நூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.

சூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.

ஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.

நதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-

நான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை
தடைகள் எனக்கு புதிதல்ல
மேலிருந்து கீழாக குதித்து
விளையாடுவதிலேயே எனக்கு இஷ்டம்
பல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்
மரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு
தொடர்ந்திருக்கின்றேன் என் பயணத்தினை
பாறைகளிலிருந்து தினம் கற்சில்லுகளை
பிரித்து அங்குமிங்குமாக சேர்த்திருக்கிறேன்
இல்லை சிதைத்திருக்கிறேன்
ஒரு நாளும் மரங்களோ பாறைகளோ
என் மீது கோபித்ததில்லை..

கடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.

நீ மரணம் பற்றி அந்த இரவு
முழுவதுமாய் பேசிக்கொண்டேயிருந்தாய்
பயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி
சிரித்தது..
உன் முகத்தில் நான் என்றைக்குமே
கண்டிடாத புன்னகையையும்
உன் வார்த்தையின் தெளிவையும் கண்டு
நான் ஒரு நீள் தெருவில் நடப்பதான
எண்ணத்தில் பயணிக்கிறேன்..
நடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்
என் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது
மரணம்... மரணம்... மரணம்...
இப்படியாய் சகோதரி உன் பேச்சு
விகசித்துக் கொண்டிருந்தது..
அப்போது எனக்கும் தெரிந்திருக்கவில்லை..
நீ அறிந்திருந்தாயா?
உனது கடைசி இரவை???

விஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.

என் உடலின் மேலாக
குட்டிக் கம்பளிப் பூச்சியொன்று
ஊர்ந்து உதிர்த்து விட்டுச்சென்ற
மயிர்க்கால்கள் எங்குமாக படர்ந்து
தழும்புகளை ரயில்ப் பாதையாய்
வரைந்து விட்டிருந்தது..
குழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..

எதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா..? (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.

நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது
றிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்துவிடுவாய் என்று..

இப்போ நான் எப்படிச் சொல்வேன்

நீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு
மார்க்கம் கற்ற குர்ஆன்
மத்ரஸாவுக்கு
அந்த அடுப்பங்கரைக்கும்
ஆட்டுப் பட்டிக்கும்
எப்படிச் சொல்வேன்
நீ இனி வரவே மாட்டாயென்று..

நீயும் சகோதரியுமாய்
ஊஞ்சல் ஆடிய புளியமரமும்
தும்பி பிடித்து விளையாடிய
அந்தக் கவளப் பற்றைகளும்
உன்னைத் தேடுமே...

கவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்!!!


 

நூல் - என் எல்லா நரம்புகளிலும்;
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு - பேனா பப்ளிகேஷன்
விலை - 200 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R