(89) -  நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ்.  சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன் தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம் தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, பளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில் தான் அனாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாதுக்கள். கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சினேகமாகவே இருப்பார்கள். சாதுக்களைப் பார்த்து நமக்கும் அதிகார தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை

எனக்கு இப்போது நினைவிலிருப்பது ஜார்ஜ் வழிகாட்ட சர்சுக்குப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் ஒரு பெரிய கன்னிமாடம் (nunnery)  அதிலிருந்து நிறைய ஆதிவாசிப் பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த இடம் முழுதுமே சர்ச்சுக்குச் சொந்தமானதாக அதன் பராமரிப்பில் இருப்பதான தோற்றம் தந்தது. ஜார்ஜிடம் கேட்டதற்கு இந்த ஏரியாவிலேயே அது ஒரு பெரிய சர்ச் என்றும் இதாலிய கதோலிக்க (Roman Catholic) பாதிரிமார்களால் நடத்தப் படுவது என்றும் சொன்னார். அவருக்கு இது தான் முதல் தடவை. ஆனால் இங்கு வரும் முன் அவருக்கு இந்த இடத்தைப் பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன் பின் அவரும் இந்த இடம் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முனைந்திருக்கிறார். சர்ச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது  சர்ச்சில் பிரார்த்தனை நடக்கிறது. நானும் தேவசகாயம், ஜியார்ஜ், பஞ்சாட்சரம், மணி வேலு இதியாதி எல்லோரும் சர்ச்சில். என்னவோ லத்தீன் மொழியில் நடக்கிறது. நாங்கள் மண்டியிட்டு கைகள் கூப்பி இருக்கிறோம். மற்றவர்கள் அவ்வப்போது என்னவோ ஆமென் –னோ என்னவோ சொல்கிறார்கள். நான் சும்மா மண்டியிட்டு கைகூப்பி இருந்தாலும், பாதிரியாரும் மற்றவர்களும் பார்க்க நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்று இருக்க வேண்டாமா?  அந்த சர்ச்சில் அன்றைய பிரார்த்தனையில் சுமார் 150-லிருந்து 200 பேருக்குள்ளாக இருந்திருப்பார்கள்.  என் கண்களுக்கு வேறென்ன வேலை?. சுற்றி மேய்வது தானே?. அதுவும் பாதிரியாரின் கண்கள் என் பக்கம் இல்லாத போது. ஆனாலும் இந்த புதிய காட்சிகளின், சடங்குகள், கூட்டம் இவற்றின் புதுமையும் சுவாரஸ்யமும் வெகு நேரம் நீடிக்கவில்லை. மண்டியிட்டே பழக்கமில்லை. ஸ்கூலில் கூட பெஞ்ச் மேல் ஏறி நிறகச் சொல்வார்கள். அது அதிகம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீளாது. இல்லையெனில் க்ளாசுக்கு வெளியே நிற்கச் சொல்வார்கள். ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்த தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை. யாருக்குமே நேர்ந்ததில்லை. நான் ஒண்ணாங்கிளாசிலோ என்னவோ சேர்ந்த போது ஒரு பையனுக்கு காலில் கட்டையொன்றைச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள் அவன் அதை இழுக்கமுடியாது இழுத்துக்கொண்டு நடபபான், பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால். அது ஒரே ஒரு முறை தான். அந்த மாதிரி தண்டனை பின்னர் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது என்று நினைக்கிறேன். பள்ளி நாட்களில் தண்டனை இப்படி அனுபவிக்காத நான் இப்போது ஒரு சர்ச்சில் நடக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் மற்றவர்களோடு விரும்பி கலந்து கொண்டது ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு அனுபவிப்பது போலத் தான் தவித்தேன். சின்ன வயதில் ஒரு வேளை அரை மணி நேரம் மண்டியிடுவது சாத்திய மாயிருக்கலாம். ஆனால் காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு சர்ச்சுக்குள் நுழைந்த நாங்கள் அதிக நேரம் உள்ளே நின்றிருக்கவில்லை. மண்டியிடும் நேரம் வெகு சீக்கிரம் வந்து விட்டதென்றே  நினைக்கிறேன். அரை மணிக்கு மேல் தாங்கவில்லை. கால் கடுக்க ஆரம்பித்தது. பின் அது வேதனையாக மாறி நான் சர்ச்சின் சடங்குகளில், பிரார்த்தனையில் மனம் கொள்ளாது முழங்கால் வலியிலேயே மனம் துன்பப் பட்டுக்கொண்டிருந்தது. எப்போடா இந்த பிரார்த்தனை முடியும், இந்த இடத்தை விட்டு வெளியே போவோம் என்றே எண்ணித் தவித்துக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அப்படி அவசரப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இனி ஜியார்ஜ் என்ன, யார் அழைத்தாலும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு கட்டாயம் மறுத்து விடுவது, போனால் போகிறது நண்பர்களாயிற்றே என்று புது வருஷ பிரார்த்தனைக்கு வேண்டுமானால் ஷாமியானா எழுப்பி சம்பல்பூரில் நடந்தது போல நடக்கு மானால் அதற்கு வேண்டுமானால் நண்பர்களுக்காக அதில் கலந்து கொள்ளலாம். தூக்கம் வந்தால் வெட்ட வெளியில் தூங்கவும் செய்யலாம் என்று மனம் சலித்துகொண்டிருந்தது.

