- நூல்: 'நீண்ட காத்திருப்பு' (A Long Watch) - ஆங்கிலத்தில்:  அஜித் போயகொட | தமிழில்: தேவா - வெளியீடு: வடலி பதிப்பகம் -


படித்தோம் சொல்கின்றோம்: விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்தவரின் வாக்குமூலம் ! அஜித் போயகொட எழுதிய ”நீண்ட காத்திருப்பு”“சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.” கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான். இலங்கைத் தீவினைச்சுற்றியிருந்த இந்து மகா சமுத்திரத்தில் ஊர்ந்தும் விரைந்தும்கொண்டிருந்த சாகரவர்த்தனா கப்பல் பற்றி அறிந்திருப்பீர்கள். அது மன்னார் கடல் பரப்பில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பாரிய சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வசமும் மன அழுத்தங்களுடன் சில வருடங்கள் வாழ்ந்திருக்கும் இவர், விடுதலையாகி வந்தபின்னரும் இலங்கை அரசின் பாராமுகத்தினாலும் புறக்கணிப்புகளினாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தவர். அனைத்து அழுத்தங்களிலுமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், அந்த அழுத்தங்களினால் பெற்ற அனுபவங்களை பதிவு செய்யவேண்டும். அதனால், நீண்ட மௌனத்தின் பின்னர் அஜித் போயாகொட மனம் திறக்கிறார். அவர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதுகிறார் சுனிலா கலப்பதி.

A Long Watch என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலின் தமிழாக்கமே நீண்ட காத்திருப்பு. தமிழில் வரவாக்கியவர் தேவா. இந்நூலை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேவா, சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஏற்கனேவே இவர் மொழிபெயர்த்த குழந்தைப்போராளி ( சைனா கெய்ரெட்சி எழுதியது ) நூல் பற்றியும் எனது படித்தோம் சொல்கின்றோம் தொடரில் எழுதியிருக்கின்றேன். நீண்ட காத்திருப்பு நூலை மொழிபெயர்க்கும் பணியில் தேவாவுடன் இணைந்திருந்தவர்களும் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளரின் பதிவு, இவ்வாறு தொடங்குகிறது. இந்த நூலின் பதிப்புரையின் தொடக்க வரிகளை இங்கு அவசியம் கருதி பதிவுசெய்கின்றோம்:

அறுபதுகளில் யுத்த எதிர்ப்புப் பாடலொன்றில் சர்வதேச இராணுவ சிப்பாய்கள் குறித்து பூர்விகக்குடி பாடகி பஃபி செயின்ற் மேரி (Buffy Sainte-Marie) இவ்வாறு பாடுவார்: “ தனதுடலை ஆயுதமாய் யுத்தத்துக்கு தருகிறவன் எவனோ, அவனில்லையேல் எவராலும் எங்கும் எந்தப்போரையும் நடத்திட இயலாது. “ போரில் ‘ இது இப்படித்தான் ‘ ‘போராட்டங்களில் இவை சகஜம் ‘ என்றெல்லாம் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில் ( Apologists of War Crimes) தனிநபரது பொறுப்பினைத்தான் ( Individual Responsibility ) அப்பாடலில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பார். அரசாங்கங்களின் திட்டங்களைக் கொண்டு செல்வதில் அதன் ஊழியருக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரங்களுக்குச் சிப்பாய்கள் வெறும் கருவிகளே என்கிறபோதும் எல்லாக் கருவிகளும் கட்டளையை அப்படியே பின்பற்றுபவை அல்ல. சிப்பாய்களதும் அரசாங்கத்தின் கருத்தியலும் அதன் பெரும்பான்மை சமூகங்களின் கருத்தியலுடன் ஒத்துப்போவதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வன்முறை உலகமெங்கிலும் என்றும் தொடருதல் சாத்தியப்படுகிறது.

அஜித் போயாகொட , மத்திய இலங்கையில் கண்டியில் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கடற்படையினரை தனது இளம்பராயத்தில் அங்கு அரிதாகவே கண்டிருப்பவர். சிறிய பராயத்தில் ஒரு மகா நாயக்கதேரரின் இறுதி ஊர்வலத்தில்தான் அவர் கடற்படையினரின் சீருடையை முதல் முதலில் பார்த்திருக்கிறார்.

