- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வீணாக்கார் தம்முயிரை !

பிறப்பிக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

எத்தனையே வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்
அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
முழுமையாய் வாழ்வதற்கே முழுக்கவனம் செலுத்துகிறார் !

 

வசதியுடன் வாழ்வோரும் வழிதெரியா வாழ்வோரும்
நீண்டகாலம் வாழ்வதற்கே நினைக்கின்றார் நாளெல்லாம்
மரணபயம் யாவருக்கும் மனம்முழுக்க இருப்பதனால்
தினமுமவர் மனம்முழுக்க இறைவனையே எண்ணுகிறார்
பயபக்தி கொண்டதனால் பலதுமவர் செய்கின்றார்
பலகடவுள் வழிபாட்டை பாங்குடனே ஆற்றுகின்றார்
மனம்முழுக்க வாழ்வுபற்றி பலவற்றை நிரப்பியதால்
வாழ்நாளை இழந்துவிட மனமவர்க்கு மறுக்கிறது !

இப்படியே பலபேரும் இருக்கின்ற உலகினிலே
எப்படியும் வாழலாம் எனநினைக்கும் நினைப்பினால்
தப்பான வழிசென்று தன்வாழ்வின் பயனறியா
தற்கொலையை தேர்ந்தெடுத்து தாமழிந்து நிற்கின்றார்
ஒருகணத்தில் உதிக்கின்ற உணர்வதனால் தமைமறந்து
உலகமே தமக்கெதிரி எனநினைத்து வெறுப்படைந்து
தமக்குள்ளே முடிவெடுத்து தன்வாழ்வை முடிக்கின்ற
தரமில்லா மக்களுக்கு தன்னுணர்வை ஊட்டவேண்டும் !

அவசரமாய் அவசரமாய் அவரெடுக்கும் முடிவாலே
அவசரமாய் அவசரமாய் அவர்வாழ்வே முடிகிறது
பதட்டமுடன் செயற்படுதல் பார்த்தவுடன் வெறுப்படைதல்
கிடைக்கின்ற வாய்ப்பினையும் கீழெனவே நினைத்துவிடல்
தாழ்வுமனப் பான்மையினை தமதாக்கிக் கொண்டுவிடல்
புத்திமதி சொல்வாரை புறமொதுக்கி நின்றுவிடல்
எப்பவுமே தப்பிதமாய் எக்கணமும் இருந்துவிடல்
அத்தனையும் அவர்வாழ்வை அழித்துவிடக் காரணமே !

மண்ணிலே நல்லவண்ணம் வாழவந்த வாழ்க்கையினை
எண்ணியே மக்களெலாம் எத்தனையோ செய்கின்றார்
புண்ணியங்கள் மனமெண்ணி பொறுப்புடனே நடக்கின்றார்
கண்ணெனவே வாழ்க்கையினை காத்திடவே எண்ணுகிறார்
மண்ணைவிட்டு ஓடிவிட மனமெவர்க்கும்  இருப்பதில்லை
மகிழ்வுடனே வாழ்வதற்கு வகைகள்பல தேடுகிறார்
உண்மையினை உணராமல் உயிரைமாய்த்துக் கொள்ளுகின்றார்
மெள்ளநின்று உணர்ந்துவிட்டால் வீணாக்கார் தம்முயிரை !


2. காலமெல்லாம் உதவுமன்றோ !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

வசதிபல பெருகிறது வாழ்வுநிலை உயர்கிறது
வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது
தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்
வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்
காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்
புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்
பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது !

மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்
தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள்
உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்
உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !

அன்புபற்றிப் பேசிடுவார் அறம்பற்றி பலவுரைப்பார்
துன்பமுடன் இருப்பாரை தூரநின்றே பார்த்திடுவார்
என்புதசை உடம்பென்று இவ்வுடம்பை இகழ்ந்திடுவார்
அன்புமட்டும் அவரிடத்தில் அணுகிடவே மறுத்துநிற்கும் !

சாத்திரங்கள் பலவுரைப்பார் சம்பிரதாயம் எனமொழிவார்
ஆத்திரத்தை அடக்கிவிடார் ஆவேசம் கொண்டிடுவார்
நேர்த்தியுடன் பாரார்கள் நெறிமுறைகள் தனையொதுக்கி
நாத்திகராய் ஆத்திகராய் நடித்திடுவார் வாழ்வினிலே !

பட்டங்கள் தேவையில்லை பதவிகளும் தேவையில்லை
பகட்டுடனே வாழ்வதிலே பலருக்கும் பயனுமில்லை
கஷ்டமுறும் மக்கள்தமை கருணையுடன் பார்த்துநின்று
இஷ்டமுடன் பணிசெய்தால் எம்வாழ்வு விடியுமன்றோ !

அன்புபாசம் நேசம்காட்டி அனைவருமே இணைந்திடுவோம்
அறிவினது துணைகொண்டு அனைவருக்கும் உதவிடுவோம்
பண்புநிலை தவறாது படிப்பினைநாம் காத்துநின்று
பலருக்கும்  உதவிநின்றால் படிப்புநிலை உயருமன்றோ !

கற்றதுவும் பெற்றதும் காருண்யம் கொடுக்கவேண்டும்
கற்றவர்கள் கருத்தெல்லாம் மற்றவர்க் குதவவேண்டும்
நற்றவத்தால் வந்தகல்வி நாட்டிற்கே உதவிநின்றால்
கற்றதும் உற்றதுவும் காலமெல்லாம் உதவுமன்றோ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.