23-ம் அத்தியாயம்: பத்மா - ஸ்ரீதர் திருமணம்!

தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. "நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?" என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், "பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்." ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. "நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?" என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், "பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்." ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?

இன்னும் ஸ்ரீதர் கண்களை இழந்ததற்குப் பதிலாக, பத்மா கண்களை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஸ்ரீதர் பதைபதைத்திருப்பான். இரவும் பகலும் பத்மாவுக்காக உருகி இருப்பான். அவள் மீது அவனுக்கு ஏற்கனவே இருந்த மாறாக் காதல் அழியாத நிரந்தரக் காதலாக, சிரஞ்சீவிக் காதலாக வளர்ச்சியடைந்திருக்கும். அந்தக் காதலின் அரவணைப்பிலே பத்மாவின் உள்ளம் தன் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்திருக்கும்.

ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் ஏதாவதொன்றை நம்பினால் அந்த நம்பிக்கையை ஐயங்களும் அச்சங்களும் அரிப்பதற்கு அவன் விடுவதேயில்லை. கள்ளங்கபடமற்ற அவனது மனதின் இயற்கையான ஒரு போக்காக இது அமைந்துவிட்டது. அதனாலேயே பத்மாவுடன் தான் காதல் புரியத் தொடங்கிய போது கூட அதைத் தனது தந்தை சிவநேசர் ஒரு வேளை எதிர்க்கக் கூடும் என்ற அச்சம் அவனுக்கு ஏற்படவில்லை. சரியான காரியங்களை யாரும் எதற்காக எதிர்க்கப் போகிறார்கள் என்பதே அவ்னது எண்னம். அதனால்தான் அவனிடம் சுரேஷ் "அப்பா உன் திருமணத்தை ஆட்சேபிக்கக் கூடும்" என்று எடுத்துரைத்த போது கூட "உனக்கு எனது அப்பாவைப் பற்றித் தெரியாது." என்று பதிலளித்தான் அவன். இன்னும் தாய் பாக்கியம் "நீ கண் பார்வை இழந்திருப்பதால் பத்மா உன்னை நிராகரிக்கக் கூடும்." என்ற போதும் இதே போன்ற ஒரு பதிலை அவன் அளித்ததும் அதனால்தான். "அம்மா உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாது. அதனால் தான் இப்படிப் பேசுகிறாய்." என்று தீர்ப்பளித்தாள் அவள்.

இன்னும் அவன் கருத்திலே "பத்மா மிகவும் நல்லவள்." இவ்வசனத்தை அவன் தனது தாய் பாக்கியத்துக்கும் ஏன் தந்தையார் சிவநேசருக்கும் கூடக் கூறியிருக்கிறான். ஆகவே நல்லவளான பத்மா, நளாயினி போன்ற பத்மா தன்னை நிராகரிக்கக் கூடும் என்ற நினைவுக்கே அவள் நெஞ்சில் இடமில்லாது போயிற்று. அதன் காரணமாக கொழும்பிலிருந்து சீக்கிரமே நல்ல செய்தி வரும் என்றும், ஓரிரு வாரங்களிலேயே தனது திருமண நாள் குறிக்கப் பட்டுவிடும் என்றும் எண்ணினான் அவன்.

ஆனால் தாய் பாக்கியம் ‘கிஷ்கிந்தா’விலிருந்து அவனோடு டெலிபோனில் பேசும் போது பத்மாவின் தந்தையார் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி, அதனால் விஷயங்கள் சற்றுத் தாமதமாகலாம் என்று குறிப்பிட்டிருந்தாள். இது அவனுக்குச் சிறிது ஏமாற்றத்தை உண்டு பண்ணியதானாலும் "என்ன செய்வது" என்று பொறுத்துக் கொண்டாள். தாயிடம் பரமானந்தருக்கு என்ன நோய் என்று அவன் கேட்டதும் அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக "இருதய நோய், சிறிது கடுமையாகத் தானிருக்கிறது" என்று சொல்லி வைத்தாள்.


ஸ்ரீதரை இடையிடையே ஞாபகப்படுத்திக் கொண்டவர்களில் நன்னித்தம்பியரின் முதலாம் வகுப்புப் பட்டதாரி மகள் சுசீலா ஒருத்தி. பத்மாவைப் பெண் பார்க்கப் போன சிவநேசருடனும் பாக்கியத்துடனும் தந்தையார் நன்னித்தம்பி சென்றிருந்ததால் ஸ்ரீதரைப் பற்றித் தாயார் செல்லம்மாவுடன் அடிக்கடி பேசுவதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

காலையில் தாயும் மகனும் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாய் போட்டு, அதில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, சுசீலா தாயிடம் "பாவம் அந்த ஸ்ரீதர், சீக்கிரமே அவருக்குக் கல்யாணம் நடக்குமல்லவா?" என்றாள்.

"ஓமென்றுதான் நினைக்கிறேன். கல்யாணத்திற்காக ஒன்றிரண்டு நாள் நாம் ‘அமராவதி’யில் போய்த் தங்கும்படி கூட நேரிடலாம். ஆனால் பாக்கியமிருக்கிறாரே. அந்த மனுஷிக்காக நான் எதுவும் செய்வேன்." என்றாள் தாய்.

