ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899--1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன- பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று  அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி.  ஆங்கில- -அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான்[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன]   ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899--1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன- பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று  அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி.  ஆங்கில- -அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான். வாழ்தலின்  பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர். அவர் எழுதத் தொடங்கிய போது  இருந்த ஸ்பானிய மொழியின் போதாமையை உணர்ந்து, பிரக்ஞைபூர்வமாக இலக்கிய வகைமைகளை முன்னில்லாத வகையில் பிணைத்தும், லத்தீன் அமெரிக்காவின் பாரம்பரியங்களை மீட்டெடுத்தும், மறுகட்டுமானம்  செய்தும், மொழி ரீதியான  கெட்ட பழக்கங்களை ஒதுக்கியும் ஒரு துல்லியமான மொழியை உண்டாக்கினார். 

 போர்ஹேவின் எழுத்துக்களை ஆராயும் போது நவீன லத்தீன் அமெரிக்காவின் எல்லா இலக்கியப் போக்குகளையும் உள்வாங்கிக் கொள்வதற்குச் சமமானதொரு அனுபவம் கிட்டும். தனித்துவமானதொரு அர்ஜன்டீனிய தேசீய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்காமல் ஒரு விளிம்பு நிலைவாதியாகவே அரசியல் கோட்பாடுகள் கொண்டிருந்தார். போர்ஹேவின் எழுத்துக்கள்--அவை சிறுகதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும், கவிதைகளாகட்டும்-- ஒவ்வொன்றுமே தொடர்ச்சியாக வாசகனை சவாலுக்கு இழுப்பவை. தேசீயவாதம், யதார்த்த வகை நாவல், தத்துவார்த்த கறார்த்தன்மை, கொள்கைவாதம், அரசாங்கங்கள் இவற்றை அவரின் எழுத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் சீண்டிக் கொண்டேயிருப்பவை. 

"I believe that some day we will deserve not to have governments" என்று Dr. Brodies' Report (1970) தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் எழுதியிருக்கிறார். தேசீயவாதமும் யதார்த்தவகை நாவலும் ஒரே தன்மையானவை என்று போர்ஹே கருதினார். விநோத வகை (அல்லது புனைவு) எழுத்துக்களே யதார்த்த வகை எழுத்துக்களுக்கான பொருத்தமான விஷமுறிப்பானாக இருக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் விநோத வகைக் கதைகளில் பயங்கரங்களும் அச்சமும் இலக்கிய ரீதியான, மற்றும் பெளதிக மெய்ம்மை மீறும் சிந்தனைகளால் ஈடு செய்யப் பட்டுவிட்டன. எல்லா விநோத வகை இலக்கியப்பிரதிகளும் யதார்த்த வகைப் பிரதிகளின் ஒற்றைப் பார்வையில் உலகத்தைப் பார்க்கும் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன. இந்த நிகழ்முறை திடீரென இருபதாம் நூற்றாண்டில் உருவாகிவிடவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே இதன் வேர்களைப் பார்க்க முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு (கொதிக்-Gothic-நாவல்கள்) விநோதக் கதைகளில் அசுரர்களும், மாயாஜாலங்களும், மந்திரமும் நிஜம் அல்லது யதார்த்தத்தை உறுத்திக் கொண்டேயிருந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் அசுரத்துவம் என்பது மனோவியலின் மூலம் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. காரணம் மனோவியலின் மூலமே வேறுவாக இருத்தலையும் பிற (the Other) வாக இருத்தலையும் வியாக்கியானப்படுத்த முடிந்தது. மொழியின் வாயிலா¡க எழுதப்பட்ட இலக்கியப் பிரதிக்கு வெளியே இருக்கும் உலகத்தினைச் சுட்ட வேண்டிய கட்டாயம் முடிந்து போய் இருபதாம் நூற்றாண்டில் புனைகதை தன்னைத் தானே சுட்டிக் கொள்ள வேண்டிய தன்னாட்சியின் அவசியத்தை உணர்ந்து கொண்டு விட்டது.

பரிச்சயத்தன்மையையும் அதன் விளைவாக வரும் சலிப்புத்தன்மையையும் நீக்குவதற்கு பெரும்பாலும் சொல்லின் பிடியிலிருந்தும், பார்வைப் புலன்களின் பிடியிலிருந்தும் அகன்று போய் விட்ட முழுமுற்றான வேறு (Absolute Other)வை நவீன புனைகதை எழுத்தாளன் தேர்ந்து கொள்கிறான். வரலாற்றில் கலாச்சார ஒடுக்கு முறைகள் நேரடியாகவும் அவற்றுக்கு இணையான ஆனால் புறம்பான வெளிப்பாட்டு சக்தியையும் உருவாக்குகின்றன. ஹிரோனிமஸ் போஷ் என்பவரின் சித்திரங்களைப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியக் கூடும். தமிழ்நாட்டுக் கோயில்களின் யாளிகள், ரோமானிய கட்டிடக் கலையில் நீர் கொட்டும் வாயாக அமையும் கார்காயில்கள், ·பீனிக்ஸ் பறவைகள், கொம்பு முளைத்த குதிரை எல்லாமே புனைவு, வினோதம் ஆகியவை மனிதனுக்கு, அவனது சாதாரணத்துவத்தை மீறுவதற்குத் தேவைப்பட்டுக்  கொண்டேயிருப்பவை என்பதை உணர்த்தும். 

யதார்த்த வகைக் கதைகள் மட்டுமே போர்ஹே போன்றவர்களால் ஒதுக்கப்பட்டன. போர்ஹே நேரடிக் கதை (Straightforward Narratives) களையும் எழுதி இருக்கிறார். நேரடிக் கதை என்பது உத்திகளை விலக்கி விடுவது. இந்த மாதிரிக் கதைகளை Dr. Brodie's Report இல் போர்ஹே எழுதியிருக்கிறார். உத்திச் சிக்கல்கள் இல்லாத பல லகுவான கதைகளை இத்தொகுப்பில் படிக்க முடியும்.குறுக்கீட்டாளர்,ரோசென்டோவின் கதை, மாற்கு எழுதிய வேதாகமம், ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.

யதார்த்த வகை இலக்கியப் பிரதியின் ஒருமைத்தன்மை அல்லது ஒற்றை உலகப்பார்வையைத் தாக்குவதற்கு சிறந்த முறையில் பயன்படுவது துப்பறியும் கதை. எட்கர் ஆலன் போ என்ற அமெரிக்க நாவலாசிரியர், மற்றும் ஜி. கே. செஸ்ட்டர்டன் என்ற ஆங்கில நாவலாசிரியர் ஆகியோரை போர்ஹே ஏன் சிலாகிக்கிறார் என்பதும் நமக்குப் புரியும். மனோவியல் நாவலாசிரியர்களையும் போர்ஹே தாக்கியிருக்கிறார். நாவலாசிரியர்கள் கதை சொல்வதற்கு மறந்து போய்விட்டார்கள் என்றார் போர்ஹே. துப்பறியும் கதைகளைப் படித்த பிறகு எடுத்துப் படிக்கப்படும் இலக்கிய நாவல் அமைப்பொழுங்கு சிதைந்து காணப்படுவதாகவும் போர்ஹே கூறியுள்ளார். 1940களின்தொடக்கத்தில் தன் இளம் நண்பரான அடா·ல்ப் பியோய் காசரெஸ் என்பவருடன் இணைந்து நையாண்டித்தனமான துப்பறியும் கதைகளை Bustos Domecq என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். ஒரு பிரதான வெளியீட்டாளருக்காக துப்பறியும் கதைகளின் தொடர் தொகுதிகளைத் தொகுத்தும் கொடுத்துள்ளார்.(The Seventh Circle). 

ஒரு அர்ஜன்டீனிய எழுத்தாளர் என்ற வகையில் போர்ஹேவுக்கு கடினமாக பொறுப்புகள் இருந்தன. கிளெரிகலிசமும், தேசீயவாதமும், ராணுவ பலமும் பிரேஸீலைச் சீரழித்து பல சமயங்களில் சர்வாதிகாரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தின. போனஸ் அயர்ஸ் நகரத்தையும் அதன் மனிதர்களையும் புராணிகப்படுத்துவதன் மூலம் தனக்கான எழுத்தாள தர்மங்களை உருவாக்கிக் கொண்டார் போர்ஹே. தனது அர்ஜன்டீனிய வரலாற்றினை அவரது முன்னோர்களின் குழுவிலிருந்து உருவாக்கிக் கொள்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் அர்ஜன்டீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போர்ஹேவின் முன்னோர் (தந்தை வழி தாத்தாவான கர்னல் ·பிரான்சிஸ்கோ போர்ஹே) உதவி செய்திருக்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரோசாஸ் (Rosas)ம் இருபதாம் நூற்றாண்டில் பெரோனும் (Peron), அர்ஜன்டீனாவை  தங்களின் கட்டை விரலுக்கு அடியில் வைத்துக் கொண்டார்கள். 1946--55 ஆகிய வருடங்களிலும், பிறகு 1974இல் சிறிது காலமும் பெரோன் அர்ஜன்டீனாவின் சர்வாதிகாரியாக இருந்தார். இந்த சர்வாதிகாரத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் போர்ஹே முக்கியமானவர். ஆனால் உலகத்திற்கே பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்க வைக்கும்படியாக இருந்த 1940களில்தான் போர்ஹேவின் மிகச் சிறந்த சிறுகதைகள் எழுதப்பட்டன. ஒவ்வொரு நாள் காலையில் அவர் எழுந்து பார்க்கும் போதும் யதார்த்தம் அவருக்கு பீதி உருவாகத் தோற்றம் கொண்டது. பெரோனிசம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய அளவுக்கான பிரச்சனையாக இருந்த போதிலும், பெரோன் மிகவும் பிரபலமான நல்கொள்கையாளராக அர்ஜன்டீனியர்களுக்குத் தெரிந்த ஒரு காலகட்டத்தில் பெரோனை ஒரு நவ--பாசிஸ்ட் சர்வாதிகாரி என்று போர்ஹே விமர்சித்து கண்டனம் செய்தார். மிகுவெல் கேன் நூலகத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து போர்ஹே நீக்கப்பட்டார். அவருக்கு கோழிப் பண்ணை மேலாளராகப் "பதவி உயர்வு" தரப்பட்டது. சர்வாதிகாரங்கள் ஒடுக்கு முறைகளையும், அடிமைத்தன்மைகளையும் மாத்திரம் உருவாக்குவதில்லை. மாறாக மடத்தனங்களையும் உண்டாக்குகின்றன. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறதென்றார் அவர். அதாவது சர்வாதிகாரம் உருவாக்கும் ஒரு வித சோகமான சலிப்புணர்வை சரி செய்ய இலக்கியத்தினால் மாத்திரமே முடியும். பெரோனிசத்தைக் கண்டித்து கவிதைகளையும் விவரணைகளையும் எழுதினார். 

