நூல் அறிமுகம் 1: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை!  -- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் -சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.

கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.

அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது. ஐந்தரை மணிக்கு தனது பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்ற அவர், வீட்டு வேலைகளைச் செய்வதிலும் அதிகமாக மனைவிக்கு ஒத்தாசை புரிவார். அதுபோல மாதச் சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தி அவற்றை வாசிக்கும் அவரின் பழக்கத்துக்கு, மனைவியிடமிருந்து எந்த ஆதரவும் இருக்கவில்லை. இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சின்ன வயது யுவதி அவருடன் தனியாகப் பேச வேண்டும் என்றும், அவருக்கு மாத்திரமே தன் பிறந்த நாள் விருந்து தருவதாகவும் கூறி ஒரு பார்சலை கொடுக்கின்றாள். ஆனால் அவர் அந்த கடிதத்தை கிழித்து வெள்ளைப் பூக்களை சமாதியின் மேல் வைத்தபோல அவளிடம் கொடுக்கின்றார். தீய எண்ணங்களுக்கு அடிமையாகாத மனிதரான அருமை நாயகத்தைப் போல் ஒரு கணவர் அமையும் பெண்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

எது மனித சாதி (பக்கம் 42) என்ற சிறுகதையில் சாதி வெறி தத்துவார்த்தமாக முன்வைக்கப்படுகின்றது. கண்மணி - கந்தசாமி தம்பதியர் வசிக்கும் அந்தப் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது. குறிப்பிட்ட தூரத்துக்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற நிலை கண்மணிக்கு.

அங்கிருந்த வெள்ளாம் பகுதியில் வசிக்கும் பசுபதியின் வீட்டில் கிணறு இருக்கின்றது. அதில் தூய நீர். அதிலிருந்து குடத்துக்கு நீர் நிரப்பி வர கண்மணி சென்றிருந்த சமயம் பசுபதிக்கு புத்தி தடுமாறுகின்றது. கண்மணியை வளைத்துப் போடும் நோக்கில் அவரே கிணற்றிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்கின்றார். வலிய குரக்கன் வேண்டுமா என்கிறார். கண்மணி தன்னிடம் காசு இல்லை என்றபோதும் பிறகு தருமாறு சொல்லிவிட்டு குரக்கனை உரப்பையில் போடுவதற்கு உதவி செய்கின்றார். கண்மணி இரு கையையும் மேல் உயர்த்தி தாங்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கண்மணியைத் தொடுகின்றார். அதிர்ச்சியடைந்த கண்மணி அவரைத் தள்ளிவிட்டு உரப்பையையும் வீசிவிட்டுச் செல்கின்றாள்.

கந்தசாமிக்கும் கண்மணிக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. காரணம் கண்மணி வீட்டில் ஒரு விசேடம் நடக்கும்போது வெள்ளாம் பகுதியிலிருந்து வெகு நேரம் கடந்து ஆட்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு சிற்றுண்டிகள், பலகாரங்கள், தேநீர் என்பவை வழங்கப்பட்டும் அவர்கள் அவற்றை மறுத்து, கடையிலிருந்து சோடா வாங்கி வரச் சொல்கின்றார்கள். சோடா கம்பனியில் வேலை செய்பவர்கள் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும்? பனங்கட்டி வேண்டும் போது பனங்கட்டி தயாரிப்பவர் யார் என்று புரியாமலா இருக்கும்? என்று கதாசிரியர் கேட்டு நிற்கும் கேள்வி நியாயமானது. அது மாத்திரமன்றி கந்தசாமிக்கு இன்னொரு கசப்பான சம்பவமும் நடக்கிறது. முருகேசு என்பவரின் தலைமயிர் வழிப்பதற்காக கந்தசாமி, அவர் வீட்டுக்குச் செல்கின்றார். அவர் மலசல கூடத்துக்கு அருகாமையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கின்றார். கந்தசாமி உயரமானவன் என்பதால் அவனுக்கு குனிந்து குனிந்து வேலை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் முருகேசர் எண்ணிப் பார்க்கவில்லை. திடீரென வான மண்டலம் அதிர்ந்தது. கூக்குரல்கள் கேட்டன. முருகேசர் ஓடிப்போய் பதுங்குக் குழிக்குள் பதுங்கிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தவரும் பதுங்குக் குழிக்குள் தஞ்சம் புகுகின்றனர். ஆனால் ஒருவர் கூட கந்தசாமியைக் கூப்பிடவில்லை. இதிலிருந்து ஒரு ஆபத்தில் கூட சாதியத்தைத் தான் பார்க்கின்றனரே தவிர மனிதத்தை அல்ல உன்பது புலனாகின்றது.

