- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத் தெரியாது. அனேகமாக உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். காமாட்சிபுர அக்ரஹாரத்தினுள் நுழைந்தவுடனேயே அதன் இடது புறத்தில் காணும் முதல் வீடு முழுத்திண்ணையையும் அடைத்து கம்பி போட்டிருக்கும். கதவைத் திறந்து படியேறினால் திண்ணை. திண்ணையில் அகல் விளக்குப் பிறைக்கு மேல் ஏ. வைத்தியநாதய்யர் என்று கறுப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்கும். அப்போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. பின்னர் தான் மதுரை ஏ.வைத்தியநாதைய்யர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவர் பற்றியோ, அவர் காலத்தில் அவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் பற்றியோ இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஏ. வைத்திய நாதய்யர் என்ற பெயர் முடிவு பெறும் விதம் காரணமாக அது பற்றி பேசுவது இக்காலத்தில் விரும்பப் படுவதில்லை. ஒதுக்க வேண்டும் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் சொல்லப்படாமலேயே, தாக்கீது ஏதும் பிறப்பிக்காமலேயே புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் ஒதுக்கல் இது. இன்னும் எத்தனையோ இம்மாதிரி ஒதுக்கல்கள், நடந்த சரித்திரத்தை இல்லையென பாவனையில் நடந்து கொள்ளுதல், அது பற்றிப் பேசுவதே, நடந்ததைச் சொல்வதே, அங்கீகரிக்க மறுப்பதைச் சுட்டுவதே, ஜாதி வெறியாக குற்றம் சாட்டப்படும். இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முக்கால் நூற்றாண்டு கால அரசியல். ஆனாலும் சில வருடங்களுக்கு முன் சோ.தருமன் தன் எழுத்துக்களின் உந்துதல் பற்றி சாஹித்திய அகாடமியில் பேசும்போது, ஏ.வைத்தியநாதய்யர் அந்நாட்களிலேயே தலித்துக்களுக்காகப் போராடியதை யார் மறக்கமுடியும்? என்று ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறார். மறக்க என்ன, மறுக்கவும் முடியும் தமிழ் நாட்டு அரசியல் அதற்கு இடம் கொடுத்துள்ளது. வெகு அபூர்வமாக, அவரிடமிருந்து ஏ.வைத்தியநாதய்யர் பற்றியும் அவரது அரசியல் சமூக பங்களிப்பு பற்றி ஒரு இளைய தலைமுறை பேசியது எனக்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

இதெல்லாம் போகட்டும். ஆனால் அது மதுரை தான் என்றாலும், நான் பேசிக்கொண்டிருப்பது 1946-ம் வருட சம்பவங்கள் பற்றி என்ற போதிலும், அந்த வீட்டின் பெயர் பலகை என் நினைவுகளை பழம் சரித்திர நடப்புகளுக்கு என்னை இழுத்துச் சென்று, இன்றைய அவலங்களைப் பற்றி எண்ணவைக்கும் அந்த பெரிய மனிதரைக் குறிப்பது தானா என்பது தெரியாது. ஆனாலும் அந்த பெயர்ப்பலகை தாங்கிய வீடு இருந்த தெருவில் நான் வசித்தது சில மாதங்களேயானாலும், இன்னமும் அது என் நினைவில் இருக்கச் செய்துள்ளது, நியாயத்தோடோ, நியாயமற்றோ, அந்தப் பெயரின் மகத்துவம் காரணமாகத்தான். இன்றும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நீண்ட காலம் இடை நின்றபோதிலும், மதுரை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு மயிர்ச் சிலிர்ப்புடன் தான் அந்த நினைவுகள் வருகின்றன என்றால் அதற்கு சரியாகவோ தவறாகவோ உறவு கொண்டுவிடும் சில பெரிய மனிதர்கள் தான். பெரியவர்கள் என்றால் அவர்கள் மரியாதைக்குரியவர்கள். தம் தடங்களை தமிழ் வாழ்க்கையில் பதித்தவர்கள். இன்று சில தடங்கள் அழிகின்றன. சில அழிக்கப்படுகின்றன. நான் மதுரையில் இருந்த அந்த கிட்டத் தட்ட ஒரு வருட காலத்தில் பல நிகழ்வுகள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. அருணா ஆஸ·ப் அலியின் பேச்சைக் கேட்க தமுக்கம் மைதானத்திற்குப் போனதும், அந்தக் கூட்டம் புரிந்து கொள்ளாத ஹிந்தியிலேயே பேசி அருணா ஆஸ·ப் அலி அக்கூட்டத்தை மழையில் கலையாது கட்டுப்படுத்தியது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். பி.ராம மூர்த்தியும், கே.டி.கே தங்கமணியும், மோகன் குமார மங்களமும் பேசக் கேட்பது அன்று எனக்கு ஒரு புது அனுபவம் மாத்திரமல்ல ஒரு அசாதாரண அனுபவமும் கூட.

இன்னோரு அசாதாரண சம்பவமும் நேர்ந்தது. ஒரு நாள் பாட்டி கேட்டாள், “சாமா எங்கேடா, இன்னமும் வரக்காணமே?” எனக்குத் தெரியாது என்றேன். “ஏண்டா கூட சேர்ந்து வரலையா?” என்று அதட்டினாள் பாட்டி. “என்னம்மா, தினமுமா சேர்ந்து வரோம்? வருவாளா இருக்கும்.” என்றேன். ஆனால் சின்ன மாமா வரவில்லை. அன்று இரவு வரை வரவில்லை. பாட்டி தவித்துப் போய்விட்டாள். என்னை ஸ்கூலுக்குப் போய் தேடச் சொன்னாள். மாமாவின் மாமனார் இருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரகார வீட்டுக்குப் போய் சொல்லச் சொன்னாள். அங்கிருந்த ராஜா, அம்பி என்று அழைக்கப்படும் ரங்கநாதன், மாமியின் அண்ணா தம்பிகள் அவர்கள், எல்லோரும் எங்கெங்கோ வெல்லாம் தேடினார்கள். ஒன்றும் பயனில்லை. சின்ன மாமா ஒட்டுதலாக இருந்தவர், அவரை விட கொஞ்சம் வயதில் பெரியவரான ராஜா தான். எப்போதாவது எங்காவது வெளியே சுற்றுவதென்றால் அவர்கள் இருவரும் தான் சேர்ந்துகொள்வார்கள். நான் பொடியன். என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நாட்கள் ஓடின. சின்ன மாமா வரவில்லை. நிலக்கோட்டையில் இருந்த மாமாவுக்கு எப்படி செய்தி போயிற்று என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை. என் கண்முன் இப்போது ஒடும் சித்திரம், “பகவானே ஏன் இப்படி என்னைப் போட்டு வதைக்கறே? நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று மாமா அவ்வப்போது வாய் குழறிய காட்சி தான். அவருக்கு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. வத்தலக்குண்டில் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணினே. என்னாலே முடியாட்டாலும், சரி,. கடனோ ஒடனோ வாங்கி, உன் இஷ்டத்துக்கு மதுரையிலேயே படின்னு இங்கே குடி வச்சா இப்படி பண்ணீட்டயேடா?” என்று மனம் குமுறியது அவருக்கு.

இடையில் பக்கத்தில் இருந்தவர்கள் யார் யாரோ ஜோஸ்யர் பெயரையெல்லாம் சொல்லி, சின்ன மாமா ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொல்லலாம் என்றார்கள். யார் கண்டார்கள்? என்ன தோஷமோ, என்ன தசையோ, நல்ல ஜோஸ்யர், சொன்னது பலிக்கும். அதையும் பார்த்துட்டா தேவலை” என்றார்கள். பாட்டிக்கு எப்படியாவது எங்கே இருக்கான்னு தெரிந்தா போறும். நல்லபடியா திரும்பி வந்துட்டா போறும் என்று இருந்தது. ஏதோ எங்கோ எப்படியோ ஒரு நம்பிக்கை துளிர்த்தால் போதும். தெரிந்த இடங்களில் உறவினருக்கெல்லாம், சுவாமி மலை, உமையாள்புரம், பாபுராஜபுரம் என்று எங்கெங்கோவெல்லாம் கடிதம் எழுதினார் மாமா. ஒரு நாள் யாரோ எங்கோ பார்த்ததாகச் சொல்லவே, திருச்சியோ திண்டுக்கல்லோ, எனக்கு சரியாக நினைவில் இல்லை, உடனே அந்த இடத்துக்கு ஓடினார். சரி அப்படி பார்த்தே இருந்தாலும், எங்கேயென்று தேடுவது? அலைந்து கொண்டே இருக்க முடியுமா என்ன. என்னவோ ஒரு ஆதங்கம். எப்படியாவது கிடைத்துவிடமாட்டானா என்று. பயந்த சுபாவமும், சுவாமி பக்தருமா? கேட்கவேண்டியதில்லை. நினைத்த கோவிலுக்கெல்லாம் போவார். அர்ச்சனை செய்வார். கண்மூடி உருகுவார்.