போர்ஹேவுக்கு 15 வயதாகும்போது 1914ஆம் ஆண்டு தன் குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். 1921ஆம் ஆண்டுதான் மீண்டும் போனஸ் அயர்ஸ¥க்குத் திரும்பினார். ஸ்பெயினிலும் ஸ்விட்சர்லாந்திலும் வாழ்ந்த போது லத்தீன், பிரெஞ்சு, மற்றும், ஜெர்மன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இதே கால கட்டத்தில்தான் அவருக்கு நவீன இலக்கியங்களும் அறிமுகமாயின. மேட்ரிட் நகரில் Rafael Cansinos--Assens என்ற யூத--ஸ்பானியக் கவிஞரைச் சந்தித்து அவருக்கு நண்பரானார் போர்ஹே. 1919ஆம் ஆண்டில் அல்ட்ராயிசம் என்ற சொல்லையும் இயக்கத்தையும் உருவாக்கியவர் ர·பேல் கான்சினோஸ் ஆசென்ஸ். இந்த காலகட்டத்தில் தன்னுடைய இலக்கிய- -அரசியல் கருத்துக்களைக் கட்டுரையாக எழுதி The Sharper's Cards என்ற தொகுதியாக வெளியிட்டார். இதே காலகட்டத்தில் அவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்புக்குப் பெயர் The Red Psalms. ரஷ்யப் புரட்சியையும் போல்ஷெவிக்குகளையும் புகழ்ந்து எழுதிய போர்ஹேவின் கவிதைகளை இந்த தொகுப்பு உள்ளடக்கியது. போனஸ் அயர்சுக்குத் திரும்பிய போது அவர் அர்ஜன்டீனியஅல்ட்ராயிசத்தின் தந்தை என்றே இலக்கியக் குழுக்களில் அழைக்கப்பட்டார். ஆனால் ஸ்பானிய அல்ட்ராயிசத்தின் போதாமையை-- ·பியூச்சரிசம் போலவே அதிகபட்சமாக நவீனத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்ததால்--உணர்ந்து அதைக் கை விட்டார். கவிதையின் நோக்கம் திடுக்கிடச் செய்வதல்ல என்பதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டியதாக போர்ஹே எழுதுகிறார். 

முதன் முதலில் எடிட் செய்த இலக்கியப் பத்திரிகை Prisma [Prism]. ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்டு போஸ்டர்கள் மாதிரி இந்தப் பத்திரிகையை அர்ஜன்டீனாவின் சுவர்களில் போர்ஹேவும் நண்பர்களும் ஒட்டினார்கள். இரண்டு இதழ்கள் வந்து நின்று போயிற்று இந்த மியூரல் மேகஸின். 1924இல் ஆல்பிரடோ பியான்ச்சி என்பவரின் உதவியுடன் Proa என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தார். ஒன்றரை வருடங்கள் நண்பர்களின்  உதவியுடனும் சொந்தக் காசுகள் செலவழித்தும் இந்த இதழை நடத்தினார். 15 இதழ்களோடு அதுவும் நின்று போயிற்று. 1933 லிருந்து கிரிட்டிகா என்ற பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வந்த வருடம் 1942. முதல் சிறுகதைத் தொகுதியின் தலைப்பு The Garden of Branching Paths. மற்றொரு ஏடான El Hogar, பாப்புலர் சொசைட்டி வார இதழாக இருந்த போதிலும் வெளிநாட்டு இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் போர்ஹேவுக்கு இடம் தந்திருந்தது. 

முழுமையான வேலை என்று பார்க்கத் தொடங்கியது 1937இல் முனிசிபல் நூலகத்தின் மிகுவெல் கேன் கிளையில் துணை நூலக அதிகாரியாக. நூலகத்தின் இயக்குநர் மற்றும் இரண்டு அதிகாரிகள் போர்ஹேவுக்கு மேலே இருந்தனர். ஏற்கனவே அந்த நூலகத்தில் பதினைந்து பேர் செய்யக் கூடிய வேலையை 50 பேர் செய்து கொண்டிருந்ததாக எழுதுகிறார். மிகவும் கடையாந்தர வேலையாக இருந்த போதிலும் அதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

1938ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். செப்டிசீமியா என்ற நோய் தாக்கப்பட்டு தன் ஸ்வாதீனம் மீண்டும் வருமா என சந்தேகம் கொள்ளத் தொடங்கினார் போர்ஹே. தனக்கு மீண்டும் எழுதுவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்ற பயம் அவரைப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய அறிவார்த்த சிந்தனை சரியாகத்தான் இயங்குகிறதா என்று  சோதிக்க விரும்பினார். கவிதைகளையும் புத்தக விமர்சனங்களையும் அவர் ஏற்கனவே எழுதியிருந்ததால் புதியதாக ஒரு கதையை எழுதிப் பார்க்கத் தீர்மானித்தார். கதையை வெற்றிகரமாக எழுத முடிந்தால் தன் நிலைமை சரியாக இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்வதாய் முடிவு செய்தார். அதன் விளைவுதான் Pierre Menard, Author of Don Quixote. இந்தக் கதை இதன் முன்னோடிக் கதையான An Approach to Al-Mutasim போல கட்டுரையின் வடிவத்தையும் நிஜக்கதையின் வடிவத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது. இதன் உச்சபட்சமான சாதனைதான் டுலோன், உக்பார்,ஓர்பிஸ், டெர்ஷியஸ். இந்தக் கதையின் கற்பனா உலகம் மனிதர்கள் வாழும் உலகத்தினை பதிலீடு செய்வதாக அமைகிறது. 

ஊடு இழைப்பிரதி என்று சொல்லக் கூடிய Inter-textuality யைப் போர்ஹே ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளுக்கு முன்பே முன்னோக்கி விட்டவர். எல்லையற்ற பிரதிகளின் வனமாக நூலகத்தினை சித்தரித்தவர் (The Library of Babel) போர்ஹே. சிறு வயதிலிருந்தே அவரது தந்தையின் நூலகத்தில் பல ஆங்கில நூல்களைப் படித்து வளர்ந்தவர். இந்த உலகத்தையே ஒரு புத்தக அலமாரியாகவோ அல்லது பல புத்தகஅலமாரிகள் கொண்ட பிரம்மாண்டமான நூல் நிலையமாகவோ பார்த்தவர் போர்ஹே. ஆனால் நூலகத்தினை சந்தோஷமான ஒரு இடமாகச் சித்தரிக்கவில்லை. பீதிக்கனவுத் தன்மையதாகவே பேபல் நூலகம் தோற்றமளிக்கிறது. அடுத்து மொழியை மனிதர்களால் பகிரப்படும் குறியீடுகளாக கருதினார். ஒவ்வொரு மொழியும் தத்தம் விதமாக உலகத்தினை பார்வை கொண்டு அந்த மொழி பேசுபவர் கிரகித்துக் கொள்ளும் விதம் என்பதால் ஒரு மொழிக்கான சரிநிகர்கள் மற்ற எல்லா மொழிகளில் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் போர்ஹேவின் ஸ்பானிய மொழியே ஆங்கிலத்தில் சிந்தித்து ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