அன்றைய என் வேதனை சொல்லி மாளாது. மற்ற நண்பர்களும் இப்படிக் கஷ்டப்பட்டார்களா, இல்லை மனதுக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்களா தெரியவில்லை. இப்படி நேரிடும்மென்று ஜியார்ஜோ இல்லை தேவசகாயமோ சொல்லியிருக்கலாம். ஒரு வேளை அவர்கள் சர்ச்சுகளில் இப்படி இருக்காதோ என்னவோ.  ஒரு வழியாக இந்த அவஸ்தை 12.30 மணிக்கோ 1 மணிக்கோ நின்றது. வெளியில் வந்ததும் நான் என் வேதனையைச் சொன்னேன். அவர்கள் பாதி பச்சாத்தாபப் படுவதும் பாதி சிரிப்பதுமாகத் தான் இருந்தார்கள். பின்னர் பச்சாத்தாபம் நின்று சிரிப்பது மட்டுமே தொடர்ந்தது. சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பாதிரியாரைப் போய்ப் பார்க்கலாம் என்று ஜியார்ஜ் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதிக்க, நானும் அவர்களுடன் சென்றேன். மரியாதை நிமித்தம் தான். நாம் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம் நாம் எல்லோருமே கிறித்துவர்கள் இல்லை என்றும் அவருக்குச் சொன்னால் அவர் சந்தோஷப் படுவார் என்றார் ஜியார்ஜ். அப்படித்தான் நடந்தது. ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர் எங்களையெல்லாம் விசாரித்து வந்தது பற்றித் தம் சந்தோஷத்தைத் தெரிவித்ததோடு கர்த்தர் எங்களை எந்த வித்தியாசமும் பாராட்டாது ரக்ஷிப்பார் என்று ஒரு  ஆசீர்வாதமும் பெற்று  நாங்கள் வெளியே வந்தோம். ஒரு விஷயம். கவனிக்க வேண்டியது. பாதிரியார் ஒடியா இல்லை. இந்தியரும் இல்லை. இத்தாலியர். அவருடன் இருந்த மற்றவர்களும் இத்தாலியரே.

அங்குமிங்கும் ஓடி வேலை செய்தவர்கள் தான் ஒடியாக்கள். ஆதி வாசிகள். எங்களுடன் அவர் பேசியது ஆங்கிலத்தில். அவர்களுக்கு உதவிய சர்ச்சின் வேலையாட்களுடன் அவர் பேசியது ஆதி வாசிகளின் பாஷையில். ஒடியா கூட இல்லை. ஒடியாவில் எனக்கு ஒரு சில வார்த்தைகளுக்குமேல் தெரியாதென்றாலும், பேசுவது ஒடியாவென்றால் அது தெரிந்திருக்கும்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜியார்ஜ், தேவசகாயும் இன்னும் மற்றவர்களிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். “அவங்களுக்கு அத்தனை அக்கறை இருக்கு.கத்துக்கறாங்க மதப் பிரசாரத்தோட அதுவும் தான் அவங்க பாஷையிலே பேசலைன்ன எப்படி பிரசாரம் செய்யறது?” என்று ஜியார்ஜ் சொன்னார். ”நாம இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நமக்கு ஒடியா தெரியுமா? அவ்வளவு தான் நம்ம அக்கறை” என்று பஞ்சாட்சரமோ மணியோ சொன்னார்கள். “சாமிநாதனுக்கு நாலஞ்சு வார்த்தை தெரியும்” என்றார் தேவசகாயம். “அது தானா வந்ததுய்யா, நானா கத்துக்கிடலை” என்றேன்.

