- மு. நித்தியானந்தன் - “watch our girls march fearless of the fight 
Torch of learning burning ever bright”     - இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.

இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி  ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.

      ‘நடு இரவில்
      எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
      சூரியன் உதிக்கும் பொழுது
      இருள் தோன்றுகின்றது’

என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

      ‘ ஏனோ என் கவிதைகள்
       சோகங்களையே சுமந்து செல்கின்றன’

      என்று கூறும் நவஜோதியின் கவிதைகளில் தெறிக்கும் சோகம் அவரது வாழ்வுத் தரிசனத்தில் ரத்தக் கீறல்கள். முள்வேலிகளின் இறுக்கத்திறகுள் குமுறும் வெம்மை மூச்சுக்கள்.

      வீட்டுச் செம்பரத்தையின் சிவந்த சிரிப்பை –
      மல்லிகையின் நறுமணத்தை –
     கொஞ்சித் தழுவிய வேப்பங்காற்றை
   
          துல்லியமாய் நினைவு கூரும் நவஜோதியின் கவியுலகு  பிறந்த மண்ணின் சுவாசத்ததால் வெப்பமூட்டப்பட்டிருக்கிறது. தந்தையோடு தாவித் திரிந்த நாள் எங்கே? என்ற கேள்விகள் அவரின் கனவுலகின் எல்லா முனைகளிலும் எதிரொலிக்கின்றன.

    நவஜோதி தன் கவிதைகளில் தன் இனிய பாடசாலை நாட்களுக்கு, தன் பள்ளித் தோழிகளுக்கு. தான் உலாவி வந்த சிற்றூருக்கு, தனக்கு ஆதர்ஸமாய்த் திகழ்ந்த தந்தையின் நினைவிற்கு அடிக்கடி சென்று திரும்புகின்றார். பள்ளிக் காலங்களை இனிய கனாக் காலங்களாய் ஏக்கத்தோடு நோக்கும் அனுபவத்தை யாருமே பங்கு போட்டுக் கொள்வது சாத்தியம்தான். சொந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து ஐரோப்பிய உலகிற்குள் வீசப்பட்டபோது – வாழ்வின் மாறுபட்ட முகாம்களுக்குள் நுழைந்தபோது எதிரும் புதிருமான கோணங்களை ஏக காலத்திலே தரிசிக்கின்றார். எதிர் எதிர்முனைகளில் தோற்றம் காணும் கருத்துக்களின் சாராம்ச எல்லைகள் கறாராக இல்லை என்பதை உணர்கிறார்.

    ‘வாழ்வின் சுழற்சியில்
    நிராசைகளும் நம்பிக்கைகளும்
    கனவுகளும் கண்ணீரும்
    ஏக்கமும் துன்பமும்
    வெற்றியும் தோல்வியும்
    உயிரும் மரணமும்
    நியதியாய்ப் பதிகின்றதே’
 
    என்று நெஞ்சின் கீறல்கள் என்ற கவிதையிலே குறிக்கின்றார்; நவஜோதி. வாழ்வின் சுழற்சியில் எதிர்த்துருவப் போக்குகளை இயல்பாய் காணும் போக்கு பல புலம்பெயர் கவிதைகளின் முக்கிய பண்பாக முகிழ்ப்பதை நாம் காணலாம். இலங்கையில் பிறந்து கனடாக் கவியாக அடையாளம் காணப்படும் Rienzi Cursz    இன் கவிதைகளி;ல் இத்தகைய பண்பினை ஆங்கில விமர்சகர் செல்வா கனகநாயகம் இனம் காண்கின்றார்.  (Dark Antonyms  and Paradise – The poetry of  Rienzi crush by Chelva Kanaganayagam)
        
         ‘பெண்ணே! மௌனத்தில் ஏன் அழுகிறாய்?
    அழுவதை நிறுத்து’