போர்ஹேவின் கதாபாத்திரங்கள் பல வேறுபட்ட வாழ்க்கைத் தளத்திலிருந்து வருபவர்கள். வாசகன் இந்தக் கதைகளில் இளவரசிகளை, மாட்டுக்காரர்களை, துப்பறியும் நிபுணர்களை, மந்திரவாதிகளை, அடியாள்களை, பைபிள் விற்பவர்களை, போலீஸ் இன்ஸ்பெக்டர்களை, பத்திரிகையாளர்களை, பெரும் பயணக்காரர்களை, பன்மொழி விற்பன்னர்களை, ராணுவ வீரர்களை, இறையியல்வாதிகளை, நூலகர்களை, எழுத்தாளர்களை, சாதாரண கடைகளில் வேலை பார்க்கும் எழுத்தர்களை பார்க்க முடியும். ஆனாலும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு தனியான மனோவியல் இயக்கங்கள் கிடையாது. ஒரு கதாபாத்திரத்தின் இரண்டு அல்லது மூன்று பிரதான செயல்பாடுகளை வைத்து அதன் குணநலன்களைக் கட்டுமானம் செய்கிறார். குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தைப் படித்துப்பார்த்து அதன் மீது பரிதாபப்படுவதற்காக போர்ஹே அவற்றை எழுதவில்லை. எனவே போர்ஹேவின் கதைகள் யாவும் மிகத் தூய விரவணைகள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த மாதிரிப் பாத்திரங்கள் முழுமையான  அறிவார்த்தத்திலிருந்து உருவாக்கப்படுபவை. ரத்தமும் சதையுமானவை அல்ல. எனினும் மூன்றே வரிகளில் கூட ஒரு பாத்திரத்தை வாசகனின் முன் நிறுத்துவதற்கு அவரால் முடியும்.  1935ஆம் ஆண்டு ஒரு கலைக்களஞ்சியத்தின் தலைப்பு என்று தோன்றுபடியான சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். A Universal History of Infamy என்பதுதான் அது. இந்தத் தொகுப்பில் ஜப்பானிலும், அரேபியாவிலும், சீனக்கடல்களிலும் நடந்த அவமதிப்பும் பழியும் நிறைந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவற்றில் பல போர்ஹேவால் மீண்டும் ஒரு முறை திருத்தி சொல்லப்பட்டவை. சில இலக்கிய மூடர்கள் இவற்றை இலக்கியத் திருட்டு என்று கூட நினைத்ததுண்டு--இவற்றின் மூலங்களை போர்ஹே ஒப்புதல் செய்திருந்தும் கூட. 1933ஆம் ஆண்டுக்கும் 1934க்கும் இடையில் Critica இதழில் சிறு சிறு வரைவுகளாக இவற்றை எழுதினார். இந்த வரைவுகளில் இம்மானுவல் ஸ்வீடன்போர்க், ரிச்சட் எ·ப் பர்ட்டன், ஹெர்பர்ட் ஆஸ்பரி, ஸர் பெர்சி ஸைக் ஆகியவர்களிடமிருந்து கருத்தாக்கங்களையும் கதாபாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு மறு கண்டுபிடிப்பு செய்தார் போர்ஹே. ஒரு வித புராணிகத் தன்மையான அதிர்வுகளுடன் நிஜ தகவல்களையும் கற்பனையானவற்றையும் இவற்றில் கலந்திருக்கிறார். இக்கதைகள் பலவற்றில் ஒரு விநோத ஸர்ரியல் ரீதியான நம்பகத்தன்மை இருக்கிறது. பிறகு பல வருடங்கள் கழித்து, இதைத்தான் போர்ஹேவுக்குப் பிறகு வந்த இளம் புனைகதையாளர்கள் மேஜிகல் ரியலிசம் என்று கூறவிருந்தார்கள். அந்தத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: 

They are the irresponsible game of a young man who dared not write stories and so amused himself by falsifying and distorting (without any  aesthetic justification whatever) the tales of others. 

இதுவன்றி, ஒரு புத்தகம் தனித்துவ ஒருமையாக இயங்குவதில்லை என்பதையும் ட்டி. எஸ். எலியட்டின் பாரம்பரியமும் தனித்துவத்திறனும் கட்டுரையின் கருத்தை ஒட்டி ஆனால் தனக்கே உரித்தான வகையில் வேறு ஒரு கட்டுரையில் சுட்டுகிறார். கணக்கிடப்பட முடியாத உறவுகளின் அச்சு என்ற நிலையில் புத்தகங்கள் செயல்பட்டு, தம் உறவினை மனிதர்களுடன் ஏற்படுத்துகின்றன.

பெர்னாட் ஷா பற்றியதொரு சாதாரண கட்டுரையில் இந்த அரிய கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்: 

A book is not an autonomous entity: it is a relation, an axis of innumerable relations. One literature differs from another, be it earlier or later, not because of the texts but because of the way they are read: if I could read any page from the present time--this one, for instance--as it will be read in the year 2000, I would know what the literature of the year 2000 would be like. 
["Note on (toward) Berard Shaw"]

ஒரு புதிய எழுத்தானது உடனடியாக நிஜ வாழ்விலிருந்து சடக்கென்று வியாபகங் கொள்வதில்லை. மாறாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் பல நூற்றாண்டு இலக்கியங்களின் வாயிலாக சுற்றி வளைத்துப் பயணித்த பின்னரே உருவாகிறது. குறைந்தபட்சம் போர்ஹேவைப் பொறுத்த வரையில் இதுதான் உண்மை. புதிய கதைகள் என்று சொல்லப்படுபவை எல்லாமே ஒரு வகையில் தப்பிக்க இயலாதபடிக்கு பழைய கதைகளின் மறு கண்டுபிடிப்புகள் அல்லது மாறுபாடுகளாகும். இதை ஒரு தீர்ப்பாகச் சொல்லி நியாயப்படுத்த முடியாதென்றாலும் கூட அவருடைய ·பிக்ஷன்ஸ் என்ற  தொகுப்பில் இடம்பெறும் கதைகள் எல்லாம் கதைகள் பற்றிய கதைகளாக அமைந்துள்ளன. ஒரு வகையில் இதை பின்நவீனத்துவ கருத்தாக்க மொழியில் விளக்குவதானால் "சீனப்பெட்டிகளில் உலகம்" என்று கூறலாம். கதைக்குள்நாடகங்கள் வருவதும் கதைக்குள் ஒருவன் ஏற்கனவே எழுத்தப்பட்ட நாவலை வரிக்கு வரி புதிதாக எழுத முயல்வதும், அடிக்குறிப்பில் முழுமையான கதை இடம் பெறுவதையும் காணலாம். இவற்றை கதை பற்றிய கதை என்றோ கதை மீறும் கதை என்றோ கூறலாம். The Garden of Forking Paths என்ற தலைப்பிலான கதையானது ஒரு கதை பற்றிய  புதிர்-- ஒரு உளவாளி-விவரணையாளனால்,  சொல்லப்பட்டு எழுதப்பட்ட கதை. இதில் நேர்கோட்டுத் தன்மையிலான ஐரோப்பிய வழியான ஹீராக்ளிடசின் காலத்தை மறுத்து கீழை நாடுகளின் சமவட்ட காலம் என்ற கருத்தாக்கம் சிலாகிக்கப்படுவதால் இந்தக் கதையே நான்காவது பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது--அடிப்படையில் இது ஒரு துப்பறியும் கதை போலத் தோன்றினாலும் கூட. 1941 ஆம் ஆண்டிலேயே  ஸ்ட்ரக்சுரலிச விவரணையியலினை (Structuralist Narratoloy) இந்தக் கதை முன்னோக்கி இருக்கிறது. விவரணையை போர்ஹே கிளைபிரிதல்களின் திட்டமாக அலசுகிறார். கதையின் ஒவ்வொரு புள்ளியிலும் கதை சொல்பவன் இரண்டு பிரிவுகளைச் சந்திக்கிறான். இந்த இரண்டும் இரண்டு சாத்தியங்களாக இருப்பதால் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் அவன் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி ஒன்றை அவன் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் இன்னொரு கிளைபிரிதல் வந்து நிற்கிறது. இப்படி முடிவே இல்லாத சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்டு போகிறது கதை. இறுதியில்  புனைகதைப் பிரதியின் உயிர்த் தோற்றவியல் புலப்படுத்தப்பட்டு விடுகிறது.  கதை பற்றிய கதை பிரத்யேகமாக போர்ஹேவுக்கோ பின்நவீனத்துவவாதிகளுக்கோ சொந்தமானதல்ல. இது செர்வான்டிஸ் டான் க்விக்ஸாட் எழுதியபோதே தொடங்கிவிட்ட அம்சம்தான். கதை எழுதுவது பற்றிய சட்டத்திட்டங்களையே கதைக்கான விஷயங்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் சில நவீன எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டது. மேலும் இந்த இலக்கியார்த்தமான முழுமைகளாகப்பட்டவைகள் (Literary Entities), என எழுதுபவன் (இந்த இடத்தில் யதார்த்த வகை எழுத்தாளன் என்று வைத்து கொள்ளலாம்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நடைமுறை நிகழ்வுகள் எந்த அளவுக்கு புறவயமானவையோ, நிஜமானவையோ அன்றி கற்பிக்கப்பட்டவையோ அதற்கு நிகரான அளவுக்கே புனைவுக் கதைகளை எழுதுபவனுக்கு நிஜமாகிறது, கற்பிக்கப்பட்டதாகிறது, அல்லது புறவயமாகிறது. ஆனால் தனது எழுதும் முறையைப் பற்றிச் சொல்லும் போது போர்ஹே Baroque என்ற வரையறையையே தேர்ந்தெடுக்கிறார். எல்லா மொழி நடைகளின் இறுதி வடிவமும் பரோக் என்ற நிலையைச் சென்றடையும் என்றும் வாதிடுகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் அதற்கு முற்பட்ட கட்டிடக் கலையிலும், இசையிலும், ஓவியத்திலும் நிகழ்ந்த அதிகபட்சங்களைக் குறிப்பதற்கு உண்டாக்கப்பட்ட வார்த்தையே பரோக் ஆகும். போர்ஹே பரோக் என்பது அறிவு ரீதியானது என்றும், பெர்னாட்ஷாவை மேற்கோள் காட்டி அறிவு ரீதியான பிரயத்தனங்கள் யாவும் அடிப்படையில் நகைச்சுவையுணர்வு மிக்கவை என்றும் எழுதியிருக்கிறார்.

நீதிக்கதை என்று சொல்லிவிடக் கூடிய அளவுக்கு எளிமையான ஒன்று போர்ஹேவும் நானும். (1956) இந்தக் கதையை 1980களில் சத்யன் மீட்சி பத்திரிகையில் மொழிபெயர்த்திருக்கிறார். "ஆசிரியனின் மரணம்" குறித்த எத்தனையோ விவாதக் கட்டுரைகளை விட போர்ஹேவின் இந்தக் கதை ஆசிரியனின் மரணத்தை சிறப்பாக விளக்குகிறது. பொய்யான, எழுதப்பட்ட "நானுக்கும்" நிஜமான (?) போர்ஹேவுக்கும் இடையிலான முரண்களையும் எதிரிடைகளையும் மிகச் சிக்கனமாக ஒன்றரைப் பக்கங்களில் சாதித்து விடுகிறது இந்த விவரணை. ஆனால் "எழுதப்பட்ட" ஆளுமையிலிருந்து தொடர்ந்து "சாட்ஷாத் நான்" பின்வாங்கிக் கொண்டிருப்பதாக சித்தரிப்பு வருகிறது.