சுசீலா "அம்மா, இப்பொழுது ஸ்ரீதர் அந்தப் பெரிய வீட்டில் தனியாகவல்லவா இருக்கிறார்? எப்படி அவர் தனியாய் இருப்பாரோ எனக்குத் தெரியாது. எனக்கென்றால் பயமேற்பட்டுவிடும். வா அம்மா, நாங்கள் ‘அமராவதி’க்குப் போய் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு வருவோம். கண் பார்வை இழந்தாவருக்கு நாங்கள் போவது ஒரு தெம்பாகவிருக்கும்" என்றாள்.

அதற்குச் செல்லம்மா ‘ஸ்ரீதர் தனியாக இல்லை. பாரதியாரும், பிள்ளைகளும் அங்கே இருக்கிறார்கள். என்றாலும் வா, போய் விட்டு வருவோம். ஆனால் ஒன்று. ஸ்ரீதரைப் பார்த்து விட்டு நீ அன்றைக்குப் போல் மீண்டும் அழுதுவிடக் கூடாது. தெரிகிறதா?" என்றாள்.

"போ அம்மா, நான் என்ன குழந்தைப் பிள்ளையா அழுவதற்கு? இப்பொழுது நான் முன் போலில்லை. எனக்கு இப்பொழுது முன்னிலும் பார்க்க மனத் திடம் எவ்வளவோ அதிகம்" என்றாள் சுசீலா.

அவர்களிருவரும் ‘அமராவதி’க்குப் போன போது அதன் பெரிய இரும்புக் கேட்டுகள் மூடப்பட்டுக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறு கதவு மட்டும் திறந்திருந்தது. மாளிகைக் காவலாளி அவர்களைக் கண்டதும் "என்னம்மா எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டாள். "தம்பி ஸ்ரீதர் தனியாக இருக்கிறாரல்லவா? சும்மா பார்த்துப் பேசிவிட்டு போக வந்தோம்." என்றாள் செல்லம்மா. "சரி அம்மா போங்கள்" என்று அவர்களுக்கு வழி காட்டினான் அவன். நன்னித்தம்பியர் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ‘அமராவதி’ வளவுக்கு வந்து போவதற்கு எப்பொழுதுமே எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை.

சுசீலாவும் தாயும் வழியிலே இருந்த பெரிய வெள்ளை ஜம்பு மரத்தைத் தாண்டி மாளிகையை நோக்கி நடந்தார்கள். ஜம்புக் காய்கள் ஒன்றிரண்டு கீழே விழுந்து கிடந்தன. அவற்றிலொன்றை எடுத்து வாயால் கடித்துச் சாப்பிட்ட வண்ணமே மாளிகையை நோக்கி நடந்தாள் சுசீலா. தாய் செல்லம்மாவோ தனக்கு ஜம்புக்காய் பிடிக்காது என்று கூறிவிட்டாள். ஜம்புக்காய் தனக்கு வயிற்றுவலியை உண்டாக்கும் என்பது அனுபவத்தால் அவளுக்கு ஏற்பட்ட நம்பிக்கை.

சுசீலாவும் தாயும் மாளிகையைச் சமீபிக்க மோகனாவின் குரல் காற்றிலே மிதந்து வந்தது. "பத்மா, பத்மா" என்ற அதன் மழலைக் கூச்சல் தாயையும் மகளையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து வேப்ப மரத்தின் கீழே மாங்கொட்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சின்னைய பாரதியின் குழந்தைகளின் கூச்சலும் அவர்கள் காதுகளைத் துளைத்தது. சின்னக் குழந்தை லட்சுமியோ தன்னைப் பெரிய பிள்ளகள் தமது விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் சிணுங்கிச் சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்ட சுசீலா "பாவம்" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை ஓடிப் போய்த் தூக்கிக் கொண்டு "ஏன் அழுகிறாய், பாப்பா?" என்று கேட்டாள். தாய் செல்லம்மா, "குழந்தையைக் கீழே விடு. சேலை ஊத்தையாகிறதல்லவா?" என்று சொன்னாள். சுசீலாவோ அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைக்குக் கிச்சு கிச்சுக் காட்டினாள். செக்கச் செவேலென்று குண்டாயிருந்த குழந்தை சிரித்து விளையாட ஆரம்பித்தது. சுசீலாவின் பின்னலைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேனென்றது. சுசீலா "பின்னலை விடு. இல்லாவிட்டால் அடிப்பேன்." என்று பயமுறுத்தினான். குழந்தை அப்பொழுதும் விடவில்லை. "விடு தங்கச்சி விடு" என்று மீண்டும் சப்தமிட்டாள் சுசீலா. அவ்வாறு கூறிக் கொண்டே கையிலிருந்த ஜம்புக்காயை அதற்கு உண்ணக் கொடுத்தாள்.

அப்பொழுது விறாந்தையில் ஒரு சலனம் ஏற்பட்டது. அங்கே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதர் எழுந்து நின்று கொண்டு முக மலர்ச்சியோடு, "யாரது? பத்மாவல்லவா? அம்மா, பத்மாவை நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டாயா? ஏனம்மா நீ எனக்கு இதை டெலிபோனில் அறிவிக்கவில்லை." என்று கேட்டான்.

சுசீலாவும் தாயும் குழப்பமடைந்தனர். அவன் பேசியதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஸ்ரீதருக்கு பத்மா மீது அவன் கொண்ட எல்லை மீறிய காதலின் காரணமாகப் பைத்தியம் தான் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் இது என்ன விஷயம் என்றறிய விரும்பிய செல்லம்மா "பத்மாவா? பத்மா இங்கில்லையே. நானும் சுசீலாவுமல்லவா இங்கிருக்கிறோம்." என்றாள்.