தாழ்வு மனச்சிக்கலால்... (பக்கம் 82) என்ற கதை கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சிறு சிறு பிணக்குகள் பற்றி பேசியிருக்கின்றது. சத்தியமூர்த்தி ஒரு முறை கமலா என்பவளின் கடைக்குப் போய் நீண்ட நேரம் அவளுடன் கதை;ததை அவரது மனைவி மனோண்மணியிடம் வந்து சிலர் முறையிடுகின்றனர். அன்றிலிருந்து சத்தியமூர்த்தி எதைச் செய்தாலும் அவரை மாலாவுடன் இணைத்து திட்டிவிடுவாள் மனோண்மணி. மனோண்மணியின் இயல்புகள் சத்தியமூர்த்திக்கு ஒத்துப்போவதைவிட கமலாவின் இயல்புகள் ஒத்துப்போயின. எனவே அவர் சாதாரணமாகத்தான் கமலாவோடு கதைத்துவிட்டு வருவார். ஆனால் மனோண்மணிக்கு இது அடியோடு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மனோண்மணி பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுகின்றாள்.

மனோண்மணியின் சகோதரியின் கணவன் வீட்டு வளவிலேயே பட்டறை போட்டு தன் தொழிலை நடத்தி வருகின்றாள். அவரது உதவிக்கு நான்கு அடியாட்கள் வேறு. சகோதரி ஆசிரியை. அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமானது. ஆத்மார்த்தமானது என்று மனோண்மணி எண்ணி கவலைப்படுவாள். அவளுக்கு அமைந்த வாழ்க்கை போல தனக்கும் நல்ல புருஷன் அமைந்திருக்கக் கூடாதா என்று அவள் ஏங்குவாள். சில நாட்களின் பின்னர்தான் மனோண்மணிக்கு தன் சகோதரியின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள புரிந்தன. அவளது கணவன் சந்தேகக் குணம் பிடித்தவன். அவள் பாடசாலைவிட்டு ஒருநாள் நேரம் பிந்தி வீட்டுக்கு வந்தவுடன் அவன் போட்ட கூச்சலும் அதற்கு அவள் மறுத்துப் பேசுவதும் கேட்டது. பாடசாலையில் உள்ள இன்னொரு சக ஆசிரியருடன் மனோண்மணியின் சகோதரியை தொடர்புபடுத்தி அவன் பேசி விடுகின்றான். பின்பு அவளை அடி அடியென்று அடிக்கின்றான். இவை மனோண்மணிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது கணவன் சாதாரணமாக ஒரு பெண்ணுடன் பேசியதைத்தான், தான் தப்பாக நினைத்துள்ளேன் என்ற உண்மை மனோண்மணிக்குப் புரிவதாக கதை நிறைவுசெய்யப்பட்டிருக்கின்றது.

சின்னச் சின்ன சிக்கல்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிடும். நம்மைச் சூழ நடக்கின்ற பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்கின்றபோது அவற்றிலிருந்து நாம் எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று அறிய முடிகின்றது. அவ்வாறான பிரச்சினைகளை தனது கதைக்குள் கருவாக்கி அவற்றிற்கான தீர்வையும் தரும் வலிமை கதாசிரியர் சூசை எட்வேட்டுக்கு இருக்கின்றது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இவன் தான் மனிதன்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூசை எட்வேட்
வெளியீடு - அஸ்ரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்



நூல் அறிமுகம் 2: ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை! - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

வெலிகம ரிம்ஸா முஹம்மத் -1979 இல் தினகரன் பத்திரிகையில் உலக சாதனை எனும் கவிதையை எழுதியதையடுத்து இன்று வரை கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபட்டு வருபவர் எழுத்தாளர் மாவனெல்லை உ. நிசார் அவர்கள். 18 நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கும் இவர் ஒரே பூமியில் நானும் நீயும் என்ற இந்த நூலை தனது 19 ஆவது நூலாக தற்போது வெளியிட்டிருக்கின்றார்.