நிஜமில்லாத, எழுதப்பட்ட நானைப் பற்றிய ஆட்சேபணையும் எதிர்ப்பும் எழுத்தின் வாயிலாக வருகிறது எனும்போது இந்த எதிர்ப்பு யாரிடமிருந்து புறப்படுகிறது? கதையில் பேசுபவர் யார்? "எனக்குத் தெரியவில்லை எங்கள் இருவரில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறார் என்று?" என்று எழுதுகிறார் போர்ஹே. இங்கே ஆசிரியன் அவனுடைய எழுத்தினாலே மறைக்கப்பட்டு காணாமல் போகிறான். தான் ஒரு நாள் உடல் ரீதியாக இறக்கப் போவதைப் போலவே இந்த கதை எழுத்துக்குள் தன்னைப் புகுத்தி விட்டு இறந்து போகிறான். ஆசிரியனின் மரணம் குறித்து விசாரித்து எழுதியிருக்கிறார் மிஷல் ·பூக்கோ ஆசிரியன் என்பது என்ன? (1969) என்ற கட்டுரையில். மிஷல் ·பூக்கோ அந்தக் கட்டுரையில் எழுதுபவர் என்பது அவன் (அ) அவள் (அ) எதுவாக இருந்த போதிலும் அது இன்னும் சாகவில்லை என்றுதான் சொல்கிறார். அல்லது இறந்து போயிருந்தால் அது எப்போதுமே இறந்துதான் போயிருக்கிறது என்கிறார். ஆசிரியனின் மரணம் பற்றிய சமகால கருத்தாக்கங்கள் போர்ஹேவின் கதையில் உள்தொக்கியும் ரோலான் பார்த் (Roland Barthes: The Death of the Author)தின் கட்டுரையில் வெளிப்படையாகவும் இருந்த போதிலும் இவர்கள் இருவருமே ஆசிரியனை இடம் மாற்றின வடிவமாகவே வைத்திருக்கிறார்கள். அனுபவத்தின் ஒருமையானது (முழுமை என்றும் கூட சொல்லலாம்) ஆசிரியனால் உறுதியளிக்கபட்டது மாறிப் போய் ஆசிரியனின் படைப்புக்களால் உறுதியளிக்கப்படுகிறது. ஆசிரியன் என்ற ஆளுமையிடமிருந்து இடம் பெயர்ந்து அவனது எழுத்துக்களுக்குச் சென்று விட்டது இந்த உறுதியளிப்பு. ஆனால் இந்தக் கருத்தாக்கத்திலும் பிரச்சனைகளுக்குக் குறைவில்லை.

எழுத்துக்கள் என்பது ஆசிரியனின் மாறு வேஷங்கள்தானே? "கடந்து செல்லும் அநாமதேயத்தன்மை" என்பதன் மூலம் எழுத்துக்களில் நிறைந்திருப்பது ஆசிரியன் அல்லாமல் வேறு யார்? ஆசிரியனின் இருப்பு பற்றிய ஒரு மேலோட்டமான கருத்தாக்கத்திலிருந்தும் ஆசிரியனின் மரணம் பற்றியதொரு மேலோட்டமான சிந்தனையிலிருந்தும் மறு சிந்தனை செய்வதற்கு நவீன பிரஞ்சு விமர்சகரான ·பூக்கோ (Michel Focault) வழி சொல்கிறார். ஆசிரியனை ஒரு  முழுமை என்று கூறுவதை  விட்டு விடுங்கள் என்பவர் ஆசிரியனை பிரதிகளில் இடம் பெறும் செயல் என்று சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார். ஆனால் இந்தச் செயல்பாடானது ஒரு பரந்துபட்ட கலாச்சாரத்திற்குத் தகுந்த படியும், ஒரு சமூக ஒழுங்குக்கும், மற்றதற்கும் மாறுபாடு கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.  The Other (The Book of Sand) என்ற சற்றே நீண்ட கதையில் கனவிலிருந்து வந்த ஒரு பாத்திரம், நிஜமான பாத்திரத்தை கனவு காணப்பட்ட பாத்திரம் என்று கூறுவது மட்டுமின்றி நிஜவாழ்க்கைக்கு வந்துவிட யத்தனமும் செய்கிறது. ஒரு வகையில்  பார்ப்போமானால் இது Borges and Myself என்ற கதையின் மறுபக்கமாகவும் தோன்றக் கூடும். இறப்பு பற்றிய சிந்தனை குறைந்து போய் ஒரு வித அமானுஷ்யத்தன்மை இந்தக் கதைக்கு வந்து விடுகிறது. மேலும் போர்ஹேவின் கருத்துப்படி நாம் வாழும் இந்த உலகமே ஒரு துணைக் கடவுளினால் காணப்பட்ட கனவாகும். இதே பின்னணியில்தான் வட்டச் சிதிலங்கள் கதையையும் அலசிப்பார்க்க வேண்டும். வட்டச் சிதிலங்களில் வரும் மனிதன் கனவு காணுதலின் வழியாக வேறு ஒருவனை இந்த உலகிற்குள் உலவச் செய்கிறான். ஆனால் இறுதியில்தானே வேறு ஒருவரால் காணப்பட்ட கனவு என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்தக் கதை முதலில் 1970களில் கசடதபற இதழில் பிரமிளின் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. இன்றைக்கான புதிய மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்தே ஒரு புதிய மொழி பெயர்ப்பு இந்த நூலில் இடம் பெறுகிறது. 

போர்ஹே ரத்தினச் சுருக்கத்திற்கு பேர் போனவர். லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர் யூலியோ கோர்த்தஸார் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  "எல்லா அலங்காரமான வாக்கியங்களையும், திரும்பக் கூறல்களையும், தொடர் புள்ளிகளையும், பயனற்ற ஆச்சர்யக் குறிகளையும், நீக்குவதற்குக் (எனக்கு) கற்றுத் தந்தார் போர்ஹே. இந்தப் பழக்கம் இன்றும் மோசமான இலக்கியத்தில் காணப்படுகிறது, அதில் ஒரு வரியில் சொல்லப்பட  வேண்டிய விஷயம் ஒரு பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் "
(Julio Cortazar en la Universided Central de Veneuela", Escritura No.1, Jan-June 1976, p. 162.)

இருப்பினும் போர்ஹே பேரவை (The Congress) போன்ற நீண்ட கதைகளையும் எழுதியிருக்கிறார். இதற்கடுத்து இந்தத் தொகுதியில் இடம் பெரும் சற்று பெரிய கதை என்று அலெ·ப் மற்றும் நித்தியமானவர்கள் ஆகிய கதைகளைச் சொல்லலாம். டாக்டர் பிராடியின் அறிக்கையில் இடம் பெறும் கதைகளிலேயே மிகச் சிறந்தது என போர்ஹேவால் கருதப்படும் கதை மாற்கு எழுதிய வேதாகமம். ஒரு பேட்டியில் T.S. எலியட்டின் பாதிப்பு அவருக்கு இருந்ததா என்று கேட்கப்பட்ட போது, கிடையாது என்றவர் எலியட்டைப் பார்க்கிலும் யேட்ஸ் (W. B. Yeats) சிறந்த கவிஞர் என்று கூறியிருக்கிறார். சிறந்த விமர்சகர்களாக அவர் ஏற்றுக் கொள்வது எமர்சனையும் கோல்ரிட்ஜையும் தான். வால்ட் விட்மன் மீது அபாரமான பிரேமை கொண்டிருந்தார். கார்ல் சாண்ட்பர்க்கின் கவிதைகளும் அவருக்கு விருப்பமானவை. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸிஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தின் சில பகுதிகளை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் ஜாய்சின் எழுத்து நடையை போர்ஹே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அடிப்படையில்தான் நவீன பிரெஞ்சு சிம்பாலிஸ்ட் கவிஞரான மல்லார்மேவின் கவிதைகளையும் விமர்சிக்கிறார் போர்ஹே. ஜாய்சும் மல்லார்மேவும் அதிகபட்ச எழுதுதலுக்கு உள்ளானவர்கள் என்பது போர்ஹேவின் கருத்து. எழுதும் போது எழுத்தை அது வரும் திசையில் வழிப்படுத்த வேண்டுமே தவிர இதோ நானிருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக எழுதக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். 

"When I write, I write because a thing has to be done. I don't think a writer should meddle too much with his own work. He should let the work write itself. . .  (Paris Review Interviews: 4th Series. P. 126)