"ஆ. பொய் சொல்ல வேண்டாம். இப்போது தானே பத்மா பேசினாள்?" என்றாள் ஸ்ரீதர்.

அதற்குச் சுசீலா பதிலளித்தாள்:

"இல்லையே, இங்கு பேசியது ஒன்றில் அம்மா. அல்லது நான்" என்று சுசீலா கூறவே ஸ்ரீதர் கல கலவென்று நகைத்துக் கொண்டு "என்னை ஏமாற்ற வேண்டாம் பத்மா. நான் ஏமாற மாட்டேன். நீ பத்மா தான். உன் குரலை நான் மறந்துவிடவில்லை. என் கண்கள் குருடுதானே என்று நீ இப்படி வேடிக்கை செய்கிறாய். ஆனால் இந்த வேடிக்கை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை பத்மா." என்றான்.

இப்பொழுது செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் பளிச்சென்று ஓர் ஐயமேற்பட்டது. ஒரு வேளை சுசீலாவின் குரல் பத்மாவின் குரல் போலிருக்கிறதோ என்பதே அது. அது தான் அவன் சுசீலாவின் குரல் பத்மாவின் குரலாக எண்ணிக் கொண்டு இப்படிப் பேசுகிறான். இந்தக் குழறுபடி மேலும் நீடிப்பது நல்ல நல்ல என்றெண்ணிய செல்லம்மா ஸ்ரீதரிடம், "தம்பி, நீ நினைப்பது தவறு. அம்மா இன்னும் கொழும்பிலிருந்து வரவில்லை. நாளைக் காலை அவர்கள் வரக் கூடும். இதற்கிடையில் நீ தனியாய் இருக்கிறாய். போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று சுசீலாவும் நானும் உன்னைப் பார்க்க வந்தோம்" என்றாள்.

ஸ்ரீதரின் நிலை எக்கச்சக்கமாகிவிட்டது. செல்லம்மா கூறியது உண்மையே என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆம். சுசீலாவின் குரல்தான் பத்மாவின் குரல் போல அவனுக்குக் கேட்டிருக்கிறது. உண்மையில் அவர்கள் அவனை ஏமாற்ற முயலவில்லை. தன் காதுதான் தன்னை ஏமாற்றிவிட்டது. இதை நினைத்ததும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. என்றாலும், "என்ன ஆச்சரியம், பத்மாவுக்கும் சுசீலாவுக்கும் எத்தகைய குரலொற்றுமை" என்று அதிசயித்தான் அவன்.

பின்னர், ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக் கொண்டு, வேலைக்காரர்களை அழைப்பித்து செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் குளிர்பானங்களைக் கொடுக்கும்படி செய்வித்தான். அதன்பின் இசைத்தட்டு சங்கீதத்தை அவர்களோடு உட்கார்ந்து கேட்டான். சுசீலாவோ, பாதியில் குழந்தை லட்சுமியை அழைத்துக் கொண்டு ‘அமராவதி’ வளவைச் சுற்றிப் பார்க்கப் போய் விட்டாள். அங்கே அவள் மானோடும் மயிலோடும் சிறிது நேரம் விளையாடினாள். பின்னர் தோட்டத்துத் தடாகத்தில் தாமரைப் பூக்களிடையே நீந்தி விளையாடிய மீன்களை லட்சுமிக்கு வேடிக்கை காண்பித்தாள். இவ்வாறு சிறிது நேரத்தைக் கழிந்த பின்னர் தாயும் மகளும் வீடு திரும்பினார்கள். வழியிலே சுசீலா செல்லம்மாவிடம், ‘அப்பா எப்பொழுதம்மா கொழும்பிலிருந்து வீடு திரும்புவார்." என்று கேட்டாள். "யாருக்குத் தெரியும்? இருந்தாலும் அநேகமாக நாளை திரும்பலாம்" என்று பதிலளித்தாள் தாய்.

செல்லம்மா கூறியவாறே நன்னித்தம்பியர் சிவநேசருடனும் பாக்கியத்தோடும் அடுத்த நாள் யாழ்ப்பாணம் மீண்டார். கொழும்பிலிருந்து வருபவர்கள் ‘அமராவதி’யை அடையுமுன்னர் நன்னித்தம்பியர் வீட்டைக் கடந்தே செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கும் கட்டத்துக்குச் சிவநேசரின் கார் வந்ததும் நன்னித்தம்பி "ஐயா எங்கள் வீட்டில் இறங்கித் தாகசாந்தி செய்து செல்ல வேண்டும்." என்று சிவநேசரைத் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். "சரி" என்று சம்மதித்த சிவநேசர் காரோட்டியிடம் காரை நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

