குரு அரவிந்தன்அது வேறு உலகம். பூமிப்பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக் கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.

இப்படித்தான் இந்த கள்ளிக்காடு இதிகாசம் தொடங்குகிறது!

வேறு உலகம் என்றதும் தமிழீழம் தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வட, கிழக்குப்பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சுற்றிவர இருக்கும் பகுதிகளில் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் இந்தக்கதை சொல்லப்படுகிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுகிறது. வறண்டநிலம் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டாலும் இவைஎல்லாம் என்றுமே மறக்கமுடியாத தமிழர்களின் பாரம்பரிய சொர்க்கபூமியல்லவா?

கருவேலமரம்,பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூரன்கொடி, முதலான வானத்துக்குக்கோரிக்கைவைக்காத தாவரங்களும்

நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண்மண்டலம்.

கரும்பாறையிலும்,சரளையிலும்,சுக்கான்கல்லிலும்,முள்மண்டியநிலங்களிலும் தொலைந்துபோன  வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் 'பொழைப்பு'.

தமிழீழ மண்ணிலே பிறந்தவன், என்றுமே மறக்கமுடியாத தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் மீண்டும் கண்முன்னால் நிழலாடுகின்றன. இதைவிட தமிழீழ மண்ணலே பனை. தென்னை, வேம்பு, பூவரசு, முருங்கை, தாளை, ஆல், அரசு, வாகை, ஈச்சமரம் போன்ற பலமரங்களும், ஆமணக்கு, கொவ்வை, எருக்கலை, தொட்டச்சுருங்கி, குப்பைமேனி, காந்தள் போன்ற பலசெடிகொடிகளும், காகம், புலுனி, செம்பகம், மைனா, மீன்கொத்தி, கலகக்குருவி,  மயில், குயில், வல்லூறு.பருந்து, ஆட்காட்டி போன்ற பறவை யினங்களும் என்றுமே எங்கள் கண்ணைவிட்டு மறையாதன. ஏனென்றால் அவைகளோடு நாங்களும் ஒன்றாய் வாழ்ந்திருக்கிறோம். தாயிலும் மேலாம் எங்கள் தாய்மண். தாய்கூடப் பத்து மாதம்தான் சுமப்பாள், ஆனால் தாய்மண்ணோ கருவில் இருந்து, எருவாய்போனபின்பும்கூட,காலமெல்லாம் எங்களைச்சுமப்பவள் அல்லவா?

பாரம்பரியமாய் வாழ்ந்த இந்த மண்ணிலே தொலைந்துபோன, பறித்தெடுக்கப்பட்ட எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் இன்று தமிழர்களாகிய எங்களின் ஒரே மூச்சாகி  நிற்கிறது என்பதை இங்கே சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றார் இந்த நூல் ஆசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

உள்ளே நுழைகிறேன்...

செல்பேசியில் பேசிக்கொண்டே தங்களுக்குள் சிரித்துக் காலத்தைப் போக்கும் வேலையற்ற பைத்தியங்கள் போல அல்லாது, கோடை வெயிலை நிலா வெளிச்மாக்கி வேர்வை சிந்த, மாடுகளோடு பேசுவதுபோல தனக்குள் பேசிக்கொண்டு உழுது கொண்டிருக்கும் ஏர்க்காரர்கள்.

முண்டாசு, கலப்பை, தார்க்குச்சி, அரைஞான் கயிறு, தூக்குச்சட்டி, அம்மி, குழவி, துவையல் - புலம் பெயர்ந்த நாடுகளில், வழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சொற்களை ஞாபகமூட்டுகிறார் ஆசிரியர்.

'மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு.." பிறந்த மண்ணின் மகிமையை எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர், ஆட்டுப் புழுக்கையும், கோமியமும் சேந்தா பொட்டக்காடும் பொன் விளையும் என்கிறார்! தமிழீழ விவசாயிகளோ ஆட்டுப் புழுக்கை, மாட்டுச்சாணகம் மட்டுமல்ல தினமும் கூட்டிப் பெருக்கிச் சேகரிக்கும் குப்பையைக்கூட வீணாக்காமல் ‘கூட்டெருவாக’ மண்ணில் கலந்து பசளையாக்குகிறார்கள்.

