அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் (Hate Crimeஎழுத்தாளர் க.நவம்s) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது. 

கனடா, உலகில் முதன்முதலாகப் பன்முகப் பண்பாட்டுக் கருத்தியலுக்கு வெற்றிகரமாக வித்தூன்றிய பெருமைக்குரிய நாடு; இருக்க இடம்தேடிவரும் உலகநாட்டு ஏதிலிகளை இன்முகம் காட்டி வரவேற்பதற்கெனத் தன் வாசற்கதவை எப்போதும் அகலத் திறந்து வைத்திருக்கும், தயவும் தாராண்மையும் கொண்ட நாடு; வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, உச்சப் பலாபலன் பெறுதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட நாடு; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சிப் பண்புகளை, மையவிழுமியங்களாகக் கொண்ட நாடு; அன்பை விதைத்து, அதனை உரமூட்டி வளர்த்தெடுத்து, அதன் பயனுறு விளைச்சல்களை அறுவடை செய்வதில் வெற்றிகண்ட நாடு. இத்தகைய உன்னதங்களைத் தன்னகத்தே கொண்ட கனடிய மண்ணில், இன்று வெறுப்பும், பகைமையும், வன்மமும் உப்பாக ஊடுபரவ ஆரம்பித்துள்ளமை, இந்த நாட்டு மக்களுக்கு உவப்பான செய்தியல்ல! 

‘இனத்துவம், பாலியல் போன்ற பல்வகை வேறுபாடுகள் சார்ந்த வெறுப்புணர்ச்சியினால் அல்லது தப்பபிப்பிராயத்தினால் தூண்டப்பட்டு, பொதுவாக வன்செயலில் வந்து முடியும் ஒரு குற்றச் செயலே வெறுப்புக் குற்றம்’ என வரைவிலக்கணம் ஒன்று கூறுகின்றது. இதன்படி, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை அல்லது இனங்களை இலக்காகக் கொண்டே, குற்றம் புரிவோர் இவ்வாறான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகின்றது. 

2016ஆம் ஆண்டு கனடாவில் 1,409 வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து வந்த ஆண்டில் (2017), அதன் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்திருக்கின்றது. 2014 முதல், கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிகரிப்பு, புறக்கணிக்க முடியாதபடி கணிசமானது எனக் கனடியப் புள்ளிவிபரத் திணைக்களப் பேச்சாளரான றெபெக்கா கொங் (Rebecca Kong) கூறுகின்றார். மேலும், ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களுள், தனியார் சொத்துக்களைத் தாக்கியழித்தல், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள் (graffities) போன்ற வெறுப்புக் குற்றங்கள் காரணமாகவே 2017ஆம் ஆண்டு இவற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 

2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களில் 43 சதவீதமானவை, இன வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 41 சதவீதமானவை, மத வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 10 சதவீதமானவை, பாலின வேறுபாடு அல்லது பாலினச் செயற்பாடு சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகைப்பட்ட குற்றங்களுள் அநேகமானவை, முஸ்லீம்களையும் யூதர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும். குறிப்பாக, முஸ்லீம்களுக்கு எதிராக 349 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகவும், இவ்வெண்ணிக்கை முன்னைய ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதெனவும் கண்டறியப்பட்டிருக்கின்றது. 

2014இல் இடம்பெற்ற கருத்துக் கணிப்பின் பிரகாரம், அக்காலப் பகுதியில் வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்களுள் சுமார் 66 சதவீதத்தினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்வோர் மீண்டும் பழிவாங்கப்படுவார்கள் என்றும், முறைப்பாடுகளை யாரும் நம்பப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டோர் மனங்களில் அந்நாட்களில் நிலவிவந்த அச்சமும் அவநம்பிக்கையுமே அதற்கான பிரதான காரணங்களாகும். பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு காவற் துறை வழங்கிவந்துள்ள ஊக்குவிப்பு, 2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி திறந்துள்ளதெனலாம்.