கடைசியில் அவரது பிரார்த்தனைகளுக்கும், பாட்டியின் வேதனையைக் காணத் தாளாது தானோ என்னவோ, சின்ன மாமா திருவாரூர் தியாக ராஜ உத்சவத்திற்குப் போயிருப்பதாகவும் உத்சவம் முடிந்த பிறகு வந்துவிடுவதாகவும் ஒரு செய்தி கிடைத்தத்து. . எப்படி செய்தி வந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இனி சின்ன மாமா மதுரையில் படிப்பைத் தொடர்வது என்பது சாத்தியமில்லை என்பது நிச்சயமாயிற்று. மதுரையில் தொடர்வது அனாவசிய செலவு, அதற்கு அவசியமும் இல்லை என, மாமா பாட்டியை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டை போனார். அந்த வருடத்தில் மிகுந்த கொஞ்சம் மாதங்களுக்கு நான் பரிட்சை முடியும் வரை ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு மாமாவின் மாமனார் வீட்டில் தங்குவது என்றும், ஏற்பாடு செய்யப்பட்டது. ஹோட்டல் என்றால் உண்மையில் அது ஹோட்டலே அல்ல. வடக்கு வெளி வீதியில், சிம்மக்கல்லிலிருந்து கொஞ்ச தூரம் சேதுபது ஹைஸ்கூல் நோக்கி நடந்தாலே ஒரு பெரிய வீடு. அங்கு வெளியூரிலிருந்து வந்து மதுரையில் தனியாக தங்கி இருக்கும் அலுவலகர்களுக்கு மாத்திரம் இரண்டு வேளை சாப்பாடு. காலையிலும் இரவிலும். மாதக் கணக்கு வைத்துக்கொள்பவர்களுக்கு மாத்திரம். ஒரு வசதிக்காகத் தான் அதை ஹோட்டல் என்று சொன்னேன். இப்போது மெஸ் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் அந்த பெயர் புழக்கத்தில் இருக்கவில்லை. அந்த மெஸ் முதலாளி, என்னைப் பார்த்து, ‘ சின்ன பையன். படிக்கிற பையன். காலம்பற சாப்புட்டுட்டு ஸ்கூலுக்குப் போனா மத்தியானம் பசிக்காதோ?. அப்பறம் என்னத்தைப் படிக்கிறது?. மத்தியானம் கொஞ்சம் மோர் சாதமா வந்து சாப்புட்டுக்கட்டும். மத்தியான வெயிலுக்கு குளிர்ச்சியா இருக்கும். அதுக்கு நீங்க ஒண்ணும் தனியா காசு கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார். மாமா அவரது கஷ்டகாலத்தில் இந்த மாதிரி இதமான வார்த்தைகளை எதிர்பாராத இடத்தில் கேட்டதும் ரொம்பவும் மனம் நெகிழ்ந்துவிட்டார்.

சின்ன மாமாவுக்கு சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு வந்தது எப்படி என்பது இப்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்போது யாரும் அதுபற்றி கேட்டுக்கொண்டதில்லை. ஏனெனில், மாமியைத் தவிர எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சங்கீதத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. தஞ்சாவுர்க் காரர்களேயானாலும். நான் அதற்குப் பிறகு கும்பகோணத்தில் படிக்க உடையாளூர் போய்விட்டேன். படிப்பு முடிந்ததும், வேலை தேடி வடக்கே வந்துவிட்டேன். இடையில் விடுமுறை நாட்களில் ஊருக்குத் திரும்பிய போது சின்ன மாமாவைப் பார்க்க நேரிட்ட போது அவர் பேச்சில் அவ்வப்போது சங்கீதம் பற்றி பிரஸ்தாபங்கள் வரும். மனித மனம் எவ்வளவு விசித்திரமான குணங்கள் கொண்டது, அப்படியொன்றும் சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு எவ்வளவு ஆழமானது, சில சமயங்களில் நாம் நினைத்தும் பார்க்காத ஆச்சரியங்களையெல்லாம் நம் முன்னால் வைத்துவிடும் என்பது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கும்.


நினைவுகளின் தடத்தில் – (19)

இனி சின்ன மாமா திருவையாறு தியாகராஜ உற்சவம் முடிந்து திரும்பி வந்தாலும், மதுரையில் படிப்பைத் தொடர முடியாது. மாமா, காமாட்சி புர அக்ரஹாரத்தில் குடியிருந்த இடத்தைக் காலி செய்து பாட்டியை நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நான் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரத்தில் மாமியின் வீட்டார் குடியிருந்த வீட்டிற்கு மாறினேன். அங்கிருந்து கொண்டு, மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு அந்த வருட படிப்பை முடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அந்த வீடு மூன்றோ நான்கோ குடித்தனங்களைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீண்ட நடைபாதை வாசலிலிருந்து கிணற்றடி வரை நீண்டு செல்லும். மாமியின் வீட்டார் இருந்த பகுதி வீட்டின் கடைசியில் கிணற்றடியை ஒட்டிய கடைசிப் பகுதி. அந்த கடைசிப் பகுதியில் நடைபாதையை ஒட்டிய சமையலறை, பின் வீட்டின் நடு ஹாலிலிருந்து படியேறி மேல் சென்றால் மாடியில் ஒரு விஸ்தாரமான அறை. இவ்வளவே அவர்கள் புழங்கக் கிடைத்த இடம். நடு ஹாலுக்கு மற்ற குடித்தனக் காரர்கள் வந்து உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம். திண்ணை பொது இடம் என்பது போல அது. ஆனால் யாரும் அதிக உரிமை கொண்டாடக் கூடாது. மாமியின் பிறந்த வீட்டில் நிறையப் பேர் இருந்தார்கள். மாமியின் அம்மா அதற்கு சில வருடங்கள் முன்னமேயே காலமாகிவிட்டிருந்தார். மாமியின் அப்பா, இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சகோதரர்களில் ஒருவர் மாமிக்கு அண்ணா. மற்றவர் தம்பி. மூன்று சகோதரிகளும் மாமிக்கு இளையவர்கள். இவ்வளவு பேருடன் நானும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன். இவ்வளவு பேரும் அங்கு எப்படிக் காலந்தள்ள முடிந்திருக்கிறது என்று இப்போது நினைக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. வேறு யார் வீட்டினுள்ளும் நான் உள்ளே நுழைந்து பார்த்ததில்லையென்றாலும், அனேகமாக எல்லா வீடுகளும் இப்படி பல குடித்தங்கள் நெருக்கி அடித்துக்கொண்டு வாழும் ‘ஸ்டோர்ஸ்” என்றே சொல்லப்பட்டதால், மதுரையில் அந்த நாற்பதுக்களிலேயே நடுத்தரக் குடும்பங்கள், சொந்த வீடில்லாதவர்கள் வாழ்க்கை இப்படியாகத் தொடங்கிவிட்டது போலும்.

அவ்வளவு நெருக்கடியிலும், நானும் அவர்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டதில் அவர்கள் யாரும் முகம் சுளித்ததாக எனக்குத் தோன்றவில்லை. எல்லோரும் என்னிடம் மிக அன்பாகத் தான் இருந்தார்கள். மாமியின் அடுத்த தங்கை, ஒன்றிரண்டு வயது இளையவர், சரஸ்வதி, அப்போது 27-28 வயதினராக இருப்பார். சேதுபதி ஹைஸ்கூலுக்கு எதிரே இருந்த ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு என்னைச் செல்லமாகக் கேலி செய்வதில் ரொம்ப விருப்பம். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. மாமியின் மாமா எப்போதும் சமையலறைக்கு எதிரான நடைபாதையில் சுவரோரமாகப் போட்டிருக்கும் பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பார். இனிப்புப் பண்டங்களில் அவருக்கு பிரியம் அதிகம். நிறைய இனிப்பு சாப்பிடுவார். அப்போது அவருக்கு வயது அறுபதுக்கு மேல் ஒன்றிரண்டு கூடவே இருக்கும். இனிப்பு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு திகைத்து விட்டால், “ஏதாவது காரமா இருந்தா கொடேன்,” என்று கேட்பார். ஒன்றும் இல்லையென்றால், “தோசை மிளகாய்ப்பொடி இரூக்குமே” என்று கேட்பார். அதில் கொஞ்சம் தொட்டு நாக்கில் திகைப்பு நீங்கி காரம் ஏறிவிட்டால் போதும், மறுபடியும் இனிப்பு சாப்பிடக் கேட்பார். அந்த வயதில் அவ்வளவு இனிப்பு சாப்பிட்டும் சர்க்கரை வியாதி என்பதையே அந்நாட்களில் நாங்கள் கேள்விப்பட்டது கூட இல்லையே என்று இப்போது நினைத்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொவ்வொரு சமயம் “வாடா, இப்படீ காலாற போய்ட்டு வரலாம்” என்று என்னை அழைத்துக்கொண்டு, அவர் வேலை பார்த்த மாவட்ட கல்வி அதிகாரி (District Education Officer) அலுவலகத்திற்குப் போவார். அங்கு தன் பழைய சகாக்களுடன் பழைய கதைகள், புதிய கதைகள் பேசிக்கொண்டிருப்பார்.

