நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048  -முன்னுரை
சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவன நவீன இலக்கியங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, இலக்கண வரைமுறைகளைக் கட்டுடைத்துப் படைக்கப்பட்டவையே நவீன இலக்கியங்கள். சமூகத்தின் மூலை முடக்குகளில் காணலாகின்ற வாழ்வியல் சிக்கல்களை அடையாளப்படுத்துவதில் புனைகதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறுகதை, புதினம் எனும் பிரிவுகளைக் கொண்ட புனைகதைகளுள், சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள்ளவறே எடுத்தியம்புவன புதினங்கள். வாழ்வியல் என்று பொதுமையோடு நோக்கும் படைப்புகள் எண்ணில. எதிர் காலத் தலைமுறைகள் என்றும் நாளைய சமூகமென்றும் கருதப்படுபவர்கள் சிறுவர்கள். அத்தகைய சிறுவர்களின் இளம் வயதுக் காலம் செம்மையாக அமைந்தால்தான், முழுமையான வாழ்க்கையினை அடைவார்கள். சிறுவர்களின் வாழ்க்கையினைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ புதினம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியலைப் பற்றி இக்கட்டுரை வழி அறிவோம்.

கதைக்களமும் கருவும் :
“வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது”(தமிழில் வட்டார நாவல்கள், ப.2.) என்ற கூற்றுக் கேற்ப நிழல் முற்றம் புதினத்தின் கதைக்களமாக கொங்கு வட்டாரத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதி இடம் பெற்றுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள விஜயா திரையரங்கத்தில்தான் கதை நிகழ்கிறது. நவீன இலக்கியங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைந்த இலக்கியங்களே,சிறுவர்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையன்று. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப, இளம் வயதில் வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் அமையக்கூடிய வாழ்வியல் சூழல்களும்தான், ஒரு மனிதனின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும். வாழ்வின் முற்பகுதியான இளம்வயது வாழ்க்கைதான் ஒருவரது ஆயுள் முழுமைக்குமான வாழ்கையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கும். சிறுவர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நிழல் முற்றம் புதினத்தில், இம்மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார் பெருமாள் முருகன். கணேசன், சக்திவேலு, மணி,பூதன் போன்ற சிறுவர்கள் திரையரங்கிலுள்ள சோடாக் கடைகளில் பணிபுரிகின்றனர். இம்மந்தார்களையும் இத்திரையரங்கையும் மையமாகக் கொண்டே கதை சித்தரிக்கபட்டுள்ளது.

சிறுவர்களின் வாழ்வியல்
‘திரையரங்கே உலகம்; தங்கள் முதலாளியும் உடன் பணி புரியும் சிறுவர்களுமே உறவுகள்’ என்று வாழ்ந்து வருபவர்கள்தான் இச்சிறுவர்கள். இக்குழந்தைத் தொழிலாளர்களின் பணி வரையறுக்கப் பட்டதன்று. பெரியவர்களாக இருந்தால் பணிப்பளு என்பது வரையறுக்கப்பட்டிருக்கும். ஊதியமும் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆனால் சிறுவர்களுக்கு இது முற்றிலும் முரணானது. அதுவும், கேட்பதற்கு யாருமில்லையென்றால், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையரங்கில் சோடா விற்பதுதான் சிறுவர்களின் வேலை. சோடா விற்பதில் இவர்களுக்குள் போட்டியும் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது இயல்பே. இச்சிறுவர்களுக்கு வாழ்க்கையே சிக்கலாக இருப்பதை ஆசிரியர் புதினத்தில் சித்திரித்துள்ளார். ஒரு வேலை முடியும் முன்பே, இன்னொரு வேலை தயாராக இருக்கும் இந்தக் குழந்தைத் தொழிலார்களுக்கு. அது மட்டுமன்று. கடைப் பணிகள் முடிந்தால், முதலாளியின் வீட்டுப் பணிகளியும் செய்ய வேண்டும். “ஒரு வேலையுங் கெடையதுடா, சும்மா ராஜாவாட்டம் சுத்திக்கிட்டு இருக்கற வேலதான். நாலு ஆடு இருக்குது. வெளியுட்டா அதும்பாட்டுக்கு மேயும். நெவுலுக் கண்ட எடத்துல உக்கோந்து பாத்துக்கிட்டாப் போதும் என்னோ” (நிழல் முற்றம்,ப.33) என்பது, சோடக்கடையில் வேலை செய்யும் சிறுவனை வற்புறுத்தி, ஆடு மேய்க்கத்தான் ஊருக்கு அழைத்துச் செல்வதைப் புலப்படுத்துகிறது.