அன்று சாயந்திரம் வரை எங்கே போனோம், எங்கே சாப்பிட்டோம் எப்படிப் பொழுது கழிந்தது என்பதெல்லாம் ஒன்றும் நினைவில் இல்லை. நினைவில் பளிச்சென்று மறையாமல் இருப்பது அன்று மாலை ஒரு திறந்த வெளியில் நாங்கள் தரையில் உட்கார்ந்திருக்க அங்கு கூடிய கூட்டம். மணி ஆறுக்கு மேல் இருக்கும். சூரியனின் தகிப்பு குறைந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். அத் திறந்த வெளியில் நாலா பக்கங்களிலிருந்தும் நீண்ட கம்புகளோடு  (இன்னம் வேறு ஏதும் ஆயுதம் இருந்த்தா என்பது நினைவில் இல்லை. என் மனத்தில் பதிந்திருப்பது) கம்புகளோடு நிறைந்து வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான ஆதிவாசிகளின் கூட்டம். முந்தின தினம்  இரவு ஸ்டேஷனில் இம்மாதிரி ஒரு பத்துப் பதினைந்து பேரைப் பார்த்து அடைந்த பயம் இப்போது இல்லை. ஆச்சரியத்துடன் பார்த்து இருக்கும் அதிசயமாக இருந்தது அது. சுமார் ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கலாம் அந்தக் கூட்டத்தில். 

கூட்டத்தின் நடுவில் ஒரு வட்டமான வெற்றிடம். மேடை ஏதும் இல்லை. இரவு சூழும் நேரத்தில் இத்தாலிய பாதிரிமார்களும் அவர்களைச் சுற்றிய மற்றோரும் வந்தார்கள். சுற்றிக் குழுமியிருக்கும் கம்பும் கழியுமாக தூக்கிக் கச்சமாகக் கட்டிய அழுக்கு வேட்டிக் கூட்டத்தினிடையில் நீண்ட வெள்ளையும் சிகப்புமான  அங்கியும் தரித்து இருக்கும் வெள்ளைப் பாதிரிமார்.
இதுவும் ஈஸ்டர் சடங்குகளில் ஒன்றோ என்னவோ. சர்ச்சுக்கு சர்ச்சு மாறுமோ என்னவோ. அவர்களிலும் தான் 10 – 12 வகைகள் இருக்கின்றனவே. நம்மில் இருக்கும் ஜாதிகள் போல. பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம்  மாதிரியா அய்யர் வீட்டுக் கல்யாணமோ, நாயக்கர் வீட்டுக் கல்யாணமோ இருக்கும்!

நடந்தது எல்லாம் இலத்தீன் மொழியில். எனக்கோ ஜியார்ஜுக்குமோ இல்லை தேவசகயாத்துக்குமோ என்ன புரியும்? ஹிந்தியில் இல்லை. ஒடியாவில் இல்லை. அந்த ஆதிவாசிகள் மொழியிலும் இல்லை. இலத்தீன் மொழியில். என்னமோ இரண்டு மணி நேரம் நடந்தது.  எங்களுக்கு ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருந்தது. யாரும் மண்டியிடவில்லை. நானும் மண்டியிட வேண்டாம். அது ஒரு பெரிய ஆசுவாசம். அப்பாடா என்று இருந்தது. கூட்டத்தோடு நின்று கொண்டோ அல்லது முடிந்தால் பார்க்க சௌகரியம் இருதால் கூட்டத்துக்கு வெளியே நின்று கொண்டோ பார்த்தோம். அந்த ஆதிவாசிகள் கூட்டத்துக்கு என்ன புரிந்ததோ என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கூட்டம் அனைத்தும் மிக சிரத்தையோடு ஆர்வத்தோடும் அதில் கலந்து கொண்டனர். அவ்வப்போது ”ஆமென்” சொன்னார்கள். நாம் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியை இட்டுக்கொண்டு எரியும் சூடத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டால் போதும் என்று இருக்கு இல்லியா அது போலத் தான்.

வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்த விஷயம், இன்னமும் அது பற்றி யோசிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் விஷயம். நாங்கள் கலுங்கா போனது 1953 அல்லது 1953-ல் ஒரு மார்ச் மாதம். கலுங்கா ஒரு காட்டுப் பிரதேசம். எங்கு மின்சார இணைப்புக் கூட கிடையாது. ரயில் ஸ்டேஷனிலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருப்பவை தான் அந்த சர்ச்சும் கன்னிமாடமும் இன்னும் மற்ற அந்த சர்ச் சம்பந்தப்பட்ட கட்டிடங்களும். சுற்றி உள்ள காட்டுப் பிரதேசத்தில் இந்த ஆதி வாசி கிராமங்கள். ஐம்பது வருஷங்களுக்கு முன்னோ, அல்லது அதற்கும் முன்னோ, அதாவது 20-ம் நூற்றாண்டுக்கு ஆரம்பத்தில் அல்லது சற்று முன் அவர்கள் இத்தாலியிலிருந்து போப்பின் கட்டளையின் பேரில், தங்கள் மதத்தைப் பரப்ப இங்கு வந்திருக்கிறார்கள். இந்தக் காட்டில். ரோமிலிருந்து இந்தக் காட்டுக்கு. இங்கு வந்து இந்த ஆதிவாசிகளுடன் பழகி அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுக்கு படிப்போ மருத்துவ உதவிகளோ ஏதோ செய்து அவர்களையும் கத்தோலிக்கர்களாக்கி … அதுவே எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்திருக்கும்! அந்த ஆதிவாசிகளுக்கு ஆதி காலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும், வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? 1950க்ளின் ஆரம்ப வருடங்களில், ஒரிஸ்ஸாவின் ஒரு ஒதுங்கிய காட்டுப் பிரதேசத்தில். அப்போது அவர்கள் வந்து தங்களை அவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் ஸ்தாபித்துக்கொள்ள ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அந்த இத்தாலிய பாதிரிமார்களுக்கு இது ஒரு வேலையா? சேவையா? அல்லது அர்ப்பண உணர்வா?.

அதே சமயம் இப்போது கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக கூடங்குளத்தில் தொடர்ந்து  நடந்து வரும் போராட்டம் நினைவுக்கு வராமல் இருப்பது சாத்தியமில்லை. இது என்ன வகையைச் சார்ந்தது? அரசியலா, பின்னிருக்கும் வர்த்தக பேராசை மதப் போர்வை போர்த்துக் கொண்டுள்ளதா? இந்த பாதிரிமார்களுக்குப் பின்னிருப்பது மக்களா, இல்லை சர்ச்சா< சர்ச்சானால் அதன் பின்னிருப்பது எது?

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம் தானா அங்கு கலுங்காவில் பார்த்ததும்? .  


(90) - நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் இச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயனத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எதுவும் அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக்கொண்டோமே தவிர முன் ஏற்பாடுகள் வசதிகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இப்படி ஒரு பயணம் இப்போது என்ன, அதன் பிறகு எங்காவது எப்போதாவது சாத்தியமா என்பது சந்தேகம் தான். அது பற்றிய நினைப்பே இல்லாமல் தான் நாங்கள் புர்லாவை விட்டுக் கிளம்பினோம். அது பற்றிய சிந்தனையே எங்களில் யாருக்கும் எழவில்லை. இது பற்றி நாங்கள் யாரிடமும் கேள்வி எழுப்பவில்லை. பேசிக்கொள்ளவும் இல்லை.

