இராஜகோபாலன் மாஸ்டரும் & டொமினிக் ஜீவாவும்'டொரொண்டோ'வில் தொண்ணூறு வயதினைக் கடந்த நிலையிலோர் எழுத்தாளர் அமைதியாக வாழ்ந்து வருகின்றார். இவர் அதிகமாக எழுதியவரல்லர். கட்டுரைகள் , சிறுகதைகள் எனக் குறைந்த அளவிலேயே எழுதியிருக்கின்றார். ஆனால் இவர் சமூக, அரசியல் செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். நாற்பதுகளின் இறுதியில் இடதுசாரி அரசியலில் தீவிர தொண்டனாகச் செயற்பட்டவர் இவர் ஓர் ஆசிரியராகத் தன் பணியினைச் செய்தவர். இவரை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மல்லிகையின் அட்டைப்படமாகப்போட்டுக் கெளரவித்துள்ளார். இவர்தான் எழுத்தாளர் தி.இராஜகோபால்.

எழுத்தாளர் டொமினிக் ஜீவா இராஜகோபால் 'மாஸ்டர்' மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அவ்விதமே அவர் இராஜகோபால் அவர்களைக் குறிப்பிடுகின்றார். அவர் தன் நினைவுக் குறிப்புகளிலும் இவரைப்பற்றி நினைவு கூர்ந்திருக்கின்றார். 3.3.1967 சுதந்திரனில் வெளியான இவரது 'எங்கே போவேன்?' என்னும் சிறுகதை. சுதந்திரன் நடாத்திய பொங்கல் சிறுகதைப்போட்டியில் பாராட்டுப்பெற்ற சிறுகதைகளிலொன்றென்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மேற்படி அட்டைப்படக் கட்டுரையினை ஆசிரியர் டொமினிக் ஜீவாவே எழுதியுள்ளார். அதிலவர் தான் முதன் முதலில் பூபாலசிங்கம் புத்தகசாலையிலேயே இராஜகோபால் அவர்களைக் கண்டதாகவும், பூபாலசிங்கம் அவர்களே அவரைத் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவை தவிர அவர் மேலும் சில முக்கியமான தகவல்களையும் அக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். அவையாவன:

1. அதுவரையில் இந்தியக் காங்கிரஸின் பேரபிமானியாக இருந்தவர் டொமினிக் ஜீவா. இராஜகோபால் மாஸ்ட்டரோ சமசமாஜக் கட்சிக்காரர். மாஸ்ட்டர் ஒரு நாள் கொடுத்த சிறு பிரசுரமொன்று காங்கிரஸ் கட்சியின் மத்தியில் தொண்டர்களுக்கான உணவுப் பந்தியில் நிலவிய சாதிப்பாகுபாட்டை இவருக்கு எடுத்துக்காட்டுகின்றது. அப்பந்தி பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதவர்களெனப் பிரிக்கப்பட்டிருந்தது. அப்பாகுபாடே அது வரை காங்கிரஸில் இருந்த ஈ.வே.ரா பெரியாரையும் காங்கிரஸிலிருந்து விலக வைக்கின்றது. அப்பிரசுரமே டொமினிக் ஜீவாவையும் காங்கிரஸின் உண்மைச் சொரூபத்தை டொமினிக் ஜீவா அவர்களுக்குப் புரியவைக்கின்றது.

2. மேற்படி அட்டைபடக் கட்டுரையில் இராஜகோபால் 'மாஸ்ட'ருடனான தனது எண்ணங்களை ஜீவா அவர்கள் பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார்:

" ராஜகோபாலன் மாஸ்ட்டரின் நுண்ணிய அவதானிப்பினூடே எனது வாசிப்புத் தகைமையைப் பன்முகப்படுத்திக்கொண்டேன். இன்னுமின்னும் நெருக்கமாக அவரிடம் பழக முற்பட்டேன். எனது வளர்ச்சியில் மிகமிக அக்கறை காட்டினார். அவர் தான் என்னை வாசிக்க மாத்திரமல்ல,எழுதவும் ஆரம்பத்தில் கற்றுத்தந்தவர். நண்பர் எஸ்.பொன்னுத்துரையை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவரும் அவரே."

மேற்படி கட்டுரையின் இன்னுமோரிடத்தில் ஜீவா அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"எனது இந்த மல்லிகை வரலாற்று வாழ்க்கையில் நான் இருவரை எந்தக் காலத்திலும் நினைவு கூர்ந்து வந்திருக்கின்றேன். ஒருவர் தோழர் கார்த்திகேசன். இன்னொருவர் , நண்பர் ராஜகோபாலன் மாஸ்டர்."

டொமினிக் ஜீவா அவர்களின் இக்கூற்றுகள் மிகவும் முக்கியத்துவம் மிக்கவை. அவருக்கு வாசிக்க, எழுதக் கற்றுத்தந்தவர் என்னும் வகையில் இராஜகோபால் 'மாஸ்ட'ரின் பங்களிப்பு இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவம் மிக்கது. அவரது பாடசாலை மாணவர்களிலும் பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருப்பார்கள். ஆனால் பாடசாலைக்கு வெளியே அவரது மாணவராகவிருந்திருக்கின்றார் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில், உலகத்தமிழ் இலக்கியஉலகில் தனது எழுத்துகள் மூலமும், சஞ்சிகை மூலமும், பதிப்பகம் மூலமும் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர் டொமினிக் ஜீவா. தற்போது அவரது முதுமை காரணமாக அவரது இலக்கியச் செயற்பாடுகள் முடங்கிவிட்டமை துரதிருஷ்ட்டமானது.

அத்தகைய மகத்தான ஆளுமையாளருக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்த ஆசான் 'ராஜகோபாலன் மாஸ்டர்' என்னும் தி.இராஜகோபால் ஆசிரியர் என்னும்போது அவர் மீதான மதிப்பு பெருகுகின்றது.

த.இராஜகோபாலன் மாஸ்டர்

மேற்படி கட்டுரையிலுள்ள சிறு தகவற் பிழையொன்றினை எழுத்தாளர் வதிரி.சி.ரவீந்திரன் சுட்டிக் காட்டியிருந்தார். (வதிரி. சி.ரவீந்திரனின் அக்காவின் கணவரே இராஜகோபால் மாஸ்டர்'.' அத்துடன் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரும் , தற்போது கனடாவில் வசிப்பவருமான நண்பர் மதியழகன் இராஜகோபால் அவர்களின் தந்தையாரே 'இராஜகோபால் 'மாஸ்டர்' என்பதும் குறிப்பிடத்தக்கது). இராஜகோபால் 'மாஸ்ட'ரின் பிறந்த ஊர் சாவகச்சேரி. வாழும் ஊர் கந்தர்மடம் என்று கட்டுரையிலுள்ளது. உண்மையில் பிறந்த இடம் கந்தர்மடம், புகுந்த இடமே சாவகச்சேரி என்ற தகவலைச் சுட்டிக்காட்டியிருந்தார் வதிரி சி.ரவீந்திரன் அவர்கள். அத்துடன் எழுத்தாளர் டானியலின் மகனுக்குப் புரட்சிதாசன் என்னும் பெயரைச் சூட்டியதும் இவரே என்றும் வதிரி.சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

எழுத்தாளர் சொக்கனின் மணிவிழா மலரில் அதன் இணையாசிரியர்கள் (க.சிவராசா & மு,யோகராசா) பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்:

" முற்போக்காளரான சொக்கன் அவர்களுக்கு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் மார்க்சிய ஞானகுருவான த.இராஜகோபாலன் அவர்களுடைய தொடர்பு இக்காலகட்டத்தில் கிடைத்தது. இதனால் தமது நோக்கு விரிந்ததாக அவர் கூறுகின்றார்."

குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து வரும் எழுத்தாளர் த.இராஜகோபால் அவர்களின் எழுத்துப் பங்களிப்பு வேண்டுமானால் குறைவானதாகவிருக்கலாம். ஆனால் அவரது சமூக, அரசியற் பங்களிப்புகள். . இலக்கிய ஆளுமைகளுக்கு ஆசிரியராகப்
பாடசாலைக்கு வெளியே அவராற்றிய ஆசிரியப் பங்களிப்புகள் மகத்தானவை.

ஆதாரங்கள்:
1.மல்லிகை அட்டைப்படமும், அட்டைப்படக் கட்டுரையும் - http://noolaham.net/project/410/40911/40911.pdf
த.இராஜகோபால் சிறுகதை 'எங்கே போவேன்?' - 3.3.1967 சுதந்திரன் - http://noolaham.net/project/436/43523/43523.pdf
சொக்கன் 60 - மணிவிழா மலர் - http://noolaham.net/project/96/9556/9556.pdf

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.