சிறுவர்களின் குடும்பஉறவு
திரையரங்கிலும் திரையரங்கைச் சுற்றிலும் உள்ள கடைகளிலும் பணி செய்யும் சிறுவர்களுக்குக் குடும்பமும் உறவுகளும் இருக்கின்றார்கள். இச்சிறுவர்கள், தங்கள் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதற்கும் விரும்பியதில்லை. சக்திவேலுக்கு அப்பா இருக்கிறார். அவர் தொழுநோயாளி. அம்மா வேறு ஒருவனுடன் ஓடிச் சென்றுவிட்டாள். அப்பா தொழுநோயாளி என்பதை மற்றவர்கள் அறிந்தால் தனக்கு அவமானம் என்று கருதி, அப்பாவை வெறுக்கின்றான். நடேசனுக்கு உறவு என்று சொன்னால் அவன் பாட்டி மட்டும் தான் . அப்பா வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டார். “சுருங்கி உள்ளுக்குள் இருக்கிக் கிடந்த திசையைப் பார்த்தாள். மசமசத்து அவன் உருவம் தெரிந்தது. அதற்குள் சில்லரைப் பையைச் சைக்கிள் ஒன்றில் மாட்டிவிட்டு நடேசன் வந்தான். அவள் கையிலிருந்த போசியை வெடுக்கெனப் பிடுங்கினான். கெட்டியாகப் பற்றியிருந்த கையோடு, உடம்பு சரேலெனக் கீழேபோனது” (நிழல்முற்றம், ப.78.). என்பது நடேசன் மீது அவன் பாட்டி வைத்துள்ள பாசமும் அவன் பாட்டி மீதும் குடும்பத்தின் மீதும் அவன் கொண்டுள்ள வெறுப்பையும் சுட்டிக் கட்டுகிறது. சிறுவர்களின் குடும்பங்களும் அவர்களது வாழ்க்கை நிலையும் மிகவும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்ததாகவே காணப்படுவதை மறுக்கலாகாது.

எதிர்கொள்ளும் சவால்கள்
நிழல் முற்றத்தில் காணப்படுகின்ற சிறுவர்கள் பணிபுரியும் இடத்திலும் தம்மோடு பணிபுரியும் நண்பர்களுக்கு இடையிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. வரையறையின்றிப் பணி மட்டுமின்றி அதிகாரமும் அவர்கள் மீது பாய்கிறது. ‘மனிதர்கள் மகான்களாக இருக்கா விட்டாலும் மனிதனாக இருந்தால் போதும்’. ஆனால் இச்சிறுவர்களின் முதலாளிகள், இவர்களை விலங்குகளை விடக் கீழ்த்தரமாகவே நடத்துகிறார்கள். சோடா விற்ற நேரம் தவிர, மற்ற நேரங்களில் சோடாக்கடைக்குத் தேவையான தண்ணீரையும் இவர்கள் சேகரிக்க வேண்டும். திரையரங்கில் டிக்கெட் கிழித்தல், சைக்கிள் ஸ்டேண்ட் பார்த்தல், போன்ற பணியும் இவர்களைச் சர்ந்தது. இதற்கென வேறு ஊதியமும் கிடையாது. ஒருமுறை சோடக்கடை முதலாளி வெளியில் சென்று விட்டார். முதலாளியின் மகன், முத்து தான் கடையில் இருக்கிறான். சிறுவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில், “எச்சக்கலப் பொறுக்கி... கொடத்தக் குட்ரன்னன்... அதுக்குத்தான் சாணிப் பொணமாட்டம் நிக்கராண்டா. டே முத்து. உனக்கிருந்தாலும் இத்தன கொழுப்பு ஆவாதுடா. எதுக்கு அப்படிச் சொல்ற” (நிழல்முற்றம், ப.41). என்பது சக வயதுள்ளவர்களைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகாரத்தின் உச்சத்தைப் புலப்படுத்துகிறது.