இப்படித்தான் ராஜ்காங்க்பூர் போவது பற்றிய எண்ணமும். எழுந்தது. ராஜ்காங்பூர் கலுங்கா ஸ்டேஷனிலிருந்து பக்கத்தில் தான் சில ஸ்டேஷன்கள் தள்ளி அதே பம்பாய் – ஹௌரா ரயில் பாதையில் உள்ள ஊர். அங்கு ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருந்தது. அந்நாட்களில் ஒரிஸ்ஸாவில் இருந்த பெரிய தொழிற்சாலையும் அது தான். அதன் பின் என்னவோ நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன தான். எங்களுக்கு ஒரிஸ்ஸாவிலேயே உள்ள பெரிய தொழிற்சாலையைப் பார்க்க வேண்டும் அதுவும் பக்கத்திலேயே இருக்கும் ஒன்று. ஹிராகுட் அணைக்கு மிகத் தேவையான பொருள் சிமெண்ட். அங்கிருந்து தான் ஹிராகுட்டுக்கும் சிமெண்ட் வந்துகொண்டிருக்கும் என்பதும் நாங்களாகத் தீர்மானித்துக்கொண்ட விஷயம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதைப் பார்க்காமல் எப்படி புர்லா திரும்புவது? புர்லாவில் உள்ள நண்பர்கள் கேட்க மாட்டார்களா? போகவில்லை என்றால் சிரிக்கமாட்டார்களா?

அந்த நாட்கள் எங்கும் அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள். இப்போது எங்கும் எந்த தொழிற்சாலைக்கும் நினைத்த மாத்திரத்தில் ஏதோ கோவிலுக்கு கடைவீதிக்குப் போவது போல போய்விட முடியாது. இப்போதெல்லாம் பாது காப்பு ஏற்பாடுகள் அதிகமாகிவிட்டன. அதிகமாகிக் கொண்டும் , இருக்கின்றன. சில வருஷங்கள் கழித்து நானே தில்லியிலிருந்து  கல்கத்தாவுக்கும் சென்னைக்கும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்கான நிபுணர்கள் காவலர்கள் கொண்ட ஆராய்வுக்  குழுவில் சேரவிருந்தேன். ஆனால் அன்று என் நினைவில் நாங்கள் ஏதோ  பார்க்குக்கு போவது போல் தான் சிமெண்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்தோம். சுற்றிப் பார்த்தோம். காம்பவுண்டு சுவரோ வாசல் காக்கும் துப்பாக்கி தாங்கிய  கூர்க்காவோ இருக்கவில்லை. எங்கும் ஒரே சுண்ணாம்புப் புழுதியும் எங்கும் நீண்ட தொடர் ட்ராலிகளில் பொருட்களைச் நிரப்பிச் செல்லும், காலி செய்து திரும்பும்,  சின்ன ரயில் பாதை ரயில் வண்டியும் கணடது தான் நினைவிலிருக்கிறது. மேலே போவதும் கீழே இறங்குவதுமாக இருந்த கன்வேயர் பெல்டின் இயக்கமும் பெரிய பெரிய உலைகளும் தான் கண்ட நினைவுகள். வேறு என்ன பார்த்தோம், என்ன புரிந்து கொண்டோம் என்பதெல்லாம் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரிய தொழிற்சாலை பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் வானத்தைத் தொடும் காட்சி தான். பட்டிக்காட்டான் யானை பார்த்த கதை. புர்லா திரும்பினால் சொல்லிக்கொள்ளலாம். ராஜ்காங்பூர் சிமெண்ட் தொழிற்சாலையைப் பார்த்தோம் என்று. இதற்கு முன் ஜாம்ஷெட்பூபரில் இருந்த போது எனக்கு டாட்டா இரும்புத் தொழிற்சாலையைப் பார்த்த அனுபவம் என்னை அவர்களிடமிருந்து வேறு படுத்தி அவர்களைவிட என்னை விஷயம் தெரிந்தவனாக்கிக் காட்டியது. அந்த நாட்களில் (1949-ல்) டாடா இரும்புத் தொழிற்சாலையை விட பெரிதானது இந்தியாவில் அன்று இருக்கவில்லை.