சிவநேசர் அவ்வாறு நன்னித்தம்பியின் கோரிக்கைக்கு எவ்வித பதிலுமின்றிச் சம்மதித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பாக்கியமும் அவரும் நன்னித்தம்பியரும் கஞ்சா நல்லையாவுமாகச் சேர்ந்து, பரமானந்தர் சுகவீனமாக இருப்பதால் பத்மாவின் திருமணத்தை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நடந்த முயலாத நிலை தோன்றியிருப்பதாக ஸ்ரீதரிடம் சொல்லுவதற்கு முடிவு செய்திருந்தார்கள். இருந்தாலும் இவ்வாறு மனமறிந்த படு பொய்யைத் தமது அன்பு மகனுக்குக் கூறுவதில் அவருக்குத் திருப்தியில்லை. இவ்விஷயம் அவர் மனத்தையும், ஏன் பாக்கியத்தின் மனதையும் கூடப் பெரிதும் குடைந்து கொண்டேயிருந்தது. ஆகவே அவர்கள் நெஞ்சம் ‘அமராவதி’க்குப் போய் அங்கே ஸ்ரீதரை நேரில் பார்ப்பதற்கே கூசியது. இப்படிப்பட்ட நேரங்களில் விஷயங்களைத் தள்ளிப்போட முயல்வது பலரது வழக்கம். நன்னித்தம்பியர் வீட்டில் சிறிது நேரம் தங்கிச் செல்வது தாம் விரும்பாத விஷயத்தை மேலும் சிறிது தாமதிக்க உதவக் கூடுமல்லவா?

சிவநேசரின் கார் வீட்டு வாசலில் நின்றதும் சுசீலா துள்ளிக் குதித்து ஓடி வந்து விஷயம் என்னவென்று பார்த்தாள். "அம்மா, அப்பா வந்துவிட்டார்" என்று அங்கிருந்தபடி தாய்க்குக் குரல் கொடுத்தாள் அவள். காரோட்டி சுப்பிரமணியம் காரிலிருந்து இறங்கிக் கார்க் கதவைத் திறந்தான். பாக்கியமும் சிவநேசரும் ஒருவர் பின்னொருவராக இறங்கினார்கள். நன்னித்தம்பியர் முன்னாற் சென்று விறாந்தையில் அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகளை இழுத்து வைத்தார். செல்லம்மாவும் சுசீலாவும் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றார்கள். ஆனால் வீட்டின் காவல் நாயான வைரவப்பிள்ளை மட்டும் விருந்தினர் வருகையை ஆட்சேபிப்பது போல் குலைக்க ஆரம்பித்தது. "வைரவப்பிள்ளை, பேசாமலிரு." சுசீலா, நாயை அதட்டினாள்.

"வைரவப்பிள்ளையா? யாரது?" என்றார் சிவநேசர். "அது எங்கள் நாயின் பெயர்." என்றார் நன்னித்தம்பியர். அசாதாரணமான அந்தப் பெயரைக் கேட்டதும் இலகுவில் சிரிக்காத சிவநேசர் முகத்தில் கூட புன்னகை பூத்துவிட்டது. "அது சுசீலா வைத்த பெயர்." என்றாள் செல்லம்மா. அதைக் கேட்ட பாக்கியம் சுசீலாவின் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்தாள். சுசீலாவோ நாணத்தால் அங்கிருந்து விரைவாக நழுவி விட்டாள். மனத்தில் பெரிய பாசம் இருந்த போதிலும் இச்சிறிய சம்பவம் எல்லோர் மனதிலும் ஒரு வித கலகலப்பை ஏற்படுத்தவே செய்தது. சுசீலாவின் அதட்டலைக் கேட்டு வைரவப்பிள்ளையும் அடங்கிவிட்டது. மெல்லச் சிவநேசர் பக்கம் சென்று வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது. செல்லம்மா "சுசீலாவின் குரல் கேட்டால் போதும். நாயனார் உடனே அடங்கிவிடுவார்" என்று வேடிக்கையாகச் சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.

நன்னித்தம்பியரின் வீடு இரண்டு மூன்று அறைகளுடன் கூடிய மிகச் சிறிய வீடேயானாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தது. வீட்டைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். அவற்றின் கீற்றுகளினூடே வீசிக் கொண்டிருந்த தென்றற் காற்று, வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய முல்லைச் செடியின் வாசத்தை வாரிக் கொணர்ந்து மூக்கிற் புகுத்தி, மனதில் ஓர் இன்பப் போதையை ஏற்றியது. இன்னும் வீட்டு விறாந்தைக்குச் சமீபமாக வரிசையாக நடப்பட்டிருந்த ரோஜாச் செடிகள் செழித்துப் பூத்திருந்த பென்னம் பெரிய ரோஜா மலர்களுடன் அழகுக் காட்சி நல்கின. எல்லாம் சுசீலாவின் கை வண்ணம். பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வந்திருந்தும், இன்னும் வேலை எதுவும் கைக்குக் கிடைக்காததால் வீட்டை அழகுபடுத்தும் இத்தகைய பணிகளை ஒழுங்காகச் செய்து வந்தாள் அவள்.

பாக்கியமும் சிவநேசரும் அச்சிறிய இல்லத்தின் அழகிய தோற்றத்தை உள்ளூர மெச்சினார்கள்.

செல்லம்மா சிவநேசருக்கும் பாக்கியத்துக்கும் ஆட்டுப் பால் கலந்து கோப்பியை எவர்சில்வர் தம்ளர்களில் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் அதை அருந்திய பின்னர் ஸ்ரீதரின் பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

பாக்கியம் "என் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?" என்ற கவலையோடு கூறினாள். "ஏன் என்ன விஷயம்?" என்றாள் செல்லம்மா. சுசீலாவோ பெரியவர்கள் பேச்சில் தான் கலந்து கொள்வது நல்லதல்ல என்று உள்ளே போய்விட்டாள். இருந்தாலும் உள்ளே இருந்தபடியே அவளால் ஒற்றுக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அதிலும் கல்யாண விவகாரம், அதுவும் காதலோடு பின்னிய கல்யாண விவகாரமென்றால் யாருக்குத்தான் அதைப் பற்றி ஆறிய ஆசை ஏற்படாது? ஆகவே அக்கறையோடு ஒற்றுக் கேட்க ஆரம்பித்தாள் அவள்.

