வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (5) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

"என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.

அதற்கவன் "இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்.." என்றான்.

"என்ன ஆனால்..?" என்றேன்.

"ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்" என்றான்.

"என்ன நீ கலிபோர்னியாவிலிருந்தவனா?"

" ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?"

"நான்..நான் ஒரு கனேடியன்.."

"அது சரி.  ஆனால் எந்த நாட்டிலிருந்து வந்தவன். பாகிஸ்தானா..அல்லது இந்தியாவா"

"இரண்டுமில்லை..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட நாடொன்றிலிருந்து வந்தவன்.."

"அது எந்த நாடு..?"

"சிறிலங்காவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா?"

"ஓ..நீ சிறிலங்கனா?"

"ம் நண்பனே! ஆனால் நாங்கள் எல்லோருமே ஓரினம். உங்களைப் போல். ஆபிரிக்கர்களைப் போல்" என்றேன்.

"ஓ.."

"அது சரி.. நீயென்ன நைஜீரியனா"

"நான் நைஜீரியன் தான். ஆனால் நைஜீரியாவிலிருந்து வந்தவனல்லன்"

"புதிரா..?"

"ஒரு புதிருமில்லை. நான் கலிபோர்னியாவிலிருந்து கனடா வந்தவன். இதென்ன நாடு? சொன்னால் நம்பமாட்டாய். நான் இங்கு வந்தே முப்பது நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் இருந்து பார் நான் மே முடிவதற்குள் கலிபோர்னியா திரும்பி விடுவேன்.."

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய். உனக்குக் கனடா பிடிக்கவில்லையா..பின் ஏன் இங்கு வந்தாய்?"

"ஏ! மனிதனே! நான் உன்னைப் போல் கனடா வந்தவனல்ல. நீ சிறிலங்காவிலிருந்து வந்தவன். உனக்கு வேண்டுமானால் கனடா பெரிதாகவிருக்கலாம். ஆனால் நான் அவ்விதம் வந்தவனல்ல. கலிபோர்னியாவிலிருந்து வந்தவன். கலிபோர்னியாவிலிருந்து வந்து பார்த்தாயென்றால் தெரியும் கனடாவின் நிலைமை."

"கலிபோர்னியாவில் வீட்டு வாடகை மிக அதிகமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன்"

"அது சரி..ஆனால் அங்கு வாழ்க்கைச் செலவு சரியான குறைவு.. ஐம்பது சதத்துடன் நாள் முழுக்க பஸ்ஸில் மாறி மாறிப் பயணம் செய்யலாம். இங்கு அப்படிச் செய்ய முடியுமா?. எனக்கு ஏன் வந்தேனென்று இருக்கின்றது. வேண்டுமானால் பார். யூன் வருவதற்குள் நான் போய் விடத்தான் போகின்றேன். கலிபோரினியா போய் விடத் தான் போகின்றேன்.நான் ஜெனிபரிடம் கூடக் கூறி விட்டேன். அவளுக்காகத் தான் என் அருமைக் கலிபோர்னியாவை விட்டு இந்தப் பாழாய்ப் போன கனடாவிற்கு வந்தேன். ஆனால் இம்முறை அவள் வருகின்றாளோ இல்லையோ நான் போகத் தான் போகின்றேன்."

எனக்கு அவன் கதை மிகவும்  ஆச்சர்யத்தைத் தந்தது. தற்செயலாக எனது குழந்தை பங்கு பற்றும் நிகழ்வொன்றிற்காக நூலகம் வந்த இடத்தில் தான் இந்த கலிபோர்னியா நைஜீரியனைச் சந்தித்திருந்தேன். அதுவும் சந்தித்துச் சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. அதற்குள் அவன் எவ்வளவு விரைவாகத் தனது மனக் குறைகளை அள்ளிக் கொட்டி விட்டான். உண்மையில் அவன் கனடா வந்து முப்பது நாட்கள் தானா அல்லது முந்நூறு நாட்கள் தானா ஆகி விட்டிருந்தன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குள் அவன் ஏன் என்னிடம் இவ்விதம் தன்னைத் திறந்து காட்டினான். அவன் கதைத்தது கூட மிகப் பலமான குரலில் தான். அவன் கூறுவதைக் கேட்ட அருகில் நூல்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சில வெள்ளையின முதியவர்கள் கூட இலேசாகத் தலைகளை நிமிர்த்தி அவதானிக்கத் தான் செய்தார்கள். ஆனால் அந்த ஆபிரிக்க அமெரிக்கப் பாதுகாவலன் அது பற்றியெல்லாம் அதிகமாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவனுடன் நட்பாக உரையாடத் தொடங்கிய எனது செயல் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதில் முயன்று தோல்வி கண்டிருந்த இவனுக்கு ஒருவித ஆறுதலையும் தன் மனப்பாரத்தை இறக்க வேண்டிய தேவையினையும் ஏற்படுத்தி விட்டிருக்குமோ என்றும் பட்டது. இதற்கிடையில் என் மகள் தன் நிகழ்ச்சி முடிந்து "டாடி" என்றவண்ணம் வந்து விட்டாள்.

"யார் உன் குழந்தையா? " என்றான்.

"ஆம் நண்பனே! நீ போவதற்குள் முடிந்தால் வந்து சந்திக்க முயல்கின்றேன்" என்றேன்.

"அதற்குச் சாத்தியமில்லை. இன்று மட்டும் தான் தற்காலிகமாக இங்கு எனக்கு வேலை. நாளைக்கு வழமையான இடத்தில் தான். உன்னைப் போன்றவர்களை இங்கு பார்ப்பதே அரிது. கலிபோர்னியாவில் எல்லோருமே நட்புணர்வு மிக்கவர்கள். ஒருமுறை வந்து பார். பின்னர் நீயே புரிந்து கொள்வாய்" என்றபடியே விடை கொடுத்தான். அத்துடன் எனக்கும் அவனுக்குமிடையிலான தற்காலிக உறவில் நிரந்தரப் பிரிவேற்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த உறவின் பிரிவும் இலேசாக மனதை நெருடத் தான் செய்தது போல் பட்டது.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R