‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

 “ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”

“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா?”

“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆகலாம். எதைத்தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது?”

என் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிட மிருந்து வாங்கப்பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப்பட, நான் இறங்கிக்கொண்டேன்.

அடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவாசத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச்சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.

நானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….?

வண்டி கிளம்பிவிட்டது.

கஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மானத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.

‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..?’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச்சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருதவைத்தது.

போன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…?

கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறுகுறுப்பு உள்ளே ஏற்பட்டது.

கஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும்? கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன்? வாழ்வில் இந்தத் தருணத்தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன? அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்? எனக்கெதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்….?

ஜன்னல் வழியாகப் பார்வையையோட்டிவந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.

* * *

‘YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகிறோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக்கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற்காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னாளைய குத்துச்சண்டைவீரனின் வாசகம்.   JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரிகளும் கூடவே ஓடிவந்தது.

பாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்டவர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புக ளையும் தளும்பவைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகியிருக்கும் கஸ்தூரிக்கும் தேவையாக இருக் குமோ…..’

கஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகாதவனா….

நிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்றுகொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா? எல்லோருக்கும் ஒரேயளவாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…?’

* * *

“உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமையுணர்வு.”

“இருக்கலாம்”

“என்னோடு ஒரே செக்ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு?’

“தவறு என்று நான் சொல்லவில்லையே.”

“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அதுதானே காரணம்?”

“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்குமென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம்? கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம்?  இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்கமுடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக் கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக் கிறாயல்லவா?”

“இதென்ன அநாவசியப் பேச்சு? இப்போது நாம் மட்டும்தானே இருக்கிறோம். அவன் வருவது  பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”

கசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னிடமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட்டிருக்குமோ….

“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிக ளெல்லாம் உண்மையில் எங்களிடையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும்போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா?”

சொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக்கொள்கிறேன்.

“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு?”

“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்?.”

ஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.

“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது – அவ்வளவுதானே?”

“அப்படிச் சொல்ல நான் யார்? அப்படி நான் சொல்லச்சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” – எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….

“இது EMOTIONAL BLACKMAIL”

“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”

“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறாயல்லவா?”

“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”

“இது அநியாயப்பழி/”

“இருக்கலாம்.”

“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”

“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”

* * *

“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதிவரை, ஒரேயொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனைவிட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூறவில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோபாவம் என்கிறீர்களா? TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய் மடையனாக்குவது மட்டும் சரியா? இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர்களா? படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட்டும். தவறில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண்டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.

நாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வருவான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளைவிட இரண்டு வயது பெரியவன்.

‘YOUTH WILL BE SERVED’….’

திடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப்பாலுணர்த்திக்கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறையோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார்கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி? சொல்லுங்கள்? அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பி விட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மையிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..

* * *

வண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கிறேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரியிடம் கலகலவென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படாதவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல்லாம் சீர்படுத்தியது.

* * *

‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத்திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’  என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந்திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகியிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப்பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானியில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்றவிடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக்கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்லமுடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங்களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது? எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப்பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக்கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத்தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….?

’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா? அல்லது, பெண்ணா? பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம்  அவளோடு படுக்கை யிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதறவேண்டும் என்பது என்னவிதமான நியதி? அன்பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…?

என் உடைமையுணர்வைத்தான் நான் உண்மையான அன்பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா? அதனால்தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக்கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர்கிறது.

என் அணுகுமுறை சரிதானே? சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா? கடைசி நேரத்தில் பெண்களுக்கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக்கைகளில் இடம்தரும்படியாஅகிவிட்டதா? அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லாமலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித்திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு! என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடுவரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்துவிட்டால்,……

{ ’அநாமிகா கதைகள்’ -  சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R