எங்களுக்குப் பசி எடுத்தது. ”வாங்க அந்த நாயர் என்ன செய்து வைத்திருக்கிறான் பார்க்கலாம்” என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். இந்தத் தொழிற்சாலைக்கு வரும் முன், வழியில் தனித்து எழுப்பப் பட்டிருந்த ஒரு அஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் ஒரு நாயர் ஹோட்டல் இருந்தது.
“அட இங்கேயும் ஒரு நாயர் ஹோட்டலா,” என்று ஆச்சரியப்பட்டோம். ஹிராகுட்டிலேயே எங்களுக்கு முதலில் தென்பட்டது 1948-ல் ஒரு மார்வாரியின் துணிக்கடையும் ஒரு நாயரின் ஹோட்டலும் தான். நாயர் சாயாக்கடை இல்லாத இடம் உலகில் உண்டா? பின்னால் டென்சிங் எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற போது அங்கும் ஒரு நாயர் மூன்று அடி நீளத்துக்கு சூடா ஒரு சாயா ஆற்றிக்கொண்டு வந்து முன்னால் நின்றார் எனற ஜோக் உடன் வர இருந்தது ஒரு வருஷத்துக்குள். அங்கு டீ சாப்பிட்டோம். பிறகு அந்த நாயர் கேட்டார்.” ஃபாக்டரிக்குப் போய்ட்டு வாங்க இங்கே சாப்பாடு தயார் பண்ணி வைக்கிறோம்,” என்று சொன்னார். அது எங்களுக்கு சௌகரியமாக மட்டும் இல்லை. அவர் ஏதோ எங்களுக்கு வலிய அழைத்து விருந்தளிப்பது போன்ற பாவனை இருந்தது.  எங்கள் முகம் மலர்வதைப் பார்த்து, நாயர் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தார். “சொல்லுங்க வேணும்னா ஒரு கோழி அறுத்து பிரியாணி பண்ணி வைக்கிறேன்,” என்று சொன்னதும் எல்லாருக்கும் ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதை எங்களுக்கு மலர் மாரி பொழிவது போல இருந்தது. அந்த பசி நேரத்தில் காலையில் நடந்த இந்த சம்பாஷணை நினைவுக்கு வர பிரியாணியும் கண்முன் காட்சி அளிக்கத் தொடங்கியது. அந்த நாயர் என்னதான் செஞ்சு வச்சிருக்கான் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டோம்

நாயர் ஹோட்டலை அந்த அஸ்பெஸ்டாஸ் கொட்டகையை அடைந்தோம். முகம் கழுவி உட்கார்ந்ததும் பிரியாணி வந்தது. ”நல்ல வேளையா சுடச் சுட இருக்கு. சாப்பிடுங்க. உங்களுக்குப் பிடிச்சிருக்கா சொல்லுங்க. பிடிச்சிருந்தா உங்க ஊருக்கே வந்து அங்கே தினம் உங்களுக்கு பிரியாணி போட்டுடலாம்” என்றார். நாயரின் பேச்சு சாமர்த்தியத்துக்கு நாங்கள் ஈடு சொல்ல முடியாது என்று தெரிந்தது. தேவசகாயமும் மணியும் பிரியாணியை சுட்டு விரலால் புரட்டிப் கிளறி என்னென்னவோ செய்து கொண்டிருந்தனர். “கோழிப் பிரியாணின்னார் நாயர். கோழியைக் காணோமே. என்ன ஜார்ஜ்? உங்க தட்டிலேயாவது ஏதாச்சும் தட்டுப் படுதா என்று சிரித்துக்கொண்டே எங்களில் ஒருவர் கேட்க, அப்போது உள்ளேயிருந்து வந்த நாயர், “என்னங்க, எப்படி இருக்கு நல்லாருக்குங்களா” என்று விசாரிக்கத் தொடங்கினார். “ என்னங்க கோழியவே காணோம்” என்று ஒருத்தர் கேட்க, அதான் ப்ரியாணி பண்ணிட்டமே, பின்னே எங்கேருந்து கோழி இருக்கும்? காலையிலே நாலு பாத்திங்கல்லியா, இப்போ மூணுதான் சுத்திட்டு இருக்கு. ஒண்ணு பிரியாணிக்குப் போயிருச்சு” என்றார். “அதான் கேக்கேன். காணோமே தட்டிலே” என்றார் மணி. நீங்க அஞ்சு பேர் இருக்கீங்களே. எல்லாருக்கும் கிடைக்கணுமில்லியா அதான் துண்டு துண்டா வெட்டாமே கொஞ்சம் சன்னமா கொத்துக்கறி மாதிரி போட்ருக்காங்க. சாப்பிட்டுப் பாருங்க, தூரத்திலேருந்தே எனக்கு கோழிக்கறி மணக்குதே” என்றார் நாயர். இதற்கு மேல் என்ன சொல்வது?