 

1971 கிளர்ச்சியின்போது, பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் சமூகத்தில் நல்லபெயர் இருக்கவில்லை என்பது அவரது சிறுபராயத்து பார்வை. அவருக்கு கடற்படையினரின் சீருடை மனதை கவர்ந்திருக்கிறது. க.பொ.த உயர்தர வகுப்பினை முடித்திருந்த வேளையில் கடற்படை இளநிலை அதிகாரி Officer Cadet பதவிக்கான விண்ணப்பங்களை கோரிய ஒரு விளம்பரத்தை பார்த்துவிட்டு, அதற்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அதுபற்றி பெற்றோர்களுக்கு முதலில் சொல்லாதவர் பின்னர் மறைக்கவுமில்லை.

இவ்வாறு கடற்படையில் இணைந்திருக்கும் அஜித்தின் மூத்த சகோதரன் லலித் உருவத்தில் இவரைப்போன்ற தோற்றமுள்ளவர். அந்த உருவ ஒற்றுமையினாலும், அஜித் புலிகளின் சிறையிலிருந்த காலப்பகுதியில் இவரது அண்ணன் லலித் தென்னிலங்கையில் சினிமாவில் வரும் இரட்டை வேட நடிப்பின் சிக்கல்களினால் வருவதுபோன்ற போராட்டங்களுக்கும் மனஉளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறார். அஜித் கடற்படையிலும் , லலித் சிலோன் டுபேக்கோவில் பணியாற்றியவர்கள்.
அஜித் 1974 இல் கடற்படையில் இணைந்த காலப்பகுதியிலேயே இலங்கையில் இன நெருக்கடி தோன்றி, 1975 இல் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் உக்கிரமடைகிறது. இந்த உக்கிரம் உச்சம்பெற்றவேளையில்தான் 1994 ஆம் ஆண்டில் மன்னார் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த சாகரவர்த்தனா கப்பல், கடற் கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிறது.

குறிப்பிட்ட ( 1974 – 1994 ) இருபது ஆண்டு கால போரின் கோரத்தனமான முகத்தையும், பேச்சுவார்த்தைகள் என்றபெயரில் இடம்பெற்ற இரண்டு தரப்பு இராஜதந்திரப் போர்களையும் , அண்டை நாட்டுடனான ஒப்பந்தம் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. 1991 இல் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி குறித்தும் விமர்சனத்தை முன்வைக்கிறார்.


படித்தோம் சொல்கின்றோம்: விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்தவரின் வாக்குமூலம் ! அஜித் போயகொட எழுதிய ”நீண்ட காத்திருப்பு”

“புலிகள் இயக்கம்தான் இதைச்செய்தது என்பது எங்களுக்குத் தெரியும். அந்நாட்களில் அதுதான் இவ்வாறான குறிக்கோள் பணித்திட்டங்களை நிறைவேற்றும் தகைமை கொண்டிருந்தது. ராஜீவின் மரணத்தில் துக்கப்பட எனக்கு எந்தக்காரணமும் இல்லை. ராஜீவ்காந்தி என்றுமே ஶ்ரீலங்காவிற்கு நண்பனாக இருந்தார் என்று நான் நம்பவுமில்லை. இனங்களுக்கிடையிலான விரிசலில் புகுந்து கொண்டு அதை விரிவுபடுத்துவதில் இந்தியாவிற்கு வழிகாட்டியவர். இன்று தான் விதைத்ததை அறுத்துக்கொண்டார். “ என எழுதுகிறார். இந்த வாக்குமூலம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்குமுரியது!

அதனால், அஜித் போயாகொட என்ற கடற்படை உயர் அதிகாரியை விடுதலைப்புலிகள் நடுச்சமுத்திரத்தில் கைது செய்து கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த கதை மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தில் இரண்டு தரப்பினரும் எவ்வாறு பணய நாடகங்களை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்றையும் கூறுகின்றது.

அஜித் போயாகொட 1981 இல் திருகோணமலையில் சேவையிலிருந்தபோது யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது. மிகப்பெரிய கலாசாரப்பெறுமதி வாய்ந்த நூலகம் என்று அதனைக் குறிப்பிடும் அவர், தீயணைப்பு வாகனங்களை யாழ்நகருக்கு அவ்வேளையில் அனுப்பிவைத்ததையும் நினைவுகூருகிறார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்த பின்னர் ஜே.வி.பி.யினர் தொடங்கிய கிளர்ச்சியின் அநர்த்தங்கள் பற்றியும் விரிவாக சொல்கிறார். தேசிய மருந்துக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் ஜயவர்த்தன, இந்தியாவிலிருந்து கப்பலில் வந்திறங்கிய மருந்துகள் நிரம்பிய கொள்கலனை வெளியே எடுப்பதற்கு ஜே.வி.பி.யின் தடையையும் மீறி செயல்பட்ட குற்றத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்த கொள்கலனை கடற்படையினரதும் துறைமுகத் தொழிலாளர்களினதும் உதவியுடன் அஜித் போயாகொட வெளியே எடுத்து களஞ்சியத்தில் ஒப்படைத்துவிட்டு தலைவருக்கு செய்தி சொல்கிறார். அவருடைய நன்றிதெரிவிப்பும் வருகிறது. அதனையடுத்து அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி வருகிறது.

