பேராசிரியர் க.அன்பழகன் கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா அறிவாலயம்’
சென்னை, தமிழ்நாடு

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கியவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவைக் கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம்.

தமிழினம், திராவிடம், கழகம் என அனைத்துத் தளங்களிலும் தனது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் காரணமாக செல்வாக்குச் செலுத்தி பெற்றவரும், சிறந்த சொல்லாண்மையும், எழுத்தாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவருமான பேராசிரியர் அவர்களின் மறைவு தாங்கள் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும்கூட இழப்பாகும். தங்கள் தந்தை தலைவர் கலைஞருடன் எழுபத்தைந்து ஆண்டு காலம் தோழமையுடன் செயற்பட்டு,  தமிழ் வரலாறு கூறும் தலைவர் கலைஞரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் உறுதுணையாய் விளங்கியதோடு ஈழத்தமிழர் விடயத்திலும் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னெடுத்த சாத்தியமான அனைத்து விடயங்களிலும் துணை நின்று செயற்பட்டதை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் மறந்து விட முடியாது.

அரை நூற்றாண்டுக்கு மேலாக சட்ட மன்ற உறுப்பினராக,  நாடாளுமன்ற உறுப்பினராக, கழகத்தின் பொதுச் செயலாளராக மக்கள் பணி புரிந்து மறைந்து விட்ட பேராசிரியருக்கு ஈழத்தமிழர்கள் சார்பிலும்,  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் சார்பிலும் இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறோம்.

பேராசிரியரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரின் துயரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

செல்லத்துரை ஜெகநாதன்
சர்வதேச கிளைகளின் ஒருங்கிணைப்பாளர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

Eppinger Str 29, 74080 Heilbronn, Germany.
T.P no. 0049 17643681034.


தகவல்: குணபாலன் செல்வரட்னம்