நாயர் விடவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். “ இப்போ சாவகாசமா சொல்லுங்க. புர்லாவிலே எப்படிங்க? நிறைய நம்மாட்கள் இருங்காங்களா? அங்கே கடைய எடுத்துட்டு வரலாம்களா” என்று கேட்டார். “வாங்க. கட்டாயம். அங்கே ஒரு ஐயர் மெஸ் இருக்கு. ஒரு பஞ்சாபி ஹோட்டல் இருக்கு. உங்களுக்கும் அங்கே வியாபாரம் நடக்கும். நம்ம ஆட்கள் ஆயிரக்கணக்கில் இல்லையா அணைக்கட்டிலே வேலை செய்யறாங்க” என்று நாங்கள் அவரை உற்சாகப் படுத்தினோம்.

அவ்வளவு தான் அவருக்குத் தேவையாக இருந்தது. நாங்கள் புர்லா திரும்பிய ஒன்றிரண்டு மாதங்களில் புர்லாவின் கடைத் தெருவில் அவர் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு கடை வைத்துவிட்டார். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு தான் வாடிக்கையாளர் ஆனார்கள். நான் பஞ்சாபி ஹோட்டலுக்குப் போவேன். இல்லையானால் ஐயர் மெஸ். ஐயரின் மெஸ் சாப்பாட்டை விட பஞ்சாபி தாபாவின் ஃபுல்காவும் சப்ஜி வகையறாவும்  எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் காலையில் கிடைக்கும் இட்லிக்கும் வெங்காய சாம்பாருக்கும் எங்கே போகிறது? அதனால் ஐயரையும் விட மனசில்லை.

நாயருக்கு தேவசகாயத்தை ரொம்பவும் பிடித்துப் போயிற்று என்று தெரிந்தது. ஆனால் நாயர் பேச்சில் தான் இனிப்பாக இருந்தாரே ஒழிய மற்ற விஷயங்களில் ரொம்ப கெட்டி என்பது எல்லாருக்கும் தெரிந்தது.  ஒரு நாள் நாயர் தன்னிடம் இருந்த ரேடியோவை யாருக்காவது தந்துவிடலாம் என்று நினைப்பதாகச் சொன்னார். எல்லாரும் ஆளுக்கு ஒரு ரூபாய் சீட்டுக்கட்டுங்க. யாருக்கு விழுதோ அவருக்கு அதிர்ஷ்டம். மத்தவங்களுக்கும் ஒண்ணும் மோசமில்லை. ஒரு ரூபாய் தானே. பெரிசில்லை என்றார்.. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சீட்டு கட்டினார்கள் .எனக்கு இந்த நாயரின் சாப்பாடும் பிடிக்கவில்லை. அந்த ஆளும் அவர் பேச்சும் பிடித்ததில்லை.
அப்போது ரேடியோ எல்லார் வீட்டிலும் இருந்ததில்லை. இரண்டு ரேடியோ கம்பெனிகள் தான் பிரபலமாக இருந்தன. ஒன்று மர்ஃபி. ஒரு குழந்தையின் படம் போட்டு விளம்பரங்கள் காலண்டர்கள் பார்க்குமிடமெல்லாம் கண்ணில் படும். இன்னொன்று ஜி.இ.சி. என்று. ஜெம்ஷெட்பூரில் மாமாவிடம் இருந்தது ஒரு பெரிய பெட்டி. ஜி.இ.சி. பெட்டி. மூன்றாவதாக டெலிஃபங்கன் என்று புதிதாக வந்தது. ஜெர்மன் தயாரிப்பாக்கும் என்று அதை வாங்கியவர்கள் கொஞ்சம் அழுத்தி நீட்டிச் சொல்வார்கள். எங்கள் ரூமுக்கு மலேயாவில் வியாபாரம் செய்துவந்தவர்கள் இரண்டு பேர் வந்திருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் மலாய் மொழியில் என்ன சொல்வார்கள் என்று அவர்கள் பேசிக்காட்டுவார்கள். பெனாங் அனுபவங்கள் பற்றி அடிக்கடி பேசுவார்கள். இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், எங்களுக்கு எதிர்த்த சரகில் இருந்த சத்யமூர்த்தி என்று தான் பெயர் என்று நினைக்கிறேன். அவர். டெலிஃபங்கன் ரேடியோ வாங்கியிருந்தார். அதில் பாட்டுக் கேட்க எங்களையெல்லாம் அழைத்திருந்தார். “இதான் ஜெர்மன் ரேடியோங்களா, நல்லாத்தான் இருக்கு பாக்கறதுக்கு. நல்லாவும் கேட்குது” என்றார் அந்த மலாய் நண்பர்கள். அடுத்து அப்போது பிரபலமாக இருந்த சிலோன் ரேடியோவின் தமிழ்ப் பாட்டு ஒன்று வந்தது. “எங்கள் மலாய் நண்பருக்கு ஆச்சரியம். “என்னங்க ஜெர்மனிக்காரன் பண்ணினதுங்கறீங்க, தமிழ்ப் பாட்டெல்லாம் கூடப் பாடுது! எப்படீங்க. நல்லா விசாரிச்சிட்டுத் தான் வாங்கினீங்களா,? “ என்று சொல்லவே எல்லாரும் சிரிக்கத் தான் செய்தோம். அடக்க முடியவில்லை