மாமியின் அடுத்த தங்கை எனக்கு ஒத்த வயதினள். செல்லம் என்று பெயர். கடைசித் தங்கை எனக்கு ஆறு வயது சின்னவள். மாமியின் அண்ணா, ரங்கநாதன், அவரை எல்லோரும் அம்பி என்று தான் அழைப்பார்கள். அந்த வீட்டிலேயே அவர் தான் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். வேறு யாராலும் செய்ய முடியாத காரியம் என்றால், அம்பியிடம் தான் முறையிடுவார்கள். அந்தக் காரியம் முடிந்து விடும். எப்படி என்று யாரும் அறிய ஆர்வம் கொண்டதில்லை. காரியம் முடிந்துவிட்டதா, சந்தோஷம். அவரால் முடியும். அது போதும். அப்போது எல்லா பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிறைந்த காலம். சக்கரையா, அரிசியா, எது வேண்டுமானாலும், அவரிடம் சொன்னால் போதும். கிடைத்துவிடும். கேட்கும் அளவு இல்லாவிட்டாலும், ஏதோ கிடைத்து விடும். ‘அம்பி கிட்டே சொல்லப்படாதா?” என்று எல்லோரும் ஏதோ தாம் தான் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதான தொனியில் கேட்பார்கள். அதே போல் அம்பியும், ‘என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதோ?” என்று கேட்பார் கொஞ்சம் அக்கறை தொனிக்க. அடிக்கடி அவர் என்னை சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவார். “வாடா சினிமா பார்த்துட்டு வரலாம்” என்பார். அவர் கூடப் போனால் ஓசியில் சினிமா பார்ப்பது மட்டுமல்லாமல், சினிமா ஆரம்பிக்குமுன், ஹோட்டலில் சூடாக தோசை வேறு வாங்கிக் கொடுப்பார். அங்கிருந்த ஐந்தாறு மாதங்களில் நான் தோசை சாப்பிட்டது, அம்பியுடன் சினிமாவுக்குப் போன சமயங்களில் தான். அவர் வேறு யாரையும் அழைத்துப் போனதாக எனக்கு நினைவில் இல்லை. அவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்று யாரும் அந்த வீட்டில் அவரைக் கேட்டதும் இல்லை. வெகு சுதந்திரப் பிறவி. அவர் அதிகம் படித்தவரில்லை. ஏதோ ஒரு கோவாப்பிரேடிவ் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். எந்த காரியமும் செய்வதில் சமர்த்தரானது மற்றவர்களைப் பிரிமிக்கத்தான் வைத்தது. மற்றவர் ராஜா என்பவர். அப்போது தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். என்ன அலுவலகம், என்ன வேலை என்பதெல்லாம் நினைவில் இல்லை. அவரும் என்னைச் சினிமா பார்க்க அழைத்துச் செல்வதுண்டும். என் இப்போதைய ஞாபகத்தில், அவருடன் ஏதும் தமிழ்ப்படம் பார்த்ததாக நினைவில் இல்லை. அந்நாளைய பஸ் ஸ்டாண்டிற்கும் ரயில் நிலயத்திற்கும் இடையில் ரீகல் என்றோ என்னவோ பெயரில் ஒரு தியேட்டர் இருந்தது. அதில் காலையில் ஆங்கிலப் படங்கள் தான் திரையிடுவார்கள். அங்கு போய் படங்கள் பார்த்த நினவில் இருந்தாலும் படங்களின் பெயர்கள் ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் சித்ரலேகா என்றோ என்னவோ ஒரு தியேட்டர் தெற்கு வீதிகள் ஒன்றில் இருந்தது. அதில் ஹிந்தி படங்கள் திரையிடுவார்கள். அங்கு தான் அந்நாட்களில் மிகவும் பிரபலமான ரத்தன், அன்மோல்கடி இரண்டும் பார்த்தது நினைவில் இருக்கிறது. அந்த படங்களின் ஹிந்தி பாட்டுக்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பைத்தியமாகத்தான் ஆக்கின. உடனே தமிழ் படங்களில் எல்லாம் அதே ஹிந்தி மெட்டுக்களில் தமிழ் பாட்டுக்கள் சரமாரியாக வர ஆரம்பித்தன. அன்மோல் கடி படத்தில், சுரையாவோ, லதா மங்கேஷ்கரோ ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகனாகி வருவதற்கு முன்னரே கோலோச்சிய நூர்ஜஹான் பாடி நடித்திருந்தார். அவரும் ரத்தன் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வர்ணலதா என்பவரும் அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதும், பாகிஸ்தான் பிரஜைகளாயினர். இவர்களில் முக்கியமாக நூர்ஜஹான் பாகிஸ்தானிய சினிமா ரசிகர்களின் ‘கனவுக்கன்னியாக’ மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த ராணுவ ஆட்சித் தலைவர்களுக்கும் பிரியமானவராக இருந்தார் என்று சொல்லப்பட்டது. நூர்ஜஹான் பின்னர் தொன்னூறுகளில் ஒரு முறை இந்தியா வந்திருந்தார். அப்போது அவரோடு கதாநாயகராக நடித்திருந்த திலீப் குமார் பழம் நாட்களையும், நூர்ஜஹானின் இசைக்கு இந்திய மக்கள் ஏங்கியதையும் நினைவு கூர்ந்து மிக மனம் நெகிழ அவருக்கே உரிய மிக அழகான உருதுவில் பேசினார். திலீப் குமாரின் உருதுவைக் கேட்பதும் கூட ஒரு சுகமான அனுபவம் தான். ஆனால் மதுரை நாட்களில் இதெல்லாம் நான் தெரிந்தவனில்லை.

மதுரையில் தனியாக இருந்த போது நிறைய ஊர் சுற்றுவது எனக்குப் பிரியமான விஷயமாக இருந்தது. சேதுபதி ஹைஸ்கூலில் சேர்ந்ததும், ஒரு பரி¨க்ஷ வைத்தார்கள். பரி¨க்ஷயில் தேறினால் அரைச் சம்பளம் கொடுத்தால் போதும். அப்போது சம்பளம் ருபாய் மூன்றோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. ஒன்றரை ரூபாயோ, இரண்டு ரூபாயோ மாமாவின் செலவில் மிச்சம் பிடித்துக் கொடுத்ததில், மாமாவுக்கும் சந்தோஷம். அங்கிருந்த மாமியின் குடும்பத்தினரிடமும் என் மதிப்பு உயர்ந்திருந்தது. அதனால், நான் ஊர் சுற்றிக்கொண்டிருந்ததை யாரும் கவலைப்படவில்லை. நவராத்திரி வந்து விட்டால், மதுரையில் எனக்குத் தெரிந்த எல்லாக் கோயில்களுக்கும் போய்விடுவேன். மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆரம்பித்து, வடக்கு மாசி வீதியிலோ என்னவோ இருந்த கிருஷ்ணன் கோவில், பின் தல்லா குளத்திலோ அல்லது சொக்கி குளத்திலோ இருந்த பெருமாள் கோவில் என அலைந்து கொண்டிருப்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்திருப்பார்கள். எனக்கு அவற்றை ஒன்று விடாமல் பார்த்து விடவேண்டுமென்ற ஆர்வம். நிறைய கூட்டங்கள் நடக்கும். பி.ராம மூர்த்தி, மோகன் குமார மங்கலம், அருணா ஆசப் அலி, எனச் சிலர் பேசிய கூட்டங்கள் தான் இப்போது நினைவில் இருக்கின்றன. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில், வீட்டுக்கும் சிம்மக்கல்லுக்கும் இடையில் ரோடில் ஒரு பெயிண்டிங் கடை இருக்கும். அதில் ஒருவர் சினிமா பானர், விளம்பர போர்ட் எல்லாம் வரைந்து பெயிண்ட் செய்து கொண்டிருப்பார். அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அவர்கள் பெயிண்ட் செய்வதை அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். யாரோ சின்னப் பையன் ஆர்வமாகப் பார்க்கிறான். அடிக்கடி வந்து இப்படி உட்கார்ந்து விடுகிறான். என்று இருந்து விடுவார்கள். சித்திரம் வரைகிறவர் சில சமயம் என்னைப் பார்த்து ஒரு புன்முறவலோடு ஏதோ சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பேன்.

மாமியின் வீட்டில் எல்லோரும் பிரியப்படும்படி நான் இன்னொரு காரியமும் செய்து வந்தேன். அது ஒன்று தான் அவர்களுக்கு என்னால் ஆன காரியம் என்று நினைக்கிறேன். நான் காலையில் சற்று சீக்கிரமே கிளம்பி மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் தான் பள்ளிக்குப் போவேன். அது சேதுபதி ஹைஸ்கூல் இருந்த வடக்கு வெளி வீதியிலேயே பாதி தூரத்தில் இருந்தது. மத்தியானம் மறுபடியும் அந்த மெஸ்ஸ¤க்கு வந்து மோர் சாதம் சாப்பிட்டுப் போவேன். வெயிலுக்கு மிக சுகமாக இருக்கும். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் பெரியவர்கள். நான் ஒருத்தன் தான் சின்னப் பையன். அங்கு எல்லோரும் என்னிடம் மிகப் பிரியமாக இருப்பார்கள். வாசலில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, “என்னடா சாப்பிட்டயா? ” என்று விசாரிக்கத் தவறமாட்டார். பின் இரவு எட்டு மணிக்கு சாப்பிடப் போவேன். ஒவ்வொரு சமயம் சரஸ்வதி “இன்னிக்கு என்னடா சாப்பிட்டே, ஏதாவது ஸ்பெஷல் உண்டா? என்று சிரித்துக்கொண்டே கேட்பாள். நானும் சொல்வேன். “உனக்கென்னடா குறைச்சல். அதிர்ஷ்டக்காரன். தினம் தினம் விருந்து சாப்பாடுன்னா சாப்பிடறே?” என்று விளையாட்டாக கேலி செய்வாள். மற்றவர்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். ஒரு நாள் இந்த மாதிரியான விசாரிப்பில் “இன்றைக்கு வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும்” என்று சொன்னபோது அங்கு ஒரே பரவசம். “ஏண்டா வெங்காய சாம்பார் எப்பவாவது போடுவாளா, இல்லை வாராவாரம் உண்டா?” என்று கேட்டாள் சரஸ்வதி. சனிக்கிழமை சனிக்கிழமை ராத்திரிக்கு வெங்காய சாம்பார் தான் வழக்கம்” என்றேன். “அட தடியா அதை முன்னாலேயே சொல்லக்கூடாதோ. ஏண்டா வெங்காய சாம்பார் பண்ற அன்னிக்கு சாப்பாட்டை இங்கே வாங்கிண்டு வந்துடேண்டா, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம், என்ன சொல்றே, எங்களுக்கும் வெங்காய சாம்பார் தருவியா இல்லே நீயே தான் சாப்பிடுவியா? என்று சரஸ்வதி கேட்டதும், அடுத்த சனிக்கிழமை கேட்டுப் பார்க்கிறேன் என்று சொன்னேன். நான் மெஸ் முதலாளியிடம் இன்னிக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துடுங்கோளேன். அங்கேயே மத்தவாளோடே சேர்ந்து சாப்பிடலாம்னு சொல்றா” என்றேன். “எதுக்குடா, வெங்காய சாம்பார்னு அவா கிட்டே சொல்லிட்டயோ, அவாளுக்கும் வேணுமாக்கும்” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். சரி போ என்று சொல்லி “டேய் இவனுக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்துடு இன்னிக்கு, கொஞ்சம் சாம்பார் கூடக்கொடுத்துவிடு. இல்லாட்டா இவனுக்குக் கிடைக்காது” என்று உத்தரவும் போட்டு விட்டார். அன்றிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்காய சாம்பார் தனியாக ஒரு பாத்திரத்தில் கூடக் கொடுப்பார்கள். எல்லோருக்கும் குஷி தான். சனிக்கிழமை ராத்திரி சாப்பாடு எப்போது வரும் என்று எல்லோரும் காத்திருப்பார்கள். ஆனாலும் அங்கு இருந்தது ஆறு பேர். என் ஒருத்தன் சாப்பாட்டுக்கு கிடைக்கும் வெங்காய சாம்பார் எவ்வளவு தான் கூடக் கொடுத்தாலும், ஏழு பேரை எப்படித் திருப்திப் படுத்த முடியும்? சனிக்கிழமை இரவுச் சாப்பாட்டின் போது நான் அங்கே ஒரு ஹீரோ தான். இப்படி கொஞ்ச வாரம் நடந்து வந்த பிறகு ஒரு நாள் சரஸ்வதி தான் சொன்னார். “ஏண்டா கொஞ்சம் கூடக் கேட்டு வாங்கிவரப்படாதோ!” என்று. நானும் சொன்னபடி கேட்கும் நல்ல பிள்ளையாக மெஸ் முதலாளியிடம், “சாம்பார் கொஞ்சம் கூடக் கொடுக்கச் சொல்லுங்கோ” என்றேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, பரிமாறுகிறவரைக் கூப்பிட்டு, “இவனுக்கு சாம்பார் கொஞ்சம் கூட வேணுமாம்டா.” என்று சொன்னார். பரிசாரகரும் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். உள்ளே போனதும், “அவர் கிட்டே ஏண்டா போய் சொன்னே. நான் தான் உனக்கு நிறையவே கொடுக்கறேனே. போ. வழக்கத்தைவிட இன்னும் கூடவே இருக்கு சாம்பார். எடுத்துண்டு போ. இனிமே ஏதாவது வேணும்னா என்னைக் கேளு, அவர் கிட்டே போய்க் கேட்காதே. அப்பறம் போறபோது அவருக்குத் தெரியாம எடுத்துண்டு போ. அவர் பாத்தா சத்தம் போடுவார். “கூடக் கொடுன்னா, எவ்வளவுடா கொடுப்பே ஒரு பையனுக்கு சாப்பிடறதுக்குன்னு” விவரம் தெரியாத பிள்ளையா இருக்கியே” என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அங்கு எல்லோரையும் போல அவரும் என்னிடம் மிக பிரியமாக இருப்பவர்.


