொண்டுதமிழ் நட்புஎனும் சிங்களமும்
நட்டுவிட எண்ணிச் சிறந்தார்!
தொன்றுதொடக் கொன்றுவிடும் துரத்தாடிப் பறிப்பாராய்த்
தொல்லரசங் கொண்ட சரிதம்
இன்றுவரை எரிகின்றோம் என்பதினால் நீதிதனில்
நெறியாக வில்லை இடரே!

தமிழாகி எரிந்தோரைத் தாம்தொழுது கொண்டகவித்
தனையாகப் பெற்ற மகர்க்கு
அமிழ்தாகி மண்வழுதி ஆக்குமுயிர்ச் செங்குருதி
ஆற்றியவர் நெஞ்சந் தமக்கு
இமையாகி மின்நெடிய இனமானத் தென்னுமுயிர்
ஏற்புரையும் போற்றும் அவியாய்
அமைவாக மன்பதையில் ஆகுபலி கொண்டவரை
அள்ளிநினைக் கின்றோம் இதுநாள்!



2. பிரான்ஸ் பயணம்...ஒருபிரார்த்தனை

எண்ணும் போதும் இயற்றும் போதும்    
எண்ணுவதெம் தமிழே
மண்ணின் பாட்டு விண்ணும் உருக    
வகுத்திடுமெம் தமிழே
கண்ணிற் காணும் காந்தக் கருவம்    
கற்பனையெம் தமிழே
நண்ணிற் சுரக்கும் நறுந்தே னமுதம்    
நயக்குமாம்எம் தமிழே! 

பிரான்சு நாட்டிற் புகுந்தேன்  மரபுப்    
பொற்தாம ரைக்கண்
தராத ரங்கள் சங்கம் உரைத்த    
தண்தமிழார் நூல்கள்
பிரார்த்த னைக்குட் புகலுங் காலைப்    
பொன்னெழுத்தாம் அறிவீர்
பராப ரத்தெம் இறைவன் பகர்ந்த    
பைந்தமிழாம் அறிவீர்! 

தேவன் அழைப்பிற் சென்றோம் அந்நாட்    
செந்தமிழ்ப்பா வரங்கம்
ஆவல் மிகுந்த அமுதக் குழம்பாய்    
அசத்தியதாங் கண்டீர்
காவில் மரபுக் கழலே அறத்தின்    
காட்சியென்றா னதுவாய்
ஓவி யம்போல் ஒருங்கே இணைப்பின்    
உற்சவமா னதுவே! 

பாடசா லைதரும் பழம்மா ணாக்கர்    
பிரெஞ்நாட்டுப் புலத்தே
கூடவே  லணையின்  கொண்டு  மயங்கக்    
கூத்தொடுமாஞ் சுனையில்
ஆடல் பாடல் அலையுங் கலையுமாய்    
அற்புதமாம் பொழுதில்
தேடல் நடத்தித் திளையோர் மயங்கத்    
திருவிழாவா னதுவே!

மானக் கருக்கல் மகிழக் கருவாய்    
மன்றத்தே யழகாய்
தேனப் பொடிசூழ் திகழுங் காவிற்    
தென்னருங்காப் பியமாய்
ஆன மருங்கில் அவிழுங் குளிரின்    
அற்புதமாந் தளிராய்
கானம் இறுகக் கன்னித் தமிழாள்
கண்டனள்வீ றாமே!


3. அவளும் நானும்..

அவளே உவப்பன் அவளே களிப்பன்
அவளே எனக்கென்குந்
தவப்பெண் எனவே தருமாம் இறைவத்
தகப்பன் தந்ததுவாய்
சிவப்பண் உரைக்குந் திறம்பேர் உருவாய்த்
துடிக்கும் பேரவளாய்
பவளக் கனிவாய்ப் பதிப்பார் வதியாய்ப்
பகன்றார் எந்தனுக்கே!

கோபம் வளருங் குறைகாண் பவளுங்
கொடுத்த மதிப்பேடு
ஆபத் தெனயான் அளந்தே னிலையாம்
அவளே சிலநேரம்
தீபக் கணையாய்த் தெனையாள் அரசித்
துணையாய் எடுத்தாளும்
தாபக் கரங்கள் தகையாய் மாறுந்
தகருங் கணைகளுமே!

எனையாள் உருவிற் றெனையான் வருத்தும்
இடர்கள் தன்னோடும்
வினையாய்க் கருதி எதிர்மா விளக்கம்
எடுத்தே சலியாது
அனைத்துப் பணமும் அதற்குத் தனைநா
அளிக்கும் அடைமானம்
நினைப்பா ருலகில் நின்றே நெறியில்
நிகழ்ந்தா ரெந்தனுக்கே!

தாயர் மகிழ்ந்தார் தந்தையார் மகிழ்ந்தார்
தனையாள் அன்புடனே
சேயர் மகிழ்ந்தார் தெளிவாய்;த் துன்பம்
துடைத்தார் மதியுடனாம்
ஆயர் எனவே அகலக் கால்வாய்
அதளத் தறைவித்துத்
தூயர் விளங்கத் துணையாய்த் திகழ்ந்தார்
தெப்பக் கருங்கடலே!

உதவிக் கரங்கள் தனையும் மறந்து
ஒளிப்பார்ப் பேருலகில்
எதையும் தனக்காய் யுருகாப் படியாய்
எனக்காய் உழைத்தவளாம்
சிதையில் வளரும் நினைவாய் யான்என்
சிந்தை யுடையவனாம்!
புதையற் பெண்ணாள் பேசா மலர்க்கண்
பொன்னே அவள்தானே!

Rajalingam Velauthar: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.