போர்ஹே தேர்ந்தெடுக்கும் நாயகர்கள் கொலைகாரர்களாகவும் அடியாட்களாகவும் இருப்பது பற்றி அவர் பதில் அளிக்கும் போது அப்படிப்பட்டவர்களிடமும் ஒரு வித மலினப்பட்ட காவியத்தன்மை இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டில் காவியப் பரிமாணங்களுடன் புனைகதை எழுதுபவர்கள் குறைந்து போய் விட்டனர். Seven Pillars of Wisdom எழுதிய T. E. Lawrence, மற்றும் Rudyard  
Kipling போன்றவர்கள் மாத்திரமே விதிவிலக்குகளாக இருக்கின்றனர். இவர்களை விட்டால் ஹாலிவுட் ஸ்டுயோக்களிலிருந்து வெளிவந்த 'வெஸ்ட்டர்ன்' வகை திரைப்படங்களில்தான் காவியத்தன்மையைப் பார்க்க முடிகிறது என்றும் தன் கருத்தினை முன் வைத்தார். இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கதைகளில் வரும் ரோசென்டோ, மான்க் ஈஸ்ட்மேன் மற்றும் கிறிஸ்டியன் சகோதரர்களை மேற்குறிப்பிட்ட வகை நாயகர்களாக நாம் அறிய வாய்ப்பிருக்கிறது. தெரு ஓரத்து மனிதன் இத்தகைய நாயகனைக் கொண்ட பிரசித்தமான கதை.  "பிரதேச நிறம்" (Local Colour) என்ற ஒன்றை போர்ஹேவின் கதைகளில் பார்க்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இறந்தவன் என்ற கதை பிரேஸீலில் இருந்து உருகுவேவுக்குச் சென்று அங்கிருக்கிற அடியாள் தலைவன் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொள்ள நினைக்கிற ஒட்டலோரா என்பவனைப் பற்றியது. மேற்குறிப்பிட்ட கதைகளிலும் இந்தக் கதையிலும் யதார்த்தவியலின் வழியாகப் பிரதேச நிறத்தினை காண விரும்புபவர்கள் தவறு செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். தொடக்கத்தில் எவரிஸ்ட்டோ காரிகோ என்கிற கவிஞனைத் தன் முன்னோடியாகக் கொள்ள போர்ஹே நினைத்ததுண்டு. எவரிஸ்ட்டோ காரிகோ, "பிரதேச நிறம்" உள்ள கவிதைகளை எழுதிய, "ஆபத்தான தெருக்கள் மற்றும் தெளிவான சூரியாஸ்தமனங்களின்" கவிஞர். அவர் தன்னைச் சுற்றியிருந்த பளபளப்பான, ஸ்தூலமான வாழ்க்கையைத் தன்  கவிதையில் பதிவு செய்தவர். ஆனால் எவரிஸ்ட்டோவைப் போல தான் ஆபத்தான சூழ்நிலைகளில் வாழப்பிறந்த ஒரு தெருக் கவிஞன் அல்லவென்றும் மாறாக பயந்த சுபாவமுள்ள, கண்பார்வைக் குறைவான, பயம் நிறைந்த, புத்தகங்களை நேசிக்கிற பூர்ஷ்வா இளைஞன் என்பதையும் உணர்ந்து கொண்டார். என்றாலும் அத்தகைய பிரதேசத்தில் (பாலெர்மோ பிரதேசம், கத்தியை லாவகமாகப் பயன்படுத்திய அடியாட்களுக்கும், கேபரேக்களுக்கும், வேசிகளின் விடுதிகளுக்கும் பெயர் பெற்றது) போர்ஹேவின் இளமைக்காலம் அமைந்தது. ஆனால் இந்த வன்முறை நிறைந்த  உலகிலிருந்து பாதுகாப்பாக அவர் "தன் தந்தையின் நூலகத்தில் எண்ணிக்கையற்ற ஆங்கிலப் புத்தகங்களுடன்" வாழ்ந்தார். எனினும் தன் பால்யகாலத்து நாயகனான எவரிஸ்ட்டோவை அவர் மறக்கவில்லை. எவரிஸ்ட்டொ 1912 ஆம் ஆண்டு காசநோயில் இறந்தார். எவரிஸ்ட்டோ காரிகோ என்ற நூலை போர்ஹே 1930 ஆம் ஆண்டு எழுதினார். எவரிஸ்ட்டோ பற்றிய நூல் என்பதை விடவும் பழைய போனஸ் அயர்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகளாகவே அந்த நூல் அமைந்து போனது. இது போர்ஹேவின் வெற்றிகரமான நூல் அல்ல. இருந்தும் அவர் 1955இல் இதை திருத்தம் செய்து எழுதினார். 

"பிரதேச நிறம்" குறித்த அவரது விரிவான தர்க்கங்களை அவரது மிக முக்கியமான கட்டுரையான 'The Argentine Writer and Tradition' இல் பார்க்கலாம். ஒரு நாட்டுக்கே (அ) பிரதேசத்திற்கே உரித்தானது என்பது "பிரதேச நிறம்" என்பதைத் தவிர்த்து விட்டே இயங்க முடியும் என்றார் போர்ஹே. மொகம்மது எழுதிய குர் ஆன் நூலில் எங்குமே ஒட்டகம் என்ற சொல் காணப்படுவதில்லை. மொகம்மது ஒரு அரேபியர், ஒட்டகங்கள் என்பவை அரேபியாவின் யதார்த்தமாக இருக்கும் போது, அவருக்கு ஒட்டகங்கள் தனித்துவமான முறையில் அரேபியாவுக்குச் சொந்தமானவை என்று எழுத வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இதற்கு மாறாக அரேபிய தேசீயவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்தான் ஒவ்வொரு பக்கத்திலும் ஒட்டகங்களை இட்டு நிறப்புவார்கள் என்கிறார் போர்ஹே.

இதிலிருந்து போர்ஹே எடுக்கும் முடிவு பின்வருமாறு: அர்ஜன்டீனாவின் பிரதேச நிறம் என்பது சமீப ஆண்டுகளில் ஐரோப்பியாவிலிருந்து வந்ததுதான். ஆனால் தேசீயவாதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இதை அயல்நாட்டு சமாச்சாரம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அர்ஜன்டீனிய எழுத்தாளர்கள் ஸ்பானிய இலக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வறட்டுத்தனமாக அடம் பிடிப்பவர்களுக்கும் இந்தக் கட்டுரையில் விளக்கம் தந்திருக்கிறார். நிஜத்தில், 'ஒரிஜினல்' ஸ்பானிய இலக்கியத்திலிருந்து விலகி வந்து எழுதுவதே அர்ஜன்டீனியாவின் சிறந்த பாரம்பரியமாக இருக்கும். ஸ்பெயினிலிருந்து விருப்பத் தேர்வுடன் பின்வாங்குவதே அதற்கு சரியான செயலாக்கமாக இருக்க முடியும் என்றார். 

போர்ஹேவின் முதல் கவிதைத் தொகுப்பான Fervor de Buenos Aires, 64 பக்கங்களை கொண்ட புத்தகமாக வெளிவர அவர் தந்தை பண உதவி செய்தார். அவசரமாகவும் அச்சுப்பிழைகளுடனும் (வெறும் 300பிரதிகள்) வெளியிடப்பட்டது. விலைக்கு விற்கப்படவில்லை.

இலவசமாகத் தரப்பட்ட இந்த தொகுதி வேறு ஒரு விநோதமான முறையிலும் விநியோகிக்கப்பட்டது. Nosotros என்ற ஸ்தாபிக்கப்பட்ட இலக்கிய ஏட்டின் ஆசிரியர் ஆல்பிரடோ பியான்ச்சியிடம் சுமார் 100 பிரதிகளை போர்ஹே எடுத்துச் சென்றார். அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் குளோக் அறையில் பிற ஆசிரியர்கள் தங்கள் ஓவர்கோட்டுகளை கழற்றி வைப்பது பழக்கம். "இந்தப் புத்தகங்களை உனக்காக நான் விற்க வேண்டுமென்று நினைக்கிறாயா?" என்று பியான்ச்சி வினவியபோது போர்ஹே கூறினார். "இல்லை. அவற்றை நான் எழுதியவன் என்றாலும் கூட நான் முழுமுற்றான பைத்தியம் இல்லை. இந்தப் புத்தகங்களை அங்கே தொங்கும் கோட் பாக்கெட்டுகளில் ரகசியமாக வைத்து விட முடியுமா என்று உங்களைக் கேட்கலாம் 
என்று நினைத்தேன்" என்றார் போர்ஹே. பியான்ச்சி பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டு ஒத்துழைத்தார். அவசரம் அவசரமாக புத்தகத்தை வெளியிட்டு விட்டு தனது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சையின் பொருட்டு ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டார்

போர்ஹே. 1924 ஆம் ஆண்டு போனஸ் அயர்சுக்கு தன் குடும்பத்துடன் திரும்பியபோது அவர் ஒரு கவிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டார் என்பதையும் அவரது கொரில்லாத்தனமான புத்தக விநியோக யுக்தி பலனளித்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார்.  இந்த காலக்கட்டத்தில்தான் அவர் இரண்டு பெண்களுடன் நல்ல சிநேகிதத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள்: Victoria Ocampo மற்றும் Elsa Astete Millan. விக்டோரியா ஓகேம்ப்போ மிகவும் பாதிப்பு செலுத்திக் கொண்டிருந்த இலக்கிய ஏடான Sur இன் ஆசிரியை மற்றும் மொழிபெயர்ப்பாளர். 17 வயது அழகியான எல்ஸா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. ஆயினும் கூட 1967 ஆம் வருடம், ஏறத்தாழ நாற்பது வருடங்கள் கழித்து போர்ஹேவும் எல்சாவும் சந்தித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் விரைவிலேயே தோல்வியில் முடிந்தது வேறு விஷயம். 

1927 ஆம் ஆண்டு வரை அவர் என்னவெல்லாம் எழுதினாரோ அவை எல்லாவற்றையும் போர்ஹே புறக்கணித்ததற்குக் காரணம் அவை பிற இலக்கிய ஆசிரியர்களிடமிருந்து அவர் வருவித்துக் கொண்ட நடையைக் கொண்டிருந்ததாக நினைத்ததுதான். பின்னாளில் இது தொடர்பாக உண்டான தர்மசங்கடமான உணர்வைத் தவிர்ப்பதற்காக அவர் பல புத்தகப் பிரதிகளை வாங்கி எரித்தழித்தார். 