நினைவுகளின் தடத்தில் – (20)

மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர் என்று அவரும் என்னிடம் பிரியமாக இருந்தார். ஆனால் அம்பி மாதிரி அவ்வளவுக்கு எங்கு போனாலும், “வாடா போலாம்” என்று என்னையும் அழைத்துச் செல்பவர் இல்லை. வீட்டிலேயே அவர் கொஞ்சம் ஒதுங்கி பட்டுக்கொள்ளாமல் இருப்பது போல (reserved) தோன்றுபவர். ஆனால் அவர் என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் ஏதோ தேர்ந்தெடுத்தது போல, அவருடைய விருப்பங்கள் வீட்டில் மற்றவர்களதிலிருந்து தனிப்பட்டது போல தோன்றும். இதெல்லாம் இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறதே தவிர அப்போது இப்படியெல்லாம் நான் பாகுபடுத்திப் பார்த்ததில்லை. எல்லாமே எனக்கு சுவாரஸ்யம் மிகுந்ததாய், புதியனவாய் இருக்கும். வீட்டில் யாருமே நினைத்துப் பார்க்காத ஹிந்தி படங்களுக்கு அவர் போவார். என்னையும் அழைத்துச் செல்வார். தெற்கு ஆவணிமூல வீதியிலோ அல்லது மாசி வீதியிலோ, சரியாக ஞாபக மில்லை. ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. அங்கு தான் ஹிந்தி படங்கள் திரையிடப்படும். அங்குதான் நான் முன் சொன்ன ரத்தன், அன்மோல் கடி போன்ற படங்களைப் பார்த்தேன். அவற்றின் பாட்டுக்கள் தமிழ்த் திரையுல பாடல்களையே மிகவும் பாதித்தன. எல்லோருமே ஹிந்தி மெட்டுக்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தனர். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அது போல நான் மிகவும் ரசித்த ஒரு தெலுங்குப் படம், ‘ஸ்வர்க்க சீமா. நாகய்யாவும் பானுமதியும் நடித்தது. இரண்டு பேரும் மிக அழகாகப் பாடுபவர்கள். அதில் தான் பானுமதி அறிமுகமாகிறார். ‘பாபுரமா” என்று அவர் பாடிய பாட்டு மிகப் பிரசித்தம். ஆங்கிலப்படங்களுக்கும் அவர் அழைத்துச் செல்வார். அவர் அழைத்துச் சென்றதால் தான் அந்நாளைய ஆங்கிலப் படங்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பரிச்சயம் என்று சொல்வது சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவை எனக்கு புரிந்ததில்லை. ஏதோ சுவாரஸ்யமாக, வேடிக்கையாகப் பார்ப்பேன் என்பதோடு சரி. இருட்டத் தொடங்கிய அந்தி நேரங்களில் சில சமயம் அவர் வைகையாற்றுக்குப் போய் மணலில் உட்கார்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கும். வைகை யாற்றில் தண்ணீர் கிடையாது. சித்திரைத் திருநாளின் போது அழகர் ஆற்றில் இறங்குவதற்காக ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக ஆற்றில் தண்ணீர் விடுவார்கள். அது தவிர வேறு எப்போதும் நான் வைகை ஆறு மணல் வெளியாகத் தான் இருக்கும். ஆங்காங்கே ஊற்றுக்கள் தோண்டி வைத்திருப்பார்கள். அது குளிக்கப் பயன்படுவதற்காக. நானும் சில நாட்கள் அந்த ஊற்றில் குளித்ததுண்டு. காசு கொடுத்தேனா சும்மாவா என்பது இப்போது நினைவில் இல்லை. வெளிச்சம் இருக்கும் மாலை நேரங்களில் வைகை ஆற்றின் பாலத்தின் மேல் ரயில் வண்டி போவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஏதோ மரவெட்டை ஊர்வது போலத் தோன்றும். இரவு நேரங்களில் ரயில் வண்டி பாலத்தைக் கடக்கும் போது அதன் ஒளிவரிசை மிக அழகாகக் காட்சி தரும். ராஜா சொல்வார், “கல்கி இதை அழகாக வர்ணித்து எழுதியிருப்பார், நவராத்திரியின் போது வரிசையா விளக்கு ஏத்தி வைப்போமே அது மாதிரி இருக்குன்னு, படிச்சிருக்கியா?” என்று.

ராஜா மிகவும் ரசித்துச் செல்லும் இடம் இன்னொன்று உண்டு. நாங்கள் குடியிருந்த லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரம் முனை வரை வந்து வலது கைப்புறம் திரும்பினால் வைகை ஆற்றுக்கு அந்த வழி இட்டுச் செல்லும். ஆனால் அந்த தெருவின் முனையிலேயே ஒரு சின்ன கடை உண்டு. அது ராஜாவுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கு தினம் காலையில் ஏழு மணியிலிருந்து ஒன்பது ஒன்பதரை மணி வரை அந்த கடையில் தோசை கிடைக்கும். நெய் தோசை. மணக்க மணக்க இருக்கும். தோசையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது. காலை 7 லிருந்து 9.30 மணி வரை தான். பிறகு கடை மூடிவிடும். பின் மறு நாள் காலையில் தான் திறக்கும். அந்த நெய் தோசைக்காகவே மிக விசுவாசமான வாடிக்கையாளர்களில் ராஜாவும் ஒருவர். அந்த கடைக்காரர் எப்படி தனக்கு ஆகி கைவந்த அந்த வட்டாரத்தில் வெற்றிகரமாக வியாபாரம் செய்ய உதவும் அந்த தோசையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக் கூட சிந்திக்காதவரோ, அது மாதிரியே நம்மூர் எழுத்தாளரும் ஒருவர் இருக்கிறார். எனக்குத் தெரிந்து கிட்டத் தட்ட அறுபது வருஷ காலமாக ஒரே மாதிரியான நடை, கதை சொல்லும் முறை, ஒரே மாதிரியான மத்திய தர மக்களின் அன்றாட இன்னல்கள், ஏமாற்றங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள், இதைத் தாண்டி மனிதர் வேறு எங்கும் கால் வைத்துவிட மாட்டார். இருவரும் ஒரே தரத்தை, ஒரே உத்தரவாதமான மார்க்கெட்டைக் கொண்டவர்கள். ஏதும் ஏமாற்றமும் இல்லை. ஆச்சரியங்களும் இல்லை. ரயில் வண்டித் தொடர் ராஜாவுக்கு கல்கியை ஞாபகப்படுத்துவது போல, பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் இச்சமயத்தில், இந்த முனைக்கடை தோசை எனக்கு இந்த எழுத்தாளரை நினைவு படுத்தி விட்டது. ஆனால் சாதாரணமாக இந்நாட்களில் இவரைப் பற்றி யாரும் கேட்டாலோ, நினைத்தாலோ அந்த முனைக்கடை தோசையைத் தான் உதாரணம் காட்டிச் சொல்வேன்.