சிறுவர்கள் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்தாலும் அவர்களுக்குச் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. இந்த சொற்பமான வருவாயைக் கொண்டு அவர்களால் மூன்று வேளை உணவு கூட உண்ண முடியவில்லை. ஏன்? தேநீர், தின்பண்டங்களை வாங்குவதற்குக் கூட பணம் இல்லை. திரைப்படம் பார்க்க வருகின்றவர்கள் சாப்பிடும் பொழுதும் கடைகளில் மற்றவர்கள் சாப்பிடும் பொழுதும் இச்சிறுவார்கள் வேடிக்கை பார்ப்பார்கள். படம் முடிந்த இரவு நேரங்களில் வெளியூர்களுக்குச் சென்று போஸ்டர் ஒட்டிவிட்டு, அதிகாலை சோடக்கடைக்கு வந்துவிடுவார்கள். பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல்களுக்கும் ஆளாகிறார்கள். திருட்டு போன்ற செயல்களிலும் புகை, போதை போன்ற தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிவிடுகின்றனர் இச்சிறுவார்கள். இத்துனை அடிமைத்தனத்திற்கும் மூலக்காரணமாக இருப்பது அவர்களது வறுமையே.

“கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”  (ஒளவையார்,தனிப்பாடல் திரட்டு, பா.55.)

என்பதற்கேற்ப குடும்ப வறுமையின் காரணமாக இடையறாது வேலை பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் குறைந்த வறுமையைப் போக்கவில்லை. “சக்திவேல் தூள் திணித்த சிகரெட்டைப் புகைத்து அண்ணாந்த படி கேட்டுக்கொண்டு கிடப்பன். நடேசன் ‘மாத்திரை’ என்றால் ‘கஞ்சா’வாகிவிட்டான் . இரவில் கஞ்சா மயக்கம்தான் வயிற்றை நிறைத்துத் தூக்கம் கொண்டு வரும்.படம் போட்ட ஓரிரு நாட்களுக்குப் பின், மூன்று வேளையும் சாப்பிடுகிற வளமை போய்விடும் (நிழல்முற்றம் ,ப.106).

முடிவுரை
எதிர்காலச் சமுதாயமாகத் திகழக்கூடியவர்கள் இன்றைய சிறுவர்கள். இளமை சரியாக அமைந்தால்தான் எதிர் காலம் வளமானதாகவும் வலிமையானதாகவும் அமையும். சிறார்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களுள் ஒன்று நிழல்முற்றம். திரையரங்கில் வேலை செய்யும் சிறுவர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடு எடுத்தியம்பியுள்ளது. கடினமான, வரையறையில்லாப் பணிப்பளுவிற்கு ஆளாகிறார்கள். குடும்ப உறவுகளைச் சில காரணங்களுக்காக இவர்கள் வெறுத்தும், அவர்களால் இவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். வறுமையின் காரணமாக அதிகாரம், பாலியல் சிக்கல் , புகை, போதை போன்ற கொடுமைகளுக்கும் ஆளாகி, மீளா அடிமைகளாக்கப் பட்டுள்ளதை நிழல்முற்றம் புதினத்தில் பெருமாள் முருகன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இலவசக்கல்வி, சமத்துவக்கல்வி, கல்விக்குக் கடன்தொகை, உதவித்தொகை என்று பல வழிகள் இருந்தாலும் குழந்தைத் தொழிலார்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கென்றே தொழில்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.

பார்வை நூல்கள்

1.நிழல்முற்றம் 
2.தனிப்பாடல்கள்
3.நாவல் வளம் 
4. தமிழில் வட்டார நாவல்கள்
5.நாவல் இலக்கியம்

*கட்டுரையாளர்: - நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048  -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.