மேலும், ஒரு வெறுப்புக் குற்றச் சம்பவம், பொதுவாக இன்னும் பல வெறுப்புக் குற்றங்களுக்கு எரியூட்டி, அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பை ஊக்குவிக்கின்ற போக்கினையும் இந்நாட்களில் அவதானிக்க முடிகின்றது. கடந்த ஒக்ரோபர் 27ஆம் திகதி, அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவின் பிற்ஸ்ப்பேர்க் நகரிலுள்ள யூதவழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்தலத்தின் சுற்றுப் பிரதேசங்களில் யூத இன வெறுப்புச் சம்பவங்கள் பரவலாகப் பல இடங்களில் இடம்பெற்றமை இந்த ஊகத்தை உறுதி செய்கின்றது. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபெக் மாகாணத்துப் பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கியூபெக்கில் இடம்பெற்ற வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், இந்த அனுமானத்திற்கு ஆதாரமளிக்கின்றது. தொடர்ந்து, பெப்பிரவரி மாதம் கியூபெக் மாகாணத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. 

கியூபெக் மாகாணப் பள்ளிவாசல் சம்பவத்தின் பிரதிபலிப்பை, 2018ஆம் ஆண்டு முழுவதுமே அவதானிக்க முடிந்ததாக, கனடிய முஸ்லீம்களுக்கான தேசிய சபையின் பேச்சாளர் லெய்லா நாஸர் (Leila Nasr) தெரிவிக்கின்றார். வெறுப்புக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவோரது அவதூறுகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் என்பவற்றுடன், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள், தனியார் சொத்துக்களைத் தாக்கி அழித்தல்கள், ஏனைய உளவியல் சார் மிரட்டல்கள் என்பன முஸ்லீம்களதும், அராபிய நாட்டினர் போலத் தென்படும் ஏனையோரதும் மனதில் அச்சத்தையும் கிலேசத்தையும் ஏற்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார். 

எமது அரசியல், சமூக சூழலில் அதிகரித்துவரும் அதிதீவிர வலதுசாரி வெகுசனச் சொல்லலங்காரமும், புறம்புகாட்டிப் பிறன்மைப்படுத்துதலும், வசைபாடுதற்கென சமூக வலைத்தளங்களில் இலகுவாகக் கிடைக்கும் வசதிவாய்ப்பும், தென்புறத்து அண்டை நாட்டுத் தலைமையானது அன்றாடம் திருவாய் மலர்ந்தருளும் வன்மொழிவழக்கும், கனடாவில் வன்மக் குற்ற எரிநெருப்புக்கு எண்ணெய்யூற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டுகின்றார். அத்துடன், உள்நாட்டில் உற்பத்தியானதும், ஏனைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டதுமான இருமுனைப்பட்ட (polarizing) பிரிவினை அரசியற் போக்கின் திடீர் வளர்ச்சியும் வெறுப்புக் குற்ற அதிகரிப்புக்கான இன்னொரு பிரதான காரணம் என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, 2017 ஜனவரி மாதம் கியூபெக்கில் நடந்தேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து, பல்வேறு மதத் தலைவர்களும், சமூக வினைப்பாட்டாளர்களும் ஒன்றுதிரண்டு, கைகோர்த்து நின்று, அப்பள்ளிவாசலைச் சுற்றி, அமைதி / சமாதான வட்டங்களை நிறுவி, முஸ்லீம்களுக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத் தக்கதோர் சம்பவமாகும். இதேபோன்று, அமெரிக்காவின் பிற்ஸ்ப்பேர்க் தாக்குதலின் பின்னர், ரொறன்ரோவிலுள்ள யூதவழிபாட்டுத் தலங்களைச் சுற்றி, இங்குள்ள முஸ்லீம்கள் அமைதி / சமாதான வட்டங்களை நிறுவிநின்று, யூத மக்களுக்குத் தமது ஆதரவை வழங்கினர். வெறுப்புக் குற்றங்களின் அதிகரித்துவரும் போக்குக்கு எதிர்வினையாக, சமூக நலன் விரும்பிகள், பாதிக்கப்பட்டோர் மீது காண்பிக்கும் பரிவுணர்வுக்கும் கூட்டுறவுக்கும் இந்நடவடிக்கை ஓர் அடையாளமாக விளங்குகின்றது.

