(3) - யாமினி கிருஷ்ணமூர்த்தி
டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது. அப்படித்தான் அவர் 1959-ல் யாமினியை இனம் கண்டதும். அப்பொழுதே, அந்த முதல் சந்திப்பிலேயே அவர் எழுதினார்: “மிகுந்த திறமையும், அழகும் மிக்கவர் யாமினி. தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் யாமினியும் ஒருவர்”. டாக்டர் ஃபாப்ரி மிக தாராள மனம் கொண்டவர் என்பதும், எங்கு யார் புகழுக்குரியவரோ அங்கு தன் மனதார பாராட்டுக்களைச் குறைவின்றி தருபவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. எவ்வளவு தான் ஒருத்தர் தாராளமாகப் புகழ்பவர் என்றாலும், “தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் ஒருவர்” என்றா அளவுக்கு மீறி ஒரு புதிய இளம் நடன மங்கையை ஒருவர் புகழ்வார்?. டாக்டர் சார்ல்ஸ் ஃபாப்ரி யாமினியை அப்படித் தான் பாராட்டினார். அது ஏதும் தன் குழந்தையின் அதிசய திறனைக்கண்டு அப்பா அம்மா முதுகில் தட்டிக்கொடுக்கும் விவகாரமாக இருக்கவில்லை. இப்போது ஒரு இளம் பெண்ணிடம் முகிழ்த்து வரும் கலைத் திறனைக் கண்டு மதிப்பிட்டு விட்ட தீர்க்க தரிசனம். அப்பெண்ணின் ஆளுமையில் பொதிந்திருக்கும் சாதனைத் திறன்களைத் தன் உள்ளுணர்வு கண்டு சொன்ன தீர்க்க தரிசனம்.