1. வாழ்த்துக் கூறுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
கால மதை மாற்றுவோம்
கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
கலகலப்பை ஊட்டு வோம்
அம்மா பாலில் எமக்குதந்த
அன்னைத் தமிழைப் பாடுவோம்
அன்னியத்தை அணைத்து நிற்கும்
அவலம் அதைப் போக்குவோம் !

கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
கேளிக்கையை விரட்டு வோம்
நாக்கில் இனிமை சொட்டசொட்ட
நல்ல தமிழைப் பாடுவோம்
வீட்டில் உள்ள பெரியவரை
வீழ்ந்து வணங்கி நின்றுமே
வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
வளமாய் தமிழில் பாடுவோம் !

அப்பா அம்மா அருகணைத்து
அக மகிழ்ந்து பாடுவோம்
அக்கா அண்ணா தம்பியோடு
அழகு தமிழில் பேசுவோம்
பக்குவமாய் இனிப்பு வழங்கி
பலரும் மகிழப் பாடியே
செப்பமாகப் பிறந்த நாளை
சிறப்பாய் செய்து மகிழுவோம் !

ஆங்கிலத்தில் பாடும் பாட்டை
அகத்தை விட்டு அகற்றுவோம்
அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி
அகம் மகிழச் செய்குவோம்
இனிய பிறந்த நாளையென்றும்
எங்கள் தமிழால் வாழ்த்துவோம்
எங்கள் தமிழின் இனிமையெங்கும்
பொங்க வாழ்த்துக் கூறுவோம் !

வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்
உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்
கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்
கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !


2. மாற்றுவோம் !

வரம்தரும் மரங்களை நிரந்தரம் அழித்துமே
தரங்கெட நடந்திடும் மனிதரை ஒதுக்குவோம்
கரந்திடும் மனத்துடன் கானகம் அழித்திடும்
விரிந்திடா மனமுடை மனிதரை விரட்டுவோம் !

வீடுகட்டி மனிதர்வாழ உதவிநிற்கும் மரமதை
வீட்டைவிட்டு காடுசென்று விரயமாக்கும் மனிதரே
காசுதேடும் ஆசைகொண்டு கானகத்தை அழிப்பதை
கடவுள்கூட பொறுக்கமாட்டார் கருணையற்ற மனிதரே !

உணர்ச்சியில்லா மரங்களென்று உரத்தகுரல் எழுப்பிடும்
உணர்ச்சியுள்ள உங்களுக்கு உணர்ச்சி மழுங்கிபோச்சுதே
தளர்ச்சி வந்தபோதுநாம் தடுக்கிவிழா நின்றிட
உதவிநிற்க  தடிதரும்  மரத்தைவெட்டல் ஒழுங்கன்றோ !

நாட்டின்வளம் மரங்களென்று நாளும்பேசி வருகிறோம்
நாளும்மரம் வெட்டிவெட்டி நாட்டை வெளியாக்கிறோம்
காட்டுமரம் அத்தனையும் காசாய்நாட்டில் நிற்குது
வெட்டிவிட்ட மனிதரெல்லாம் விருந்தையுண்டு மகிழ்கிறார் !

காட்டில் விறகுபொறுக்குவார் கள்ளரென்று கூறியே
காவல்துறை கைதுசெய்து கசையடிகள் கொடுக்குது
காட்டுமரத்தை வெட்டுவாரை காவல்துறை கண்டுமே
காசைவாங்கி பையில்போட்டு காலம்கழித்து நிற்குதே !

நிழல்கொடுக்கும் மரங்களும் கனிகொடுக்கும் மரங்களும்
நீண்டபயன் மனிதருக்குக் கொடுத்துக்கொண்டே இருக்குது
பயனடைந்து பயனடைந்து பணத்தை எண்ணும்மனிதனோ
பண்புநிலை தனைமறந்து மரத்தை வெட்டியழிக்கிறான் !

வெட்டிநிற்கும் மனிதரின் கொட்டமதை ஒழித்திட
வெட்டிவீழும் மரங்களோ விரும்பி நிற்பதில்லையே
கெட்டகுணம் கொண்டுமே வெட்டிநாளும் நின்றிடும்
மட்டகுண மனிதருக்கு மாண்டும் விறகாகிடும் !

மரத்தைவெட்டி வரட்சியாக்கும் மனநிலையை மாற்றுவோம்
மரத்தைநட்டு வளத்தைச் சேர்க்கும் வழியினைத்தொடக்குவோம்
மரங்கள் எங்கள்வாழ்விலென்றும் வசந்தமென்று எண்ணுவோம்
மரங்கள்வெட்டி அழிக்கின்றாரின் மனத்தை வெல்லமுயலுவோம் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.