கவிதைகளைக் காதலிப்பவர்களுக்கு இலக்கியத்தின் மறு வடிவங்களையும் ரசிக்கும் திறன் இயல்பிலேயே வாய்த்து விடுகின்றது. தீவிரமாக ஏனைய துறைகளில் ஈடுபட முடியாவிட்டாலும் கூட, இலக்கியத்தின் பரிணாமங்களை ஆராயும் மனம் இயல்பாகவே தோன்றி விடுகின்றது.

கவிதை, சிறுகதை, நாவல் என்ற தளத்தில் ஈடுபட்டவர்களில் பலர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை முன்வைக்கும்போது திக்குமுக்காடுவது கண்கூடு. ஆனால் உ. நிசார் அவர்களுக்கு அவை கைவந்த கலையாகிவிட்டது. அவர் வெளியிட்டுள்ள 19 நூல்களில் 13 நூல்கள் சிறுவர்களுக்கானவை.

ஒரே பூமியில் நானும் நீயும் என்ற கவிதைத் தொகுதி பானு வெளியீடாக 68 பக்கங்களில் 49 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

செடியில் பூத்திருக்கும் அழகிய பூவை ரசிக்கும் யாருக்கும் செடியைத் தாங்கும் வேர் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மலரின் வாசத்தை, மென்மையை வர்ணிப்பவர்கள் வேரின் தியாகத்தை வர்ணிப்பதில்லை. அது மனிதனின் இயல்பு. அதை ஓவியம் (பக்கம் 03) என்ற கவிதையினூடா கவிஞர் உ. நிசார் சொல்லியிருக்கும் விதம் அலாதியானது.

வானவில்லின்
வர்ணங்களிலெல்லாம்
வந்து குவியும்
ஓவியமொன்று அது

.வரிசை வரிசையாக
வருவோர் போவோர்
வர்ணிக்கிறார்கள் ஓவியத்தை
அதை வரைந்த
கலைஞனை மறந்துவிட்டு!

நாம் என்றும் பெரியவர்கள் (பக்கம் 14) என்ற கவிதை சம காலத்துக்கு வெகுவாகப் பொருந்தும் கவிதையாக அமைந்திருக்கின்றது. சிறுவர்கள், வயோதிபர்கள் என்று பேதமில்லாமல் கற்பழிக்கப்படும் ஒரு புதுமையான யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதர்கள் மனிதத்தையெல்லாம் தொலைத்துவிட்டு இருட்டு வாழ்க்கைக்குள் தம்மை அடைத்துக் கொண்டுள்ளார்கள். இரக்க குணம் என்பது துளியளவுமின்றி பிஞ்சுகளைக் கூட முகர்ந்து பார்த்துவிட்டு கொன்றுவிட்டு தப்பிவிடுகின்றார்கள். வீடு, பாடசாலை, உறவினர் வீடுகள் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் பிள்ளைகளை அனுமதித்துவிட்டு அவர்களை முறையாகக் கண்கானிக்காமல் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அழுது துடிக்கிறார்கள். நம்மில் எத்தனைப் பேர் நம் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அலசி ஆராய்கிறோம்? அவர்களிடம் பிறர் தவறாக நடக்கின்றார்களா என்பதை எத்தனைப் பேர் பரிசீலனை செய்திருக்கின்றோம்.

ஒரு பிள்ளை வீட்டைவிட்டு காலையில் சென்றால் மாலை வீடு திரும்பும் வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். அவற்றை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கலாம். அவற்றை அறிந்து அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் பூக்காத மொட்டுக்கள் கூட கருகிப் போய்விடும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை கீழுள்ள கவிஞரின் வரிகள் நிதர்சனமாக்குகின்றன.

எட்டிப் பார்த்து உட்புகும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
விகாரப் பேய்களின்
குரூர காம சேஷ்டைகளினால்
குஞ்சு வீடுகள் உடைந்து
கூட்டாஞ் சோறு சிதறி
பொம்மைகளின்
கழுத்துக்கள் திருகப்படும்

பெண்கள் இறைவனின் அற்புத படைப்புக்கள். பெண்ணின் அன்புக்கு எந்த ஆணும் அடிமையாகிவிடுவான். இயற்கையிலே பெண்ணுக்கு மிருதுவான குணமும், உடலும் அமையப் பெற்றிருக்கின்றது. அந்த அழகைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கவிஞர் உ. நிசார் பெண் (பக்கம் 22) என்ற கவிதையில் பெண்களைப் பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றார்.

மலைகளின் உறுதி
அலைகளின் சலனம்
பூமியின் பொறுமை
தாமரையின் புனிதம்
ரோஜாவின் மென்மை
வைரத்தின் கடினம்....