நாவல்கள் எழுதுவது பற்றி அவர் மிகக் கடுமையான, கறாரான கருத்துக்களைக் கொண்டிருந்தார். அமெரிக்க நாவலாசிரியரான பால் தோரொ அவரைச் சந்தித்த சமயத்தில் ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி (ஹார்டி ஒரு சிறந்த கவிஞரும் கூட) நாவல்களை எழுதியிருக்கவே கூடாதென்றும் கவிதைகளுடன் நிறுதிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் போர்ஹே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

வாஸ்தவமாக ஹார்டி தன் கடைசி இலக்கிய காலத்தில் கவிதைகளை மட்டுமே எழுதினார். (பார்க்க The Brass Plaque Said 'Borges', Paul Theroux, 'The Old Patagonian Express' 1979) ருட்யார்ட் கிப்ளிங் என்ற ஆங்கில நாவலாசிரியரின் கதைகளை விட கவிதைகளே அதிகம் தனக்கு விருப்பமானவை என்றும் போர்ஹே இந்த சந்திப்பில் கூறினார். நீண்ட நாவல்கள் எழுதுவது பற்றி போர்ஹேவுக்கு நல்ல அபிப்ராயமே இருந்ததில்லை. இதை The Garden of Forking Paths, [1942, later part of Ficciones, 1944]. தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறியலாம்: 

"Writing long books is a laborious and impoverishing act of foolishness: expanding in five hundred pages an idea that could be perfectly explained in a few minutes. A better procedure is to pretend that those books already exist and to offer a summary, a commentary."

பல தொகுதி நாவல்களை எழுதிய ஜெர்மன் நாவலாசிரிரான ராபர்ட் மியூசில், [The Man Without Qualities, 3 volumes], தாமஸ் மன், Remembrance of Things Past என்ற 6 தொகுதி நாவல்களை எழுதிய பிரஞ்சு நாவலாசிரியர் மார்சல் புரூஸ்த் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்கள் என்னவாக இருந்திருக்கும் என்பது பற்றி அறியமுடியவில்லை. மேலும் போர்ஹேவின் இன்னொரு மேற்கோளை இங்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  "The central problem of novel-writing is causality."    ["El arte narrativo y la magia" [Narrative Art and Magic, 1932] in Discusion [Discussion, 1932]] 

அவருடைய கண்பார்வை சுமாராகப் படிக்க முடியும்படி இருந்த காலங்களிலேயே அவர் ஒரு நாவலை கடைசி பக்கம் வரை படிக்க வேண்டிய கடமையின் கட்டாயத்தில் இருந்தார் என்றும், நாவல் எழுதும் சபலம் சிறிதுகூட இருந்ததில்லை என்றும் எழுதியிருக்கிறார். ஆனாலும் நாவல்களை விடப் பன்மடங்கு பெரிதான, பல தொகுதிகளால் ஆன கலைக் களஞ்சியங்களைப் படிப்பதற்கு அவர் விரும்பினார். குறிப்பாக என்சைக்குளோபீடியா பிரிட்டானிகாவின் 11வது பதிப்பு அவருக்கு மிக அத்யந்தமான ஒரு நூலாக இருந்திருக்கிறது. தாமஸ் ப்ரெளன் எழுதிய Anatomy of Melancholy என்ற பெரிய நூலைப் படிப்பதற்கு அவருக்கு சலிப்பு ஏற்பட்டதில்லை. ஜெர்மன் என்சைக்குளோபீடியாவான ப்ராக்ஹாஸ் (சுருக்கமான) பதிப்பும் அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஒரு பிரத்யேக இடம் பிடித்திருந்தது. ஆங்கில விமர்சகரும் ஆங்கில மொழியின் முதல் அகராதியைத் தொகுத்தவருமான டாக்டர் ஜான்சனின் ஆங்கில அகராதியை மீண்டும் மீண்டும் படிக்க விரும்பினார். 

1950களின் தொடக்கத்தில் அவருடைய நண்பர்களான Nestor Ibarra வும் Roger Callois யும் போர்ஹேவின் கதைகளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவில் வெளிவரும் வரை போர்ஹேவைப் பற்றி, அர்ஜன்டீனாவிலும் சரி உலக இலக்கிய வட்டங்களிலும் சரி, யாருக்கும் அதிகம் தெரியாது. இந்த இருவரின் உழைப்பின் காரணமாகத்தான் 1961 ஆம் ஆண்டு Fomentor Prize (International Publisher Prize) அவருக்குக் கிடைத்தது. ஆறு ஐரோப்பிய வெளியீட்டு நிறுவனங்கள் இணைந்து வழங்கிய இந்த விருதினை நவீன  ஐரிஷ் நாவலாசிரியரும் நோபல் விருது பெற்றவருமான சாமுவெல் பெக்கட்டுடன் போர்ஹே பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பரிசு அறிவிப்புக்குப் பிறகு போர்ஹேவின் நூல்கள் பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த நிலவரத்துடன் நாம் இதற்கு முற்பட்ட போர்ஹே நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பினையும் ஒப்பிட வேண்டும். 1932 இல் வெளிவந்த History of Eternity வெறும் 37 பிரதிகள்தான் விற்றது. 1966 ஆம் ஆண்டு Ingram Merril Foundation தனது வருடாந்திர விருதினை போர்ஹேவுக்கு வழங்கியது. தனது வாழ்நாளில் கண்பார்வை இழப்புடன் அவர் போராட வேண்டி இருந்தது. கண்பார்வை இழப்பு அவருடைய குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த ஒரு நோய் என்றாலும் கூட ஒரு கோடையின் அந்தி மங்கும் நேரம் போல அவரது இளம்பிராயத்திலிருந்தே அவசரமில்லாமல் அது வந்து கொண்டிருந்தது. இதைப் பற்றி பரிதாபப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தன் வாழ்க்கை பற்றிய கட்டுரையில் எழுதுகிறார். 1927இல் தொடங்கி போர்ஹே மொத்தம் எட்டு கண் அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொண்டார். இதற்கு மிஞ்சியும் 1950 இல் அவருக்கு முற்றிலும் பார்வை இல்லாமல் போயிற்று. இன்னொரு குரூரமானதும் விநோதமானதுமான தற்செயல் தகவல் என்னவென்றால் போர்ஹேவுக்கு முன்னர் அர்ஜன்டீனியா தேசீய நூலகத்தின் இயக்குநர்களாக இருந்த Jose Marmol மற்றும் Paul Groussac ஆகிய இருவருமே கண் பார்வை இழந்து போனவர்கள். பெரோன் ஆட்சியில் தன் முனிசிபல் நூலகர் பதவியை ராஜினாமா

செய்த போர்ஹே ஆங்கில இலக்கியம் போதித்து தன்  வாழ்க்கையை நடத்தி வந்தார். 1955 ஆம் ஆண்டு பெரோனின் வீழ்ச்சிக்குப் பிறகு வந்த அரசாங்கத்தில் அவர் அர்ஜன்டீனியாவின் தேசீய நூலக இயக்குநராகப் பதவி அமர்த்தப்பட்டார். போர்ஹேவின் நண்பிகளான Esther Zembroain de Torres மற்றும் Victoria Ocampo ஆகிய இருவருமே இத்தகையதொரு சாத்தியப்பாட்டினைக் கற்பனை செய்திருந்தார்கள்.

VictoriaOcampo வின் இலக்கிய ஏடான Sur சார்பாக பல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் போர்ஹேவை அர்ஜன்டீனியாவின் தேசீய நூலகத்தின் இயக்குநராக ஆக்க வேண்டும் என்று மனு சமர்ப்பித்தனர். இந்தத்  திட்டம் நடக்கவே முடியாதது என்று போர்ஹே நினைத்தாலும் அது நிறைவேறி, இன்னொரு முறை பெரோன் 1975இல் ஆட்சிக்கு வரும்வரை பதவியில் இருந்தார். Poem of the Gifts (1950) என்ற கவிதையில் 9,00,000 புத்தகங்களையும் தந்து பார்வை இழப்பினையும் தந்த கடவுளின் அற்புத எதிர்மறைத் தன்மையைப் பற்றி எழுதினார். 

1955 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆண்டு வரையிலான போர்ஹேவின் இலக்கிய எழுத்துக்கள் யாவும் கவிதைகளாகவே இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இந்த காலகட்டத்தில், கவிதை எழுதும் பொருட்டு சுதந்திரக் கவிதையைக் கைவிட்டு, பாவகை அமைப்புகள் கொண்ட பாரம்பரியக் கவிதை வடிவங்களை, அதிலும் குறிப்பாக 14வரிக் கவிதை வடிவமான சானெட்டைத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தங்கள் செய்வதற்கான எழுதப்பட்ட காகிதங்களை அவர் வைத்துக் கொள்ள முடியாதென்பதால் தன் மனதிலேயே ஞாபகம் கொண்டு எழுதுவது எளிதாக இருந்தது. உரைநடையை  ஞாபகத்தில் வைத்துக் கொள்வதை விட பேரிலக்கிய வடிவத்தில் அமைந்த கவிதைகளை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமாக இருந்தது. சானெட்டுகள் தவிர 11அசைகளைக் கொண்ட நான்கு வரிச் செய்யுள்- -கவிதைகளையும் இந்த காலகட்டத்தில் அவர் எழுதினார். அவருடைய தாத்தாவின் மரணம் பற்றி, முதலாம் பேரரசர் சார்ல்ஸ் கில்லட்டீனில் தலை வெட்டப்பட்டது பற்றி, திராட்சை மது பற்றி, குறுவாள்கள் பற்றி, அமெரிக்க நாவலாசிரியர் எட்கர் ஆலன் போ பற்றி.

. . இப்படியாக விஸ்தாரமானதும் வேறுபட்டதுமான பல தலைப்புகளில் கவிதைகள் எழுதினார்.  7 Nights என்ற போர்ஹேவின் கட்டுரைத் தொகுதியில் உள்ள 7 கட்டுரைகளில் ஒன்றில் ["On Blindness"] தனது பார்வையிழப்பினைப் பற்றி உரத்த சிந்தனை செய்திருக்கிறார். Other Inquisitions (1952) என்ற கட்டுரைத் தொகுதிக்கு அடுத்து மிக முக்கியமானது இந்தக் தொகுதி. 