இந்நூலில் 46 ஆம் பக்கத்தின் இறுதியில் ஒரு முக்கியமான செய்தி வருகிறது.

1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி இலங்கை அதிபர் பிரேமதாச, புலிகளினால் தலைநகரில் கொல்லப்பட்ட காலப்பகுதியில் அஜித், தென்னிலங்கை தங்காலையில் பணியிலிருக்கிறார். அப்போது எதிர்க்கட்சியிலிருந்த மகிந்த ராஜபக்க்ஷ, அன்றை ஐக்கிய தேசியக்கட்சி அரசால் நிகழ்ந்த பலவந்தமாக காணாமலாக்கப்படுவதை எதிர்த்து, கொழும்பிலிருந்து தெற்குநோக்கி நடந்த பாதயாத்திரைக்கு தலைமை தாங்கிச்செல்கிறார். அதனால் பெலியத்தை நகரசபை அவரது வீட்டிற்கான நீர் இணைப்பை துண்டிக்கிறது. திருமதி ராஜபக்‌ஷ, அப்போது அங்கு சிறார் முன்பள்ளி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தவர். அவர், கடற்படையிலிருக்கும் அஜித்தின் உதவியை நாடுகிறார். அவர்களது வீட்டிற்கு ஒரு பவுசர் தண்ணீர் வழங்குவதற்கு முன்வருகிறார். இது மனிதாபிமான உதவி என்கிறார். இவ்வாறு அவர் உதவியதற்கு மற்றும் ஒரு காரணமும் இருந்திருக்கலாம். அஜித்தின் தந்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்.

கடல் என்ற தலைப்பில் அமைந்த பத்தாவது அங்கத்திலிருந்து, அஜித், சாகரவர்த்தனா போர்க் கப்பலில் பணியமர்த்தப்பட்ட கதை 1993 இலிருந்து தொடங்குகிறது. மற்றும் ஒரு போர்க்கப்பலின் பெயர் ஜயசாகர. இரண்டுமே முன்னாள் ஜனாதிபதியின் அரைப்பெயர்களைக்கொண்டவை என்கிறார். 45 கப்பலோட்டிகள் அவருடன் சாகரவர்த்தனாவில் பணியிலிருந்துள்ளனர். இவர்களின் பிராதான பணி ரோந்து மற்றும் கண்காணிப்பு அல்லது புலிகளின் தகவல்களை ஒற்றுக்கேட்டல்.

இக்காலப்பகுதியில் அஜித் தனது சேவையில் இருபது வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறார். சேவை அடிப்படையில் ஓய்வுக்காக விண்ணப்பிக்கக்கூடிய முதல் சந்தர்ப்பம் வருகிறது. விண்ணப்பிக்கிறார். ஆனால், நிராகரிக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுகிறார். விதி விளையாடத் தொடங்குகிறது. அஜித் தனது கடமை அதிகாரிக்கு இரவு வந்தனத்தைச்சொல்லிவிட்டு, கபினுக்குச்சென்று, அணிந்திருந்த சீருடையுடனேயே கட்டிலில் படுத்து, நியூஸ் வீக் சஞ்சிகையை எடுத்துப்படிக்கிறார். அப்படியே தூங்கிப்போகிறார். திடீரென கட்டிலிலிருந்து தூக்கிவீசப்படுகிறார். அப்போது நேரம் இரவு 11. 20. ஏதும் கடற்பாறையில் கப்பல் மோதியிருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் எழுந்தபோது, “சேர், அபிட்ட கஹனவா..“ ( சேர் எங்களுக்கு அடிக்கிறார்கள் ) என்ற குரல் கேட்கிறது. லெப். கேர்ணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன்கள் வாமன், லக்ஸ்மன் ஆகியோரும் புலிகளில் கொல்லப்படுகின்றார்கள். அரச தரப்பில் சொல்லப்பட்டது: 18 பேர் மீட்கப்பட்டனர். 20 மிஸ்ஸிங் இன் அக்சன், 2 பேர் சண்டையில் இறந்தார்கள். 2 பேர் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