இவ்வாறே, முஸ்லீம் மக்கள் கடந்த சில வருடங்களில் தமக்கெதிராகத் தூண்டிவிடப்படும் வெறுப்புக்களுக்கு மத்தியிலும், ஏனைய சமூகத்தவர்களுடன் ஒன்றுதிரண்டு தமது வலிகளைப் பகிர்ந்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக லெய்லா நாஸர் கருதுகின்றார். முஸ்லீம் சமூகத்தவர்கள், மிக மோசமான இஸ்லாமிய வெறுப்புணர்வு (Islamophobia)  ஒன்றினை எதிர்கொண்டு வருகிறார்கள் என்னும் உண்மையை உணர்ந்துகொண்டமையின் வெளிப்பாடு இது எனக் கருதப்படுகின்றது. அதேவேளை, வெவ்வேறு வகைப்பட்ட வெறுப்புணர்வுகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டுவரும் ஏனைய சமூகத்தவர்களுடன் தமது நெருக்கடிகளைப் பகிர்ந்துகொள்வதிலும் இவர்கள் முனைப்பாக இருந்துவருகின்றனர் எனக் கூறப்படுகின்றது. 

மதக் குழுக்கள் என்று பார்க்கும்போது, மிகக்கூடுதலான வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்கள் யூத மதத்தவர்களே (Judaism). 2017ஆம் ஆண்டு இவ்வாறு பாதிக்கப்பட்ட யூத மதத்தவர்களது எண்ணிக்கை 360. இஸ்லாமிய மதத்தவர்கள் 349. ஆயினும் தனிநபர் வன்செயலுடன் கூடிய வெறுப்புக் குற்றங்களுக்கு யூதர்களைவிட, இஸ்லாமியர்களே பெருந்தொகையில் பலியாகியுள்ளனர். மாகாண அடிப்படையில் பார்க்கும்போது, 2017ஆம் ஆண்டு கனடாவின் கியூபெக் மாகாணத்தில்தான் மிகக் கூடுதலான வெறுப்புக் குற்றங்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 2016இல் 41 ஆக இருந்த இவ்வெண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டு மும்மடங்காகி, 117 ஆக உயர்ந்திருக்கின்றது. ஒன்ராறியோவில் 2017ஆம் ஆண்டு முஸ்லீம்கள் முறைப்பாடு செய்த வெறுப்புக் குற்றத் தாக்குதல்கள் 184 எனவும், யூதர்கள் 209 எனவும் தெரியவருகின்றது. இதேவேளை, கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக 50 சதவீத (321) அதிகரிப்பும், அராபியர், மேற்கு இந்தியர், தெற்காசியர் போன்றோருக்கு எதிராக 27 சதவீத (142) அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன. பாலின / பாலுறவு அடிப்படையில், (LGBTQ - lesbian, gay, bisexual, transgendered, and queer) ஒரு பாலினச் சேர்க்கையாளர்கள், இரு பாலினச் சேர்க்கையாளர்கள், பால் மாறுனர்கள், விசித்திரப் பாலியல் நடவடிக்கையாளர்கள் போன்றோருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு 16 சதவீத (204) வெறுப்புக் குற்றத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மோசமடைந்துவரும் இந்நிலைமையைக் கட்டுப்படுத்தக் கனடிய மத்திய அசராங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய, யூத அலுவல்கள் நிலையத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி ஷிமோன் கொஃப்லர் ஃபோக்கெல் (Shimon Koffler Fogel ) கூறியுள்ளார். அதன் பொருட்டு மத்திய அரசானது, பாதுகாப்பு உட்கட்டுமானச் செயற் திட்டத்தினை விரிவாக்க வேண்டும்; இணையத் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வன்மப் பரவலைத் தடுப்பதற்கான நாடளாவிய மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்டும்; வெறுப்புக் குற்றக் கட்டுப்படுத்தலுக்கு மூலாதாரமான, சட்ட நடவடிக்கைத் துறையினை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பன அவர் முன்வைத்துள்ள சில விதந்துரைப்புகளாகும். 