1970க்குப் பிறகு வந்த இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் [Doctor Brodie's Report, Book of Sand] போர்ஹே நேரடிக் கதைகளைக் (Straightforward Narratives) கொண்டவை என்று அதன் முன்னுரைகளில் எழுதினார். ஆயினும் மணல் புத்தகம் போன்ற மேஜிகல் ரியலிசம் மிகுந்த கதைகள் அதில் இருக்கின்றன. இதுவல்லாது உடலைச் சில்லிட வைக்கும் மாற்கு எழுதிய வேதாகமம் கதையும் இந்தக் காலகட்டத்தியதுதான். நேரடிக் கதைகளில் இத்தகைய விநோதங்களை போர்ஹே தவிர வேறு எந்த விநோதவாதியாலும் சாதிப்பது கடினம். மாற்கு எழுதிய வேதாகமம்  கதையானது போர்ஹேவின் நண்பருக்கு வந்த கனவாகும். Hugo Rodriguez Moroni என்பது அந்த நண்பரின் பெயர். இந்தக் கனவைக் கதையாக எழுதியது பற்றிக் கூறும் போது போர்ஹே சொல்கிறார். 

"But after all, writing is nothing more then a guided dream" 
[Introduction to Doctor Brodie's Report, p.13]

கடவுள் கொள்கை என்ற ஒன்று போர்ஹேவிடம் இருக்கிறதா, கடவுள் கொள்கையை அவர் மறுப்பவரா என்று ஒரு பேட்டியாளர் கேட்டபோது, போர்ஹே தனிநபர் கடவுள் (In the past, I tried to believe in a personal God, but I do not think I try anymore) என்ற கொள்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார். சொல்லப் போனால் கடவுள் என்பவர் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார் என்பது போர்ஹேவின் வாதம். இதற்குப் பக்கபலமான பெர்னாட் ஷாவின் மேற்கோள் ஒன்றைத் தருகிறார்: "God is in the Making". ஆனாலும் ஆன்மரீதியான உள்ளுறை  அனுபவங்களுக்கு அவர் கதைகளில் குறைவே இல்லை. எடுத்துக் காட்டாக ரகசிய அற்புதம் என்ற கதை. போர்ஹேவைப் பொருத்தரை பிரபஞ்சத்தைத் தரிசிப்பது என்பது ஆன்மரீதியான அனுபவம். ஒரே ஒரு சொல்லில் கூட பிரபஞ்சத்தைத் தரிசிக்க முடியும். அவர் சொல்கிற மாதிரி ஷேக்ஸ்பியரின் ஒரு வரியை மேற்காட்டுபவர் கூட ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறார். மேலும் இந்த உலகம் அல்லது பிரபஞ்சமானது ஒரு குறையுள்ள துணைக்கடவுளால் படைக்கப்பட்டது என்ற கருத்தை முன் வைக்கிறார் போர்ஹே. இதை மேலும் விரிவாக்கும் போது தீவினைகள், நோய்கள், உடல்  வலிகள் போன்ற முழுமையின்மைகளுக்கு விளக்கம் தர முடியுமானால் இவ்வாறுதான் முடியும். ஒரு முழுமுற்றான கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டிருக்குமானால் இந்தப் பிரபஞ்சம் இன்னும் மேன்மையாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும்.  போர்ஹேவின் படைப்புக்கள்

குறித்த சிறந்த ஞானமுள்ள அறிஞரான Jamie Alazraki கூறுவது போல் இந்தக் கருத்தினை போர்ஹே "A Vindication of the Fales Basilides,"  என்ற கட்டுரையில் விரிவுபடுத்தி எழுதியிருக்கிறார். Gnostic களின் கொள்கைப்படி கடவுளுக்கும் மனித யதார்த்தத்திற்கும் இடையில் வானத்தின் 365 தளங்கள் இருக்கின்றன. இந்த 365இல் ஒவ்வொரு வானமும் ஏழு துணைக் கடவுளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றில்மிகக் கடைசியில் இருந்த குறைபாடுள்ள தேவர்களால்தான் நம் கண்ணுக்குப் புலனாகும் இந்த வானம் உருவாக்கப்பட்டது. அதனுடன் நாம் நடக்கும் இந்த நிலையற்ற பூமியும். இந்த பூமியை அவர்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டார்கள். (Stabb, Martin S. Borges Revisited. Boston: Twayne, 1991) பேஸிலைடிஸின் இந்தக் கருத்தாக்கத்திற்கும் போர்ஹேவின் பேபல் நூலகம் சிறுகதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை வாசகன் கவனிக்கலாம். மேலும் (பிரபஞ்சத்தின்) படைப்பு என்பது யதேச்சையான உண்மை என்பதையும் நாஸ்டிக்குகளின் இரண்டாவது கருத்தாக்கத்திலிருந்து போர்ஹே ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இரண்டாவது கருத்தாக்கம் Valentinus என்பவருடையது.

இங்கு வானசாஸ்திரத்தின் அடிப்படைக் கருத்தாக்கம் ஒன்றினையும் இதில் பார்ப்பது சாத்தியம். (அதாவது Big Bang Theory) போர்ஹேவின் ஒற்றைக் கடவுள் கொள்கையின் நிராகரிப்பு என்பது பல-கடவுள் கொள்கைக்கு இட்டுச் செல்லும் பன்மைகளின் வழிபாடாகிறது. பிரபஞ்சமாகட்டும் அல்லது எழுதப்பட்ட பிரதியாகட்டும் பன்மைகளின் பெருக்கமே பின்நவீனத்துவத்தின் ஆதாரமான கொள்கையாகும். மேலும் யூத-கிறித்தவ மரபுக் கடவுள் கொள்கையையும் போர்ஹே மறுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். 

கடவுள் இல்லாது போன பிரபஞ்சத்தில் உண்மை, தனிநபர் ஒழுக்கம் பற்றிய சட்டதிட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு இடமிருக்குமா? இதற்கும் பதில் வைத்திருக்கிறார் போர்ஹே. ஒரு முரடன் (அ) அடியாளுக்கு தான் செய்யக் கூடாத சில விஷயங்கள் எவை என்பது தெரிந்திருப்பது போலவே ஒரு எறும்புக்கும் ஒரு புலிக்கும் அவை செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன என்பதும் தெரிந்திருக்கும். தார்மீக சட்டங்கள், கடவுளர்கள் இன்றியும் பிரபஞ்சத்தில்* இயங்கத்தான் செய்யும் என்பது போர்ஹேவின் கருத்து.

(பார்க்க: Amelia Barili, Conversations with Jorge Luis Borges, 1998). 

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கான முன்னோடிகளைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்றார் போர்ஹே. அவரைப் பாதித்த ஒரே ஒரு தத்துவவாதியைச் சொல்லச் சொன்னால் ஷோப்பன்ஹீரைத்தான் கூறுவார் போர்ஹே. இதற்கு அடுத்து அவரைப் பாதித்த தத்துவ ஆசிரியர் ஸ்பினோசா. ஆங்கிலத் தத்துவவாதியான எ·ப். ஹெச். பிராட்லியை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுவார். மத்தியகால இத்தாலியக் கவிஞர் தாந்தே போர்ஹே மீது ஆழ்ந்த பாதிப்பு செலுத்தினார். ஜெர்மானிய தத்துவ ஆசிரியர்களை ஜெர்மன் மொழியில் படிக்கத் தொடங்கி தொடர முடியாமல் போனதால் ஜெர்மன் கவிதையில் அவருக்கு ஈடுபாடு உண்டாயிற்று. கதே தவிர ஹென்ரிக் ஹெய்ன் என்ற கவிஞரையும் விரும்பிப் படித்தார் போர்ஹே. ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்த வரை ருட்யார்ட் கிப்ளிங்குக்கு அடுத்து தாமஸ் டீக்வென்சியையும் ஸ்டீவென்சனையும்  பிடிக்கும். அமெரிக்க இலக்கியம் என்றால் முதலில் அந்த நாடோடிக் கவி நாயகனான வால்ட் விட்மேன். பிறகு அவர் வழி வந்தவர் என்று போர்ஹே கூறும் கார்ல்சாண்ட்பர்க். ஸ்பானிய மொழியில் அவரது முதல் தேர்வு செர்வாண்டிஸ்தான். ஷேக்ஸ்பியரை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டினாலும் அவர் மீது போர்ஹேவுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கவில்லை. ஷேக்ஸ்பியர் மிகவும் படோடோபமாகவும் கவனக் குறைவாகவும் எழுதியவர் என்பது போர்ஹேவின் வாதம். அல்லது ஏதோ ஒரு இத்தாலியத்தன்மையும் யூதத்தன்மையும் ஷேக்ஸ்பியரிடம் இருந்ததாகக் கருதினார். எனவே போர்ஹேவின் சிறந்த இலக்கியவாதிகளின் பட்டியலில் ஷேக்ஸ்பியர் இல்லை. இவ்வளவு ஆங்கில ஆசியர்களைப் படித்திருப்பதாலும் அவர்களைச் சிலாகிப்பதாலும் அர்ஜன்டீனிய இலக்கிய வட்டத்தில் போர்ஹேவை ஒரு "ஆங்கிலேயர்" என்று சிலர் நையாண்டி செய்ததாகக் குறிப்பிடுகிறார்: 

". . .My fondness for such a northern past has been resented by my more nationalistic countrymen, who dub me an Englishman, but I hardly need point out that many things English are utterly alien to me: tea, the Royal Family, 'manly' sports, the worship of every line written by the uncaring Shakespeare."  [An Autobiographical Essay, 1971]