இவற்றை சிறிது சிறிதாக எடுத்து
அமுதை விடத்தை இட்டு
குழைத்துக் குழைத்து
பக்குவமாக
ஊட்டி வளர்க்கப்பட்ட
அற்புதப் படைப்பு

வெற்றி என்பது இலகுவில் கிடைக்கக் கூடியதல்ல. இலகுவில் கிடைத்துவிட்டால் அது வெற்றியும் அல்ல. ஆனால் வெற்றியை அடைந்து கொள்வதற்கு நாம் மிகவும் பாடுபட வேண்டியிருக்கின்றது. போராட்டத்துக்குபின் தான் நல்ல வெகுமதி காத்திருக்கின்றது. சிறு சிறு தோல்விகளை நம்மை நாமே புடம்போட்டுக்கொள்ள இறைவனால் அமைத்துத் தரப்பட்ட சந்தர்ப்பங்கள். வெற்றி (பக்கம் 43) என்ற கவிதை வரிகள் வெற்றின் தத்துவத்தை அழகாக கூறி நிற்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

சுடராகி மின்மினியின்
உடல் ஒளிருது – தன்
மடல் விரிய வலி கொண்டு
மலர் பூக்குது

வீழ்ந்தாலும் அருவிகள்
எழுந்தோடுது – சகதி
தாழ்ந்தாலும் தாமரைகள்
தரம் பேணுது

இத்தகைய அழகிய அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி இலக்கியப் பணியாற்றி வரும் கவிஞர் உ. நிசார் இலங்கை இலக்கிய வரலாற்றில் நற்பெயரைப் பதித்துக்கொண்டவர். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - ஒரே பூமியில் நானும் நீயும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - உ. நிசார்
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 300 ரூபாய்


நூல் அறிமுகம் 3: நெஞ்சினிலே கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்! - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

வெலிகம ரிம்ஸா முஹம்மத் -கவிதையின் ஆழ(ணி) வேர் காலந்தோறும் பரந்துபட்டு செல்கின்றது. செய்யுள் வடிவத்திலிருந்து இன்றைய பின் நவீனத்துவ வடிவம் வரை கவிதைகளின் போக்கு மாறி மாறி வந்திருக்கின்றது. கவிதை என்பது வாசகர்களின் கவனத்தை ஈர்த்தெடுக்கும் உத்திகளில் மிக முக்கியமானது, முதன்மையானது.

கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளாவின் நெஞ்சினிலே என்ற கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது. இத்தொகுதியில் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக சிறியதும் பெரியதுமான 62 கவிதைகள் காணப்படுகின்றது.

ஷகவிதைகள் இலகு சொற்களால் அழகு தருகின்றன. இருண்மையோ இறுக்கமோ காணாது அவை காதல், கடமை, சமயம், சமூகம் என்று ஊடுறுவிச் செல்கின்றது. கவிதைகள் மரபிலும் புதுக் கவிதையிலும் காணப்பட்டாலும் சிறுவர் பாடல்களாகவும் கிராமியப் பாடல்களாகவும் கலவை செய்த நூலாக பரிணமிக்கிறது| என்று இவரது நூல் பற்றிய அணிந்துரையில்  கலாபூஷணம் ஐ.ஏ. ஹஸன்ஜி அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார். 'நெஞ்சினிலே இனிக்கின்ற கவிதைகள்' என்ற தலைப்பில் கிண்ணியா அமீர் அலி நூல் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மறக்க முடியவில்லை (பக்கம் 13) என்ற கவிதை யுத்தத்தால் ஏற்பட்ட பின்விளைவுகளின் மொத்த வலியையும் சுட்டிக் காட்டுகின்றது. அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டு அடிப்படை வசதிகளற்று துயர் சுமக்கும் ஜீவன்கள் தாம் வசதியாக வாழ்ந்த காலத்தை எத்தனை வேதனையுடன் நினைவுகூருவார்கள்? இவர்கள் பற்றிய தன் பார்வையை நூலாசிரியர் சிறப்பாக பின்வருமாறு பதிவாக்கியிருக்கின்றார்.

வெடிக்கும் பொறிகள்
துடிக்கும் உயிர்கள்
வடிக்கும் கண்ணீர்கள்
மறக்க முடியவில்லை.

பிறந்த மண்ணை
பிரிந்து வாழும்
துறவி வாழ்வை
மறக்க முடியவில்லை.