அஜித், புலிகளினால் கைதுசெய்யப்பட்டபின்னர், கிளாலி பாதையூடாக அழைத்துச்செல்லப்படுகிறார். அதுவரையில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தவரை ஒரு ஜீப்பில் அழைத்துச்செல்கின்றனர். யாழ்ப்பாணம், கொக்குவில், மானிப்பாய், நல்லூர், மிருசுவில், வன்னி என்று எட்டண்டு காலம் புலிகளின் தடுப்புமுகாம் வாசியாகிவிடுகிறார். மொழிபெயர்ப்பாளர் ஆனந்தா முதல், காவலாளி ஶ்ரீதரன், ரூபன், சூசை, செல்வரட்ணம், மோகன், காந்தன், டினேஸ், கருணா, ஒப்பிலான், ஜோர்ஜ் மாஸ்டர், முதல்வண்ணன், கபிலன், கரிகாலன், சங்கீதன், நியூட்டன், சுதா மாஸ்டர்…. இவ்வாறு பலரையும் பார்க்கவும் பழகவும் நேர்கிறது. அவர்களின் குண இயல்புகளையும் நினைவிலிருத்திச் சொல்கிறார். அங்கு அவருக்கு படிக்கக்கிடைத்த புத்தகங்களில் ஒன்று நெல்சன் மண்டேலா எழுதிய A Long Walk to Freedom. இதிலிருந்து விடுதலைப்புலிகள் வசம் எத்தகைய புத்தகங்கள் இருந்தன என்பதையும் அஜித் சொல்லாமல் சொல்கிறார். சிறைப்பட்டிருந்த வாழ்க்கையின்போது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அந்த நூல் அவருக்கு வழங்கியிருக்கிறது.

புலிகளினால் தரப்பட்ட மூன்று வருடச்சிறை வாழ்க்கையை கடந்துவிட்டிருக்கும் வேலையில் புலிகள் ஒரு 'டீலை' அவரிடத்தில் பேசுகிறார்கள். அஜித்தை குடும்பத்தினருடன் சேர்த்துவிடுவதற்கு ஆவனசெய்வதாகவும், அதற்கு பிரதியுபகாரமாக, தென்பகுதியில் புலிகள் தங்கியிருந்து புலனாய்வுத் தகவல் சேகரிப்பதற்கு பாதுகாப்பான தங்குமிடம் ஒன்றை கேட்கிறார்கள். அதற்கு ஒப்புதல் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால், தனக்கு முறையான விடுதலை வரும் என்று நம்பிக்காத்திருக்கிறார். அந்தக்காத்திருப்பு நீண்டுகொண்டிருக்கிறது! இந்தப்பின்னணிகள் ஒருபுறம் இருக்க, பலாலி இராணுவ முகாமின் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தற்கொலைத்தாக்குதலின்போது, படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த,  லெனினை புலிகள் மீட்கவேண்டும். யார் இந்த லெனின்…? 1994 ஆம் ஆண்டு ஓகஸ்டில் பலாலி விமானத்தளத்தினுள் ஊடுருவிய புலிகள் விமானப்படை ஹெலிகாப்டர்களைத் தாக்கி அழித்தனர். இந்தத்தாக்குதலில் சில புலி உறுப்பினர்கள் கொல்லப்பட, அதற்குத்தலைமை தாங்கிய ஜெசுமி என்ற கென்னடி பிடிபட்டு தெற்கில் சிறையிலிருக்கிறார். லெனினை புலிகள் மீட்கவேண்டும்.

போரில் புலிப்போராளி கொல்லப்படுவதைக்கூட புலித்தலைமை சகித்துக்கொள்ளும். ஆனால், தனது தரப்பு போராளி கைதாகி தடுத்துவைக்கப்படுவதை ஒருபோதும் விரும்பாது. சித்திரவதைகளின்போது இரகசியங்கள் வெளியாகிவிடலாம். அதனை தவிர்ப்பதற்குத்தான் கழுத்தில் சயனைற்குப்பிகள் தொங்கியிருந்தன. இங்குதான் புலிகளின் இராஜதந்திரம் வெளிப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதுபோன்று, சாகரவர்த்தனாவை தற்கொலைக்குண்டுதாரிகளின் மூலம் தாக்கி, அஜித்தை கைதுசெய்தவர்கள், செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இங்குதான் Give and Take Deal நடக்கிறது.