கொஞ்ச நாட்களே, ஒரு சில மாதங்களே அங்கு இருந்த போதிலும் அப்போது வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் சரி, அந்நாட்கள் மிக சுவாரஸ்யமானவையாகவே இருந்தன. இரண்டு சம்பவங்கள் எனக்கு இப்போது நினைத்துப் பார்க்கவும், நான் ஏன் அப்படி பாதிக்கப்பட்டேன் என்பது புதிராக இருக்கிறது. இரண்டும், நான் இருந்த தெருவிலிருந்து சிம்மக்கல் வருவது தினமும் கட்டாயம் இரண்டு தடவையாவது நிகழும் ஒன்று. வடக்கு வெளி வீதியைத் தொட்டதும், எதிர்ச்சாரியில் ஒரு சோடாக் கடை. அங்கு பத்திரிகைகளும் கிடைக்கும். பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைத் தாங்கிய ஒரு போஸ்டர் தொங்குமே, அதில் கொட்டை எழுத்துக்களில் “தியாக ராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் விடுதலை” என்று போட்டிருந்தது. அன்று அந்த செய்தியைப் படித்ததும், மெய் சிலிர்க்க, அது என்னவோ உலகத்தையே புரட்டிப் போடும் மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது. இதைப் போய் வீட்டில் எல்லோருக்கும் சொல்லியாக வேண்டுமே. அப்படி ஒரு தவிப்பு. இந்த மன நிலைக்குக் காரணம் தியாகராஜ பாகவதர் பாட்டுக்களை நிலக்கோட்டையில் வீட்டுக்கு எதிரே உள்ள சினிமா கொட்டகையில் தினம் கேட்ட பழக்கத்தில் எம். எஸ், செருகளத்தூர் சாமா, பி.யு. சின்னப்பா போல தியாக ராஜ பாகவதரும் மனதில் நிலைபெற்று விட்ட ஒரு பிம்பம். அது போக, நிலக்கோட்டையில் இருந்த போது இந்த மாதிரித் தான் கடைகளில் தொங்கும் போஸ்டர்களில் “தியாக ராஜ பாகவதர் கைது” என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் வெளியாகியிருந்ததைப் படித்திருந்தேன். பின்பு பள்ளிக்கூடத்தில் ஒரு சில ஆசிரியர்கள் பத்திரிகை படிப்பவர்கள், அவ்வப்போது வழக்கு விசாரணை நடக்கும்போது, சாட்சிகள் வாக்குமூலங்கள், வக்கீல்களின் குறுக்கு விசாரணை எல்லாம் விவரமாக பத்திரிகைகளில் வெளிவர அவற்றை உரக்கப் படிப்பார்கள், பின்னர் அவர்களுக்கு அது பற்றி சர்ச்சைகள் நடக்கும். அந்த சர்ச்சைகளைக் கேட்டு, எனக்கு வடிவேலு, லட்சுமி காந்தன், இந்து நேசன், ஸ்ரீ ராமுலு நாயுடு, ராஜா பாதர், ரிக்ஷாவில் கத்திக் குத்து, எல்லாம் எனக்கு பத்திரிகை படிக்காமலேயே மனதில் பதிந்திருந்தன. நிலக்கோட்டையாக இருந்தால் இன்னேரம் அம்பி வாத்தியார் உடனே மாமாவிடமும் சின்ன மாமாவிடமும் இந்த செய்தியைச் சொல்ல ஓடோடி வந்திருப்பார். அப்போதெல்லாம் தினந்தோறும் பத்திரிகை வாங்குவது படிப்பது என்பது அவ்வளவாக பரவலாகத விஷயம். ஓடிப்போய் ராஜாவிடமும் அம்பியிடமும் சொன்னால் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ராஜாதான் வீட்டில் இருந்தார். ஓடிவந்ததில் மூச்சிறைத்தது. ஆனால் ராஜாவிடம் எந்த பதட்டமோ திகைப்போ இல்லை. ஒரு புன்னகையோடு, “அது சரி, இதைச் சொல்ல ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வரணும்.?” என்றார். எனக்கு என்னவோ போல வெட்கமாக இருந்தது. என் சுவாரஸ்யம் கெட்டது.

ஆனால் இதே போல வால் போஸ்டரிலிருந்து படித்த செய்தி மனதில் பதிந்த காரணம் எனக்குத் தெரியவில்லை. அந்த செய்தி படித்ததும் நான் தியாகராஜ பாகவதர் செய்தியைப் போல யாரிடமும் சொல்ல ஓடவில்லை. “பிரபல ஹிந்தி நடிகர் பாடகர் சைகல் மறைந்தார்” என்பது தான் அந்த வால் போஸ்டர் செய்தி. அந்த செய்தியில் தான் நான் முதன் முதலாக சைகலின் பெயரையே கேள்விப் படுகிறேன். அதற்கு மேல் எனக்கு அன்று சைகலைப் பற்றி ஏதும் தெரியாது. 1952-லோ 1953-லோ தான் புர்லாவில் சைகலின் தேவதாஸ் படம் பார்க்கிறேன். அதிலிருந்து ‘துக் கே தின் பீதத் நாஹி” யும் “பாபுல் மோரா” வும் மனதில் பதிந்துள்ளது புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் 1946-ல் ஒரு கடையின் வெறும் வால் போஸ்டரில் படித்த, பழக்கமில்லாத இன்னும் ஏழெட்டு வருஷங்களுக்கு கேட்க விருக்காத ஒரு பெயரைப் பார்த்தது ஒரு பதினாலு வயதுப் பையனின் மனதில் பதிந்துள்ளது எனக்குப் புதிர் தான். இன்னொரு பத்திரிகைச் செய்தியும் மனதில் பதிந்துள்ளது, அதன் வரலாற்று முக்கியத்வம் பின்னரே தெரியவருவது, நேரு தலைமையில் காங்கிரஸ¤ம் முஸ்லீம் லீகும் சேர்ந்து ஒரு இடைக்கால சர்க்கார் அமைக்கப்படும் என்று பிரிட்டீஷ் பிரதமர் அட்லீ அறிவித்தது. அந்த இடைக்கால சர்க்காரில் லியாகத் அலிகான், சர்தார் அப்துர் நிஷ்டார் என்ற பெயர்கள் என் நினைவில் பதிந்துள்ளன. அப்துர் நிஷ்டார் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர் என்பது தவிர, அவர் யார் அவர் பொறுப்பென்ன என்பதெல்லாம் தெரியாது. பெயர் மனதில் பதிந்துள்ளது. அவ்வளவே. தல்லா குளத்தில் நடந்த அருணா ஆஸ·ப் அலி பேசிய கூட்டமும் என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. அது பற்றி முன்னர் வேறு இடங்களில் எழுதியுமிருக்கிறேன்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், அந்த 1946-ம் வருடத்திய அந்த மாதங்கள், மதுரையில் படிப்பைத் தொடர்ந்த மாதங்கள், என் படிப்பைக் காட்டிலும் மற்ற பல நிகழ்வுகளால், சுற்றி இருந்த மனிதர்களால், எனக்குத் தெரிய வந்த அளவில் கூட நாட்டு நடப்புகளால், those were exciting times. இதை எப்படித் தமிழில் சொல்வது?


நினைவுகளின் தடத்தில் (21)

இதற்கு அடுத்து என் நினைவிலிருப்பது, நிலக்கோட்டையில் அப்போது புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மாமாவுடன் என் பெட்டி படுக்கைகளுடன் கொடைரோட் போகும் பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் காட்சி தான். மதுரையில் படிப்பு முடிந்து விட்டது. அங்கு இருந்தது பரிட்சை முடியும் வரைதான். பின்னர் நிலக்கோட்டை வந்தாயிற்று. இனி படிப்பைத் தொடர்வதற்கு ஒன்று வத்தலக்குண்டு போக வேண்டும். ஆனால் அதைப் பற்றியே யாரும் சிந்திக்காததற்குக் காரணம், அப்பாவிடமிருந்து மாமாவுக்குக் கடிதம் வந்திருக்க வேண்டும். நான் உடையாளூருக்குப் போய் அப்பா அம்மாவுடன் இருந்து கொண்டு கும்பகோணம் போய் படிப்பைத் தொடர்வதென்று தீர்மானித்திருக்க வேண்டும். என் அடுத்த தம்பி, கிருஷ்ணன், எனக்கு நான்கு வயது இளையவன், அப்போது உடையாளுரில் படிக்கக் கிடைத்த ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தான். அவன் இங்கு நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொள்வான் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பது பின்னர் உடையாளூர் சென்ற பிறகு தான் தெரிந்தது.

இன்னும் விடியவில்லை. அதற்கு வெகு நேரம் இருந்தது. இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. ஐந்து மணி ஆகவில்லை. பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் போது பாட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டு பாட்டி இருட்டில் தனியாக நடக்கக் கூடிய தூரம் இல்லை. இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். பாட்டி வீட்டைப் பூட்டிக்கொண்டு இருட்டில் எதற்காக இவ்வளவு தூரம் நடந்து வருகிறாள் என்பது திகைப்பாக இருந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சென்று, “நீ என்னத்துக்கும்மா இருட்டில் இங்கே வந்தே?” என்று நான் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே, பாட்டி ” இந்தா இதை நீ மறந்து வச்சிட்டு வந்துட்டயே.. அப்பறம் இதில்லாம திண்டாடுவியேன்னு எடுத்துண்டு வந்தேன்,” என்று கையை நீட்டினாள். அவள் கையிலிருந்தது ஒரு சீப்பு. தலைவாரும் சீப்பு. காலணா பொறாத சமாச்சாரம் என்று சொல்வது வழக்கம். உண்மையிலேயே அது காலணா கூடப் பெறாத பொருள் தான். “அங்கே வாங்கிக்கமாட்டேனாம்மா” என்று பெரிய மனுஷத்தனமாகச் சொன்னாலும், உடையாளூரில் ஒரு சீப்பு விற்கும் கடை கிடையாது தான் அந்நாட்களில். அரிசி, புளி விற்கும் கடை உண்டு. கண்டியன் கடை என்பார்கள். அது கடைக்காரனின் பெயர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மை என்னவென்று தெரியாது. கேட்கவில்லை. சந்தேகத்துக்குக் காரணம் உடையாளூரில் கண்டியன் வாய்க்கால் என்று ஒரு வாய்க்காலைச் சொல்வார்கள். இந்த சந்தேகங்கள் எல்லாம் இப்போது தான் இதை எழுதும்போது தான் தோன்றுகின்றன. அந்த கணியான் கடையில் தாம்புக் கயிறு கிடைக்கும். தகர வாளி கிடைக்கும். ஆனால் சீப்பு, கண்ணாடி, வகையறாவுக்கு கும்பகோணம் தான் போகவேண்டும் அதை நினைத்துத் தான் பாட்டி ஒரு சீப்பை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டி, இருட்டில் பஸ் ஸ்டாண்டுக்கு அவ்வளவு தூரம் நடந்து வந்தாள் என்று சொல்ல முடியாது. உடையாளூரை பாட்டி அறிவாளே தவிர, உடையாளூரில், அல்லது வேறு எங்கும் பாட்டி வீட்டை விட்டு எங்கும் சென்று அறியாதவள். கோவில் குளம் என்று கூடப் போகாதவள். அந்நாளைய பிராம்மண விதவை. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னை குழந்தையாக, இரண்டு வயதிலிருந்து வளர்த்தவள். என்றும் பிரிந்தவள் இல்லை. இப்போது மேலே கும்பகோணத்தில் படிக்கப் போகிறான். எவ்வளவு நாளைக்குத் தான் அவனை அம்மா அப்பாவிடமிருந்து பிரித்து வைத்துக் கொள்ள முடியும். இனி அவன் பிரிந்து போகவேண்டியவன் தான். நிரந்தரமாக. இனி அவன் தன்னோடு இருக்கப் போவதில்லை என்றெல்லாம் அவள் மனம் தவித்திருக்கும். ஒரு சீப்பு அவனோடது, மறந்து விட்டான். எப்படியாவது அவனிடம் சேர்த்து விடவேண்டும். இருட்டாக இருந்தால் என்ன? கொஞச தூரம் தானே. போய்க்கொடுத்து விடவேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். ஆனால் மாமாவும் நானும் அவளைக் கோவித்துக் கொண்டோம். பாசம் எப்படியெல்லாம் அசட்டுத் தனமாகக் கூட வெளிப்படுகிறது! அசட்டுத் தனமாக இருந்தாலும் பாசம் பாசம் தான். அது களங்கப்படாது. குறைபடாது ஆனால் இப்போதும் அது பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறது.