    என்று தீர்க்கமாகவே குரல் தரும் நவஜோதி

    ‘அழுதே சுமக்கிறேன்’ என்கின்றார். பெண்ணின் துயரை, தாபங்களை, ஏக்கங்களை, பாலியல் வேட்கைகளை, பெண்ணின் உடலைத் துணிவோடு வார்த்தைகளில் வடிக்கும் திராணியை நவஜோதியின் கவிதைகளில் காணமுடிகின்றது. Male Gaze  பார்வைகளை சங்கடப்படுத்தும் கவிதைகளும் இத்தொகுப்பில் மிளர்கின்றன.. பெண்களைத் தெய்வங்களாக சட்டென்று அங்கீகரித்துக்கொண்டு விடும் சமூகம் அவளை அன்றாட வாழ்வில் சமத்துவ உரிமை கொண்டவளாக ஏற்க மறுத்துவிடுகிறது. இந்நிலையில் பெண் கவி கலகக் குரலாக மட்டுமே ஒலிக்க முடிகிறது. நவஜோதியின் கவிதைகளில் பிறிடும் துயரமும் ஏக்கமும் சோகமும் சமூக யதார்த்தத்தின் மீதான கண்டனத்தின் சாயலையே கொண்டுள்ளன. அவரது இதயத்தின் தவிப்பு வெற்றுப் பிரபஞ்சத்தில் விசிறப்படும் வீணை நரம்புகளில் இசை மீட்கிறது.
  
     ‘எவ்வளவு இனிமையாக வாசித்தாலும்
     என் விரல்கள் மீட்டும் வீணை
     அபஸ்வரம்
     குமுறும் நரம்புகள்
     வீணையை எப்போ வேண்டுமானாலும்
     வாசித்துக் கொள்வேன்
     வசதிபோல் முழு நிலவை
     ரசிக்க முடியுமா?’

      என்று தன் கவிதையில் கேள்வியை எழுப்புகிறார் நவஜோதி. சமூகக் கட்டமைப்பின் கொடுந்தளைகளுக்குள் வீணை மீட்டலிலும் அபஸ்வரம் தொனிக்கையில் இயற்கையின் ஆராதனையில் அவர் தோய்ந்து போய்விடுகிறார்.             
                    
லண்டனில் தனித்த ஒரு பெண் கவியின் கவிதைக் குரலாக ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற தொகுப்பு தனிச்சிறப்புப் பெறகின்றது. லண்டனில் இசை, நடனம் போன்ற லலித கலைகளில் பெண்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் லண்டனில் சோபையிழந்து நிற்கும் கவித்துவ வானில் நவஜோதி தாரகையாய ஒளிர்கின்றார். லண்டனில் சிறுகதை, நாவல் என்றதும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தைச் சுட்டமுடிவது போல கவிதைக்கு நவஜோதியைத்தான் முன்னுதாரணமாகக் காட்டமுடியும்.
 
     ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் நவஜோதி ஜோகரட்னம் யாழ்ப்பாணம் இளவாலைக் கொன்வென்டின் வார்ப்பு. தலவாக்கொல்லை, பண்டாரவெள ஆகிய மலைப்பகுதிகளில் ஆசிரிiயாகப் பணியாற்றிய காலங்களில் மலையகப் பெண்களின் துயரங்கவிந்த வாழ்வை நேரடியாகவே காணும் அனுபவம் வாய்க்கப்பெற்றவர். வேல் ஆனந்தன், வீரமணிஐயர், பத்மினி போன்றவர்களின் நடனச் சூழலுக்கும் பரிச்சயமான நவஜோதி நடன நாட்டியங்களிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்தின் மூல புருஷர்களில் ஒருவரான அகஸ்தியரின் புத்திரியான இவர்  தந்தையின் மிருதங்க வாசிப்பில் லயித்த ரசனையை இத்தொகுப்பின் சில கவிதைகளில் அழகாகவே பதிவு செய்திருக்கிறார்.    

      எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரான்சை நோக்கிப் புலம்பெயர்ந்த நவஜோதி முறையாகவே பிரெஞ்சு மொழியைக் கற்று சரளமாக உரையாற்றும் ஆளுமை கொண்டவர். பிரெஞ்சுக் கலாசாரத்தால் ஆகர்ஷிக்கப்பட்டவர் என்று இவரைக் கூறுதல் சாலும். இயற்கை எழில் சிந்தும் தலவாக்கொல்லையில் கணித ஆசிரியராகத் திகழ்ந்த நவஜோதி தன் கவிதையின் ஊற்றுக் கால்களை லண்டனில் இனம் காண்கிறார்.

      லண்டனில் தமிழ் ஊடகங்கள் கவிதைத்துறைக்கு ஆற்றியுள்ள பெரும்பணிக்கு நவஜோதியின் இக்கவிதைத் தொகுப்பு நல்ல சாட்சியமாகிறது. லண்டனில் திரு நடாமோகனின் Firstaudio வானொலியில் நவஜோதியின் கவிதைகள் ஆரம்பத்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து தீபம், ரிரிஎன் தொலைக்காட்சிகளிலும், ETBC  வானொலியிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன. ஹரோ நூலகத்தின் ஆசிய எழத்தாளர்களின் கவிதைப் பட்டறையில் இவர் ஆக்கிய ‘In  My Musical Heart’    சிறந்த கவிதையாக சிலாகிக்கப்பட்டது.

      தீவிர எழுத்து ஈடுபாடு கொண்ட நவஜோதி புலம் பெயர் வாழ்வை நன்கு சித்தரிக்கும் பல சிறுகதைகளை இலங்கை வார இதழ்களில் எழுதியுள்ளார். நவஜோதி எழுதிய ‘தளிருக்குள் துளிர்’ என்ற சிறுகதை புலோலியூர் க. சதாசிவம்நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘ஞானம்’ சான்றிதழ் பரிசைப் பெற்றுள்ளது. கவிதை, சிறுகதைத் துறை ஈடுபாட்டுடன் லண்டன’; நூல் விமர்சன அரங்குகளிலும் நவஜோதி சர்ச்சைக்குரிய பல நூல்கள் மீது தனது அபிப்பிராயத்தை முன்வைத்திருக்கிறார். இலக்கிய நடவடிக்கைகளிலும் சமூகச் செயற்பாடுகளிலும் அயராது உழைத்துவரும் நவஜோதி சமூக உணர்வுகொண்ட பெண்ணாவார். ஒடுக்குதலும், சுரண்டலும், அநிநாயமும தலைவிரித்தாடும்போதெல்லாம் அவற்றிற்கு மனித நேயத்தோடு எதிர்வினையாற்றும் வேகம் கொண்டவர். நவஜோதியின் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ புலம்பெயர் இலக்கியத்தில் கவனத்திற்குரிய ஒரு பெண்ணின் கவிதைத் தொகுப்பாக அமையம் என்று நம்புகிறேன்.

      ‘உன்னுடைய வார்த்தைகளால்
       நீ என்னைக் குதறலாம்,
       உன் பார்வையால்
       நீ என்னைக் கிழிக்கலாம்
       வெறுப்பை உமிழ்ந்து
       என்னை நீ கொன்றவிடவும் கூடும்,
       ஆனாலும் காற்றைப் போல
       நான் மீண்டும் எழுவேன்’

என்ற ஆபிரிக்க அமெரிக்க பெண்ணியக் கவிஞை மாயா அஞ்செலுவின் வைரவரிகள் இந்த முன்னுரையின் முத்தாய்ப்பாய் அமையவல்லன.’

- விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்களால் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கு 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட முன்னுரை என்றும் உலகக் கவிஞை மாயா அஞ்செலுவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.  -

பதிவுகளுக்கு அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R