ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  -  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  -  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

விற்றுவிடும்  தானியங்கள்,
விலையேறிப்   போகையிலே,
சுற்றியதைச்  சுருட்டிவைக்கும்  தகுதி!  -  அதில்
பெற்றுவிடும்   லாபமெண்ணிப்,
பிறர்வயிற்றை  நோகவைக்கும்,
அற்பர்களே  இதயமில்லா   அகதி!

நலிந்துவிட்டோர்க்(கு)  உதவித்தொகை,
நல்லபடி   அரசுதர,
நாணமின்றித்   தின்னுமதி  காரி!  -  அவன்
மெலிந்தே  வலிந்திரக்கும்,
மேனியர்க்கும்   கேவலமாய்,
நலிந்துவிட்ட  நோயான  அகதி!

வீட்டிலுள்ளோர்   பசியிருக்க,
வெறிபிடித்துக்   கூத்தியரின்,
பாட்டினிலே  தமைமறக்கும்  தகுதி!  -  அதை
நாட்டமுடன்   செய்துவிட்டு,
நல்லவர்  வரிசையிலே,
நாடும் வெள்ளை   வேட்டியரும்  அகதி!

பண்படுத்தும்  ஆயுதமாய்,
பலமதங்கள்   தோன்றிடினும்,
பக்குவத்தை   அடையாத   பகுதி!  -  இன்னும்
கண்துடைப்புச்   சாஸ்த்திரத்தைக்,
காரணமாய்க்   காட்டிப்பலி,
காண்பவரே  ஞானமற்ற   அகதி!

தஞ்சமென்று   துணைகேட்டு,
தளர்ந்துவரும்   அகதியரை,
தாங்கும்ஐயா   பல்வேறு  இதயம்!  -  ஆனால்,
அஞ்சுவகைப்   பாதகமும்,
அச்சுவெல்ல   மாக உண்ணும்,
நஞ்சருக்கு   யார்கொடுப்பார்  எதையும்...?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R