பாக்கியமும் நன்னித்தம்பியும் விஷயத்தை விளக்கினார்கள். "ஸ்ரீதர் உண்மையாக நேசிக்கும் பெண் அவள். அவளில்லாவிட்டால் தனக்கு வாழ்வில்லை என்று ஸ்ரீதர் நினைக்கிறான். மேலும் அவளை ஒழிய வேறொருத்தியை இந்த வாழ்க்கையில் திருமணம் செய்வதில்லை என்று தனக்குள் தானே சத்தியம் செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் இவ்வுலகில் பத்மாவைப் போல் தன்னை வேறு யாரும் நேசிக்கவில்லை என்றும் அவன் நம்புகிறான். ஆனால் அப்படி அவன் ஆசையோடு காதலிக்கும் யுவதி அவனைக் குருடனென்று கூறிவிட்டாள். குருடனை மணமுடிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டாள். இதை நாம் எப்படி அவனுக்குச் சொல்வது? பத்மா தன்னைக் கை விட்டு விட்டாள் என்ற செய்தியை அவனால் தாங்க முடியுமா? ஸ்ரீதரால் அதைத் தாங்க முடியாது. நெஞ்சம் வெடித்துச் செத்து விடுவான். செல்லம்மா, நான் என்ன செய்வேன்?" என்று புலம்பினாள் பாக்கியம்.

சிவநேசர், "ஆம், நன்னித்தம்பி, பத்மா ஸ்ரீதரைக் கைவிட்ட செய்தியை நாம் அவனுக்குச் சொல்லவே கூடாது. அவனால் அதைத் தாங்க முடியாது. எங்கள் ஒரே மகன் அவன். ‘அமராவதி’யின் ஆசைக் கொழுந்து. இவ்விஷயத்தைக் கேட்டால் உள்ளம் வெதும்பிப் போய்விட மாட்டானா? அவன் எம்மைக் கண்டதும் நல்ல செய்தி கூறுவோமென்று எதிர்பார்ப்பான். அப்படிப்பட்டவனுக்கு நாம் எப்படி இந்த உண்மையைக் கூறுவது?" என்றார்.

சில விநாடி நேரம் ஒருவரும் ஒன்றும் பேசாது மெளனமாயிருந்தார்கள். பின் நன்னித்தம்பி பேசினார். "என்னைப் பொறுத்தவரையில் நான் ஏழை. அந்தஸ்தில் உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் ஏற முடியாது. இல்லாவிட்டால் நிச்சயம் எனது மகள் சுசீலாவை ஸ்ரீதருக்கு நான் மணமுடித்துத் தருவேன். ஸ்ரீதருக்குக் கண்ணில்லாதது ஒன்றுதானே குறை? மற்றும் அழகில், அறிவில், படிப்பில், அந்தஸ்தில், செல்வத்தில், திடகாத்திரத்தில் எல்லாவற்றிலும் சிறந்தவர் உங்கள் மகன். அவருக்கு இணையான ஒரு வாலிபரை இம்முழு உலகத்திலுமே காண முடியாது." என்றார்.

ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவின் உள்ளம் திக்கென்றது. ஸ்ரீதரைப் பத்மா நிராகரித்தாள் என்ற செய்தியைக் கேட்டு, "பாவம் ஸ்ரீதர்" என்று பதைபதைத்துப் போயிருந்த அவள், தன் பெயர் இழுக்கப்பட்டதும் மின்னலால் தாக்குண்டவள் போலானாள். "உண்மையில் ஸ்ரீதரில் ஒரு குறையுமே இல்லை." என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள். நன்னித்தம்பியர், கண் பார்வை குறைந்ததை ஒரு குறையாகக் குறிப்பிட்டது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.

சிவநேசர் நன்னித்தம்பியின் பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார். "நன்னித்தம்பி, நீ உண்மையாகவே இதைச் சொல்லுகிறாயா? அல்லது வெறும் ஒப்புக்குப் பேசுகிறாயா?" என்று கேட்டார்.

"சத்தியமாகச் சொல்லுகிறேன். ஆனால் இதைச் சொல்ல நான் எவ்வளவு அஞ்சுகிறேன் தெரியுமா? சேர் நமசிவாயத்தின் வழி வந்த உங்களுடன் நாம் சம்பந்தம் செய்வது பற்றிப் பேசும் போதே என்னுடம்பு நடுங்குகிறது." என்றார் நன்னித்தம்பி. செல்லம்மா "இந்தப் பேச்சில் என்ன பிரயோசனம்? ஸ்ரீதர் இவ்வுலகில் ஒரே ஒரு பெண்ணையே விரும்புகிறான். அது பத்மா. அவன் ஒரு போதும் சுசீலாவையோ வேறு யாரையோ திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டான்" என்றாள்.