கோழிகளின் கூவலில் விடியக் காத்திருக்கும் கிராமம்.தட்டான்பூச்சிகளும்  சில்வண்டுகளும், காடைகளும், வெள்ளெலிகளும், இரை தேடி வந்துபோன பாம்பின் தடமும், தலைகாட்டி மறையும் கீரிகளும் சொல்லமுடியாத அனுபவங்கள். தமிழீழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காணக்கூடிய காட்சிகள்.

கோழிக்கறி எப்படி வைப்பது என்று சொல்லித் தரும்போது, வீட்டிற்கு வந்து

போன விருந்தினர்கள் மட்டுமல்ல, வேள்வி இறைச்சியும் குத்தரிசிச் சோறும் கூடவே ஞாபகம் வருகிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தினமும் கோழிக்கறி சாப்பிட வசதி இருந்தாலும், பிறந்த மண்ணில் அரப்பு, சீயாக்காய், எண்ணெய் தேய்த்து, கண் எரிய சனிநீராடி (முழுக்குப்போட்டு), அம்மாவின் கையால் சமைத்த வேள்வி இறைச்சியும், குத்தரிசிச் சோறும் சாப்பிட்டது போல வருமா? அதை நினைக்கும்போது மண்வாசனை போல, பெருஞ்சீரகத் தூள், கறுவா, கறிவேப்பிலை கலந்த கோழிக்கறி கொதிக்கும் வாசனை பல்லாயிரம் மைல்களைக் கடந்து இங்கேயும் எங்களை நாவூறத்தானே வைக்கிறது.

இன்னொருமுறை வாழ்வதற்கு வாய்ப்பில்லாத அந்த இறந்த காலத்தை நினைக்க, எங்கள் விழிகளிலும் நீர் முட்டத்தானே செய்கிறது.

இருமலுக்கு நாட்டுவைத்தியம் சொல்லித்தருகிறார். நரித்தோலை கருகியும் கருகாமலும் சுட்டு, வெற்றிலையில் வைத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் வந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார். நாங்கள் கொத்து மல்லிக் கசாயம் என்று சொல்வதை, சுக்கு,மிளகு, திப்பிலி, தூதுவளைக் கசாயம் என்கிறார்.

ஊரடித் தோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கிணற்றை நம்பி தக்காளி, கத்தரி, மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த நான்கும்தான் அந்த மண்ணுக்கு ஒத்து வரும் என்கிறார். எந்த எந்த மரங்களுக்கிடையே, எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை இப்படிச் சொல்கிறார்.

'நண்டூர நெல்லு நரியோடக் கரும்பு
வண்டியோட வா(i)ழ தேரோடத் தென்ன"

தமிழீழக் கிராமங்களில் அனேகமாக வீட்டிற்கு ஒரு கிணறாவது இருக்கும். குடிநீருக்கு மக்கள் அதை நம்பித்தான் இருப்பார்கள். அதைச் சுற்றி பத்துப்பன்னி ரண்டு தென்னைமரங்கள், வாழைமரங்கள், கமுகு, எலுமிச்சை, தோடை மாமரம், பலா, ஈரப்பலா போன்றவை நடப்பட்டிருக்கும். அதைவிட தோட்டக் கிணறு கொஞ்சம் ஆழம் கூடியதாக இருக்கும். அந்தக் கிணற்று நீரை நம்பித்தான் சிறு தோட்டம் செய்வார்கள். தக்காளி, மிளகாய், வெங்காயம், கத்தரி, மரவெள்ளி, வெண்டி, வாழை என்று அவரவர் வசதிக்கும், மண்ணின் தன்மைக்கும் ஏற்ப பயிர் மாறுபடும். சில இடங்களில் உருளைக்கிழங்கு, நிலக்கடலை, பயறு, பீற்றூட், கரட், திராட்சை கூடப் பயிரிடுவார்கள். எலியோட வரகு என்று சமீபத்தில் கேட்ட ஒரு நாட்டுப்பாடல் வரிகூட இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

'மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்பிடுற சாமி' என்று ஒரு பாத்திரத்திற்கூடாகச் சொல்கிறார் ஆசிரியர். இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடலோரம் தமிமீழத்திற்குச் சொந்தமானது மட்டுமல்ல, அதன் சரித்திர முக்கியத்து வத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கரையோர மக்கள் கடல் வளத்தையே நம்பியிருக்கிறார்கள். முக்கிய துறைமுகங்களான திருகோணமலை, பருத்தித்துறை, காங்கேசந்துறை போன்றன இக் கடல் பரப்பிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவிலும், பாதிப்பிலும் இருந்து கரையோர மக்கள் இன்னும் முற்றாக மீளவில்லை. எந்தக் கடலன்னை காலா காலமாய் அவர்களை வாழவைத்தாளோ, அதே கடலன்னை அவர்களை வஞ்சித்த போது அந்தத் துயரத்தை அவர்களால் தங்கமுடியவில்லை. பாதிப்புக் குள்ளான இக்கரையோர மக்களை, தமிழர்கள் என்பதால் மனிதாபிமானமற்ற முறையில் அரசும் சேர்ந்து பட்டினிபோட்டு வதைப்பதுதான் மிகப்பெரிய சோகக்கதை!

ஒரு கதாபாத்திரம் டீக்கடையில் ஒரு சிய்யம்- ஒருவடை -ஒருடீ என்று சாப்பிடும் விதத்தை சுவாரஸ்யத்துடன் சொல்லுகின்றார் ஆசிரியர். தமிழீழ தேனீர் சாலைகளில் பொதுவாக தேனீர், கோப்பி, உழுந்து வடை, பருப்புவடை, சூசியம், போண்டா, வாய்ப்பன்,வாழைப்பழம் என்பன பொதுவாக இருக்கும். சூசியத்தைத்தான் இங்கே 'சிய்யம்' என்று ஆசிரியர் குறிப்பிடு கின்றார். கோதுமை மாவோடு வாழைப் பழத்தைப் பிசைந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் பலகாரம் வாய்ப்பனாகும். இதைவிட வெதுப்பகத்தில் தயாரிக்கப்படும் சீனிப்பாண், ரோஸ் பாண், பச்சைப்பாண் போன்ற உணவு வகைகளும் தேனீர்ச்சாலையில் கிடைக்கும்.

வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரிதுதான் என்று கதாபாத்திரமான பேயத்தேவரின் மனைவி இறந்தபோது ஆசிரியர் இப்படித்தான் குறிப்பிடுகின்றார்.

தமிழீழ மக்களுக்கு இழப்பு, அதுவும் இளமையில் இழப்பு என்பது அவர்களின் அன்றாடவாழ்வில் ஒரு அங்கமாகப் போய்விட்டது. சொல்லியழுவதற்குக்கூட யாருமின்றி ஏதிலியாய், இன்று ஈழத்தமிழன் சொந்தமண்ணிலே அவதிப்படுவதைப் பார்த்து அணைக்க வேண்டியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? மனம்வைத்திருந்தால் வரலாற்றையே அவர்கள் மாற்றி இருக்கலாம், அப்படிச் செய்யவில்லை வாய்ச்சொல்லில் வீரர் போல  வேடிக்கைதான் பார்த்தார்கள்.

இதையாரிடம் சொல்வது? யாரைநோவது?

பிணங்களுக்கு, கிடந்த திருக்கோலம் அல்ல அமர்ந்த திருக்கோலம்தான் கள்ளிக் காட்டுக் கலாசாரம் என்கிறார் நூல் ஆசிரியர். ஒரு நாற்காலியில் உயிர் உள்ள ஆள்போல் உட்கார வைத்து அலங்காரம் செய்து, வசதிக் கேற்ப தேர்கட்டித் தூக்கிச் செல்வார்களாம். மூத்த மகள்தான் இங்கே கொள்ளி வைக்கிறாள்.

அம்பலத்தில்தேரிறக்கி,அரளிப்பூச்சூறையிட்டு செல்லத்தாயி குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவர அரிவாள் மூக்கில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு துளைபோட்டு 'மூணாம் சுத்தில கொடம் ஒடச்சுத் திரும்பிப் பார்க்காம நடதாயி" என்று நாவிதன் சொல்வதாகவும், சாத்திரம் சடங்கு முடித்துக் குழிக்குள்ளே பிணம் இறக்கி, இடக்கையால் மண் தள்ளி, தலைமாட்டில் கள்ளி நட்டு பொழுது மசங்க வீடுவந்ததாகவும், எட்டாம் நாள் 'உருமாக்கட்டு' என்றும் ஆசிரியர் இங்கே குறிப்பிடுகின்றார்.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R