'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ்
ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று.
இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது?
சொல்வ தெல்லாம் உண்மை தானா?
இதுவரை நாங்க கண்ட தில்லை
இந்த வைரசை என்ற போதும்
அச்சம் பெரிய வியாதி அன்றோ
அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.

கொரோனா என்றாலும் கோவிட் என்றாலும்
அஞ்சோம். அஞ்சோம் அடிநாம் பணியோம்.
எதிர்த்து நின்று வென்று நிற்போம்.
மானுட குலத்தை இதுபோல் நோய்கள்
நாசம் செய்வது புதிது அல்ல.
அதனால் முடங்கி இருப்பதும் இல்லை.
இருப்பின் முடிவு நியதி அன்றோ?
இதற்குக் கவலை எதற்கோ இன்று ?

வருவதை எதிர்த்து துணிந்து நிற்போம்.
வைரசை வென்று சாதனை புரிவோம்.
எதுவந்த போதிலும் ஏற்போம் எதற்கும்
கலங்கிட மாட்டோம் உறுதி எடுப்போம்.
எம்மையும் அயலையும் உலகையும் காப்போம்
அதற்குரிய செயல்களை செய்வோம் வெல்வோம்.
மரணத்துள் வாழ்ந்த நமக்கு இந்த
'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?