ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து
தரையிலிறங்கியதும்
சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப
மழையின் பெயர் மாறிவிடுகிறது
ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

மழைக்குப் பயந்தவர்கள்
அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே
இறுதியாகக் காண நேர்ந்த
பச்சை வயல்வெளியினூடு
மழையில் சைக்கிள் மிதித்த பயணி
இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.