எழுத்தாளர் அ.யேசுராசாஎழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்."

இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.

 

எவ்விதம் குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் முக்கியமோ அவ்விதமே இவ்வகையான வெகுசன இலக்கியமும் ஒருவரின் வாசிப்பின் பரிணாம் வளர்ச்சியில் முக்கியமானவை. விமர்சகர்கள் சிலர் இதனை உணர்வதாகத் தெரியவில்லை. ஏதோ இவ்வகையான இலக்கியத்தை ஏற்றுக்கொண்டால் தங்கள் மேதமை குறைந்து விடுவது போல் நடிக்கின்றார்கள்.

இவ்வகையான வெகுசன இலக்கியம் பாத்திரப்படைப்பில், கூறவந்த பொருளில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் புறக்கணித்து விட முடியாது. இன்று குறிஞ்சி மலர் பூரணியையும், அரவிந்தனையும் பொன்விலங்கு சத்தியமூர்த்தியையும், பாரதியையும், மோகினியையும் நினைவில் வைத்திருக்கின்றோமல்லவா. அதுவே இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும். இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும், இவை சென்றடைகின்றன.

நா.பா.வின் 'பொன் விலங்கு'

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.