1. அப்பாவின் பெண்ணே

உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை