விமலதாசன் என்றொரு புனிதன்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .

புள்ளிவிபரவியலில் (Statistics) சிறப்புப்பட்டம் பெற்றவர். கணிதம் அவரின் கோட்டை. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் கணிதம் போதித்த சிவப்பிரகாசம் மாஸ்டர் கரும்பலகையில் கணக்கை எழுதி முடிப்பதற்கிடையில், கணக்கை செய்து முடித்துவிடும் அபார திறமையை பள்ளிக்காலத்திலேயே வெளிப்படுத்திய மாணவன்.இந்தக்கணித ஞானம் அவரது சமூக ஆய்விலும் ஒளிர்ந்ததை அவரது சமூகசெயற்பாடுகள் கோடிகாட்டின. அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்வியை அறிவுபூர்வமாயும் உணர்வுபூர்வமாயும் தனது 'மனிதன்' பத்திரிகையில் எழுப்பியவர் விமலதாசன்.

சுதந்திரம் என்பதனை அதன் சகல பரிமாணங்களிலும் விஸ்தரித்து விளக்கம் தேடியவர் அவர்.எனவேதான்,'தமிழ் நெஞ்சே! தாழ் திறவாய்!' என்று தலைப்பிட்டு தனது மனிதன் இதழில் அனைவருக்கும் திறக்கப்படாத ஆலயங்கள் என்று மானிப்பாயில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அனுமதிக்க மறுத்த 12 ஆலயங்களை அவர் முன்பக்கத்தில் பட்டியலிட்டார். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை'யானால், தீண்டாமை என்பதற்குப் பொருள் ஏது? வரலாறுதான் ஏது?' என்று தலைப்பிட்டு, அவர் சாதியஒடுக்குமுறையினை அணுகும் விதம் அசலானது.வெற்றுக்கேள்விக்கொத்துகளுடன், தாம் ஆராயப்போகும் சமூகப்பிரச்னையின் சரித்திரமும் தெரியாமல், சமகாலப்பிரச்னையும் புரியாமல் ஆய்வை  முடித்து,யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தரப்பும் உற்று நோக்கிய ஒரு பிரச்னையில் சாதியம் செயற்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுந்தபோது, ஒரு தயக்கமும் இன்றி, அதனை முற்றாக மறுதலிக்க முயன்றபோது, சமூகஆய்வு என்று பெயர்பண்ணிக்கொண்டு செய்யப்படுகிற ஆராய்ச்சிகள் எப்படி அந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்கையில் அறிவுலகின்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோகின்றன.

இங்கே விமலதாசன்  யாழ்ப்பாணத்தின் சாதிய ஒடுக்குமுறை பற்றி 'மனிதன்' இதழில் எழுதுவதைப் பார்க்கலாம்:

" கிராமங்களின் அமைப்புமுறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியும், அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும், அவர்களை வாழும் நிலங்களும், அவர்களைச் சுற்றியுள்ள பிரதேசநிலங்களின் நிலத்தோம்புப் பெயர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும், குளங்களும், கிணறுகளும், மடங்களும் வேறுபல சரித்திரச்சின்னங்களும், கால்நடைகளின் பட்டிக்குறிகளும் வீதிப்பெயர்களும் கிராமப்பெயர்களும் பேச்சுமுறைகளும் பழக்கவழக்கங்களும் நன்மை தின்மை வைபவங்களின் நடைமுறைகளும் மிகவும் தீண்டப்படாதாருடன் தொடர்பு கொள்வதற்காக சங்கடப்படலையோடு கூடிய படலைத்தலைவாயிலும் அதற்குச் சற்று முன்வரிசையில் (உள்ள சாதியாருடன் பேசிக்கொள்வதறகாக அமைந்த) சவுக்குண்டியும் தம்மோடு ஒத்தவர்கள் மட்டுமே உள்ளே வர வசதியாக அமைக்கப்பட்ட நாற்சார் வீடுகளும், நடுமுற்றமும் பாரம்பரிய பெரும் சாதி மனிதர்களின் சாதி முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச்சின்னங்களாக இருப்பதைத் தெளிவாக உணர முடியும்."

ஒரு பத்திரிகைக் கட்டுரையில் விமலதாசன்  வெளிப்படுத்தியிருக்கும் குறிப்புகள் ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளக்கூடிய சட்டகங்களாக அமைவதைப்பார்க்க முடிகிறது.

உலகெங்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தமது உரிமைக்காகப் போராடிவருவதை எல்லாம் உற்றுநோக்கி, அவற்றைத்  தனது இதழில் வெளியிட்ட விமலதாசன் இலங்கையில் வடக்கே ஒடுக்கப்பட்ட மக்கள்கூட்டத்தை மாத்திரமல்ல, மலையத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவரது 'மனிதம்' இதழ்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.மிகப்பல சந்தர்ப்பங்களில் அவர் என்னோடு வீட்டிற்கு வந்து உரையாடி இருக்கிறார்.1977 இல் மலையகத்தில் தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து அவர் விரிவான அறிக்கைகளைக் கொண்டிருந்தார்.எங்கெல்லாம் ஒடுக்குமுறைகள் நடந்தனவோ அங்கெல்லாம் அவரின் கருணை உள்ளம் கசிந்திருக்கிறது. கல்வி வசதிகளில் பின்தங்கியிருந்த மலையகம் உள்ளிட்ட பகுதிகளில்,விஞ்ஞானபாடங்களில் விளக்கப் பாடங்களை தயாரித்து, ரோனியோ பிரதி எடுத்து அப்பகுதிப்பாடசாலைகளுக்கு அனுப்பியிருக்கிறார்.அவரோடு இணைந்து அவரது முயற்சிகளில் நான் பங்கு கொண்டிருந்ததை இப்போது நினைத்துப்பார்க்கையில், ஒரு மாணவனாக இருந்து அவர் எத்தகைய ஆர்வத்தோடு சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பதை வியப்போடுதான் நோக்கவேண்டியிருக்கிறது. அவர் மற்றவருக்காக ஒளியேற்றி தன்னையே கரைத்துக்கொள்ளும் மெழுகுதிரி. தனது சுயத்தைப்பற்றி எந்த அக்கறையுமின்றி, சமூக சேவையில் தன்னை  அர்ப்பணித்த பெரும் மனிதன்.கிறிஸ்தவம் போதித்த அன்பையும் கருணையையும் மற்றவருக்கு உதவும் தயாள குணத்தையும்  கொண்ட சீலன்.சாந்தமான பாங்கும் உரத்துப்பேசத்தெரியாத பக்குவமும் அவரிடம் நிறைந்திருந்தன.ரோமிற்கு சென்று போப்பாண்டவரைத் தரிசித்து வந்த பாக்கியத்தில் விமலதாசன் சிந்தை குளிர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

அவர் தனது பத்திரிகைக்கு 'மனிதன்' என்று பெயரிட்டார். Only man is vile என்றொரு வாசகம் உண்டு. மனிதன் மட்டுமே கொடியவன் என்று பொருள் கொள்ளலாம். மனிதனை அவனின் உன்னத குணங்களோடு பார்க்க விரும்பினார். பிளேட்டோவிலிருந்து மனிதன் இவ்வுலகில் எப்படி செம்மையாக வாழவேண்டும் என்பதையே தத்துவதரிசிகள் பேசிவந்திருக்கிறார்கள்.ஓர் உன்னத மனிதனை அவாவிய இலட்சியம் அவருடையது.அந்த மனிதர்களை அவாந்தரத்திலல்ல, நமது மண்ணின் புழுதியிலிருந்து வார்க்கும் பெரும் பயணம் அது. அவருக்கு அந்த பத்திரிகை ஒரு கருவி.அதனை மீறிய இலக்கு அவரிடம் இருந்தது. அவர் வசதியற்ற பள்ளிகளுக்கு தயாரித்தனுப்பிய பாடக்குறிப்புகள் மாதிரித்தான் அந்தப்பத்திரிகையும். பத்திரிகை நடத்திய மிகப்பலருக்கு அது பத்திரிகை நடத்தும் வேலை மட்டும்தான். அதுவே அதன் இலட்சியம்.அதன் பயன் .அதன் வீடுபேறு.அதற்கு மேலான இலட்சியம் அவர்களிடம் ஏதுமில்லை. விமலதாசன் வேறு ரகம். 1980இல் இரத்மலானையில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசாங்கம் காடையர்களை ஏவி , வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கவாதிகளைத் தாக்கியதில் மரணமான சோமபால என்ற போராளிக்கு அஞ்சலி செலுத்திய வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையை விமலதாசனின் 'மனிதன்' இதழ் தாங்கியதெனில், விமலதாசனின் எல்லைகள் கடந்த மானிடநேயத்தை நாம் உணர முடியும். 

பல்கலைக்கழகப்பட்டம் பெற்றபின் அவர் கொழும்பில் Marga என்ற ஆய்வு நிறுவனத்தில் இணைந்து சமூக ஆய்வில் ஈடுபட்டார்.பின்னர் அதனை விட்டு யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டோருக்காகவும் அகதிகளுக்காகவும் பணியாற்றும் வேளையில் ஈடுபட்டார்.இனங்களுக்கிடையே ஐக்கியத்தை வலியுறுத்தும், நம்பிக்கை தரும் ஒரே இயக்கமாகத்திகழ்ந்த Mirje அமைப்புடன் தீவிரமாகச் செயற்பட்டார்.அவரின் இறுதிக்காலத்தில் அருட்திரு. ஜெயசீலன் அடிகளுடன் இணைந்து செயற்பட்டார்.

விமலதாசன் தன் சொந்த வாழ்விலும் துயரம் சுமந்தவன். அந்திரேஸ் பிள்ளைக்கும் திரேசம்மாவிற்கும் பிறந்த பதின்மூன்று பிள்ளைகளில் விமலதாசன் 7ஆவது குழந்தை ஆவார்.அவரது மூத்த சகோதரி கண்மணி இறந்து அவர்களின் வீட்டிலிருந்து பண்டத்தரிப்பு சவக்காலைக்கு கறுத்த குதிரை வண்டியில் அவரது சடலத்தைச் சுமந்து சென்றபோது , விமலதாசன் சின்னக்குழந்தை என்று நினைவு மீட்கிறார் அவரது ஒன்றுவிட்ட அண்ணன் எஸ்.யோகரட்ணம்.சுமாரான மரக்காலையை வைத்து குடும்பம் நடத்திவந்த அந்திரேஸ்பிள்ளை 1983 ஜனவரி 25 ஆம் திகதியில்  மறைந்த போது அக்குடும்பம் தத்தளித்துப்போனது. அடுத்தடுத்து அக்குடுமபத்தில் நடந்த துயர நிகழ்வுகளால் விமலதாசன் ஆழ்ந்த துயரத்தில் தோய்ந்திருக்கிறார்.அவரது தந்தை இறந்து, ஆறு மாதங்களின் பின் விமலதாசன் சுட்டுக்கொல்லப்பட்டமை அந்தக்குடும்பத்தில் பேரிடியாக இருந்திருக்கும்.அக்குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று வந்த ஒரே மகன் குடும்பச்சுமையைத் தன் தோளில் சுமந்த நேரத்தில், அந்தப்பெருமகனே இப்படி அவச்சாவில் பலியானதை யார் ஏற்றல்கூடும்?    

உலகின் பாவங்களுக்காக சிலுவை சுமந்தவன்
1983 ஜுலை 23 ஆம் திகதி. யாழ்ப்பாணம் தின்னவேலியில் தபாலடிச் சந்தியில் விடுதலைப்புலிகள் 13 இராணுவவீரர்களைத் தாக்கியழித்த தினம். மறுநாள்: 1983 ஜூலை 24 ஆம் திகதி. மாதகலில் நிலை கொண்டிருந்த இராணுவப்பிரிவினர் தனியார் மினிபஸ் ஒன்றினைக் கடத்தி, காலை 6.30 மணியிலிருந்து வீதிகளில் போனவர்கள், பஸ்களில் பயணித்தவர்கள், கடைகள், சந்தைகளில் நின்றவர்கள் என்று எல்லாரையும் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்று வெறியாட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.இந்தக்  கொலைவெறித்தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நடத்திய இந்த வெறிக்கூட்டம்  பண்டத்தரிப்பிற்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையில் தொட்டிலடிச்சந்திக்கு வந்தபோது நேரம் கிட்டத்தட்ட 7.30 மணி. அன்று பண்டத்தரிப்பிலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு விமலதாசனும் அவரது தம்பி தேவதாசனும் காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, பண்டத்தரிப்பு Retreat House ஞான ஒடுக்க மண்டபம் வழியாக மினிபஸ் ஒன்றில் பயணிக்கின்றனர்.அவர்கள் சண்டிலிப்பாய் சந்தியை அணுகும்போது, யாழ்ப்பாணத்திலிருந்து பண்டத்தரிப்பை  நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மினிபஸ் சாரதி, 'யாழ்ப்பாணத்தில் பிரச்னையாய் இருக்கிறது.இப்போது நீங்கள் யாழ்ப்பாணம் போகவேண்டாம்' என்று இவர்களுக்கு எச்சரித்து இருக்கிறார். அதனைச் செவிமடுத்த இவர்களின் மினிபஸ் சாரதி, யாழ்ப்பாணம் செல்வதைத் தவிர்த்து, பண்டத்தரிப்பை நோக்கி மீளும் வழியில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச்சந்தியை அண்மிக்கும் போது, அவர்களை எதிர்கொண்ட ஒரு மினிபஸ், விமலதாசனும் அவரது தம்பியும் பயணித்துக்கொண்டிருந்த மினிபஸ் வாகனத்தை நிறுத்துமாறு கட்டளை இட்டது. விமலதாசனின் தம்பி 1983 டிசெம்பர் 20 ஆம் திகதியன்று சமாதான நீதவான் முன்னிலையில் அளித்திருக்கும் affidavit சத்தியக்கடுதாசியில் பின்வருமாறு கூறுகிறார்:

"எங்களது வாகனம் பலவந்தமாக நிறுத்தப்பட்டது.மற்ற மினிபஸ்ஸிலிருந்து சீருடையும் ஹெல்மட்டும் தரித்த இராணுவத்தினர் ரைபிள்களை ஏந்தியபடி எங்களை நோக்கி இலக்கு வைப்பதைப் பார்த்தோம்..எங்களில் சிலர் இறங்கி, நானா திக்கிலும் ஓடினார்கள்.மற்றவர்கள் மினிபஸ்ஸிற்குள்ளேயே தாழ்ந்து படுத்துக்கொண்டு விட்டனர்.இராணுவ வீரர்கள் இருந்த மினிபஸ்ஸிலிருந்தே துப்பாக்கிச் சூடுகள் வெளிப்பட்டன. துப்பாக்கிச்சூடு முடிவுற்றதும், இராணுவ வீரர்கள் வந்திருந்த அந்த மினிபஸ் அங்கிருந்து சென்று விட்டது.அதற்குப்பின் என்னோடு பயணித்த 3 சக பிரயாணிகள் மினிபஸ்ஸிற்கு அருகில் தரையில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன்.எனக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. துப்பாக்கிப்பிரயோகம் நடக்க ஆரம்பித்ததும், வாகனத்திலிருந்து வெளியில் இறங்கிய  எனது அண்ணனைக் காணவில்லை. பின்னர் அவர் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு அருகில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைப்பார்த்தேன். அவர் அப்போது பேசக்கூடியவராக இருந்தார்.மினிபஸ்ஸிலிருந்த இராணுவ வீரர்கள்தான் தன்னைச் சுட்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.நானும் நித்தியானந்தன் என்ற எனது நண்பனும் அவரைப் பக்கத்தில் இருந்த டாக்டர் நாகநாதன் என்ற தனியார் மருத்துவரிடம்  எடுத்துச் சென்றோம்.'அவரது நிலை மோசமாக இருக்கிறது' என்று அவர் கூறினார். இரண்டு மணித்தியாலத்தில் அவர் இறந்து விட்டார்.எனது அண்ணரை வீட்ட்டிற்கு எடுத்துச் சென்று, மல்லாகம் மெஜிஸ்ட்ரேட்டின் அனுமதியின் பேரில் அவரின் இறுதிச் சடங்கைச் செய்தோம்"

விமலதாசன் என்ற ஒரு புனிதனின் மரணம் இவ்வாறு சம்பவித்தது..  அப்போது வெலிக்கடைச்சிறையில் இருந்த நான் இந்தப் புனிதனின் மரணத்தை அறிந்திருந்தேன். வெலிக்கடைப்படுகொலை பற்றி, அதன் சூத்திரதாரிகளைப் பற்றி பரபரப்புக் கட்டுரை எழுதிய ஒருவர், கட்டுரை வெளிவந்தபின், அகஸ்மாஸ்த்தாக  என்னைச் சந்தித்த வேளையில் என்னிடம் கேட்டார்:  ' நீங்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அப்போது இருந்தீர்களா?'  விமலதாசனுக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதினோம், கவிதை எழுதினோம் என்றில்லாமல், அந்தப் பெருமகனின் பெயரால் , லண்டனில் விம்பம் அமைப்பினர் நடத்திய குறும்படங்கள் நிகழ்வில் 'விமலதாசன் ஞாபகார்த்த விருது' என்ற பெயரில் அப்பரிசினை தொடர்ந்து வழங்கிய டாக்டர்.கே. சுகுமார் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன் (விமலதாசனின் தம்பியும் அவரது தாயார் அ.திரேசம்மா அவர்களும் கொடுத்த affidavitsஐப் பார்க்கத்தந்த எஸ்.யோகரட்ணம் அவர்களுக்கு என் நன்றி உரியது).

-- அனுப்பியவர்: முருகபூபதி -