பிரிந்த பின்பும் இன்னும் நான் பின் வருடங்களில் விடுமுறையில் நிலக்கோட்டைக்கு வந்த போதும், பாட்டியின் பாசம் சில சமயங்களில் வெளிப்பட்டது திகைப்பூட்டும். ‘இப்படியுமா?” என்று இன்னமும் எனக்கு திகைப்பாகத் தான் இருக்கிறது. அவையெல்லாம் பின்னால் அவற்றின் சந்தர்ப்பத்தில். தான் பெறுவதற்கு ஒன்றும் இல்லை என வாழ்க்கையின் மிஞ்சிய நாட்களை கழித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அன்பு கொண்டவர்களின் வாழ்க்கையில் கொள்ளும் அக்கறை மிகவும் புனிதமானது தான். அரை நூற்றாண்டுக்கும் மேல காலம் கழிந்துவிட்டது. இருப்பினும், மற்றது எது நினைவிருக்கிறதோ இல்லையோ, பாட்டியுடனான நினைவுகள் அழிவதே இல்லை.

அப்பா, மாமா சகிதம் கும்பகோணம் டபீர் தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுக்காரருக்கு பாணாதுரை ஹைஸ்கூல் ஹெட் மாஸ்டரைத் தெரியும் போலிருக்கிறது. அவா தான் எங்களை ஹெட்மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். எனக்கு பள்ளியில் இடம் கிடைத்து விட்டது. அன்று மாலை ஏழு எட்டு மணிக்கு உடையாளூர் வீட்டுத் தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கைச் சுற்றி மாமா, அம்மா, அப்பா எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். என் தம்பி அப்போது உடையாளூரில் படிக்கக் கிடைக்கும் ஐந்தாவது வகுப்பு படித்து முடித்திருந்தான். அதற்கு மேல் படிக்க அவனும் கும்பகோணம் தான் என்னுடன் போகவேண்டும். “ரொம்ப சின்னவன். அவனால் தினம் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. என்னோடு அவனை அழைத்துப் போகிறேன். என்னோட ஸ்கூல்லேயே படிக்கட்டும்” என்று மாமா சொன்னார். ஆக நிலக்கோட்டையில், மாமாவின் சம்ரக்ஷணையில் என்னிடத்தை அவன் எடுத்துக் கொண்டான். அவன் படிப்பு அங்கு முடிந்ததும், அவன் இடத்தை இன்னொரு தம்பி நிரப்பினான் என்பது எனக்கு பல வருஷங்கள் பின்பு தான் தெரியவந்தது. ஆக, நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் படிக்க மாமாவே தான் காரணமாக இருந்திருக்கிறார். மாமா என் தம்பி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு நிலக்கோட்டைக்கு கிளம்பினார்.

கும்பகோணம் பாணாதுரை ஹை ஸ்கூலில் ஒரு கூரை வேய்ந்த கூடம் ஒன்றில் 40-50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் பாணாதுரைப் பள்ளி நாட்களின் ஆரம்ப மாக என் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரையும் ஓவ்வொருவராக ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க, மாணவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆங்கிலத்தில். எனக்கு ஒன்றும் புரிவதாக இல்லை. ஆங்கிலத்தில் தான் பாடங்கள் நடக்குமோ, என்ன செய்வது? பயமாக இருந்தது. இருந்தாலும் வந்தாயிற்று. சமாளித்துத் தான் ஆகவேண்டும். கேள்விகளையும் அதற்கு சரியான தப்பில்லாத பதில் என்று ஆசிரியர் எதைச் சொல்கிறாரோ அந்த பதிலையும் நான் என் நோட் புத்தகத்தில் எழுதிக் கொண்டு வந்தேன். வீட்டில் போய் மனப்பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில். வகுப்பில் என்னைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் ஒருத்தன் தான் அவற்றை நல்ல பிள்ளையாக எழுதிக் கொள்பவனாக இருந்தேன். அதற்காகவெல்லாம் வெட்கப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. இங்கே இத்தனை புத்திசாலிகளிடையே கடைத்தேறவேண்டுமே. கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் வகுப்பிலேயே கர்ம சிரத்தையாக எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, “க்ளாஸிலே இவ்வளவு பேர் இருக்கீங்களே, யாருக்காவது இதை எழுதிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியதா, அதோ கோடி பெஞ்சிலே இருக்கிற பையனைத் தவிர” என்று என்னை நோக்கி கரத்தை நீட்டிக் கொண்டே சொன்னார். எல்லோர் பார்வையும் என் மேல் பதிந்தது. உடனே எல்லோரும் அவசர அவசரமாக நோட் புக்கை எடுத்து டெஸ்க் மேல் வைத்துக் கொண்டனர். “நீ என்ன புதுசா வந்திருக்கியா? எங்கேயிருந்து வரெ? என்று கேட்டார். “சேதுபதி ஹைஸ்கூல் மெஜுரா” என்று பதில் சொன்னேன். இப்படி பதில் அளித்ததில் ஆங்கிலத்தில் பேசிவிட்டதாக ஒரு நினைப்பு எனக்கு. “உட்கார்” என்று சொல்லிவிட்டு, “அந்தப் பையனுக்கு நானா சொன்னே?. உங்களுக்கே சிரத்தையும் அக்கறையும் இல்லையென்றால் வாத்தியார் என்ன செய்யமுடியும்?” என்றதும், எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் பிடிபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என் குறையை நிவர்த்திக்கொள்ளச் செய்த காரியமே எனக்குப் பெருமை சேர்த்த காரியமாகி விட்டது. அன்று அந்த வகுப்பிலேயே நான் ஒரு ஹீரோ ஆகிவிட்டேன். இப்படியாகும் என்று யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? அன்றே நான் வகுப்பிலே எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்டேன். இப்படி இன்னும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்திராத வகையில் எனக்கு சாதகங்கள் நேர்ந்துள்ளன.

அன்று உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்கு எப்படிப் போனோம் என்று ஞாபகம் இல்லை. மாமா, அப்பா, அப்புறம் நான், மூன்று பேர். சாதாரணமாக வலங்கிமான் வரை வண்டி வைத்துக்கொண்டு போய், வலங்கிமானிலிருந்து பஸ் ஏற வேண்டும், கும்பகோணம் போக. அது தான் நிறையப் பேர், பெண்டு குழந்தைகளுடன் போவதென்றால் சாத்தியமான ஒரே வழி. சாதாரணமாக ஆண்கள் பெரியவர்களோ சிறியவர்களோ கும்பகோணத்துக்கு குறுக்கி வழியிலே வயல் வரப்புகளினூடே, மூன்று ஆறுகள் தாண்டி நடந்து போனால், ஐந்தரை மைல் தூரத்தில் கும்பகோணம் இருக்கிறது. அப்பா மாமாவை வயல் வழியாக நடத்தி அழைத்துச் சென்றிருக்க மாட்டார். ஆனால், பாணாதுரை ஹைஸ்கூலில் நான் சேர்க்கப்பட்ட பிறகு, வயல், வரப்புகள் வழியே தான் நடந்து தான் பள்ளிக்கூடம் போய்வந்தேன். காலையில் ஏழரை மணிக்குள் கிளம்பினால் பள்ளிக்கூடத்திற்கு 9.00 அல்லது 9.15க்குள் போய்ச் சேர்ந்து விடலாம். பின் சாயந்திரம் பள்ளி விட்டு உடையாளூர் வந்து சேர்வதற்கு மணி ஏழு ஆகிவிடும். அப்பா முதல் நாள் உடையாளுருக்கு அருகில் அரை மைல் தூரத்தில் ஓடும் ஆற்றின் கரை வரை வருவார். என்னைப் போல் இன்னும் நாலைந்து பையன்கள் கும்பகோணம் போய் படித்து வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து போவது வழக்கமாயிற்று. அவர்கள் வேறு பள்ளிகளில் படித்ததால், மாலை திரும்பும் போது நான் தனியாகத் தான் வருவேன். வழி தெரிகிறதோ, ஆற்றைத் தாண்டி வரணுமே, பத்திரமா திரும்பி வரணுமே என்ற கவலைகள் அம்மாவுக்கு கொஞ்ச நாள் இருந்தது. சிறு வயதில் இவ்வளவு தூரம் பள்ளிக்கூடம் போவதற்கு நடப்பது என்பது எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதுவும் ஒரு விளையாட்டைப் போல மனம் எடுத்துக்கொண்டு விட்டது. ஆற்றில் தண்ணீர் இடுப்புக்கு மேல் போய்விட்டால் தான் கஷ்டம். புத்தகஙளும் டி·ப்ன் பாக்ஸ¤ம் வைத்துக் கொள்ள ஒரு கான்வாஸ் பை வைத்திருப்போம். அதில் தண்ணீர் புகாது. அதிலேயே சட்டை, வேஷ்டி எல்லாம் சுருட்டித் திணித்து பையைத் தலையில் வைத்துக்கொண்டு வெற்றுக் கோவண தாரியாக ஓடும் ஆற்றில் இறங்கிக் கடப்போம். அக்கரைக்குப் போனதும் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொள்வோம். இப்படி குடமுருட்டி, முடிகொண்டான் என்று இரண்டு ஆறுகளைக் கடக்கவேண்டும் தினம் போகும்போதும் வரும்போதும். கடைசியில் கும்பகோணத்தின் தெற்கு எல்லையில் ஓடும் அரசலாறு எங்கள் வழியில் குறுக்கிடும் மூன்றாவது ஆறு. அதன் கரையில் தோணி கிடைக்கும்.

அதிலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நாங்கள் ஆற்றின் கரையை அடையும் போது தோணி கரையில் இருக்கவேண்டும். தோணி கிளம்பும் சமயத்தில் கையை ஆட்டி நிற்கச் சொல்லி ஓடி வருபவர்களும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தோணி கிளம்பிவிட்டால் போச்சு. தோணி எதிர்க்கரையை அடைந்து, கும்பகோணம் போகிறவர்கள் இறங்கி பின்னால் இக்கரைக்கு வருபவர்களுக்காக தோணி காத்திருக்கும். தோணியில் ஆட்கள் நிறைந்த பிறகு தான் தோணி இக்கரைக்கு வரும். இங்கு வந்த பிறகு, மறுபடியும் கும்பகோணம் போகிறவர்கள் வந்து தோணி நிறைய காத்திருப்பான். அதற்கும் காத்திருக்கவேண்டும். ஆக, தோணியைத் தவறவிட்டால், அரை மணி, முக்கால் மணி தாமதமாவது சகஜம். இப்படி ஆரம்பத்தில் ஒரு நாள் நான் மிகவும் தாமதமாக ஸ்கூலுக்குப் போனபோது சீனிவாச ஐயங்கார் ஹெட்மாஸ்டர் தான் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுப்பவர். என்னைப் பார்த்ததும் வகுப்பிற்குள் அனுமதிக்கவில்லை. நான் வெளியே நின்றுகொண்டே பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலமாயிற்றே. ஐந்தாறு நிமிடம் போலக் கழிந்திருக்கும். அவர் என்னைப் பார்த்து “ஏன் லேட்டா வரே?” என்று கேட்டார். “சார், தோணிக்காகக் காத்திருந்து லேட்டாயிடுத்து சார்”. “தோணியா, எங்கேயிருந்து வரே நீ? என்று கேட்டார். “உடையாளூர் சார்.” “உடையாளூரா? ரொம்ப தூரமாச்சே. அஞ்சு மைலுக்கு மேலே இருக்குமே?” “ஆமாம் சார். நான் வர்ர போது தோணி கிடைக்கலேன்னா லேட்டாயிடும் சார்.” என்றேன். “சரி வா உன் இடத்திலே போய் உட்கார்.” என்றார். அவருக்கே இந்தப் பையனை க்ளாசுக்கு வெளியே நிக்க வச்சுட்டோமே என்று வருத்தமாக இருந்தது போலத் தோணிற்று. நான் உட்கார்ந்ததும், அவரே க்ளாசிலிருக்கும் மற்ற பையன்களுக்கு சொல்ல ஆரம்பித்தார். தோணி கிடைக்காவிட்டால், நம் அவஸ்தையைப் பற்றிக் கவலையே இல்லாது, அவன் தோணி ஓட்டும் நிதானம், இரண்டு கரைகளிலும் அவன் தோணி நிரம்ப ஆட்களுக்காகக் காத்திருக்கும் நிதானம், நம் எரிச்சல் எல்லாம், ‘இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒடோடி க்ளாசுக்கு வந்தால் இங்கே வாத்தியார், ‘வெளியே நில்’லுன்னு அதட்றாரே!,’ ன்னு வேடிக்கையாக அவரே வகுப்பில் எல்லா மாணவர்களும் சிரிக்கச் சிரிக்கக் கதை நடத்திப் பின் தான் ஆங்கிலப் பாடத்திற்குத் திரும்பினார். இந்தக் கதை பரவி மற்ற வாத்தியார்களிடமும் எனக்கு இந்தத் தோணி சலுகை கிடைத்தது.

நான் படிப்பில் அப்படியொன்றும் கெட்டிக்காரனில்லை. பாடப் புத்தகங்களோ, வகுப்பு பாடங்களோ என்னைக் கவர்ந்ததில்லை. நான் ஆவலுடன் மிகுந்த சுவாரஸ்யத்துடன் வகுப்பில் கேட்டது சரித்திர பாடம் ஒன்று தான். சுந்தரம் பிள்ளை என்னும் ஆசிரியர்தான் எங்களுக்கு சரித்திர வகுப்பு எடுத்தவர். கலைந்த பாதி நரைத்த சிகை, கோரைப் புற்களென அவர் தலையில் வாரலுக்கு அடங்காது நிமிர்ந்து பரட்டையாக நிற்கும். அவரும் நல்ல உயரமான ஆகிருதி. தூய வெள்ளைக் கதராடை தான் அணிந்திருப்பார். முன் வரிசைப் பற்கள் சற்று நீண்டு வெளியே துருத்தி நிற்கும். ஆனால் பார்க்க அப்படி ஒன்றும் கோரமாக இராதுதான். இருப்பினும் அவர்தான் எங்கள் மரியாதையைப் பெற்றவர். பாடம் நடத்தும்போது மிகுந்த லயிப்போடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடத்துவார். அவர் வகுப்புகளைத் தவிர வேறு யாருடைய வகுப்பிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை.


நினைவுகளின் தடத்தில் – (22)

உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும் தான், என்னைப் புதியவனாகப் பார்க்காமல் வெகு அன்புடன் ‘அண்ணா’ என்று அழைக்க அதைக்கேட்க வெகு சுகமாக இருந்தது. பெரிய வீடு. நாட்டு ஓடு போட்ட வீடு. மண்தளத்தில் சாணிபோட்டு மெழுகிய கூடம், தாழ்வாரம். எட்டிப் பார்த்தால் கை நீட்டினால் தொட்டுவிடலாம் போல நீர் மேலெழுந்து நிரம்பியிருக்கும் கிணறு. உடையாளுரின் ஒரு திசையில் இரண்டு ·பர்லாங் நடந்தால் ஒரு ஆறு. அதற்கு நேர் திசையில் அரை மைல் தூரம் நடந்தால் இன்னொரு ஆறு. ஆற்றின் அக்கரையில் சந்திரசேகரபுரம் என்னும் ஒரு பெரிய கிராமம். நிலக்கோட்டையின் கோடைகால தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்த எனக்கு இதெல்லாம் மிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் பெரிய கொல்லை. தென்னையும் புளியமரங்களும் நிறைந்த கொல்லை.

உடையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில் தான் இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே மாட்டு வண்டி மேட்டில் ஏறித்தான் ஊருக்குள் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள் தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. ‘ப’ வடிவில் மூன்று தெருக்கள். ‘ப’வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு. அந்த நடுத்தெருவில் தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில் பற்றி யாரும் பேசிக் கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வ மாகாளி அம்மன் கோவிலும் தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்தக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்த போது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து வந்து போயிருந்தன.

ஊரின் மறு கோடியில் இருக்கும் செல்வமாகாளி அம்மன் கோவில் தான் சிவன் கோவிலை விட பிரசித்தமானது. பங்குனி உத்திரத்தின் போது திருவிழா நடக்கும். பின் வருடங்களில் எங்கள் குடும்பம் உடையாளூரை விட்டு நீங்கி என் தம்பி வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப ஊர், வீடு மாற்றிக்கொண்டிருந்த காலத்திலும், அப்பா எங்கு இருந்தாலும், பங்குனி மாத செல்வமாகாளி கோயில் திருவிழாவுக்கு உடையாளூருக்கு வந்துவிடுவாராம். அவர் மாத்திரமல்ல, ஊரில் உள்ளவர்கள் யாருமே எந்த வெளியூரிலிருந்தாலும் செல்வமாகாளி அம்மன் கோயில் உத்சவத்துக்கு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்களாம். உற்சவம் அந்த ஊருக்கு பெரிய உற்சவம் தான். காவடி எடுத்தல், தீ மிதித்தல் எல்லாம் உண்டு. ஊரில் எல்லாருடைய வீட்டிலும் ஒரு குழந்தைக்குப் பெயர் அம்மனின் பெயராகத் தான் இருக்கும். என் தங்கை ஒருத்தியின் பெயரும் கூட செல்லம்மாள் தான்.

எங்கள் குடும்பங்களில் சுவாமி மலைக்குச் சென்று குழந்தைக்கு முடி இறக்குவது என்பது ஒரு கட்டாயம். இரண்டாவது கட்டாயம் உடையாளூர் செல்வமாகாளி அம்மன் கோயில் சென்று அங்கும் முடி இறக்கவேண்டும். மூன்றாவது என் அம்மா வேண்டிக் கொள்வது திருப்பதி சென்று மூன்றாவது முடி இறக்குவது. தில்லியிலிருந்து ஒவ்வொரு வருடமும் என் பையன் கணேசனுக்கு முடி இறக்குவது என்று வேண்டிக்கொண்டது மூன்று ஸ்தலங்களில் ஆனதால் மூன்று முறை விடுமுறையில் வரவேண்டியிருந்தது. எங்கள் ஊர்க்காரர் மற்றவர்களுக்கு செல்வமாகாளி அம்மன் கோயில் ஒரு ·பர்லாங் தூரத்தில். சுவாமிமலை மூன்று மைல் தூரத்தில். எங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் நிறைய. இந்த குடும்ப பழக்கம் என் பேத்தி விஷயத்திலும் தொடர்கிறது. என் பேத்திக்கு முடியிறக்க மூன்று வருடங்களுக்கு முன் சென்ற போது, செல்வமாகாளி அம்மன் கோயிலில் சில தெய்வங்களுக்கு சுருட்டும் சாராயமும் கூட படைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

உடையாளூரும் செல்வமாகாளி அம்மனும் சுற்று வட்டார கிராமங்கள் ஊர்களில் கூட பிரசித்தம் பெற்றிருந்தது பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது. சிவன் கோயில் கல்வெட்டு பற்றிச் சொன்னேன். அக் கல்வெட்டில் உடையாளூரின் பெயர் வேறாகத் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கல்வெட்டின் ஒரு பகுதியை, சுமார் இருபது இருபத்தைந்து வரிகள் அச்சிட்டு கண்ணாடி போட்டு வைத்திருந்ததை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பின்னர் ஊரின் பெயர் சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்று மறந்ததை நினைவு படுத்திக்கொள்ள ஒரு முறை அதைக் கோவிலில் தேடியபோது அது இருக்கவில்லை. புராதன சின்னங்கள் மாத்திரம் இல்லை, அச்சின்னங்களின் பதிவுகள் கூட மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நாட்களில் இவற்றிற்கு மதிப்பு ஏதும் இருப்பதில்லை. ஊரில் இருந்த இரண்டு பெரிய குளங்களே சுவடற்று மறைந்து விட்ட பிறகு, இவற்றிற்கு கிராமத்தில் அன்றாடத் தேவை உண்டு, புராதன சின்னங்களுக்கு என்ன பொருளார்த்த தேவை? – இருப்பினும், ….. நாம் தான் எதையும் பகுத்தறிந்து ஆராய்ந்து செயல்படுபவர்களாயிற்றே!

