மானுட சிந்தனை: சக்தி மகாத்மியம்! - வ.ந.கிரிதரன் -

எங்கும் விரவிக்கிடக்கின்றாய். உனைத்தவிர
என்னால் வேறெதனையும் இக்'காலவெளி'யில்
காணமுடியவில்லை.
இங்கு விரிந்து செல்லும் வான்வெளி,
இரவு வான், சுடர்கள், மதி என்று
அனைத்துமே.
இங்கு வாழும் மானுடர், மற்றும் பல்லுயிர்கள்
அனைத்துமே,
உனது நடனங்களே! நீ மீட்டிடும் இசையே!
நான் அவ்விதமே உணர்கின்றேன்.
நீயொரு கடல்.
உன்னில் ஓயாதெழுந்து வீழும்
அலைகளே எனக்கு எல்லாமும்.
என்னையும் உள்ளடக்கித்தான் நானிதைக்
கூறுகின்றேன்.
உறுதியான நிலையும், இடமும் அற்ற
விந்தையான பொருள் நீ!
அலையும் நீயே!

காற்றாக வீசுகின்றாய்.
காற்றே! அனைத்துமே நீதான்.
உன்னை விட்டால் வேறெதுவுமுண்டோ?
இருப்பவையாகத்தெரிவதெல்லாம்,
இல்லாதொழிந்து போனவையெல்லாம்,
சங்கமித்து விடும் பெருங்கடல் நீ.
குமிழிகளாக, அலைகளாக, மழைத்துளிகளாக இன்னும்
பல்வகை வடிவங்களில் எங்குமே
வியாபித்துக்கிடக்கின்றாய் நீ.
உன்னை உபாசிக்கும் சீடன் நான்
மாகவியின் அடியொற்றி.
இருப்பின் அடிப்படை.
உன் சலனங்களே , உன் இசையே
காண்பதெல்லாம்; தெரிவதெல்லாம்.
நீயே!
தெரிகின்ற நீயே தெரியாமலும் இருக்கின்றாய்.
நீயே எம் அனைவரையும், அனைத்தையும்
பிணைத்து நிற்கின்றாய்.
உன்னில் ஒன்று கலந்து நிற்கின்றோம் நாம்.
நீயே நான்; நாம்; அது; அவை.
நாமே நீ.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.