சுசீலாவும் "ஆம் அது உண்மைதானே? அம்மா மிகவும் புத்திசாலி. படிக்காதவளாயிருந்தும் எவ்வளவு விவேகமாகச் சிந்திக்கிறாள்." என்று நினைத்துக் கொண்டாள்.

தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. "நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?" என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், "பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்." ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?சிவநேசர் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு "ஸ்ரீதருக்கு நாம் பத்மா அவனை நிராகரித்து விட்டாள் என்று சொல்லாமல் சுசீலாவைத் திருமணம் செய்து வைத்தால், சுசீலாவும் வாழ்க்கை பூராவும் தானே பத்மா என்று நடிக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமாகக் கூடிய காரியமா? இன்னும் அவள் தன்னை உண்மையாகக் காதலிப்பதாக நம்பிய பத்மாவே குருடனோடு தன்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டால். இந்நிலையில் வேறெந்தப் பெண் அவனுடன் வாழச் சம்மதிப்பாள்? சுசீலாவைப் பொறுத்தவரையில் அவள் ஸ்ரீதருடன் எப்பொழுதுமே பழகியதில்லை. ஆகவே அவனிடம் இத்தகைய தியாகத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா? சுசீலா அதற்குச் சம்மதிப்பாளா? நாடகத்தில் வாழ்க்கையை நடித்துக் காட்டுவது இலகுவானது. ஆனால் வாழ்க்கையையே நாடகமாக்கி நடித்துக் கொண்டிருப்பது மிக மிகக் கடினம். சுசீலா இதைச் செய்தால் எங்கள் குலம் தழைப்பது மட்டுமல்ல, பட்டுப் போன ஸ்ரீதரின் வாழ்வும் தளிர்க்கும். தான் காதலில் அடைந்த தோல்வியை அறியாமலே அவன் மகிழ்ச்சியோடு வாழ முடியும். ஆனால் எதற்கும் சுசீலாவும் சம்மதிக்க வேண்டுமே" என்றார்.

நன்னித்தம்பியர் "சுசீலாவைக் கூப்பிட்டுக் கேட்டுப் பார்ப்போம்." என்றார்.

"வேண்டாம். எப்படி நாம் ஒரு பெண்ணிடம் குருடனைக் கட்டிக் கொள்வாயா என்று கேட்பது? நான் திருமணம் பேசிய கந்தப்பசேகரர் மகள் அவனைக் கைவிட்டாள். இப்பொழுது அவன் காதலித்த பெண்ணே கைவிட்டுவிட்டாள். இந்நிலையில் சுசீலாவிடம் நான் இக்கேள்வியைக் கேட்க மாட்டேன். இது நடக்கக் கூடியதல்ல."

இவ்வாறு அவர் கூறி நிறுத்தியதுதான் தாமதம். சுசீலா திடீரென கதவடியில் தோன்றினாள். அவள் கண்கள் கண்ணீரால் குளமாயிருந்தன. ஒரு விநாடி ஒன்றும் பேசாது நின்றாள் அவள். எல்லோரும் அவள் திடீர் வரவைக் கண்டு திடுக்கிட்டார்கள். அவள் முகத்தை நோக்கினார்கள்.

பீறி வரும் உனர்ச்சிப் பெருக்கோடு, அவள் தந்தையார் நன்னித்தம்பியின் முகத்தை நோக்கித் தளதளத்த குரலில் "அப்பா, நீங்கள் இங்கே பேசியது முழுவதையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஸ்ரீதரைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயார். அவருடைய வாழ்க்கையில் விளக்கேற்றுவதற்காக நீங்கள் கூறிய விதம் பத்மாவாக மாறிவிடவும் தயார். இன்றிலிருந்து நீங்களும் என்னைப் பத்மாவென்றே அழையுங்கள்." என்றாள்.

பாக்கியத்துக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் கணவர் சிவநேசரின் ஆலோசனையை அவன் ஏற்றுக் கொண்டு விட்டாளா? "சுசீலா, நீ உண்மையைத் தான் கூறுகிறாயா? ஸ்ரீதரைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்கிறாயா? என்னுடைய குருட்டுப் பிள்ளையைக் கட்ட நீ சம்மதிக்கிறாயா? உண்மைதானா சுசீலா, அல்லது விளையாடுகிறாயா? என் குருட்டு மகனுக்கு மணப்பெண்ணாக, எனக்கு மருமகளாக வர நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?" என்றாள் அவள்.

சுசீலா "ஸ்ரீதரை இப்படிக் குருடு, குருடு என்று நீங்களே சொல்லலாமா? அப்படிச் சொல்லாதீர்கள். அவரில் ஒரு குறையுமே எனக்குத் தெரியவில்லை. அவர் போல் அழகர், நல்லவர், அன்புள்ளம் படைத்தவர் யாருக்குக் கிடைப்பார்? நான் அவரைக் கல்யாணம் செய்ய முற்றிலும் சம்மதம்." என்றாள்.

சிவநேசர் கண்கள் கலங்கின. பாக்கியம் எழுந்து அவனைத் தன் மார்போடணைத்துக் கொண்டாள். செல்லம்மாவை நோக்கி "இன்றிலிருந்து உன் மகள் என் மகளாகிவிட்டாள். ஸ்ரீதரை விட இவளைத்தான் என் பிள்ளை என்று நான் போற்றுவேன். இனிமேல் இவள் தான் அமராவதி." என்றாள்.

