நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..நூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:

"நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."

ஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ்ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.

நூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தின் முக்கியமான பயன்களாக நான் கருதுவது:

1. ஆவணச்சேகரிப்பு
2. இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் சான்றுகளின் சேகரிப்பு.
3. இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களின் சேகரிப்பு.
4. போர்ச்சூழலில் தொலைந்த படைப்புகளை எழுத்தாளர்களுக்கு மீண்டும் வழங்குதற்கு, அவர்கள் அவற்றை நூல்களாக்கும் பொருட்டு அவர்கள்தம் படைப்புகளின் சேகரிப்பு.
5. ஆய்வு மாணவர்களுக்குரிய உசாத்துணை விபரங்களின் சேகரிப்பு.
6. இலங்கைத்தமிழர்களின் சமூக, பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்களின் சேகரிப்பு

இவ்விதமாக ஆக்கபூர்வமாகச் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகச் சேவையாற்றிவரும் நூலக நிறுவனம் பதினாறாவதாண்டில் காலடி வைத்துள்ளது. தன் வரலாற்றுப்பங்களிப்பை இந்நிறுவனம் சிறப்பாகவும், பெருமைப்படத்தக்க வகையில் செய்து வருகின்றது.. மேன்மேலும் நூலகம் நிறுவனம் பெரு வளர்ச்சி கண்டிடட்டும், உலகத்தமிழர்கள் அனைவரும் இதன் மூலம் பயன் அடைந்திடட்டும். மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.