- தீபச்செல்வன் -

பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை
உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை
எழுந்தாள் தேசம் காக்க
தரித்தாள் ஆயுதம்

கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி
தொண்டைக்குழியில் நஞ்சு
'என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!'
என்றுரைத்த அவள் இறுதிக் குரல்
இன்னும் ஓயவில்லை

போருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்
தொடுத்தனர் போர்
அழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்
அழித்தனர் எமை

பாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்
களத்தில் அவள் மாண்டுபோகையில்

உம் கைகளிலிருந்த துப்பாக்கிகளில்
அசோகச் சக்கரம்
அமைதிப் படைகளின் முகத்திரையை
கிழித்தெறிந்தாள் முதல் சுடுகலனில்

வானமே கரைந்துருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்டது
முதல் விதை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.