உ.வே.சாமிநாத அய்யர் எழுத்துக்களில் உடையாளூர் பற்றி பிரஸ்தாபங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. உ.வே.சாவுக்கு இரண்டு தலைமுறை முந்தியவரும், அக்காலத்திய புகழ் பெற்ற சங்கீத வித்வானும், சாகித்ய கர்த்தாவுமான கனம் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை பற்றி தான் அறிந்த குறிப்புகளையும் தான் சேர்த்து வைத்திருந்த கீர்த் தனங்களையும் சேர்த்து ஒரு சிறிய புத்தகம் எழுதியுள்ளார் உ.வே.சா அதில் கனம் கிருஷ்ணய்யர் தன் ஸ்தல யாத்திரையின் போது உடையாளூருக்கும் செல்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ளதை அவர் வார்த்தைகளிலேயே சொல்ல லாமே.

“அப்போது அந்தக் கிராம தேவதையாகிய செல்வமாகாளி யென்னும் தெய்வத்துக்கு உத்சவமாதலின் அந்தத் தேவதை திருவீதியில் வந்தது; அக்காலத்தில் அக்கிராமத்தாருடைய விருப்பத்திற்கிணங்கிக் கல்யாணி ராகத்தில் “வல்லமையுன் வல்லமையே” என ஒரு கீர்த்த்னத்தை இவர் பாடினார். அது வருமாறு

ராகம் – கல்யாணி: தாளம் – ஆதி

பல்லவி

வல்லமையுன் வல்லமையே
சொல்ல எவர்க்குந் தரமா? (வல்லமையுன்)

அனுபல்லவி

எல்லாம் உன் செயலே வேறில்லை
பூபதிராஜபுரந்தனில் வாழும்
செல்ல மாகாளி அம்மையே தேவி பரஞ்சோதி (வல்லமையுன்)

இவ்வளவு போதும் இப்போதைய தேவைக்கு. பின் உ.வே. சா ஒரு அடிக்குறிப்பு தருகிறார். “பூபதி ராஜபுரம் என்பது உடையாளூரில் உள்ள ஒரு பகுதி. தமாஷாகத்தான் இருக்கிறது. உழக்குக்குள் கிழக்கும் மேற்குமா, என்பது ஒரு கேலி வழக்கு. உடையாளூரே நான்கே தெருக்களும் சுமார் 80-100 வீடுகளே கொண்ட ஒரு சிறிய கிராமம். அதனுள் பூபதி ராஜபுரம் ஒரு பகுதி. கனம் கிருஷ்ணய்யர், தியாகப்ரம்மம் வாழ்ந்த காலத்தவர். அவருடன் பழக்கமுள்ளவர். அந்த காலத்தில் உடையாளூரும் பூபதி ராஜ புரமும் இருந்த கோலம் அப்படித்தானோ என்னவோ.

இதேபோல இன்னொரு பக்கத்து கிராமமும் சரித்திரப் பிரசித்தி பெற்றது. நான் தினம் பள்ளி செல்வதற்காக கும்பகோணம் போகும் வழியில் எங்கள் ஊர் ஆற்றைத் தாண்டியதும் அதன் மறு கரையில் கொஞ்ச தூரத்தில் உள்ளது நாதன்கோயில் என்னும் இன்னொரு கிராமம். எங்கள் வழியில் வலது பக்கம் திரும்பினால் நாதன் கோயில் கோபுரமும் சன்னதி தெருவும் தெரியும். அது மிக அழகான காட்சி. அந்த நாதன் கோயில் ஒரு பழங்கால போர் நிகழ்ந்த இடம். நந்தி வர்மன் என்ற பல்லவ அரசனுடன் சம்பந்தப்படுவது. எனக்கு இப்போது சரியாக ஞாபகமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவன் அவன் காலத்திய பாண்டிய மன்னனை போரில் வென்று தன் ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தான். பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்குமான துவந்த யுத்தம் ஆக்கிரமிப்பு, ராஜ விஸ்தரிப்பு என்பது அவன் தந்தை தந்தி வர்மன் காலத்திலிருந்து தொடர்வது. கடைசியாக ஸ்ரிமார ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் இந்த நாதன் கோயில் அருகில் தான் மூன்றாம் நந்தி வர்மனோடு மறுபடியும் போரிட்டு தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்பது சரித்திரம். இந்த யுத்தம் நடந்தது கி.பி.859-ல். இந்த மூன்றாம் நந்தி வர்மனோடு சம்பந்தப்பட்டது தான், அவன் புகழ் பாடுவது தான் நந்திக் கலம்பகம். உடையாளூரின் பெருமை பேச அல்ல நான் கொஞ்சம் ஊரை விட்டு தள்ளி நடக்க ஆரம்பித்தது. அந்த சுற்று வட்டாரமே எனக்கு கொஞ்சம் பெருமை பேச வாய்ப்பளித்தால் நான் என்ன செய்ய! அந்த சுற்று வட்டாரத்தில் தான், ஆடு துறை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் என உ.வே. சாமிநாதய்யரும் அவர் தம் ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் நடமாடி உ.வே.சா எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளில் இடம் பெரும் இடங்கள்.

உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அந்நாட்களில் வலங்கைமான் என்னும் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் ஊர் சென்றுதான் பஸ் பிடித்துப் போகவேண்டும். அந்த வலங்கைமான் ஒரு சிறப்புப் பெற்ற ஊர். வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் (ரைட் ஆனரபிள் என்று அந்நாடகளில் அறியப்பட்டவர், silver tongued orator என்ற புகழ் பெற்றவர், கோபால கிருஷ்ண கோகலேயின் Servants of India Society யை அவருக்குப் பின் நிர்வகித்தவர் பிறந்த, ஆரம்பப்பள்ளி படித்த ஊர். இன்னம் சொல்லப்போனால், என் அப்பா வழித் தாத்தா வலங்கைமானைச் சேர்ந்தவர் தான். அவர் காலத்தில் தான் உடையாளூருக்குக் குடி பெயர்ந்ததும். உடையாளூரில் எங்களைக் குறிப்பிடுபவர்கள் வலங்கைமானையும் சேர்த்துத் தான் அடையாளம் காட்டுவார்கள். வலங்கைமான் சாஸ்திரிகள் வீடு என்று. அந்த அடையாளத்தை எங்களுக்குக் கொடுத்தவர் எங்கள் தாத்தா சுந்தரேச சாஸ்திரிகள்.அவர் புகைப்படம் உடையாளூர் வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். பின் எப்போது அது எங்கு காணாமற் போயிற்றோ தெரியாது.

அந்நாட்களில் அனேகமாக எந்தச் சிறிய தேவைக்கும் நாங்கள் வலங்கைமானுக்குத் தான் போக வேண்டிருந்தது. உடையாளூரில் ஒரு சின்ன மருத்துவ மனை கூட கிடையாது. நான் படிக்கச் சென்ற 1947-ல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் வளர்ந்திருந்தது. மாமாவுடன் நிலக்கோட்டைக்கு ஆறாவது படிக்கப் போவதற்கு 5-ம் வகுப்பு டி.சி. பெற்றது அந்த திண்ணைப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் தான். ஊரில் ஒரு படித்த வாலிப வயதினர் தான் தபால் கார்டு கவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு தேவையானவர்களுக்குக் கொடுப்பார். அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையம் 1947-ல் கூட இருக்கவில்லை. தபால் பட்டுவாடா செய்ய ஒருவர் வலங்கிமானிலிருந்து வருவார். அவர் தான் தபால்கள் கொடுப்பார். எடுத்தும் செல்வார். பகல் 11 மணி வாக்கில் வருவார். ஆக பெரிய தேவைகளுக்கு கும்பகோணமும், மற்ற சிறிய தேவைகளுக்கு வலங்கைமானுக்கும் போக வேண்டியிருக்கும். யாரும் தெருவில் பனியனும் தோளில் ஒரு துண்டுமாக நடக்கக் காட்சி யளித்தால், ஒவ்வொரு வீட்டிலும் திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் கேட்கும் கேள்வி, “ஏண்டா பிச்சை, கும்மோணமா?” தான். பனியனும் துண்டும் அணிந்த பிச்சையோ, கிச்சாவோ, கட்டாயம் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கட்டாயம் வாங்கி வருவார். இந்த பரஸ்பர சகாய உணர்வு உடையாளூரில் எல்லோருக்கும் இருந்தது. இத்தோடு மட்டுமல்ல. “ஏண்டா, காமாட்சி ஜோஸ்யர் தெருவுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துடேன்” என்று சொல்லி அங்கு சீனுவைப் பார்த்து என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதையும் பிச்சா கட்டாயம் கேட்டுக்கொண்டு போகவேண்டும். பிச்சாவுக்கு அதில் தயக்கம் இராது.

[தொடரும்]