செக்ஸ் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அம்சங்களும் போர்ஹே கதைகளில் பிரச்சனை மிகுந்தவையாக இருக்கின்றன. இந்த இரண்டின் இல்லாமைகளும் சாதாரணமாகத் தோன்றினாலும் அவை அவற்றின் தவிர்க்கப்படுதலினை விநோதமாக்கிக் காட்டுகின்றது. எம்மா சுன்ஸ் கதையில் எம்மா அந்த அந்நியனுடன் கலவியில் ஈடுபடுவதைத் தவிர வேறு எங்கேயும் செக்ஸ் சம்மந்தப்பட்ட விவரணைகளோ குறிப்புகளோ காணப்படுதில்லை. போர்ஹேவின் புனைகதை உலகில் இடம் பெறும் பெண்கள், (எம்மா தவிர) தனிநபர்களாக இன்றி சீரழிந்த, அடையப்பட வேண்டிய  வஸ்துக்களாகவோ வம்சவிருத்திக்கோ (அல்லது சந்தோஷத்திற்கோ அல்லாது) ஆண்களுக்கிடையிலான உறவுகளில் பேரம் பேசுவதற்கான பொருள்களாகவே இருக்கின்றனர். இறந்தவன்,குறுக்கீட்டாளர், ரோசென்டோவின் கதை, இந்த மூன்று கதைகளில் வரும் முறையே சிவப்பு முடி கொண்ட பெண், ஜூலியானா பர்கோஸ், லா லூஜனேரா, ஆகிய பெண்கள் தமக்கான விருப்பு வெறுப்புகள் உள்ளவர்களாகச்  சித்திரிக்கப்படவில்லை. குறுக்கீட்டாளர் கதையின் அடிநாதமாக ஓடுவது நில்சன் சகோதரர்களுக்கிடையே நிலவும் ஒருபால் காமத்துவம் என்றும் அதை நிலைப்படுத்தும் பொருட்டு ஜூலியானா கொல்லப்பட வேண்டி வருகிறாள் என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர். [Herbert J. Brant, The Queer Use of Communal Women in Borges' "El muerto" and "La intrusa", Indiana

University-Purdue University Indianapolis]. ஹோமோ செக்ஷ¥வாலிட்டி போர்ஹேவுக்கு இருந்திருக்கலாம் என்ற ஹேஷ்யமும் அர்ஜன்டீனிய இலக்கிய வட்டங்களில் நிலவுகிறது.  1956 இல் எழுதப்பட்ட கதையான The Sect of the இல், செக்ஸ் என்பது ரகசியம் என்று உணர்த்தப்படுகிறது. Tlon, Ucbar, Orbis Tertius என்ற கதையில் வரும் மேற்கோளில் புணர்ச்சி செயல்பாடு அருவருப்பானது என்பதாக வருகிறது: "Copulation and Mirrors are abominable". தனது கதைகளில் காதல் இடம் பெறுவதில்லை என்பதை போர்ஹே ஏற்றுக் கொள்கிறார். உல்ரிக் ('Ulrike'-from The Book of  Sand) என்ற கதை ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு என்றும் எழுதியிருக்கிறார். உல்ரிக் கதையில் வரும் பெண் பாத்திரம் போர்ஹேவின் பிற பெண்களை விடக் கூடுதல்  ஆளுமை மிக்கது. 

போர்ஹேவின் எந்த ஒரு கதையும் அல்லது கவிதையும் மிகச்சாதாரணமாகத் தொடங்கி ஒன்று அல்லது இரண்டு வரிகளைப் படித்ததும் நாம் இதுவரை சாதாரணமானது என்று கருதிய ஒரு அனுபவம் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்திவிடுகிறது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கவிதையும் எல்லையற்ற தீர்க்கப் பார்வைகளின் சாளரமாக மாறிவிடுகிறது. இந்த தீர்க்கப் பார்வைகள் நமது வாழ்வுகளையும்,  அடுக்குகளாக அமைந்த வரலாறுகளையும், நாமறிந்த விண்கோள்களையும், பிரபஞ்சங்களையும் இன்னும் நடந்திராத எதிர்கால நிஜங்களையும் தாண்டி தூரத்துத் தொடுவானங்களுக்கு இட்டுச் செல்கின்றன. இவை யாவும் ஒரே சமயத்தில் நிகழக் கூடியனவாகவும், ஒன்றிலிருந்து மற்றது துல்லியமாய் வேறுபட்டும் படிகத் தெளிவுடனும் இருக்கின்றன. இவை எல்லாம் அந்த சாரளம் திறந்து விட்ட சூன்யத்திலிருந்து பிறந்தவை. ஒருவரின் ஞாபகத்தையே மூழ்கடித்து அடுத்த நாள் வாழ்வுக்கு தகுதியற்றதாகவும் இவற்றால் ஆக்கிவிட முடியும். போர்ஹேவின் புனைகதைப் பிரபஞ்சம் எல்லையற்ற வகையிலும் மனிதப் புரிதலால் அடக்கி ஆளமுடியாததாகவும் அமைந்து விடுகிறது. எல்லையற்ற பக்கங்கள் கொண்ட புத்தகமாகவும், எண்ணிக்கையில் அடங்காத நூல்களைக் கொண்ட நூலகமாகவும் சிற்றடக்கப் பெரும்பொருளாகவும் இது உருப்பெரும். உப்புச் சப்பற்ற பெயர் கொண்ட ஒரு சாதாரண நகரத்தின் தெருவிலும் இந்த அனுபவம் நேரக் கூடும். அல்லது உருகுவேயின் தட்டைச் சமவெளியில் தொடங்கி நட்சத்திரங்களை இணைத்துக் கொள்ளக் கூடும். 

போர்ஹேவின் சர்வதேசீயம் பற்றிக் குறிப்பிடும் போது தத்துவவாதியும் கலாச்சார வரலாற்றாசிரியருமான George Steiner எழுதுகிறார்:  அவரது சர்வதேசீயக் கலாச்சாரம் மிக ஆழமாக போர்ஹே உணர்ந்த ஒரு உத்தியாகும். உலகில் உறையும் சகல பொருட்களின் இதயங்களிலிருந்து வீசும் பெரும் காற்றுக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயங்குதல் ஆகும் அது. கற்பனையான புத்தகத் தலைப்புகளையும், கற்பனை செய்யப்பட்ட குறுக்குக் குறிப்பீடுகளையும், வாழ்ந்திராத ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகளையும் மேற்காட்டுகையில் நிஜத்தின் தெரிவிப்புக் கட்டங்களை மீண்டும் ஒன்று சேர்த்து சாத்தியமிக்க பிற உலகங்களின்வடிவங்களை உருவாக்குகிறார். மொழி விளையாட்டுக்களின் மூலமோ அல்லது எதிரொலிப்பதன் மூலமோ லைடாஸ்கோப்பினைத் திருப்பி சுவற்றின் வேறு ஒரு பகுதியில் ஒளியைப் படச் செய்கிறார்.

போர்ஹே விநோதப் பிரபஞ்சங்களை மாத்திரம் சிருஷ்டிக்க வில்லை. விநோத விலங்கியலையும் உருவாக்கினார். இதை புனைகதை தவிர்த்த வேறு கட்டுரைகளுடன் சேர்க்கலாம். பெரும்பான்மையான உலக இலக்கிய, புராணிகங்களில் குறிப்பிடப்படும் விநோத விலங்குகள் கச்சிதமான விளக்கத் தெளிவுகள் பெறுகின்றன போர்ஹேவின் மூலம். ஒரு அகராதி வடிவத்தில் போர்ஹே இதை வடிவமைத்திருக்கிறார். அதன் பெயர் The Book of Imaginary Beings (1969).Margarita Guerrero என்ற பெண் (எழுத்தாளர்?) இந்த அகராதிக்கு இணையாசிரியர். கா·ப்கோ, எட்கர் ஆலன் போ  போன்றவர்கள் கற்பனை செய்த மிருகங்கள் எப்படி இருக்கும்? விளக்கம் தருகிறார் போர்ஹே. புத்தரின் பிறப்பினை முன்னறிவித்த யானை, தத்தவவாதி இமானுவல் ஸ்வீடன்போர்க்கின் நரகத்தில் இருந்த விலங்குகள், ஜப்பானின் எட்டுத் தலை நாகம், மகாபாரதத்தில் அர்ஜூனனைத் துரத்திய உலுப்பி என்ற பாம்பு போன்றவற்றைப் பற்றி இந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.  அமெரிக்கப் பல்கழைக் கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக 1961 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சான் ·பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையில் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் உரைகள் நிகழ்த்தினார். 1963 ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். தனது பால்யகால நிகழ்ச்சிகள் நடந்த பிரதேசங்களையும் பழைய நண்பர்களையும் சந்தித்தார்.

மீண்டும் 1967 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகம் ஒரு வருடம் பேராசிரியாக அமெரிக்காவில் வந்து தங்கும்படி அழைப்பு விடுத்தது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில்தான் அவரது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாள நண்பரான நார்மன் தாமஸ் டி ஜியோவானியை போர்ஹே சந்தித்தார். 1973 இல் பெரோன் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது போர்ஹே தனது தேசீய நூலக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். போர்ஹேவுக்கு 1975 ஆம் ஆண்டு மிக முக்கியமானது. காரணம் அவருடைய தாயார் அவரது 99 வயதில் காலமானார். அதே ஆண்டில் போர்ஹேவின் கதைகளும் கவிதைகளும் அடங்கிய தொகுதியான The Book of Sand வெளியானது. 

1969 ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசின் அழைப்பினை ஏற்று டெல் அவீவ் நகருக்குப் பயணம் செய்தார். 1973ஆம் ஆண்டு Fifth Biennial Jerusalem Prize அவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் வருடம் ஜப்பானிய கல்வித் துறை போர்ஹேவுக்கு ஜப்பானுக்கு வருகை தர அழைப்பு விடுத்தது. 1980 இல் ஸ்பானிய அரசு வழங்கக்கூடிய பரிசுகளிலேயே மிக உயர்ந்த பரிசான Cervantes Prizeஐ ஸ்பானிய எழுத்தாளர் Gerardo Diego உடன் பகிர்ந்து கொண்டார். நோபல் விருது தவிர்த்த மற்ற பல முக்கியமான விருதுகளை போர்ஹே பெற்றிருக்கிறார். 1986 ஆம் ஆண்டு போர்ஹே ஜெனிவாவில்  காலமானார். இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடைய காரியதரிசியான Maria Kodama என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R