சுசீலா சிரித்தாள். "ஸ்ரீதர் என் குரலைப் பத்மாவின் குரலென்று எண்ணுகிறார். நேற்று நடந்த விஷயத்தை அம்மாவிடம் கேளுங்கள்." செல்லம்மா விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட பாக்கியம், "அப்படியானால் விஷயம் மிகச் சுலபமாகிவிட்டது." என்றாள்.

சிறிது நேரத்தில் சிவநேசரும் பாக்கியமும் "அமராவதி"க்குப் போனதும் ஸ்ரீதர் பாக்கியத்திடம் "அம்மா விஷயம் என்னவாயிற்று?" என்று ஆவலோடு கேட்டாள்.

"என்ன ஆவது? அடுத்த வாரம் உனக்கும் பத்மாவுக்கும் திருமணம்." என்றாள் பாக்கியம்.

"அப்படியானால் உனக்குப் பத்மாவைப் பிடித்திருக்கிறதென்று சொல்லு. அதுதான் நான் முன்னரே சொல்லியிருக்கிறேனே - பத்மா மிகவும் நல்லவள் என்று. நீ நம்பமாட்டேன் என்றாய். இப்போது என்ன சொல்லுகிறாய்? பத்மா நல்லவள்தானே? நான் சொன்னதில் தவறில்லையல்லவா?"

"ஆம் ஸ்ரீதர். பத்மா மிகவும் நல்லவள்."

இதைக் கேட்ட ஸ்ரீதரின் மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அப்பா என் திருமணத்தை முதலில் எதிர்த்த போதிலும் இப்பொழுது அவரே முன்னின்று எல்லாவற்றையும் செய்துவிட்டார். உனக்கும் அவருக்கும் நான் என்ன கைமாறு செய்வேன் அம்மா?" என்றான் அவன். ஸ்ரீதரின் ஆனந்தம். உண்மையில் அர்த்தமில்லாத ஓர் ஆனந்தம் - அது பொய்மையில் பிறந்த ஏமாளியின் ஆனந்தம் என்பதை நினைத்ததும் பாக்கியத்தின் மனம் துன்பப்படவே செய்தது. இருந்தாலும் என்ன செய்வது? அவள் தனக்குள்ளேயாவது இன்பத்துடன் வாழ்வதற்கு இதை விட வேறு வழி என்ன? இந்த வழியும் தோன்றியிருக்கா விட்டால், "பத்மா உன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டாள்." என்று அவனுக்குச் சொல்லும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பானோ அல்லது பைத்தியமே பிடித்திருக்குமோ - யாருக்குத் தெரியும்? இவ்வாறு எண்ணித் தனது உள்ளத்தைத் தேற்றிக் கொண்டாள் பாக்கியம்.

கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிப் பாக்கியம் ஸ்ரீதருக்குப் பின் வருமாறு விவரித்தாள்:

"பத்மாவின் அப்பாவுக்குக் கடுமையான இருதய நோய். அவரைப் படுக்கையிலிருந்து எழக் கூடாது என்று டாக்டர்கள் தடை செய்திருக்கிறார்கள். அதனால் அவரால் இங்கு வர முடியாது. இருந்தாலும் பத்மாவை உடனே யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று திருமணத்தை நடத்திவிடுங்கள் என்று கூறிவிட்டார் அவர். அந்த ஏற்பாட்டின் படி இன்னும் ஒரு வாரத்தில் விமான மூலம் பத்மா இங்கு வந்து விடுவாள். வந்த உடனேயே திருமணம் நடைபெறும். பெண்ணின் தகப்பனார் திருமணத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், விசேஷமான கொண்டாட்டங்கள் வேண்டியதில்லை என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். எங்கள் வீட்டுக் கோயிலிலேயே கல்யாணத்தை நடத்திவிட எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம்."

ஸ்ரீதர் எப்பொழுதும் அந்தஸ்துக்கேற்ற படாடோப வாழ்க்கையையும் கொண்டாட்டங்களையும் விரும்புவனாதலால் காதும் காதும் வைத்தாற் போன்ற திருமணத்தை அவன் விரும்பவில்லை. என்றாலும் குருடனுக்கு இது போதாதா என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. "எப்படியும் என் வாழ்வின் ஜோதி என்று வாழ்ந்தடைந்து விட்டாளே, அது போதும்." என்று திருப்தியுற்றான் அவன்.

பாக்கியம் செய்த ஏற்பாட்டின்படி ஒரு வாரம் கழித்து சுசீலா ‘அமராவதி’ வளவுக்கு வந்தாள். அவன் வந்ததை அறிந்ததும் ஸ்ரீதர் மோகனாவைத் தூண்டி "பத்மா" என்று அழைக்கும்படி செய்தான். அன்று பிற்பகலே ‘அமராவதி’க் கோவிலில் பஞ்ச நாதக் குருக்கள் புரோகிதத்தில் பத்மா - ஸ்ரீதர் திருமணம் நடைபெற்றது. புற உலகிற்கு அது ஸ்ரீதர் - சுசீலா திருமணமானாலும் ஸ்ரீதரின் உள்ளுலகில் அது பத்மா - ஸ்ரீதர் திருமணம்தானே!