மேலும், கனாடவில் இடம்பெற்றுவரும் வெறுப்புக் குற்றங்களின் அதிகரிப்பு, அதிர்ச்சியூட்டுகின்றது எனவும், இது வேறு எந்தவொரு குற்றத்திலும் இதுவரை இடம்பெற்றிராத ஒரு திடீர் அதிகரிப்பு எனவும் University of Ontario Institute of Technology குற்றவியல் பேராசிரியர் ப்பார்பரா பெறி (Barbara Perry) கூறுகின்றார். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மாகாண, மத்திய அரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அபாய அறிவிப்பு எனக் குறிப்பிடும் அவர், இது எமக்கே உரிய மையவிழுமியங்கள் மீது திடுதிப்பென மேற்கொள்ளப்பட்ட ஒரு தீவிர தாக்குதலாகும் என மேலும் அச்சம் தெரிவித்துள்ளார். 

வெறுப்புக் குற்றம் என்றால் என்ன என்று கனடிய குற்றவியற் சட்டத் தொகுதி சரிவர வரையறுக்கவில்லை. ஆயினும் இனம், தேசியம், மொழி, நிறம், மதம், சாதி, பிரதேசம், பண்பாடு, பால், வயது, உள-உடல் மாற்றுத்திறன், பாலினச் சார்பு, அல்லது இவையொத்த காரணிகளின் அடிப்படையில் தூண்டப்பெற்ற, பக்கச்சார்பு அல்லது பாரபட்சம் அல்லது தப்பபிப்பிராயம் அல்லது வெறுப்பு என்பன தண்டனைக்குரியன என்று மட்டும் அது குறிப்பிடுகின்றது. இது கனடாவில் வெறுப்புக் குற்றங்களுக்கு இரையாகி வரும் அனைத்துச் சிறுபான்மைச் சமூகத்தினரது பாதுகாப்பிற்கு, ஓரளவு தன்னிலும் உத்தரவாதம் வழங்குகின்றது என்பது உண்மையே. 

ஆயினும், ’வானவில்லின் நிறங்களுக்கிடையில் பேதமில்லை, பொறாமையில்லை, அச்சமில்லை, வெறுப்பில்லை; ஒவ்வொன்றும் மற்றையவற்றை அழகுபடுத்தவே ஒன்றுதிரண்டிருக்கின்றன’ என்னும் தெளிவுகொண்ட ஒரு மக்கள் சமூகத்தில், இது போன்ற சட்டங்களுக்கான அவசியமே இல்லை. பதிலாக, ‘இருளை இருளால் விரட்ட முடியாது; ஒளியால் மட்டுமே அது சாத்தியமாகும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது; அன்பினால் மட்டுமே அது சாத்தியமாகும்’ என்ற சிந்தனைத் தெளிவுடன் கூடிய மனமாற்றம்தான் இன்றைய கனடிய மக்கள் சமூகத்தின் உடனடித் தேவையாகும்! இதனை இலக்காகக் கொண்டே, அரச நிறுவனங்களும் ஆன்மீகக் அமைப்புகளும் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்து, வெறுப்புணர்ச்சியை விரட்டும் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். மாறாக, வெறுப்பை விளைய விட்டால், அதன் வேரறுப்பது சிரமம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்! 

ஆதாரங்கள்:
Christina Maxouris, CNN, https://www.cnn.com/2018/11/30/us/hate-crimes-canada-trnd/index.html
Jesse Ferreras, Global News Nov. 30, 2018, https://globalnews.ca/news/4714114/canada-jews-muslims-hate-crime/ 
Tavia Grant, theglobeandmail, Nov. 29, 2018, https://www.theglobeandmail.com/canada/article-hate-crimes-in-canada
Josh Dehaas, CTVNews.ca, Mar. 1, 2017, https://www.ctvnews.ca/canada/what-counts-as-a-hate-crime-in-canada-1.3307395 

‘தாய்வீடு’ – ஜனவரி 2019 இதழில் பிரசுரமான இக்கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காகக் கட்டுரையாளர் அனுப்பியுள்ளார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R