தேவசகாயமும் சிரித்தார் தான். ஆனால் நாயர் அடக்கமாகச் சிரித்த சிரிப்புத் தான் பெரிய சிரிப்பாக இருந்தது. நாயரின் ரேடியோ பெட்டிக்கு தேவசகாயமும் ஒரு ரூபா சீட்டுக் கட்டினாரே. அவருக்குத் தான் சீட்டு விழுந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். நாயருக்கு ரொம்ப பிடித்தவராக தேவசகாயம் இருக்கலாம். ஆனால் சீட்டு குலுக்கிப் போட்டா தேவசகாயத்துக்குத் தான் விழுணும்னு நாயர் செய்திருக்க முடியுமா என்ன? ”அவர்கள் சினேகத்துக்கு கர்த்தர் கொடுத்த பரிசு,” என்று சொன்னோம். ஆனால் தேவசகாயம் முகம் பார்க்க சுவாரஸ்யமாக இல்லை. என்ன ஆச்சு? என்று கேட்டோம். ”இது ரேடியோ இல்லிங்க. ரேடியோ பெட்டி. வெறும் பெட்டிங்க. இதில் வால்வ் ஒண்ணும் கிடையாது.  என்னாச்சுன்னு கேட்டா, வால்வ் எல்லாம் நீங்க போட்டுக்கணும்க. வால்வ் சேத்தி இல்லிங்கன்னுட்டார். உங்களுக்கு ஒரு ரூபாய்க்கு இது கிடைச்சதே பெரிசு இல்லீங்களா. ஒரு ரூபாய்க்கு எவ்வளவு கிடைக்கும்” என்று சொல்றார் நாயர். அவர் கெட்டிக்காரத்தனத்தை அவர் விடலை.” என்றார் தேவசகாயம்.

தேவசகாயம் அதை என்ன செய்தார் என்று நினைவில்லை. ஆனால் அந்த ரேடியோ பெட்டிக்கு வால்வ் வாங்கிப் போட்டதாகவோ அதிலிருந்து எந்த சத்தமும் எப்போதும் எங்கும் கேட்கும் “கொர்ர்ர்ர்ர்ர்” சத்தம் கூட அதிலிருந்து வந்த நினைவில்லை எனக்கு. “என்னாத்துக்கு அதைப் போட்டு வாங்கிட்டு……” என்ற அவரது வழக்கமான “வெளங்காததை” உதறி எறியும் பேச்சுதான் வரும். . .  .
 .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R