அஜித்துடன் மேலும் சில ஆயுதப்படையினர் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர். விஜித்த, ஹேமபால, சம்பத், ரட்ணபால, காமினி, அமரசிங்க, ரூபசிங்க, றம்பண்டா. இவர்களும் தப்பி ஓடாமலிருக்க சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். நேவியில் இணைந்தபோது வணக்கம் என்ற சொல்லைமட்டும் தெரிந்துகொண்ட அஜித், புலிகளுடன் பழகி ஓரளவு தமிழும் பேசக்கற்றுக்கொள்கிறார். விடுதலைக்காக உணவு தவிர்ப்பு போராட்டமும் நடத்துகிறார்கள். அதன்பின்னர் பொதுமக்களை, ஊடகத்துறையினரையெல்லாம் சந்திப்பதற்கும் பேசுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக்கிட்டுகிறது. புலிகள் போர்க்காலத்தில், இராணுத்தினரின் சடலங்களை, கைப்பற்றிய ஆயுதங்களை பொதுமக்களிடத்தில் காட்சிப்படுத்தியதுபோன்று இந்தக்கைதிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் இந்தக்கைதிகளுடன் பெட்மின்ரனும் , கிரிக்கட்டும் விளையாடியிருக்கிறார்கள். 2002 இற்குப்பின்னர்தான் அஜித் தனது மனைவி பிள்ளைகளை பார்க்கிறார். கைதிகள் பரிமாற்றம் ஒரு விழாபோன்று நடத்தப்படுகிறது. இலங்கை அரச சிறையிலிருந்த பதின்மூன்று புலிகள் இவர்களில் எழுபேரிற்கீடாக விடுதலை பெறுகிறார்கள். 1994 இல் சாகரவர்த்தனாவை மூழ்கடிக்க தங்கள் தரப்பில் நான்கு கரும்புலிகளை ஜலசமாதியாக்கியவர்கள், அஜித்தை பணயமாக வைத்து டீல்பேசி, பதின்மூன்றுபேரை மீளப்பெற்றனர்.

அஜித் விடுதலையானதன் பின்னர், அரசதரப்பின் புறக்கணிப்புகளுடன், சந்திரிக்கா காலத்தில் சுனாமி புனர்வாழ்வுப்பணிகளின்போது, மீண்டும் புலிகளை சந்திக்கிறார். அரசினால் கையளிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை புலிகளின் அரசியல் தலைமைச்செயலகத்தில் ஒப்படைக்கிறார். புலிகளின் கைதியாக இருந்தவேளையில் முன்னர் சந்தித்த ஜோர்ஜ் மாஸ்டரின் ( இவரை ஜோர்ஜ் அங்கிள் என்றே விளிக்கிறார். ) மனைவியின் மரணச்செய்தி அறிந்து நேரில் சென்று அவரை அணைத்து ஆறுதல் சொல்கிறார். எனினும், அரசதரப்பில் இவர் மீது வீண் சந்தேகங்கள்தான் தொடர்ந்திருக்கின்றன. தனது நேர்மையை புரியவைக்கமுடியாமல் அனுபவித்த மனஉளைச்சல்களை இந்த நூலில் இறுதிப்பக்கங்களில் விரிவாகச்சொல்கிறார். அந்தப்பக்கங்கள் மிகவும் நெகிழ்ச்சியானவை.

தனது முடிவுரையில், “ எனக்குத் தெரிந்தவர்களும் ஆயிரக்கணக்கில் எனக்குத் தெரியாதவர்களும் என எவ்வளவோ உயிரிழப்புகள், வாழ்க்கைகள் பாழாய்ப்போயின. எல்லாமே என் மனதில் பதிந்துதான் இருக்கின்றது. போரில் அறுதியான வெற்றி என்று ஒன்றுமில்லை. – அதில் எனக்கு மாற்றுக்கருத்து என்பதே இல்லை. இந்தப்போரைச் சகோதர யுத்தமாகவே சில வேளை நான் பார்ப்பதுண்டு. இந்த இரு சமூகத்தையும் பிரிக்க பல தசாப்தங்கள் தேவைப்பட்டன. அதனை ஒன்றிணைக்கவும் பல தசாப்தங்கள் தேவைப்படும் “ என்று எழுதிள்ளார்.

ஈழப்போர் வரலாற்றில் அஜித் போயகொட எழுதியிருக்கும் நீண்ட காத்திருப்பு மனச்சாட்சியின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும். இதனை மொழிபெயர்த்தவர்களுக்கும் வடலி வெளியீட்டினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R