நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்எல்லாளன்இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு   வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்  என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.

தனது ஏழு வயதில் தந்தையைப் பறிகொடுத்த எல்லாளனுக்கு எல்லாமே அம்மாதான். சொந்தக்காலில் நிற்பதற்கு இளமையிலேயே கற்றுக் கொடுக்கின்றார் அம்மா. சிறுவயதில் தேவாலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்த எல்லாளன் ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) நடத்திய அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்கின்றார். 83ஆம் ஆண்டு இனக்கலவரம் பலரை அகதிகளாக்கி ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர்களுள் மதகுருமாரும் அடக்கம். அப்படியே இவர்களது கோப்பாய் தேவாலயத்திற்கும் ஒரு மதகுரு வருகின்றார். அப்போதுகூட வடபகுதிகளில் இருந்து பேக்கரி போன்றவற்றை நடத்திவந்த சிங்களவர், அவர்களது உடைமைகள் எதுவும் தாக்கப்படவில்லை. 84 ஆம் ஆண்டு, இராணுவத்தின் வற்புறுத்தலின் பின்னர்தான் அவர்கள் வடபகுதியை விட்டுச் சென்றார்கள். 84 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வடபகுதி வந்த சிங்கள பிஷப், இவர்களின் தேவாலயத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடி கட்டி அவரை வரவேற்கின்றார் எல்லாளன். பட்டயக்கணக்காளர் படிப்பை ஆரம்பித்த இவரை 83 இனக்கலவரம் திசை திருப்புகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைகின்றார். இந்தியா செல்கின்றார். `சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது’ என்கின்றார் எல்லாளன். மறு வருடமே அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். அந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த தனது அனுபவத்தை `சரிநிகர்’ பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடராக எழுதினார். பின்னர் திருத்தங்கள் செய்து `தமிழரங்கம்’ இணையத்தளத்தில் வெளியிட்டார். அதுவே பின்னர் இந்த நூலாக வந்திருக்கின்றது.

பதின்மூன்று வயதில் அரசியல் நடவடிக்கைக்களில் ஈடுபாடு கொண்ட இவர், ஆரம்பத்தில் எந்த இயக்கத்தில் சேருவது என்ற குழப்பம் இருந்திருப்பதைப் புத்தகம் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. வெளிநாடு புலப்பெயர்வு வாய்ப்பு இருந்தும், இயக்கத்திற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்து இந்தியா செல்கின்றார். கொடிய கடற்பயணத்தையும் தாண்டி, இவரைப் போல் நாற்பது பேருடன் இராமேஸ்வரம் பகுதியைச் சென்றடைகின்றார். 1984 ஏப்ரல் மாதம் சென்னையில் ஒரு கொட்டிலில் இயக்க வாழ்வை ஆரம்பிக்கின்றார். ரஞ்சித் எனப் பெயர் சூட்டப்பட்ட இவர் அரசியல் வகுப்புக்களில் கலந்து கொள்கின்றார்.

தலைமைப்பீடத்திற்கும் அதற்கடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தபோது, பேச்சுச் சுதந்திரம்/ கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் - இவர் உட்பட 13 ஆண்களும், 30 பெண்களும் தப்பி ஓடும் முயற்சியில் இறங்குகின்றார்கள். `மரினா கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம்/ எம்.ஜி.ஆர் தலையீடு’, `சுதன் – ரமேஷ் விடுதலையும் புலிகளின் ஆயுதங்களும்’ போன்ற தலைப்புகளில் அவை விபரிக்கப்பட்டுள்ளன. ரெலோவை விட்டுப் பிரிந்தபின்னர் அன்றாடச் செலவுகளுக்குப் பணம் இல்லாததால் இவரும் நண்பரும் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாடு திரும்புகின்றார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் EPRLF, EROS போன்ற மாற்று இயக்கங்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் என்ற தகவலையும் பதிவு செய்திருக்கின்றார். அந்தக் காலகட்டத்தில் பெண்களில் சிலர் பெற்றோரையும் அழைத்து வந்து கல்வி கற்பதற்குச் செல்கின்றார்கள். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்தியப்பிரஜைகளே அனுமதி எடுக்கத் திண்டாடும்  நிலையில், தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றது எனக்கூறும் ஆசிரியர், `ரெலோவில் இருந்து வெளியேறிய அனைத்துப் பெண்போராளிகளையும் உயிர் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினேன்’ என்று குறிப்பிடுகின்றார். அத்துடன் புலிகளின் முதல் பெண் படைப்பிரிவினர், இவர்களில் இருந்து போன சோதியா மற்றும் சிலர் என்ற குறிப்பையும் தருகின்றார்.

வாழ்வின் நெருக்கடிகள், இயக்கங்களுக்குள் உள்முரண்பாடுகள், உணவு - வாழ்விடத்திற்கான தேடல்கள், விடுதலைக்காகப் போராடப் போய் பின்னர் தாம் சேர்ந்த இயக்கத்திற்கே எதிராக நிற்கவேண்டிய சூழ்நிலை, துப்பாக்கி முனையின் துரத்தல்கள் இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லும் இந்த நூலில் அடிநாதமாக `மனித நேயம்’ ஊடுருவிக் கிடப்பதை நான் பார்க்கின்றேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் செதுக்கி மீண்டும் புதுப்பிக்க இருக்கின்றார் என்ற தகவலையும் சொன்னார் எல்லாளன். புதிய புத்தகத்தில் தன் நண்பர்களின் செய்திகளையும், தகவல்களையும் மேலும் பிண்ணிணைப்பாகப் போடலாம். அல்லது அவரின் நண்பர்கள், ஏனையவர்கள் கூட தனித்தனி தம் அனுபவங்களைப் புத்தகமாக எழுதலாம். விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.