ஏற்றம் வேண்டும் (பக்கம்17) என்ற கவிதை பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக இயம்பி நிற்கின்றது. இன்று பொதுவான பிரச்சினையாக மாமியார் - மருமகள் பிரச்சினை காணப்படுகின்றது. பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறிவிடும் ஒரு சூழ்நிலை அது. அதே போல் ஊர் வம்பு கதைக்கும் பெண்கள் பிற பெண்களைப் பற்றித்தான் கதைப்பார்கள். இத்தகைய போக்கு மாற வேண்டும். பிறரது குறைகளை துருவித் துருவி ஆராயும் பழக்கத்தை இல்லாமலாக்க வேண்டும். வீட்டில் பெண் பொறுப்பாக இருக்க வேண்டும். வெளியே சென்றால் நெருப்பாக இருக்க வேண்டும். பொறுமை, நிதானம், பணிவு, அடக்கம் என்பன பெண்ணிடத்தே காணப்பட வேண்டிய நல்ல பண்புகளாகும். கீழுள்ள வரிகள் இதை நிதர்சனமாக்குனின்றன.

பெண்ணை பெண்ணே
பழித்தல் மாற வேண்டும்
மண்ணில் எந்தப் பெண்ணும்
மாண்புற வாழ வேண்டும்

வீட்டுப் பொறுப்பிலும் பெண்ணுக்கு
கூட்டுப் பொறுப்பு வேண்டும்
நாட்டுச் சிறப்பிலும் பெண்
நாமம் பதியப்பட வேண்டும்

உன் நினைவுகளில் நான் (பக்கம் 18) என்ற கவிதை அக உணர்வை அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றது. பிரிந்து போன ஒரு பிரியத்தைப் பற்றிய வரிகளில் மனது கனத்துப் போகிறது. ஒருதலைக் காதல் எத்தனை துன்பமோ அதைவிட பல மடங்கு துன்பம் தரக்கூடியது இருவரும் காதலித்துவிட்டு பிரிந்து செல்வது. அந்த வலி கீழுள்ள வரிகளில் தொனிக்கின்றது.

பிரியமானவளே..!
உன் நினைவுகளை
நான் பிரியும்
நாள் வந்தால்
அது மரணமாகவிருக்கும்
அப்போது
என் மனசு மட்டும்
உன்னிடமிருக்கும்!

சின்ன மகள் (பக்கம் 43) என்ற கவிதை ரசிக்கத்கதாக இருக்கின்றது. மழலைகளில் மொழி கேட்டு அவர்களுடன் விளையாடுவதே ஒரு சுகம்தான். கவலைகள் எல்லாம் சிறு குழந்தைகளால் காணாமல் போகும்.

சின்ன மகளின் சிரிப்பில்
சிந்தை குளி ராகுதே
என்னைப் பிரியும் நேரம்
ஏன்தான் நெஞ்சு துயராகுதே

ஆடிப் பாடி நாளும்
அன்பாய் இருந்திடு வாளே
தேடித் தேடி என்னைக் காணாமல்
தெருவிற்கும் வந்திடு வாளே!

பண்புதனை பற்றிடுவோம் (பக்கம் 57) என்ற கவிதை நல்ல பழக்க வழக்கங்கள் பற்றி இயம்பி நிற்கின்றது. நல்ல பழக்க வழக்கங்களை நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலும் பாடசாலையிலும் நமக்குக் கற்றுத் தந்த அத்தகைய நல்ல பழக்கங்கள் தான் பின்னாளில் நாம் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தரும். நல்ல பண்புகள்தான் ஒருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது.

மண்மீது கொண்ட வாழ்வில் - பிறரை
மதித்து நடத்தல் வேண்டும்
தன் மீது கடமையாகும் என்றும்
தன்னலம் கருதாத சேவையாகும்

கெடுத்து வாழும் எண்ணம்
கேவலமாகுமே - அள்ளிக்
கொடுத்து வாழும் உள்ளம்
கொண்ட கொள்கை வேண்டுமே

கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளாவின் கவிதைகள் சமூக அக்கறையோடு மிளிர்கின்றன. இவர் ஏற்கனவே கற்க கசடற என்ற கட்டுரைத் தொகுதியை வெளியிட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் இலக்கிய முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!

நூல் - நெஞ்சினிலே
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஏ.எம். கஸ்புள்ளா
வெளியீடு - செய்ப் பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R