பாக்கியம் ‘அமராவதி’ மாளிகையின் மிகப் பெரியதும் ஆடம்பரமானதுமான அறையை ஸ்ரீதரின் திருமண அறையாக மாற்றியிருந்தார்கள். தெய்வலோகம் போல் அலங்கரிக்கப்பட்டுப் பல விதமான வாசனைப் பொருள்களின் மூக்கைப் பிய்க்கும் நறுமணத்துடன் விளங்கிய அவ்வறையினுள் விலையுயர்ந்த பட்டாடைகள் புனைந்து, தன் அந்தகக் கணவனுடன் பள்ளிக் கொள்ளச் சென்றாள் சுசீலா.

"பத்மா, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. இல்லாவிட்டால் குருடனென்றறிந்ததும் நீ என்னை நிராகரித்திருப்பாயல்லவா? நீ எவ்வளவு நல்லவள். உன்னைப் போன்ற உத்தமி இவ்வுலகில் யாருக்குக் கிடைப்பாள்? நீ இந்த ஜென்மத்தில் மட்டும் எனது காதலியல்ல. சென்ற ஜென்மத்திலும் அதற்கு முன்னைய ஜென்மங்களிலும் நீயே என் காதலியும் மனைவியுமாக விளங்கிருக்கிறாய். இனி வரும் ஜென்மங்களிலும் நானுன்னைப் பிரிய மாட்டேன். ஊழிக் காலத்திலே உலகம் முற்றாக அழியும் வரை நாம் இப்படியே பிறப்புக்கும் பிறப்பு காதலாகச் சென்றுக் கொண்டேயிருப்போம். ஏன், சைவ மதத்தின் படி ஆத்மாக்கள் என்றும் அழிவற்றன அல்லவா? சர்வ சங்காரத்தின் பின் தோன்றும் நவ உலகிலும் கூட நாம் மீண்டும் கணவன் மனைவியாகக் கூடுவோம். ஆம் பத்மா, என்னால் உன்னைப் பிரியவே முடியாது" என்று காதல் மொழிகளை விடாது பேசினான் ஸ்ரீதர்.

சுசீலா ஸ்ரீதரை எவ்வளவு தூரம் தன் பேச்சாலும் செயலாலும் மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு தூரம் அவனை மகிழ்வித்தாள். பத்மாவுக்கும் அவளுக்குமிருந்த குரலொற்றுமை இதற்குப் பேருதவியாயிருந்தது. விடிவதற்கு முன் ஸ்ரீதர் சுசீலாவிடம் "பத்மா நீ எவ்வளவு நல்லவள்.", "நீ எவ்வளவு நல்லவள்" என்று குறைந்தது பத்தாயிரம் தடவையாவது சொல்லியிருப்பான்.

‘அமராவதி’யில் இவை நடந்து கொண்டிருக்க, கொழும்பில் கமலநாதனுடன் காதற் பேச்சுப் பேசி கால்பேஸ் கடற்கரையில் புற்றரையில் அமர்ந்திருந்தாள் பத்மா. கமலநாதன் மீசையைத் தன் காந்தள் விரல்களால் முறுக்கி மேலேற்றிவிட்ட அவள், "மீசையை இப்படி முறுக்கிவிடுங்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருக்கும்" என்று ஆலோசனை கூறினாள்.

கமலநாதன் "ஸ்ரீதரின் தந்தையார் பெண் கேட்டு வந்தாராமே? நீ மறுத்துவிட்டாயாமே. அவன் கண்கள் குருடென்பதனால்தானே நீ இந்தக் கல்யாணத்தை மறுத்தாய்?" என்று கேட்டான்.

அதற்குப் பத்மா "உங்களுக்குப் பைத்தியமா? முனிசிப்பல் விளையாட்டுச் சங்க நடன விருந்தன்று உங்களோடு நெருங்கிப் பழகிய அன்றே ஸ்ரீதரை நான் மறந்து விட்டேன். ஆளைப் பார், தெரியாதவர் மாதிரிப் பேசுகிறார்" என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே இருளிலே அவனது தோளிலே தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

இவை நடந்து ஒரு மாதம் கழித்து கொழும்பு ‘தப்ரபேன்’ ஹோட்டலில் கமலநாதன் - பத்மா திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தேறியது. நகர மேயர் உட்படப் பல பிரமுகர்கள் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். பரமானந்தருக்கோ பத்மாவின் திருமணம் ஒரு பாரம் தீர்ந்தது போன்ற உணர்ச்சியைக் கொடுத்தது. தங்கமணியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். விமலாவும் லோகாவும் கல்யாணக் கேக்குகளை இரசித்துச் சாப்பிட்டார்கள். அடுத்த வீட்டு அன்னம்மா இக்கல்யாணத்தின் பயனாகத் தன் வாழ்வில் முதல் முதலாக ஒரு பெரிய ஹோட்டலின் உட்புறத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றாள். இப்படிப்பட்ட இடங்களில் நடமாடி அவளுக்கு முன்னர் பழக்கமில்லாவிட்டாலும், இது பற்றிப் பத்மாவின் ஆலோசனைகளை முன்னரே அவள் பெற்றிருந்தபடியால் ஓரளவு விரசமில்லாமலே அவள் அங்கு நடந்து கொண்டாள்.

திருமணத்தின் பின்னர் தம்பதிகள் ‘பெலிஹூல் ஓயா’ என்னும் மலை நாட்டுச் சுகவாசஸ்தலத்துக்குத் தமது ‘தேன் நிலவு’க்குப் போனார்கள்.

[தொடரும்]


அறிஞர் அ.ந.கந்தசாமி

[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R